Wednesday, December 30, 2015

வெள்ளிக்கிழமை சுவரின் பளிச்சிடல்கள்...


புதுப்பட போஸ்டரை தாங்கி நிற்கும் வெள்ளிக்கிழமை சுவர்போல் பளிச்சிடுகிறது மனம். அப்படியானதொரு வல்லமையை கொண்டிருக்கிறது மொழி. அதுவும் கவிதைகளில் பல சித்துகளைச் செய்துடுகிறது. சொல்லப்பட்ட விதம், முடிப்பு, துவக்கம், எடுத்துக்கொண்ட பாடு பொருள் என ஏதோவொன்றில் தன் மாயத்தை வாசிப்பவனுக்கு கடத்திடுகிறது விரல் படும் தேன் மனதை இனிக்கச் செய்திடுவதுபோல்.  'அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்' தொகுப்பில் காலதச்சனும் வெள்ளிக்கிழமை சுவர்போல் பளிச்சிட செய்திடுகிறார் அவரின் மொழியால்.

விடுமுறை நாட்களின் நிகழ்வுகளை பட்டியலிட்டு, பத்துநிமிடம் மிஸ் என கெஞ்சும் சரஸ்வதியை ஆட்டோவில் பயணிக்கச் செய்து, சுயம் அப்பாவின் இறப்பை மறக்கச் செய்யும் எனும் உண்மை கூறி, ஆம்புலன்ஸ் அலாரத்தை இசையாக்கி ரசிக்கப்படும் இடங்களைக் கூறி, பூங்காக்களும் காத்திருக்கும் ஏர்போன் மாட்டிய தேவதைகளை மனதில் ஓடவைத்து, ஒரு ஆண்டின் 365 திடுக்கிடலை நாமும் உணரச் செய்திடுகிறார்.
எழுத்து ஒருவரின் சுபாவத்தை வெளிக்காட்டிவிடும். காலதச்சனின் மிருதுவான சுபாவத்தை அவரின் வரிகளிலிருந்து கண்டடைய முடிகிறது.

நெளிச்சிரிப்பில் பின்தொடரச் செய்து, தவறவிடும் கண்ணாடிக் குவளையின் உடையும் சப்த இடைவெளியை உதடுகளாக காட்சிபடுத்தி,  மதுமிதாவிடம் இருந்து பச்சைக்கிளியின் பரிசளிப்பை எதிர்பார்த்து தன்னை பிளந்து உண்ணக் கொடுக்கும் தயார் நிலையில் இருப்பவனுக்கு கருங்கிளியும், முகத் திருப்பலுமே கிடைக்க மூச்சு முட்டக் கிடந்து, அந்தி நடையில் எள்ளுப் பூக்களிடம் மனம் கொடுத்து, அம்மாவின் நினைவு, திருடிய கைக்குட்டை, மறைத்த மதுப்புட்டி, மறந்தபோன ஸ்னாக்ஸ், பிச்சைக்காரனின் ஏந்திய கையென மாறும் நினைவு அடுக்குகளின் காட்சியோடு நடை முடித்திருப்பது நம்மின் நடை நினைவுகளையும் காட்சிபடுத்தின கவிதைகள்.

எவ்விதமான மெனக்கிடலுமற்று இயல்பாகவே சொல்லப்படும் காட்சியில்  நமை லயித்துவிடச் செய்திடுகிறார் காலதச்சன்.

பசும்புல்லின் நுனியில் பாறைகளை இறக்கி வைத்து, வண்ணத்துப்பூச்சியின் மேலமர்ந்து சவாரி செய்து, நிசப்தம் உள்ளவரை நறுமணம் வாழும் எனும் உண்மையை கண்டடைந்து சுஹாசினியின் புன்னகையில் ஓய்வுகொள்கிறார்.

வேறுவேறான பார்வைகளை கண்டடைய தொடர் பயணம்  அவசியமாகப்படுகிறது. காலதச்சனும் தன் நெடிய பயணத்தில் கண்டடைந்த பார்வைகளை கவிதைகளில் நமக்கு கடத்த முற்பட்டுள்ளார்.

எதுவுமற்ற வீட்டில் எல்லாமும் இருக்கம். எல்லாமும் இருக்க ஏன் பூட்டிச் செல்ல வேண்டுமெனும் கேள்வியோடு, பால்யத்தின் மரக்குதிரையில் பயணித்து, அழகான ஆறு என்றான்/சித்தார்த்தன்/தோணிக்காரன்/தலையசைத்தானெனும் சமூக உண்மையை கண்டடைந்து, என்றுமே எனக்கு வாழக்கிடைக்காத உங்களின் சௌகரிக வாழ்வை கொஞ்சம் நானும் வாழ்ந்து பார்க்கிறேன் என அனுமதி கோரி, நீல வயலையும் பச்சை வானையும் தொடும் நாரையை ரசித்து, குழந்தைகளின் கேள்விகளுக்கு குட்டுகளை பதிலாக்குபவர்களை பரிகாசப்படுத்தி, பீங்கான் லில்லி பூக்கள் மணக்கும் தருணம் அறிந்து, தூக்கிட்டுக் கொண்டவனின் முந்தைய நாட்களின் கருணையை வியந்து, உறக்கத்தில் நடப்பவனின் வலியை நகைமொழியோடு பதியவைத்து, பெயரற்று எண்களாக மாறிக்கொண்டிருக்கும் அபத்தத்தை உணர்த்திடுகிறார்.

சினிமா மொழியும் காலதச்சனுக்கு பரிச்சயம் என்பதால் ரசிக்கத்தக்க நிறைய்ய காட்சியமைப்புகளை தொகுப்பில் நாம் கண்டடையச் செய்துள்ளார்.

வெளியீடு
மலைகள்
119, முதல்மாடி, கடலூர் மெயின் ரோடு
அம்மாப்பேட்டை, சேலம்-636003
விலை-80

நன்றி-மணல் வீடு

Monday, November 16, 2015

கசாப்பு கடையிலிருந்து மீண்ட ஆட்டுக்குட்டிகள்

ஆட்டுக்குட்டிகள் ஆண் இல்லா வீட்டின் அதிசயங்களை அறிந்தவை. எதையாவது சாக்கிட்டு வெளியேறியபடியே இருப்பவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான ஆட்டின் உறவை. தன் துள்ளலில் காதலை வெளிப்படுத்தும் ஆட்டுக்குட்டிகளுக்கு முத்தப் பரிசுகள் கிடைத்தபடியே இருக்கும். குழந்தைகளைக் போல் மென்மையானவை. பெண்களை மகிழ்விக்கும் நுனுக்கங்களை கற்றவை. இயேசுவிற்கு ஆதனால்தான் ஆட்டுக்குட்டிகளின் மீது அத்தனை பிரியம் போலும். எஸ்.சுதந்திரிவல்லிக்கும் ஆட்டுக்குட்டிகள் மீது வெகுவான பிரியம் போலும்.தன் அன்பை சமர்ப்பனத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தொகுப்பில் நாய், ஆட்டுக்குட்டி, பூனை, மைக்குட்டி(கம்பளிப்பூச்சி) என வீட்டிலிருக்கும் சக ஜீவிகள் குறித்தும் கவனப்படுத்தியுள்ளார்.

ஆடு, பூனை, நாய் மூன்றும்  வீட்டில் இருக்கம் பெண்களுக்கு நெருங்கிய தோழமைகளாக இருக்கிறது. அன்பையும் துயரையும் அவைகளுடனான உரையாடிலில்தான் பகிர்வு கொள்கிறார்கள். பெண்ணின் ரகசியம் காக்கும்  ஜீவிகளாகவும் அவைகள் இருக்கின்றன.
குலதெய்வங்களுக்கு நேர்த்திக் கடனுக்காக ஆடுகளை, கோழிகளை பலிகொடுப்பதே வழக்கம். அவைகளின் சம்மதத்தோடுதான் பலியிடுகிறோமெனும் பாவனையில் நம்பிக் கிடக்கிறோம். நீர் தெளிக்க துள்ளுவது சம்மதத்தின் அறிகுறியாக மாற்றியது மனிதனின் தந்திரம். இத்தந்திரம் பெண்கள் மீதும் இச் சமூகம் தொடர்ந்து ஏற்றிவைத்துள்ளது. ஏதேனும் ஒரு தந்திரத்தை கையாண்டு அவர்களின் விருப்பங்களை நீர் தெளித்து துளுத்ததாக கணக்கிட்டு அவர்கள் விரும்பாமலே வேறு இல்லங்களுக்கு பலிகொடுத்து தன் கடமையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்குமான பந்தத்தின் கன்னி இதுவாகக்கூட இருக்கக்கூடும். பிடித்த பெயரை வைத்து பிடித்த மாதிரி அழைத்து அவைகளோடு உறவாடி இருப்பவர்களுக்கு அவர்களின் உலகம் குறித்த புரிதல் இருப்பதால் சுதந்திரவல்லியின் கவிதைகளை நெருக்கமாக உணர முடிகிறது.

நாம் அக்கறையோடு விரும்பிப் பார்க்கும் தொழிலாக இருந்தாலும் சுமத்தப்படும் அழுத்தத்தின் காரணமாக நமக்கு அதன் மீதொரு வெறுப்பு உண்டாவது இயல்பு. ஆசிரியராக இருப்பதைவிடவும் ஆடு மேய்ப்பது ஆத்ம திருப்தி அளிக்கிறதெனும் சுதந்திரவல்லியின் வரிகளில் நம் பனியின் அழுத்தத்தையும் கழற்றி வைக்க முடிகிறது.

தொகுப்பிலிருக்கும் 'குட்டி நாய்' கவிதையில் சங்கலியால் கட்டப்பட்டிருக்கும் குட்டி நயை இஷ்டம்போல் எல்லா நாய்களும் புணர்ந்து போகும், பலவீனங்களை தமக்கு சாதகமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் பலமானவர்களின் அறம் குறித்த கேலியாகவும் அக்கவிதையை உணர முடிகிறது.பப்பியோடு நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது பப்பி கவிதை.

குறைகள் குறித்த புகார்பட்டியலோடு வாழ்வு இயல்பாக நகர அருகாமை பிசாசாகவும், தொலைவின் நீளம் இஷ்ட தேவதையாகவும் தோற்றம் கொள்ள, வீசிய மாங்காய் உண்ட முதல் காதலின் நினைவுகளோடு, மின்மினி வண்ணத்துப்பூச்சி தட்டான்கள் சிலந்தி ஈசலின் வண்ணங்களோடு காத்திருக்கம் புணர்ச்சியின் வண்ணங்களை வெளிக்காட்டி ஆசைகளை நிறைவேற்றிப் பார்த்த புகை சூழ்ந்த இருளின் இன்பம் சுகித்து, தன்னை திருடுபவனுக்காக காத்திருந்த நாட்களின் நினைவுகளை கவிதைகள் காட்சியாக்கும் அக உலகில் நாமும் நம்மை கண்டடைய முடிகிறது.

சதா சந்தேகத்தோடும், அவநம்பிக்கையோடும் இருக்கும் ஆண்கள் மீது ஒற்றை செருப்பை வீசியதுபோல துவங்கிய 'ஒற்றை விழி' கவிதை துவங்கி, பக்கத்து வீட்டு சண்டை பார்க்க காத்திருக்கும் ஜன்னல் அறைந்து, அதிகாரிகளின் மோப்பக் கண்களை குருடாக்கி, ஞானி ஞானியாக இருக்க, சூன்யம் சூன்யமாகவே இருக்கட்டுமே அதனால் என்னவாகிடப்போகிறதென சலிப்படைந்து, நிஜம் இழக்க சாயல்களாக வாழும் அவலம் கூறி, கொல்லும் போதையின் வன்மத்தால் வெளிப்படும் வார்த்தைகள் வலி உணர்த்தி, விரல் நகங்கள் கத்திகளாக மாறும் காலத்திற்காக காத்திருக்கம் நிலை கூறி, குழந்தைகளையும் கிழிக்கும் போதை முட்களின் கூர்மையை காட்சியாக்கி, இசக்கியை பொறாமை கொள்ளச் செய்து பேய் பாதையில் பயணித்து பட்டனம் செல்ல அங்கும் விருப்பம்போல் வாழ இயலாது போக ரயிலின் நினைவுகளோடு கிராமம் வந்து சேர்ந்ததாக ஒரு கதையை நாம் கண்டடைய முடிகிறது தொகுப்பில்.

'முதிர் கன்னி' கவிதை கடவுளை காதலனாக்கி பாசுரம் பாடிய ஆண்டாளை போற்றும் இச் சமூகம் தன் கண்ணனுக்காக காத்திருக்கும் முதிர்கன்னியை ஏலனப்படுத்தும் அவலத்தை நினைவூட்டுகிறது.

எஸ்.சுதந்திரவல்லியின் பட்டணத்து ரயிலை மட்டும் கிராமத்தை நோக்கிக் கொண்டு வந்து சேர்த்தாள் தொகுப்பு நம் உடன் வாழும் பெண்களை மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

வெளியீடு
சிலேட் பதிப்பகம்
விலை-ரூ.50

நன்றி - படிகம்

Tuesday, November 3, 2015

நன்றி- தீராநதி.

தோட்டாக்கள் பாயும் வெளி
மதிப்புரை- கமலாலயன்

'நதிச்சிறை', 'மதுவாகினி' என முதலிரு தொகுப்புகளுக்குப் பின் ந.பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுதியாக 'தோட்டாக்கள் பாயும் வெளி' வந்திருக்கிறது. சம காலத்து வாழ்க்கையில் குழந்தைகள், பெண்களின் துணையுடன் அடைகிற, அடையத் தவிக்கிற சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பேசுகிற கவிதைகள் இவை. எதிர்ப்படுகிற துயரங்கள், எதார்த்தங்களின் அவலங்கள், ஏமாற்றங்களையும் சொல்கின்றன. சிறு சிறு சம்பவங்களை, அல்லது மன வெளியில் உருவாகும் காட்சித் துணுக்குகளை கவித்துவத் திரைச்சீலைப் பின்னணியில் கோட்டோவியங்களாகத் தீட்டிக் காட்டுகிறார் கவிஞர்.

மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவதில் தொடங்கும் பயிற்சி, பெரிய சைக்கிளில் பெடல் அடித்து ஓட்டுகிற நிலையை அடைவதற்கும் உடலெங்கும் சிராய்ப்புகள், முட்டிகளில் காயங்கள் என 'விழுப்புண்கள்' பெற்ற பிறகே ஓரளவு தைரியமாக சைக்கிள் ஓட்ட முடிகிற அளவுக்குச் செழுமையடைகிறது. இது தன் கவிதைகளுக்கும் பொருந்தும் என்கிறார் பெரியசாமி. ¢

குழந்தைகளின் மன உலகம் குறித்த கரிசனமும் அதன் வெளிகளில் பயணித்து பதிவுகளாக்க முற்படும் உந்துதலும் சமீப காலங்களில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. பள்ளி செல்லும் வயது முன்பெல்லாம் 5 அல்லது 6ஆக இருந்தது. இப்போதோ ஒன்றரை வயதானதுமே மழழையர் பள்ளி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிவிட வேண்டிய நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுகிறார்கள். இந்த 'வலியின் சித்திரங்கள்' மனதில் அச்சமூட்ட ''பதட்டத்தில் உடல் நடுங்கினோம்/நாளை அனுப்ப வேண்டும் -பள்ளிக்கு'' என பெற்றோர் மனம் பதைப்பது கவிதையாகிறது.(பக்-10,11)

'அணிலாடு முன்றில்களுக்கு இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்க்கை வெளிகள்' இடமளிப்பதில்லை. எனவே, ஒண்டுக் குடித்தன அறைகளினுள் அணிலோ, குருவியோ, பூனைகளோ அழையா விருந்தாளிகளாய் நுழைந்து எட்டிப் பார்க்கின்றன. இங்கு வருகிற அணிலுக்குக் குடில் அமைத்து உணவு சேமிக்கத் தொடங்குகிறார் கவிஞர். இருப்பின் கொஞ்சலும், இல்லாமையின் தவிப்பும் இருவருக்கும் பொதுவான உணர்வுகள். அணிலின் மொழி பரிச்சயமாகி, உறவு நீடிக்கிறது. மகளின் பிடிவாதங் கருதி, அணில் உடலின் கோடுகளின் கதையைக் கூறுமகிறார் கவிஞர். அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருப்பது சிறு குடிலும் அதன் வீச்சமும் மட்டுமே.

மண்ணின் மொழியறிய முற்படுகிறவர்களுக்கு மழை வரும் நாட்கள் மிகவும் உவப்பானவை. பெய்யும் மழை முழுவதையும் சுவடு கூட எஞ்சிராமல் குடித்துவிட முடிகிறது அவர்களால். நீர்த்தாகமெடுத்து அலைபாயும் வேர்களும், ஆற்று மணற்பரப்பும், குளம் - குட்டைகளும் வெடித்துக் கிடக்கும் நிலப் பிளவுகளும் உயிர் நீரை உறிஞ்சியபின் உயிர்ப்படைகின்றன. காய்ந்து பழுப்பேறிக் கிடப்பவை பசுமையடைகின்றன. இந்த 'உயிர்ப்பு' மிக்க பரிமாற்றங்களின் வளர்ச்சிப் போக்கில் மழை வரும் நாளில் மண்ணின் உடலாகவே மாறிவிடுகிற விந்தையைச் சொல்கிறது ஒரு கவிதை (பக்-18.).

ஒழுகிக் கொண்டிருக்கும் வீட்டின் மனிதர்கள்,. வீட்டினுள் மழை ஈரம் படாமல் தப்பிப் பிழைக்கும் சில மூலைகளில் ஒடுங்கிக் கொண்டு, சொட்டும் நீர்த்துளிகளால் நிறைந்து வழியும் பாத்திரங்களை இடம் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு நாட்களைக் கடத்துவது எதார்த்தமான ஒரு வாழ்நிலை. இந்தப் படிமத்தை ஒன்றை மறந்து புதிதாக வேறொன்றைக் கேட்கும் மகனின் ஆசைகளை எதிர்கொள்வதற்கு நாளை, அடுத்த வாரம், கட்டாயம் வரும் மாதம் என பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கும்  பெற்றோருக்கு ஒப்புமையாக்கி இருக்கிறார் பெரியசாமி. உவமை பழையது. வாழ்நிலைக்கூறு புதியது. இத் தொகுப்பின் பல கவிதைகளில் இத்தகைய தன்மைகளைக் காண முடிகிறது.

குழந்தைகளின் உலகில் பயணிக்கும் மற்றொரு கவிதை- 'வெளியே மழை பெய்தது'. மேலும், 'தலையணை', 'துணைவானம்', 'புதைந்தகுரல்கள்', 'நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்', 'பூங்கா தேவதை', 'நிழல் சுவை', 'நிலையானது', 'சித்திரச் சுவர்கள்', 'சாயற்கனி' இப்படியாக இத்தொகுப்பின் பல கவிதைகள் பிஞ்சு மனங்களுக்குள் பெரும் படைப்பாற்றல் நிறைந்த தூரிகைகள் ஓயாமற் பிரசவித்துக் கொண்டிருக்கும் உயிரோவியங்களை இடம் பெயர்த்து வார்த்தைப்படுத்துகிறவையாய் அமைந்துள்ளன.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளால் இன்று விண்முட்ட உயர்ந்தோங்கிய கட்டடங்களின் அடித்தளங்களினுள் புதையுண்டு கிடப்பவை, நூற்றாண்டு காலங்களைக் கடந்த பெரும் நீர் ஆதாரங்கள் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. நீர்நிலைகள் மட்டுமின்றி, மரம், செடி-கொடிகள், மண் உள்ளிட்ட இயற்கைப் படைப்புகளும் நம்முள் எண்ணற்ற சிற்றுயிர்களையும் சேர்த்தேதான் பராமரித்து வந்திருக்கின்றன. இனியும் தொடர்ந்து பராமரிக்கப் போகிறவை அவைதாம். ஆனால் அந்த உயிராதார நீர்ப்பரப்புகளையும், வனங்களையும், உணவு வயல்களையும் மனம்போன போக்கில் அழித்துக் கொண்டிருக்கிற இன்றைய பெருவாணிகக் கூட்டங்கள், கேளாக் காதுகளுடையவையாகவும், பாராமுகங்களைக் கொண்டவையாகவுமே இருக்கின்றன. இந்தக் கூட்டத்தினரின் கேளாக்காதுகளுக்கு உரத்த குரலில் முழங்கித் தீர வேண்டியதன் அவசியத்தை 'புதைந்த குரல்கள்' கவிதை (பக்-63) உணர்த்துகிறது.

படைப்பாக்க மனநிலையைத் துணைக்கொண்டு புனைவுலகில் நாம் தொலைந்து போக முற்படும் வேளைகளில் சிறகுகள் நினைவூட்ட தரையைப் பார்க்கிறோம். வீடுகள் நிலவுகளாகவும், நிலவெளி வானமாகவும் விரிவுகொள்கின்ற விந்தை நிகழ்கிறது. (புறா-பக்-64) இதையே தலைகீழாக்கிப் பார்க்கிறாள் ஒரு சிறுமி. அவள் வரைந்தனுப்பிய துணை வானம், ஒரு நிலா, ஒரு சூரியன், நிறைய நட்சத்திரங்கள்தாம் இன்று நாம் காண்கிற பால்வெளி வீதிக் காட்சிகள் என்கிற கவிதை (துணைவானம்-பக்-65) நெஞ்சை ஈர்க்கிறது.
தலைப்பு இடப்படாத ஒரு கவிதையின் இறுதி வரிகள் இவை. ''தன் உயிரை எழுத்தாக்கி மிதக்கச் செய்தாள் யாரேனும் சிறுசிறு கற்கள் கொண்டு நிரப்பி வழியும் நீரில் தன்னை வாசிக்கக் கூடுமென்று'' படைப்புக் கலைஞர்களின் உயிரைக் குடித்துக் குடித்தே உருப்பெற்று வெளிப்படுகின்றவை கவிதைகள், சிற்பங்கள், ஓவியங்கள், காவியங்கள், இசைப்பாடல்கள்- இன்ன பிற யாவும் கேட்பதற்குச் செவிகளும், பார்ப்பதற்குக் கண்களும் வேண்டுமே''.

உரத்துப் பேச வேண்டிய காலமாக நம்முடையது ஆகிவிட்டது. சமூக வெளியில் நிகழும் அவலங்கள் குறித்து முணுமுணுப்பையேனும் வெளிப்படுத்தத் தவறுகிற கலைஞர்கள் என்றேனும் ஒரு நாள் காலத்தின் விசாரணையிலிருந்து தப்பவே முடியாது. பெரும் வன்முறைகளையும், கொலைவெறித் தாக்குதல்களையும் அதிகார வர்க்கத் தடைகளையும், தோட்டாக்களையும் முன்னெப்போதையும் விட எதிர்கொண்டே தீரவேண்டிய நாட்களாகி விட்டன இன்றைய நாட்கள். சுற்றி நடக்கின்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், நமக்கெதுக்கு ஊர் வம்பு என நல்லத்தனமாக புனைவுப் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு கனவுலகவாசிகளாயிருப்பவர்கள் தாம் எழுத்துலகில் அதிகம். இது ஏதோ இன்றைய நிலைமை மட்டுமன்று. எந்தக் காலத்திலும், எதிர்ப்புக் குரலெழுப்பி மாற்றும் சிந்தனைகளை முன் வைப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.

அதே வேளையில், தோட்டாக்கள் பாயும் வெளி தான் இது என நன்கறிந்தே அந்த வெளிகளை ஊடறுத்துக் கொண்டு முன்னேறிப் போய்ப் புதுப்பாதையை உருவாக்குவதற்காக, நெருஞ்சி முட்கள் நிரம்பிக் கிடக்கும் ஒற்றையடிப் பாதையில் நடக்க முற்படுகிறவர்கள் சிலர்தாம். எனினும் அவர்களும் இதே சமகாலத்தின் குரல்களை எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அத்தகையவர்களுள், ந.பெரியசாமியும் ஒருவர் என நிறுவுகிறது 'தோட்டாக்கள் பாயும் வெளி'

வெளியீடு-புதுஎழுத்து

நன்றி- தீராநதி.

Monday, November 2, 2015

nantri: vaa.manikandan

பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. பால்கனி, வீட்டின் உட்புறம் என்று ஓரிடத்தையும் விட்டு வைப்பதில்லை. பென்சிலை எடுத்து தனது கைத்திறமையைக் காட்டிவிடுகிறது. அது வாடகை வீடு. உரிமையாளர் கடுப்பாகிவிடுகிறாராம். எப்பொழுதோ ஒரு சமயம் அப்பாவிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தார். ‘ஆடு மாடு இலை தழைன்னு கண்டதையும் கிறுக்கி வெச்சுடுது சார்’. பார்த்து பார்த்து கட்டிய வீடு. ‘கனவுல கூட ஆடு மாடு வரும் போல இருக்கும்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ஆடு, மாடு என்றால் பிரச்சினையில்லை. வீட்டு உரிமையாளரின் கனவில் வருகிறதென்றால் குழந்தையிடம் சொல்லி பேய்ப் படத்தை வரையச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மாநகரங்களில் இந்த வீட்டு உரிமையாளர்கள் தொல்லை பெருந்தொல்லை.
குழந்தையின் ஓவியங்களிலிருப்பவை உயிர் பெறுகின்றன என்பதே fantasy கற்பனை. என்னதான் கடுப்பில் இருந்தாலும் அந்த வீட்டு உரிமையாளரின் கற்பனை அபாரமானது. ஒருவேளை குழந்தைகளின் ஓவியங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? விசித்திரமான ஜந்துக்களும் முக்கோண வடிவ முகமுடைய மனிதர்களும் பெரும்பற்களுடன் சாலைகளில் நடந்து கொண்டிருப்பார்கள். மலைகளும் பாதி உதயமான சூரியன்களும் தெருவெங்கும் நிறைந்திருக்கும். அற்புதமான வண்ணக் கலவைகளால் இந்த உலகம் வேறொன்றாக இருந்திருக்கும். இல்லையா?
இந்தச் சுவர் கிறுக்கல் ஞாபகத்திற்கு வரக் காரணம் ந. பெரியசாமியின் கவிதைத் தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு விருது குறிப்பிட்ட படைப்பை கவனம் பெறச் செய்கிறது. ‘அப்படியென்ன இருக்கிறது?’ என்று வாசகனுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பை உருவாக்குகிறது. இத்தனைக்கும் பெரியசாமி ஓசூரில்தான் இருக்கிறார். நிறையப் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் வாசிக்காமல் விட்டிருக்கிறேன்.
கவிதைத் தொகுப்பில் வீட்டு உரிமையாளரைப் போலவே fantasy கற்பனையுடனான கவிதைகள் இருக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன. ஆடு, மாடுகள் அந்தரத்தில் பறக்கின்றன. பொம்மை மான்கள் உயிரோடு அலைகின்றன. பால்ய நினைவுகள் கவிதைகளுக்குள் வந்து வந்து போகின்றன. இப்படி நாம் பெரும்பாலும் பொருட்படுத்தாத நம்முடைய ஆழ்மன விருப்புகளை மெல்லிய சீண்டல்களுடன் கவிதைகளாக்குவதை பெரியசாமி தனது பாணியாக்கியிருக்கிறார்.
உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
மகனின் படையெடுப்புகள்
எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்
இது பெரியசாமியின் கவிதைகளில் ஒன்று. திராட்சை தின்று கொண்டிருப்பவனிடம் மகனின் படைப்புகள் வந்து திராட்சைகளை வாங்கிச் சென்றுவிடுகின்றன. ‘எனக்கு திராட்சை இல்லைன்னாலும் பரவாயில்லை’ என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு திராட்சையின் சாயலை விழுங்கிக் கொண்டிருக்கிறான். இதுதான் கவிதை.
இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? இதெல்லாம் சாத்தியமேயில்லை. இப்படி சாத்தியமில்லாத ஒன்றை ஏன் கவிதையாக்க வேண்டும்? கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா? புரியாத ஒன்றை ஏன் எழுத வேண்டும்?
இப்படியெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. ஒருவேளை நமக்கு பதில் தெரியாமல் இருக்கலாமே தவிர பதில் இல்லாத கேள்விகள் என்று எதுவுமேயில்லை. இந்தக் கேள்விகளும் அப்படியானவைதான். இன்னொருவர் பதில் சொல்லி சமரசம் ஆவதைவிட கேள்விகளுக்கான பதிலை நாமே கண்டடைந்து சமரசமாவதுதான் சாலச் சிறந்தது.
‘மகனின் படைப்புகளில் இருந்து விலங்குகள் உயிர் பெறுகின்றன’ என்று இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இந்த ஓர் அடிப்படையைப் புரிந்து கொண்டால் போதும். அதற்கு மேல் நம் கற்பனையைப் பொறுத்து கவிதை நம்மை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இந்த ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கற்பனை செய்யலாம். நம் வீட்டில், நம் குழந்தை வரையும் படங்கள் உயிர்பெறுவதிலிருந்து அப்படியெல்லாம் நடந்தால் என்னவாகும் என்பது வரை என்னனென்னவோ யோசிக்கலாம். இப்படியொரு பொறியைத் தட்டிவிடுவதுதான் கவிதையின் வேலை. அதற்கு மேல் கவிதையிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியதில்லை.
இன்னொரு கவிதையையும் பார்த்துவிடலாம்.
பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை.
கழுவினேன்
கையிலிருந்த பிசுபிசுப்பை.
இந்தக் கவிதைக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமேயில்லை. ஒரேயொரு காட்சிதான் கவிதையாகியிருக்கிறது. ஒரு வீட்டில் மாதுளம் பழத்தை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும்தான். கண்ணீர், பிணி, பிசுபிசுப்பு இந்தச் சொற்கள் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. பிசுபிசுப்பு என்று இந்தக் கவிதை எதைக் குறிப்பிடுகிறது? மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா? எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது? எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா? தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா? அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா? இப்படி கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம்.
இதுதான் கவிதையின் சூட்சமம். மிகச் சாதாரணமான வரிகள்தான். ஆனால் அந்தக் காட்சியும் சொற்களும் நம்மைப் புரட்டிக் கொண்டேயிருக்கும் வலிமையை உடையவை.
கவிதை வாசிப்பதால் என்ன பலன் என்பது க்ளிஷேவான கேள்வி. வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு பதில்களைச் சொல்லியிருந்தாலும் தொகுத்துப் பார்த்தால் அவையும் க்ளிஷேவான பதில்களாகத்தான் இருக்கும். ஆராய்வது விமர்சகர்களின் வேலை. அனுபவிப்பது வாசகர்களின் வேலை. கவிதையின் ரசிகனாக கவிதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால் போதும். இத்தகைய கவிதைகள் அனுபவிப்பதற்கானவை.
இன்னுமொரு கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்-
துளிகளை அனுப்பி
சன்னல் வழியே அழைத்து
தன் ஆட்டத்தை துவங்கியது
மழை
வேடிக்கை பார்க்கக்
காமக் களியாட்டத்தில் மனம்
விருது பெற்றிருக்கும் ந.பெரியசாமிக்கும் தொகுப்பை வெளியிட்ட புது எழுத்து பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.
nantri: vaa.manikandan

Saturday, September 26, 2015

நாமாகவும் இருக்கக் கூடும்


காரம் தூக்கலான போண்டாவிற்காக
அக்கடைக்கு அவ்வப்போது செல்வீர்கள்
தொட்டுப் பார்க்க மகிழ்ந்து
நான்கைந்தை கையால் சுருட்டி அமர்ந்தீர்கள்
நைந்த நாளிதழை விரித்து
வெளிநாட்டுப் விளம்பரங்களிடையே
துண்டான செய்திகளை வாசித்து வெளியேறினீர்கள்.

வருகிறீர்கள் காலம் கடந்து
விரிந்த சாலையில்
அக்கடையும் காணாமல் போயிருக்க
துணுக்குற்று நிமிர்கிறீர்கள்
கண்ணாடிகள் போர்த்தி பளிச்சிட்டபடி
முளைத்திருக்கும் கடையொன்றில்
சமச்சீராக அடுக்கப்பட்டிருக்கின்றன போண்டாக்கள்
உள் நுழைகிறீர்கள் ஊறும் எச்சிலோடு.
மேசைமீது கிடந்த விலைப்பட்டியலில்
பத்து ரூபாயாக போண்டா பரிணாமித்திருந்தது
சமாதானத்தோடு ஆர்டர் செய்கிறீர்கள்
உங்களுக்கு சந்தோசம் இறுப்புக்கொள்ளவில்லை
காரம் தூக்கலான அதே சுவை
டிஸ்யூ பேப்பரில் உதடுகளை ஒத்தியவாறு
நியான் விளக்கடியிலிருந்த தேவதையிடம்
பார்கோடிட்ட பில்காட்டிய தொகை கொடுத்து
சமையலறையை எட்டிப் பார்க்கிறீர்கள்
மாஸ்டராக பழைய கடைக்காரர்
தொப்பி கழட்டி வியர்வையை துடைக்கிறார்.
அவரின் நிலைக்காக வேதனைப்பட துவங்குகையில்
உங்களின் நினைவுக் காட்சியில்
அங்கிருக்கும் டேபிள்களை
சீருடை அணிந்து நீங்கள்
துடைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நன்றி- கணையாழி

Thursday, August 13, 2015

கட்டியக்காரனின் 'நகை'மொழி

கட்டியக்காரனின் 'நகை'மொழி
-ந.பெரியசாமி


நாரதர் கலகத்திற்காக கொண்டு வந்த கனியை அம்மை அப்பனே உலகமென சுற்றிவந்து விநாயகர் கனியை பெற்றுக்கொள்ளும் கதை எல்லோரும் அறிந்த கதைதான். இப்படி எல்லோரும் அறிந்திருந்து புறக்கணிக்கப்பட்டவர்களின் மீதான கரிசனத்தில் அவர்களின் வாழ்வியல் வலியை அதிலிருக்கும் அரசியல் ஏமாற்றத்தை  தன் எள்ளல் மொழியால் கவிதையாக்கி நாமும் அவ்வலியை உணரச் செய்திடகிறார் இசை.  சாக்கடை, கொசு, குடிகாரன், ஈக்கள், பைத்தியம், காலை மாலை நடைக்காரர்கள், டிரைவர், கிளினர், ஊறுகாய் மட்டை, ஸ்கூட்டி, நடைபாதை வியாபாரி, டீக்கடை... இப்படி நாம் அன்றாடங்களில் சந்திக்கக் கூடியன, கூடியவர்களே அவரின் பாடுபொருளாக இருக்கிறது. அந்தக் காலம்  மலையேறிப்போனது தொகுப்பின் கவிதைகள் எள்ளலும், அது நம் உணர்வில் பாய்ச்சும் வலியையும் நாம் நினைவில் கொள்ள அவர்களின் மீதான கரிசனம் நம்மையும் தொற்றும்.

இத்தொகுப்பை சேலம் அம்மாப்பேட்டை சிவா லாட்ஜிற்கும் சமர்ப்பணம் செய்திருப்பார். அந்த லாட்ஜ் வே.பாபு கண்டடைந்த பொக்கிசம். எல்லா லாட்ஜையும் போல வெறும் அறைகளை மட்டும் கொண்டதல்ல. அடுத்தவர்களின் உணர்வை  மதிக்கத்தெரிந்த மகத்தான பணியாளர்கள் இருக்கிறார்கள். நம் இயல்பில் எவ்வித பங்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வார்கள். சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான நண்பர்கள் வந்து போனவர்களே. கேரள, கன்னட எழுத்தாள நண்பர்களும் வந்துபோயிருக்கிறார்கள். வெறுமனே எல்லோரும் வந்துபோவதில்லை. மனதை நிர்வாணப்படுத்திவிட்டு தக்கையாக வெளியேறுவார்கள்.  அறைகளின் சுவர்களில் எங்களின் சந்தோச, துயரக் கண்ணீரும் கவிதைகளும் படிந்து கிடக்கும். எத்தனை முறை சுரண்டி, எத்தனை முறை பட்டிப்பார்த்து, எத்தனை முறை பெயிண்ட் அடித்தாலும் போகாது. உள்ளிருக்கும் செங்கலோடு உறைந்து கிடக்கும். இசையின் இச்சமர்ப்பணம் நெகிழ்வானது.

நளினக்கிளி கவிதை தொகுப்பின் மணிமகுடம். இசையை நான் காலாகாலத்திற்கும் கொண்டாட இக்கவிதை போதுமானது. நாம் எவர் ஒருவர் மீது கரிசனம் காட்டத் துவங்குகிறோமோ அப்பொழுதே சுரக்கத் துவங்கும் அவர்களின் உள்ளிருக்கும் அழகுணர்ச்சி. தன் கை அசைவு சாம்பல் நிறப் பறவையாக அசைகிறதென்பதை அக் கிளினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மைப்போலவே. இசை கண்டடைந்திருக்கிறார். இனி எந்த கிளினர் கை அசைத்தாலும் அச் சாம்பல் நிறப் பறவையோடு இக்கவிதையும் மிதக்கும் காட்சியை காண்போம்.

தின்று பெருத்ததால் நடக்கிறார்களோ, ஆரோக்கியத்திற்காக நடக்கிறார்களோ, பெரிய மனிதர்களின் தயவு தேவை என்பதற்காக அவர்களோடு சேர்ந்து நடக்கிறார்களோ, ஜால்ராவை நடையிலும் போட முடியும் என்பதற்காக இருக்குமோ அரசியல்வாதிகளுடன் நடக்கும் அல்லக்கைகளின் நடை, இசையின் 'இன்னொருவன் சொல்கிறான்' கவிதையில் வரும் காரணமாக இருக்குமோ என அவ்வப்போது கேள்விகள் மனதில் தோன்றும். உணவில், உழைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு காரணமான கார்ப்ரேட் அரசியலால் உலகத்தை காலை, மாலை நடைக்காரர்களாக மாற்றிக்கொண்டிருப்பதை இசை கூத்தில் வரும் கட்டியக்காரனாக மாறி தன் 'நகை'மொழியால் தொகுப்பில் சில கவிதைகளில் காட்சிபடுத்துகிறார்.

வெள்ளத்தால் ஆற்றின் கரை ஒதுங்கிக் கிடக்கும் மரங்களைப் போல திடுமென காணக்கூடும் சில பைத்தியங்களை. பூட்டை சுமந்தபடி, பாட்டில்களை சுமந்தபடி, ஹெல்மெட்டை மாட்டி. இவர்களில் பெண்ணாக இருப்பின் நம் சமூகம் அவர்களையும்  பிள்ளை சுமக்கச் செய்திடுகிறது. இவர்களின் கடவுளாக அவதரித்தவர்கள்தான் டீக்கடை, நடைபாதை வியாபாரிகள். திட்டிக்கொண்டே எதையாவது தின்னக் கொடுத்துவிடுவார்கள். சில நேரம் சுடுதண்ணிரை மேலே ஊற்றி துன்புறுத்தினாலும் அவ்வப்போது டீயை கொடுக்கும் புண்ணியவான்களும் இவர்களே. அப்படி வாங்கப்பட்ட ஒரு டீயை பார்க்கும் இசை தெய்வமே/இந்த டீ/சூடாதிருக்கட்டும்/சுவை குன்றாதிருக்கட்டும்/பருகப் பருக பல்கிப் பெருகட்டும் என வேண்டுதல் வைக்கிறார். நமையும் வைக்கச் செய்திடுகிறார்.

மின்கம்பம் சாய்க்கும் டாஸ்மாக், வித்யாபதியிடம் சரணடைதல், கண்டடைய வேண்டிய அரூப விரல், நடந்தபடியே இருக்கும் பயக்கிறுக்கு, எச் செயலுக்காக போகிறோமோ அச்செயலுக்காக நமை தகவமைத்துக்கொள்ளும் போக்கைக்கூறும் 'தம்பி' கவிதை, திருட்டுக் களையை போக்கும் ஈக்கள், நினைவில் தழுவும் காதலி, முட்டை புரோட்டவுக்குள் குதிக்கும் ஆனந்தன், நமக்கான ஊறுகாய் மட்டையை தேடச்செய்தல், ஃபேனை ஏற்றிவைக்கச் செய்திடுகிற பாலை, நமை வாங்கும் காற்று, ஒப்புக் கொடுக்க வைக்கும் 'நைஸ்', தனிமையின் விளையாட்டுகள், மடை மாற்றும் கனவு, உழைப்புக் கனி ஈந்தவோர் மீதான அக்கறை, வாணிஸ்ரீ வருகைக்காக உலகை திறந்து வைத்தல், விநாயகர் சுமந்திருக்கும் கனியின் ரகசியம், வீட்டை உலகமாக்கியவர்களின் தொடரும் துயரம், குற்ற உணர்வின் அறவுணர்ச்சி, குழந்தைகளின் பசிக்கு மண்ணைத் தின்னக் கொடுக்கும் சமூக அவலம், காமத்தின் தேவை வடிய உதிர்க்கும் தத்துவக் கணக்கு, லூஸ்கேர் இயக்கும் ஸ்கூட்டிகளின் தடத்தில் அங்கப்பிரார்த்தனை இருத்தல், இணங்கி இருக்கவிடாது தொரத்தியபடி இருக்கும் அதிகாரம், கறைபடாதிருக்க பாதுகாப்பு பட்டையை சுமந்தபடி இருக்கும் துயரம், மலையேறிப்போன காலம் குறித்த சலிப்பு, உளுந்து வடைகளின் உறுதித்தன்மை என வலியூட்டும் நகைப்பின் மொழியில் லயித்துக்கிடக்கச் செய்திடுகிறார்.

தன்னில் விழும் சறுகின் பாரத்தைக்கூட நூல் பிரித்து வட்ட வட்டமாக அலைவு கொள்ளச் செய்யும் நீரின் தன்னையில் தான் கொண்ட, பார்க்க நேர்ந்த துயர்களை தனக்கான மொழியின் வல்லமையால் நறுக்குத் தெறித்தாற் போன்ற மின்னடிப்புகளால் மனதில் அலைவுகளை ஏற்படுத்தக்கூடியன இசையின் கவிதைகள்.

வெளியீடு- காலச்சுவடு.

நன்றி- கல்குதிரை

Tuesday, June 30, 2015

மீதமிருக்கும் அன்புகளினாலான வண்ணங்களும் சிற்பங்களுமான சொற்களின் வெளி

மீதமிருக்கும் அன்புகளினாலான வண்ணங்களும் சிற்பங்களுமான சொற்களின் வெளி
- ஜீவன் பென்னி
நம்பிக்கையின் மிருதுவான சொற்களிலாலான கவிதையுடன் தன் தொகுப்பைத் தொடங்கியிருக்கிறார் ந.பெரியசாமி. பிரியங்களி னாலான சொற்களுக்கும் அவற்றினூடான செயல்பாடுகளுக்கும், காட்சிபடுத்துதலிலாலான அழகியல் வெளிக்கும் மிக அருகிலிருப்பது மான கவிதானுபவமே ந.பெரியசாமி கவிதைகளில் வழிந்திடும் சிறு சிறு துளிகளாகயிருக்கின்றன. சொல்லிக்கொண்டே செல்வதன் மூல மான அவதானிப்புகளும் விவரணைகளும் சொற்சித்திரங்களும் அவரின் முந்தைய தொகுப்புகளைவிட கொஞ்சமேனும் மேம்பட் டிருக்கின்றன மேலும் செழுமை அடைந்திருக்கின்றன, ஆனால் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தலின் மிக இளகியதன்மை இத் தொகுப்பிலும் படர்ந்திருக்கின்றன. சொற்சேர்க்கையின் அளவுகளும் கச்சிதத்தன்மையும் ஒரு இடைவெளி வரை பெருங்கவிதைகளிலும் படர்ந்திருப்பதை மிக உற்சாகமாக கவனிக்க முடிகிறது. குறிப்பாக சிறுகவிதைகளின் பிரதான அடர்த்திகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களினாலே வெற்றிகரமாக அமையப்பெற்றிருக்கின்றன. தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களின் நிழல் களையே வார்த்தைகளாக எல்லாக்கவிதைகளிலும் பரவவிட்டிருக் கிறார் ந.பெரியசாமி.
அகமன மாற்றங்களினூடாக மாறிவருகின்ற மதுவாகினியை மடி யிலிட்டு வலியின் சோர்வு கடக்க ஆசுவாசப்படுத்தி உறங்கவைக்கும் குழந்தைமையின் சந்தோசங்களையும், கேள்விகளையும், பதில் களையும், விளையாட்டுக்களையும் உணரமுடிகின்றன - வலியின் சித்திரங்கள், சாயற்கனி, நிலையானது - இக்கவிதைகளில். சிறு வெளிச்சங்களின் அசைவுகளும் அன்புகளும், சிறு சத்தங்களின் மெலிதான கோட்டோவியங்களும் மனதின் வெறுமைகளை, முன்னெப்போதுமில்லாத சமநிலையின் வேர்களை எப்படியோ மாற்றுகின்றன - அணிலாடுமறை, எனது கடல், சென்னசேகவர், வண்ணக்கிளி, வளர்ப்பு நிழல், நிலையானது - இத்தலைப்பிட்ட கவிதைகள். காட்சிகளின் அழகுநிலைகளின் ஈரப்பதங்களினாலான இச்சொற்கள் பல ஞாபகங்களை உருவாக்குகின்றன. புத்தரின் சாந்தியை ஒத்த அடர் திராட்சை நிறச்சாறு பரவிடும் அறைக்கு வரும் ஏங்கல்ஸையும், மார்க்ஸையும், ஜென்னியையும், இன்னும் அதிக மானவரையும் ஒரு திரையில் நகரும் பிம்பங்களெனக் காண்பிக்கிறார் “ஏங்கல்ஸ் வந்திருந்தார்..” கவிதையில். “யாரும் தீண்டாத மூலையில் / கழிவை மிதக்கவிட்ட குளத்தினுள் / முத்தமிட்டபடி இருந்தன ஆமைகள்” - இம் மூன்று வரியில் மிதந்துகொண்டிருக்கின்றன மொத்தக் கவிதையும். கவிதைகளுக்குள் நுழைந்து பழக்கப்பட்டு விட்ட பூனைகளும் காணக்கிடைக்கின்றன. மழையின் சொற்களிலாலான- உயிர்ப்பு, களியாட்டம், வெளியே மழை பெய்தது... மழை ஆகிய கவிதைகளின் அடர்ந்த குளிர் நிறைந்த சித்திரங்கள் இன்னுமின்னும் அமைதி கொண்டு ரசிக்கவும் அனுபவிக்கவும் வைக்கின்றன. ஜீவிதங்கள் முடிந்திடாத பெருவாழ்வின் நகரத்தையும், லௌகீக தேவைக்கான சோம்பல் படிந்த வாழ்வின் குவி மற்றும் குழி ஆடிகளின் மாறுபட்ட புரிதல்களையும். சரியான ஊதியங்களற்ற உழைப்பின் வலிகளையும், தரப்படுத்துதலின் வழியேயான வேதனைகளையும், புறாக்களின் முத்தங்களையும், வறட்டியாகி விட்ட நிலவையும், எதுவுமற்ற வாழ்வில் கிடைத்துவிடும் வெறுங்கையின் பிசுபிசுப்புகளையும் மனதின் ஓர்மையின் ஊடாக அனுபவிக்கவும் பிரியங்கொள்ளவும் முடிகின்றன.
காந்தி வந்து செல்லும் கவிதையில் வெளிப்பட்டிருக்கும் நிகழ்கால அரசியலுக்கான அங்கத சொற்றொடர்கள் வெகு சீக்கிரம் வசீகரிப்ப தான குறுங்கதையென இருக்கின்றன. நிழலில் வளர்த்து வருவதான பசுவின் சித்திரங்களும், நீலம் புயலுக்குப் பிறகான குட்டிப்பசுவின் வருகையுமான “வளர்ப்பு நிழல்” கவிதை பேசும் மௌன அழகியல் மிக அழகாகயிருக்கிறது. சாக்பீசால் வரைந்திடும் ஓவியங்களின் பூக்களும் கனிகளும் உயிர்பித்து மின்ன அவரவருக்கானவற்றை எல்லோரும் எடுத்துசென்றதும் தழும்பும் வெற்றிடமும், பிளந்த மாதுளையின் மிச்சமெனயிருக்கிற பிசுபிசுப்பின் வெறுமையும் கவனிக்கக் கிடைக்கின்றன - (எஞ்சியவை & நிலையானது தலைப் பிட்ட கவிதை). மெல்லிய சப்தத்தோடான இரண்டு தோட்டக்களால் நிறைவுபெறுகிறது அழகும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த வேடிக்கைகளினாலான இப்பெரும் வாழ்வு.
யாருமற்ற தனிமையின் நிகழ்வுகளை ஒரு உறைவிடம் என சொல் லும் இக்கவிதைகள், நிகழ்கால அரசியலையும் அதன் முன்னேற்றப் பாடல்களையும் எள்ளி நகையாடுகின்றன. ஒரு வரையறையில் நிகழ்த்துவதான இவ்வசைவுகளின் வாக்கியங்கள் எப்போதுமிருக் கும் துன்பங்களின் எண்ணிலடங்கா நுட்பங்களைச் சொல்கின்றன. பக்கத்து சீட்டின் சகமனிதன் சாய்ந்துகொள்ள வசதியாக தோள் தரும் மனிதனின் விருப்பமும் அவ்வாறில்லாத மனதின் செதில்களும் கலந்தும், கலைந்தும் கிடக்கின்ற தொகுப்பு இது. ஒரு நுட்பத்தில் உரை நடையின் கவித்துவ அழகு கொண்ட சொற்களென பாவிக்கப்படவும் வாய்ப்பிருக்கின்ற சில நெடுங்கவிதைகளின் இயல்புகள் கொஞ்சமேனும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. சிறு சிறு கவிதைகளின் தேர்ந்தெடுப்பு காரணிகளும், நுட்பச்செறிவும் ஒரு வழியில் நின்று வெறுமையை ஏற்படுத்தாமல், வாசிப்பிற்குப் பிறகும் எப்பொழுதும் மனதிற்குள்ளியங்குவதாக அமைக்கப்பட்டிருக்கும் அழகியலும் கொஞ்சம் கவனிக்கும் படியாகவும், ஆழ்ந்த புரிதலுக்குமானதாகவும் இருக்கின்றன. தொடர்ச்சியான இதன் வடிவங்கள் மற்றும் சொல் நேர்த்தியின் செயல்கள் சார்ந்து ந.பெரியசாமி கவிதைகளின் முன்னேற்றங்கள் ஆர்வங்கொள்ளும் விதமாகவும் நம்பும்படியாகவு மிருக்கின்றன. மீதமிருக்கும் நம்பிக்கைகளும் அன்புகளும் எவ்வளவு எழுதிய பிறகும் மீதமிருப்பவை தான், அதைத்தான் ந.பெரியசாமி தன் வானமென விரித்திருக்கிறார் சில பறவைகளுடன் நிறைய்ய நீலங்களுடனும்.
தோட்டாக்கள் பாயும் வெளி - ந. பெரியசாமி
- புது எழுத்து,- ஆகஸ்ட் 14 - ரூ70/-

Sunday, June 21, 2015

நிழல் கதை

நிழல் கதை

எழுந்திரி நேரமாச்செனும் குரலுக்கு
போர்வைக்குள் பதுங்கும் குழந்தையாக
புலர்பொழுதில்
தன்னை காணாமலாக்கிக்கொண்ட பனி
வெளிவரத் துவங்கிய அந்தியில்
பெரும்வனமடங்கிய கனியின் நிழல்
தங்க இடமற்று தவித்தது
பிடித்தென் மூத்த கிழவியிடம் கொடுத்தேன்
பாதுகாப்பாக நிலாவில்
பதுங்கியிருக்கிறாள்
என்றாவது இவ்வுலகம்
விதையற்று தவிக்கையில்
விழச் செய்வதாகக் கூறி.
*

தித்திப்பு

நிலங்கள் ஐந்தின் பூக்களை
மனத்திரையில் காட்சிபடுத்தி
நினைவில் வடியும் வாசனைகளை
சுவைத்தபடி இருந்தேன்
பதற்றமாக வந்தவன்
தன் புத்தகத்தில் இருந்த ராணித் தேனியை
காணவில்லை என்றான்
புன்னகையோடு தலைவருட
மீண்டும் பக்கங்களை புரட்டினான்
தேனீக்களின் இசை குறிப்புகள்
அதிசயித்தவன் விழி விரிய
பெரும் வனமாகியது வீடு
பூக்கள் நிறைந்த வேப்பமர குச்சொன்றில்
தேன் கூடாகிக்கொண்டிருந்தேன்
தித்திப்பில் கனிந்துகொண்டிருந்தது உலகு.

நன்றி : கணையாழி
*

Friday, June 19, 2015

பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...

பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...
வெய்யிலின் குற்றத்தின் நறுமணம் தொகுப்பு குறித்த என் வாசிப்பனுபவம்...
தங்க நாற்கர சாலைகளுக்காக பொக்லைனுக்குப் பிறந்த ராட்சச கைகள் புதைமேடுகளை அள்ளி வீச எழுந்த ஆதித்தாய் மாறிக்கிடக்கும் ஊரில் அவளின் அடையாளங்கள் அழிந்துபோய் இருக்க எங்களின் வாசனையை நுகர்ந்தபடி வீடு வந்து சேர்ந்தாள். சிதறிக்கிடக்கும் நாளிதழ்களை நோட்டமிட்டாள். மரம் தன்போக்கில் நின்றுகொண்டிருக்க அதன் இரு கிளைகளில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் தொங்கவிடப்பட்டிருந்த படம் பார்த்து அதிர்ந்தாள். இன்னமும் நீடித்தபடி இருக்கும் பாலியல் வன்கொடுமை செய்திகளை எல்லா நாளிதழ்களிலும் பார்த்தவள் எரிச்சலுற்று ஓங்கி ஒப்பாரியிடத் தொடங்கினாள். அடங்கா மிருகங்கள் இன்னும் நிகழ்த்தக்கூடும் தன் வேட்டையை. மான்கள் தப்பி ஓடித்தான் பிழைத்திருக்க வேண்டுமென. எங்களை அணைத்து பாதுகாப்பற்றுப்போன இம் மண்ணின் மீதமிருக்கும் கதைகளைத் கூறத் துவங்கினாள்.
கொலைதேசம் ஒன்றில் ஒரு இனத்தையே கொன்று கொன்று வெவ்வேறு காரணங்களைக் கூறி சடலத்தை பூவாக்கி புத்தருக்கு படைத்துக்கொண்டிருக்க, இக்கொடூரத்தின் சாட்சியாய் நின்றுகொண்டிருக்க இயலாது தவித்தபடி இருக்கும் புத்தரின் கதையைக் கூறி தன் மடியில் படுத்துறங்கும் நேசிக்கும் வளர்ப்புப் பிராணியைக் கொல்வதும் தன் சக உயிரிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைக் கொல்வதும் வேறு வேறானதல்ல என்றாள்.
பிழைக்குப் பிறந்த பிள்ளைகளைப் பார்த்து பதறி செத்துத் தொங்கும் குறியை அறுத்தெறிந்து மனித குமாரனாகிய அப்பாக்களின் துயர்தொடங்கி...
வனம் ஒன்றில் தனித்திருக்கும் பழந்தாயொருத்தியின் துயர்களை கசிய விட்டபடி இருக்கும் புல்லாங்குழல்...
துரோகங்களுக்குப் பின் தன் ரகசியப் பேழைக்குள்லிருந்த சர்ப்பமாக தன்னுடலை மாற்றி வேட்டையில் விரல்களில் ஊறும் ரத்தப் பிசுபிசுப்பை நக்கும் அம்மா...
எரியும் கஞ்சாபுகையில் சுவாசம் தேடி உடைந்த சாராய தம்ளரில் அம்மாவின் வாசனையை அறிபவன்...
வாழ்வு சாவு குறித்த புரிதலிருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடும் போதுமடா இனி செத்துத் தொலைக்கலாம் எனும் பெரும் நிறைவுகொள்ளும் தருணங்கள். மதுப்புட்டி ஒன்றை சில்க் சிமிதாவின் உடலாக்கி அதனுள் தம்புராவின் இசை நரம்புகளை பின்னி, ரெசோ செரஸின் பியனோ கட்டைகளில் தேங்கிய இசையை மீட்டெடுத்து, ஒசோ, புத்தன், மகதலேனா, சில்வியா பிளாத்தென ஆளுமைகளை புட்டியினுள் உலாவவிட்ட துயர் ஞாயிறொன்றில் விருப்பமுள்ளவர்களை சாக அழைப்பவன்..
துரோகத்தின் வலியால் ரௌத்திரம் கொண்டு கொலைக்கு அலைபவன்..
ஜீவன் மிக்க பறையையும், உணர்வுகளைக் கீறும் பாடலையும் பிள்ளையிடம் ஏற்றுக்கொள்ள இறைஞ்சும் நிலமற்ற தகப்பன்...
ஊராரின் நிர்வாண ரகசியம் அறிந்து அரைக்கூலியில் வாழ்வை நகர்த்தும் சுடலை நாசுவன்...
பிள்ளை விற்ற பெரும் வாழ்வில் பிரார்த்தனையிலிருப்பவனை கொல்ல உடலில் கடவுள் புணர்ந்த யோனிகளோடு இருப்பவன்...
எல்லாவிதமான சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு தன் மொழியையும் ஊரின் பெயரையும் ஞாபகப்படுத்த தாங்கவியலா துயரோடு அலைபவன்...
நினைவிலிருக்கும் வாழ்வின் உடல்களைப் புதைத்து பனங்கிழங்கையாவது பற்றிக்கொண்டு வாழ முற்படுபவனென இம் மண் தந்த பெரும் துயர்களோடு வாழ்ந்தவர்களின் கதைகளைக் கூறிய அலுப்பில் உறங்கினாள் ஆதித்தாய்.
மழை நிரம்பிய குளம் பார்க்க வந்த சூரியனை தன் தூண்டிலில் சிக்கவைத்திட காத்திருக்கும் கிழவன்...
கடல்நிரப்பி தாவரங்களின் வேர்களாக கிடக்கும் எலும்புக்கூடுகளை உயிர்ப்பித்து பயணிக்கும் மழைத்துளி...
ராட்டினக்காரனுக்காக காத்திருக்கும் சிறுவர்களாக மழைக்காக காத்திருந்து மழையைச் சேகரிக்கும் குருவிகள்..
தவளை வீட்டில் வசித்து தாமரைத் தண்டோடு உரையாடி தொலைத்தவைகளை குலசாமி தருமென நம்பி கழுதியிரவில் வெண்குதிரையேறி பறந்த ஆலமரத்தான்...
முற்றத்தில் மலர்ந்த கோலம் ரசித்து, முதல் முத்தத்தின் இசை உணர்ந்து, சுடரும் ஒளியின் நடனம் ரசித்து, யாமத்தின் ருசியை முலைக்காம்புகளில் தேடி திருடத் துணியும் கணத்தை உருவாக்கும் திராட்சை பூக்களின் பாடல்...
தன் தொட்டிச் செடிக்கு மழையைக் கொண்டு வர கனவில் தொலைந்து சாப்ளின் நாயோடும், நகுலனின் பூனையோடும் விளையாடிக்கொண்டிருப்பவன்...
நாடோடியின் மனற் திராட்சையை ருசிக்கத் துவங்கிய பாலையின் அனற்காற்று...
குறிஞ்சி யாழின் சாதாரிப்பண் மீட்க காந்தள் மலர்ச்சூடி மலைக்குறவனாக உருமாறி மீ மிருக நடனமாடுபவன்...
மன்புழுக்களின் முத்தங்களில் மயங்கி நிற்கும் வேர்கள்..
உளுந்து துவையலுக்கு உடலையே எச்சிலாக ஊறச்செய்யும் அம்மாக்களின் கதை...
சாராயம் மணக்கும் உதடுகளால் சமணமுனி சொன்ன நிசி மழை கூத்து...
தான் இருக்கும் அறையின் நிர்வாண ரகசியம் அறிந்த மீன்களுக்கு தொட்டியாகி சகோதரனும் காதலியும் முத்தமிட்டுக்கொள்பதை அறிந்துகொண்டவன் கதையென விவரித்த காட்சிகளில் வியப்புற்று, அதனோடு பயணித்து நாமும் நம் கனவுகளோடு ஆகாயம் பறக்கச் செய்தாள் ஆதித்தாய்.
தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் ரகசியம் அறிந்தவர்கள் குழந்தைகள். ஒரு பட்டாம் பூச்சியை வாங்கி அது பறந்து திரிய பூங்காட்டையே உருவாக்கச் செய்து, உடலையே இனிக்கச் செய்யும் முத்தத்தை கொண்டிருப்பவள்...
என்றோ பார்க்க நேர்ந்த சிறுமியோடு வய்லட் நிறப்பூ குறித்த உரையாடலில் மணந்திருந்து வய்லட்நிற முத்தங்களைப் பெற்று இன்னமும் வெற்றிருக்கையில் உதிர்ந்து கிடக்கும் நாவல் பூக்களை வேடிக்கை பார்த்திருப்பவன்...
கணக்கிலடங்கா முத்தங்களைப் பெற்றதன் நிமித்தம் பொம்மைகளில் களித்த வேடிக்கையில் தாயை தொலைத்த குழந்தை...
பொருள் தேடி பொருள் தேடி எதனோடும் லயித்திருக்க இயலாது ஓடிக்கொண்டே இருப்பவர்களின் அசைக்காதிருக்கும் சபிக்கப்பட்ட கழுத்தை நினைவூட்டி ஆகாயத்தை விரித்தும் சுருக்கியும் வி¬ளாயடுபவளென குழந்தைகளின் கதையைக் கூறியவள் மீண்டும் தொடர்ந்தாள்.
தன் கறுத்த தேவதையின் முத்தத்தை முட்களாலும் துளைக்க இயலாத காற்றின் குமிழியாக்கி அவளற்ற பொழுதுகளில் குமிழியின் விரல் பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பவன்...
நம்முள் இருக்கும் இசையை நாம் கண்டடையும் தருணம் மலரும் பூக்களைக் காண இயலாததை ஒத்தது. நம் விருப்பியவளின்/விரும்பியவனின் வருகை அதைச் சாத்தியப்படுத்தும். தன்னுள் இருக்கும் வாத்தியத்தை கண்டெடுக்க கோருபவன்...
காமத்தின் யாமருசி அறிந்தவன்...
பிரியத்திற்குரியவளால் மொத்த வாழ்வுக்கும் போதுமான கனவுகளை நிரப்பிக்கொண்டவன்...
பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...
காலி செய்ய இயலாத கோப்பைகளோடு இருப்பவனின் கதைகளென பெரும் காதலில் களித்திருக்கச் செய்தாள்.
இச்சமூகம் எல்லோருக்கும் நிறைவான வாழ்வை தந்துவிடவில்லை. மூன்று வேளையும் பசியாறினேன் என்பது பலருக்கு பெரும் கனவு. சில வீடுகளில் வாழும் நாய்களுக்குக் கிடைக்கும் உணவை பலருக்கு பண்டிகை நாட்களில்தான் பார்க்க முடியும். இப்படியான அவலச் சூழலில் எதையாவது செய்து பசியாற வேண்டித்தான் இருக்கிறது. ஒற்றைக் குச்சியின் முனையில் படுத்து வித்தைக் காட்டும் குழந்தையைப் பார்த்து பிச்சையிடாது போவோரின் சட்டையை பிடித்து உலுக்கி பிச்சையிடு இல்லையேல் குழந்தையை தாங்கும் கையைத் தட்டிவிடுவென ஆவேசமானாள்.
நம் ஏமாற்றங்களின் பட்டியல் நீளமானது. நிலம் இழந்த கதைகளில் மனம் பதைக்கும். பிறர் கொழுக்க தூண்டில் முள்ளில் செருகப்படும் மண்புழுவாக வாழ்ந்து மடிந்த நம் பாட்டன்களின் வாரிசுகளானவர்கள் சுரப்பற்றுப்போன முலை பெருத்த நகரத்தில் திருடர்களாக அலைவுறும் அவலக் கதையைக் கூறினாள்.
குற்றங்களின் வழியாக கடவுளை அடையும் வழியைக் கூறிய கன்னியாஸ்த்திரி...
மூதாதைகளிடம் உறிஞ்சிய ரத்தத்தை மீண்டும் மண்ணில் சிந்த வைக்க அம்பு தூக்கி நிற்கும் வழித்தோன்றல்களின் ஆவேசம்...
தேவைகளை மட்டும் உறிஞ்சிக்கொண்டு மீதியை குப்பையாக்கும் போக்கு நம்பிடையே தொன்றுதொட்டு வரும் பழக்கம். பஃப்பூன்களை வெறும் சிரிப்பூட்டும் எந்திரமாக மட்டுமே பார்த்து காட்சி முடிய வெளியேறிவிடுவோம். அவர்கள் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் அக்கறையற்றுதான் இருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு போதைக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்க்கான இடத்தைத்தான் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு அள்ளிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்கள்மீதான அக்கறையைக்கூட வெளிப்படுத்த தவறிவிடுகிறோம் என பஃப்பூன்கள் குறித்த கதையைக் கூறினாள்.
கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்பர். முல்லையும் குறிஞ்சியும் திரிய பாலை என்பர். ஆனால் பாலைக்கான சூழல் அதிகம் பொருத்தமாக இருப்பது நெய்தல் நிலத்திற்குத்தான்.பிழைத்துத் திரும்புதல் நிச்சயமற்ற வாழ்வு ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாட்டின் சிறைபிடிப்பும் சித்ரவதைகளும் பெரும் துயர்தான். வான்விரிந்த கடலை கழிவு நீர் குட்டையாக்கி காக்கும் கொற்றவையை கதிர்வீச்சால் நோய்மை அடையச் செய்த பாவனை அரசுகளின் பிரகடனங்களை நம்பி வாழ்வை நகர்த்தும் பரதவர்களோ பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையில் கழுகின் அலகில் சிக்கித் தவிக்கும் மீனாக வாழ நேர்ந்த துயரை கடலின் மொத்த கரிப்பையும் தன் கண்ணீர் துளிகளாக்கி அலுப்பில் அயர்ந்தாள் ஆதித்தாய்.
நீண்டு கொண்டிருந்த இரவில் கேட்ட கதைகளால் தூக்கமற்றுப்போய்விட அவளின் துயர்களை பெரும் குளமாக்கி சக மனிதர்களை மீன்களாக்கி பொரியைத் தூவி எல்லோரையும் ஓரிடத்தில் குவியச்செய்து விதை இழந்து நிலம் இழந்து தொழில் இழந்து நிலம் சார்ந்த வாழ்வின் அழகியலை இழந்து மோசடிகளுக்க துணை போகும் கள்ள மௌனத்தோடு நிலங்களை தொலைத்து பெரும் அறுவடைக்காக கனவு கண்டு பொருள்தேடி ஓடியபடி இருக்கும் வாழ்வில் எழுந்த குற்றஉணர்வுகளை பகிர்ந்தபடி இருந்தேன்.
நன்றி - திணை

Thursday, June 11, 2015

தூய்மை ராஜாவின் வாத்துகள்

1.
தூய்மை ராஜாவின் வாத்துகள்
*
தன் வல்லமைகளை
அறிந்தே மௌனித்திருக்கும் வாத்துகளை
குளம் மிதக்கும் தாமரையின்
உருவம் பொறித்த குடுவையினுள்
நுழையச் செய்திட்டனர்.

தூசுகள் படிந்து பரனில் கிடந்த
செங்கல்நிற பழந்துணியால்
அதன் வாயை இறுகக் கட்டினர்,

தன் உளறல்களைக் காட்சியாக்கி
அற்புதம் நிறைந்ததென
மிருதங்கத்தில் பெருமிதம் இசைத்தனர்.

குணமாக்கப்படாத அவஸ்தைகளோடு
தன் வங்கிக் கணக்கெண்ணை
மனனம் செய்தபடி வாத்துகள்

உலகம் மெச்சிக்கொண்டிருக்கிறது
தூய்மை ராஜாவை.
*
2.
மழைவெய்யில்

வானின் துண்டாகக் கிடக்கும் மொட்டைமாடியில்
நானும் நியும்
இத்தருணத்திற்கான காத்திருப்பின்
காலங்களை அறியாய்.

மிட்டாய்களின் நிறங்களை ரசிக்கும்
சிறுவனாகிறேன்
மேலும் சின்னஞ்சிறுவனாவேன்
உன் ஸ்தனங்கள்
அருந்தக் கிடைக்குமெனில்
அற்புதங்கள் கனவுகளுக்கானவை
விட்டுவிடலாம்.

சீம்பால் துண்டுகளாக
உன்னுடனான சம்பவங்களின் நினைவுகள்
விழுங்கி விழுங்கி
உலகைத் தித்திப்பாக்குகிறேன்

உண்மைதான் அன்பே
இறுகத் தழுவி முத்தமிடு
நாளை உலகத்தார்
சிறுவர் சிறுமிகளாவர்
வெய்யிலும் மழையும் கலந்து பெய்யும்.

நாம் மட்டும் அறிவோம்
வெய்யில் நீ மழை நான்  என்பதை.

nantri:pudhu Ezuthu

Thursday, June 4, 2015

நிலத்தின் நிழல் மொழி

நிலத்தின் நிழல் மொழி
-ந.பெரியசாமி

கவிதையை வாசிக்கையில் நினைவில் எனக்கானதொரு காட்சியை ஓடச் செய்தால் அக்கவிதை நல்ல கவிதை என்பது என் அனுமானம். அப்படியானதொரு கவிதையோடு நெருக்கம் கொள்ள முடியும். அதற்கான திறப்புகளை அக் கவிதை கொண்டிருப்பது இயல்பு. சிலரின் தொகுப்புகளில் சில கவிதைகள் அப்படியானதொரு நெருக்கத்தை ஏற்படுத்தும். பா.வெங்கடேசனின் நீளா அப்படியானதொரு அண்மையைத் தந்தது.

எல்லா ஆண்களுக்குள்ளும் பெண் மனம் இருப்பது இயல்பு. ஆனால் அப் பெண் மனம் ஒரு படைப்பாளியாக மாற்றம் கொள்வது மகா உன்னதம். நீளா தொகுப்பில் அப்படியானதொரு படைப்பாளியை நீங்கள் சந்திக்க இயலும். பாடுபொருட்களின் மீதான அவரது பார்வை தாய்மையின் கனிவும் காதலும் சரியான புரிந்துகொள்ளலும் ததும்பித் வழிகிறது..

ஒரு படைப்பில் படைப்பாளியின் வாழ்நிலத்தின் வாசனை இருப்பது அப்படைப்பை ஒளிரச்செய்யும். கவிதை மட்டுமின்றி பா.வெங்கடேசனின் பிற படைப்புகளிலும் வாழ்விடத்தின் வாசனையை உணரலாம். நீளா தொகுப்பிலும் வாழும் நிலத்தின் தன்மை அது ஏற்படுத்தும் மாற்றம், அப்பகுதியின் இயற்கை, காவல் தெய்வங்கள் என நிறைய்ய குறுக்கீடு செய்யும் விசயங்களும் உண்டு.

பா.வெங்கடேசனுக்கும் எனக்கும் வாழ்நிலம் ஒன்றுதான். இத்தொகுப்பில் நிலம் சார்ந்த கவிதைகள் என்னை ஆகர்சிக்கின்றன. சில கவிதைக்கான தருணங்கள் அவருள் முகிழ்க்கும்போது அவருடன் நானிருந்த நிலக்காட்சிகள் இப்போதும் படர்ந்து நினைவை கிளர்த்துகிறது. சமதளமற்ற மேடு பள்ளங்களோடு இருக்கும் ஓசூர் நிலம் வெப்பங்களை தனக்குள் வைத்துக்கொண்டு எங்களுக்கு குளிர்விப்பை தரவல்லது. (அதை நாங்கள் இப்போ மாற்றம்கொள்ளச் செய்துவிட்டோம் என்பது தனிக்கதை) பலதரப்பட்ட கலாச்சார சூழல் குவியப்பெற்றது. ஒற்றைத் தன்மை இவ்வூருக்கு கிடையாது. சிறு பயணத்திலேயே மனதை மடைமாற்றிக்கொள்ள முடியும். திப்புவின் காலடித்தடங்களையும் இம் மண் தன்னுள் கொண்டுள்ளது. பாறை ஓவியங்கள், நடுகல் சிற்பங்கள், கல்திட்டை சமாதி என வரலாற்றுத் தொல்லியலின்  எச்சங்கள் இன்னும் இப்பகுதியில் உண்டு.  இந்நிலத்தின் பன்முகத்தன்மையை இவரின் தாண்டவராயன் கதையில் விரிவாக தரிசிக்க முடியும்.

வெட்கப்படுதல், வெறித்துப் பார்த்தல் எனும் இரு நிலைகள் நிர்வாணத்தில் உண்டு. பெரும்பாலானோர் இந்நிலைகளிலேயே சுருங்கிப்போவதும், இத்தனை நிர்வாணத்தை பார்த்தேன் என்ற கணக்கீடுகளில் பெருமை கொள்வதுமே நிகழ்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்நிர்வாணத்தில் இருக்கும் ஒளிர்வை கண்டடைந்து தன் மொழியை கண்ணாடியாக்கி பிரகாசமாய் பிரதிபலிக்கச் செய்யும் ஆற்றல் இருக்கும். நீளா தொகுப்பில் பெட்டதம்மனின் நிர்வாணத்தின் ஒளிர்வை என்றென்றைக்குமாக மங்காதிருக்கும் ஒளிர்வாக மாற்றம் கொள்ளச் செய்திருக்கிறார். (பெட்டதம்மன் ஓசூர் பகுதியில் இருக்கம் ஒரு காவல் தெய்வம்) 'இடறும் காதல்' கவிதையில் வரும் பெட்டதம்மனை பார்த்துவந்த நாளின் கனவில் பெட்டதம்மன் உயர்ந்தபடியும் அகன்றபடியும் விரிந்துகொண்டே இருந்த காட்சி இன்னமும் மனம் அகலாதது.

சாமார்த்தியசாலியான கரிக்கும் பெண் எவராலும் கணிக்க இயலாத தளர்வு கொள்ளும் தருணத்தை உணரச் செய்து அவளின் முட்டாள்தனத்தை காட்சியாக்கி நிழலாய் தொடரும் மற்றொரு காதலையும் தரிசிக்கச் செய்யும் 'கரிக்கும் பெண்' கவிதையில் துவங்கிய காதல் தொகுப்பெங்கும் உணர்வின் முடிச்சுகளாக நீண்டு நமக்கான காதலில் தியானித்திருக்கவும் செய்திடுகிறது நீளா.

சில துணுக்குறல்கள் என்றாவது ஏற்படும். நம்மை துணுக்குறச் செய்த விசயத்தை மீண்டும் தரிசிக்க இயலாது போய்விடுவதும் உண்டு. அப்படியே அதைக் காண நேர்ந்தாலும் முந்தைய அனுபவத்தை மீண்டும் அதனால் ஏற்படுத்த இயலாது. முதல் காதல், முதல் முத்தம் இவைகளோடு முதல் துணுக்குறலையும் சேர்த்துக்கொள்ளலாம். 'அப்பா மயில்' கவிதை அப்படியானதொரு நிகழ்வின் அனுபவப் பகிர்வு.

ஆர்வமும் வாய்ப்பும் ஒருங்கிணைய பயணங்கள் வாய்ப்பதுண்டு. செல்லும் இடங்களின் பொதுவான அம்சங்களை மட்டுமே கண்டு வந்து சிலாகிப்பதில் மட்டுமே ஒரு பயணம் நிறைவுகொண்டுவிடாது. அப்பிரதேசத்தின் ஆன்மாவை கண்டுணர்ந்து தனக்குத் தெரிந்த கலைகளில் வெளிப்படுத்தி அதற்கானதொரு பிரத்யோக வண்ணத்தை உருவாக்கி விடுவதே நிறைவுகொள்ளும் பிரயாணமாக அமையும். தொகுப்பில் அப்படியானதொரு நிறைவுகொள்ளும் பயணங்களை நாமும் தரிசிக்க இயலும்.

 'முத்தியால் மடுவின் மோகினி' கவிதையில் பா.வெங்கடேசனுக்கு கோணங்கியோடு நிகழ்ந்த அனுபவம் பொறாமைக்கொள்ளத் தக்கது. உடன் போகாது போன வருத்தத்தை படியச் செய்தது கவிதை. முத்தயால் மடு முத்தங்கள் சூழப்பட்ட பகுதி சிறு அறுவியும் குறுகலான ஆறும் பழமையோடு ஓடிக்கொண்டிருக்கும். அப்படியான சூழலில் கோணங்கியின் உடல்மொழியோடு உரையாடலைக் கேட்பது மகா உன்னதம். என்றாவது எனக்கும் வாய்க்குமா எனும் எதிர்பார்ப்பை எதிர்படுத்திய கவிதை.

தேவதைகளின் தீராத் துயரம், காமம், வாதைகளறிந்து இரவுகளற்று இருக்கும் 'சொல்லப்படும் நிலவு' கவிதை ஹம்ப்பி பயணத்திற்குப்பின் எழுதப்பட்ட கவிதை. அப்பயணத்தில் பத்மபாரதி பாலசுந்தரம் நானும் வெங்கடேசனோடு சென்றிருந்தோம். மறக்கமுடியாத பயணமாக என்றென்றும் இருக்கக்கூடியது. கிருஷ்ணதேவராயர் கால மக்களின் காதலும் காமமும் வாதைகளும் அப்பாறைகளில் படிந்து கிடந்தது.  எங்கெங்கு காணினும் பாறைகள். துங்கபுத்திரா நதி அருகில் ஓடிய போதும் அக்காலத்தின் பாலை நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் நீடித்திருக்கு. நாங்கள் சென்றது திருவிழா நடந்த சமயம். கர்நாடகப்பகுதியின் எல்லா ஆட்டவகை ஆட்டக்கலைஞர்களும் வந்திருந்தனர். ஒரு ஆட்டக்காரரின் ஆளுமை எங்களைக் கட்டிப்போட்டது. எதிர்பாரா தருணத்தில் வெங்கடேசன் நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து வணங்கினார். பதறிய அக்கலைஞர் தூக்கி அணைத்தார். அக்கலைஞனின் கண்களில் அப்படியானதொரு மிளிர்தல். பரவசப்படுத்தியது அவரது ஆட்டம். அன்றைய இரவு எங்களை தக்கையாக்கியது. எங்களின் துயர்களை கண்ணீரிலும் சொற்களிலும் கரைத்தோம்.   ஹம்பி எங்களை பிதுக்கி வெளியேற்றியது. 'சொல்லப்படும் நிலவு' கவிதை வாசிப்பில் மீண்டும் அந்த இரவிற்குள் சென்றுவரச்செய்தது.

தன் மொழியின் அனுபவத்தை அகல் விளக்காக்கி அணையா நெருப்பை சுடரச் செய்வதன் மூலம் திருவாளர் ப்ரெட்டின் காதலை வாசிப்பின் மனங்களில் கடத்தும் 'திருவாளர் ப்ரெட்டின் தனிமொழி'

சமகாலத்தில் இருக்கும் சிறுவனின் கேள்விகளை ஆதிச் சிறுவனின் கேள்விகளாக்கி காலத்தை நகர்த்தும் 'நகரும் காலம்'

குரலை குறுந் துகள்களாக்கி பரணியில் சேர்க்கும் அணில் வசிக்கும் 'அணிலாடுமறை'

பார்த்திராத ஒன்றை சட்டகத்துள் படமாக்கி சுவற்றில் அறைந்துவிட தொங்கும் காட்சியில் கடவுளை ஒளிய வைக்கும் 'கடலை வரைதல்'

சக படைப்பாளியின் மனம் நோகக் கூடாதெனும் பதற்றம் தொற்றிய 'தவிர்த்த கவிதை'

தன் நிழலால் மட்டுமே தன்னை வெல்ல முடியுமெனும் நிலையை ஸ்திரப்படுத்தியிருக்கும்  'நீளா'

பீத்துணி போர்த்தி குழந்தைகளின் உலகில் நுழையும் தேவதைகளின் 'உருமாற்றம்'

நாணம் கொள்ளச் செய்யும் வார்த்தைக்கு உயிர் கொடுத்து பரிசளிக்கும் 'புத்தகம் அல்ல அவள் கேட்பது'

பருவங்களின் தன்மையை தன் இல்லக் கதவின் தாள் திறப்பில் மாற்றங்கொள்ளச் செய்யும் கருணை தேவதையை சிறுமியின் முகமாய் காட்டும் 'அடை'

இரவை அழிக்கும் மழை கூறிய கதைகளை தன் கதைகளாக கொண்டு நிற்கும் கல்யாளிகளின் 'இது எனது ஆயிரத்தோறாவது இரவாக இருக்கலாம்'

தன்னை மட்டுமே உலகமாக்கப் பார்க்கும் சகியின் நம்பிக்கை மிளிரும் 'வேற்றுலகக் கவிதை'

தன்னை நிரப்பிக் கொள்ளத் துடிக்கும் முத்தத்தின் வரலாற்றைக் கூறும் 'தனியே ஒரு முத்தம்' என நீளும் கவிதைகளோடு இருக்கும்  பா.வெங்கடேசனின் நீளா ரசனையான வாசிப்பனுபவத்தையும், பழைய நினைவுகளையும் மீண்டெடுக்கச்செய்தது. 

நீளா
காலச்சுவடு வெளியீடு

நன்றி- சிலேட்

Sunday, April 26, 2015

மாயத்தில் கவிதையாகும் யதார்த்த வெளி

தோட்டாக்கள் பாயும் வெளி- மாயத்தில் கவிதையாகும் யதார்த்த வெளி
-R.அருள்

 இன்று  எந்த கவிதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டாலும் இவைகள் தாம் இக்கவிதைகள்  என அஞ்சனம் கூறி கவிதைக்குள் இலகுவாக பயணிக்கலாம். காரணம் கவிதைகள் தங்களுக்கென பாடுபொருள்களை வைத்துக்கொண்டு அவைகளைச் சுற்றியே பயணிக்கின்றன. கவிதைகள் அழகியலுக்காக மட்டும் செய்யப்படுகின்றனவோ என்ற உணர்வை இவைகள்  ஏற்படுத்துகின்றன. மண் சார்ந்த கவிஞனின் அனுபவம் அரிதாகவே காணப்படுகிறது. கவிதைகள்  அறிவுத் தேடலுக்காகவும் தன சுயம் சார்ந்த  தேடலுக்ககவும் செய்யப்பட்டு தோல்வியடைகின்றன.
சிறந்த நவீன கவிதையோ அவ்வாறில்லாமல் கவிஞனின் ஆன்மாவை முன் நிறுத்தி இப்பிரபஞ்சத்தை குறிப்பாக மண்ணின் மனத்தை வாசகனுக்கு காண்பிக்கிறது. கவிஞனின் ஆன்மத்தினூடாய் பார்க்கப்படும்  இப்பிரபஞ்சத்தின் அழகியலே நவீனக் கவிதையின் இலக்கணம். கவிஞனின் ஆன்மமே  கவிதையின் வடிவம். அதனூடாய் காட்டப்படும் பிரபஞ்சமே அதன் அழகியல். கவிஞனுக்கும், கவிதைக்கும், இப்பிரபஞ்ச வெளிக்கும் மத்தியில் நடக்கும் ஊடாட்டமே ஒரு கவிதையை நவீனக் கவிதை என நம்மை அழைக்க தூண்டுகிறது. இந்த இலக்கணத்தை மீறின கவிதைகள் அனைத்தும் ஒரு எழுத்தாளனின் செய்பொருளாக இருக்குமே தவிர கவிஞனின் படைப்பாகாது.
இந்த வகையில் நா. பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி கவிஞனின் ஆன்மத்தை முன் நிறுத்தி அதினூடாய் நாம் பார்த்து அனுபவிக்கிற அனுதின வாழ்வியலை அதன் சாரமற்ற நிலையிலிருந்து அழகூட்டப்பட்ட மாய உலகமாக பிரதிபலிக்கிறது. இங்கு புரட்சியாளன் என்று யாரும் இல்லை. கவிதையும் புரட்சிக்காக எழுதப்படவில்லை. தலைப்பைப் படித்துவிட்டு தொகுப்பினுள் நுழையும் பொது கவிதைகள் இலட்சியவாதியின் தோட்டாக்கள் அல்ல,  அவைகள் வெறுமனே ஒரு சாமான்ய மனிதனின் அனுபவங்களே என்ற வியப்பை தருகின்றன.
இந்த சராசரி மனிதன் பல்வேறு பரிமாணங்களில் மகளிடம் அன்பு கனிந்த தந்தையாகவும், மகனிடம் பொறுப்பு மிகுந்தவராகவும், சிறந்த வாசகராகவும், மனம் குழம்பிய குடிமகனாகவும் கவிதைகளில் சிதரிக்கக்கப்படுகிறார். "அணிலாடுமறை" கவிதையில் கவிஞன் சராசரி மனிதனாக அற்ப விசயங்களை நேசிக்கிறவனாக,

இயல்பில் எதையும்
செல்லப்பிராணியாக
வளர்க்கத் தெறியாத எனதறையுள்
எனத் தொடர்ந்து
மகளின் பிடிவாதத்தால்
கதைசொல்லும் கனிவானத் தகப்பனாக மாறுகிறார். ஆனால் கதையில் தந்தைக்குள் இருக்கும், சராசரி மனிதனுக்குள் இருக்கும் கவிஞன் வெளிப்பட்டு
சகியின் காதலை
அக்கினியில் பிரவேசிக்க செய்தவனின்
துரோகக் கோடுகளை
சுமந்து திரியும் அதன்
கதையை கூறினேன்
என பழமையின் மீது தோட்டாக்களை நவீனக் கவிஞன் வெளியேற்றுகிறான்.
         கவிதைகளில் மகனைப் பற்றி பேசும்போது மட்டும் அன்பு கனிந்தவராக இல்லாமல் பொறுப்பு மிக்க தந்தையாக வெளிப்படுகிறார். மகளை பொறுத்தவரை  தாராளமாகவும் உணர்வு பெருக்குடன் இருக்கும் தந்தை மகன் என்றதும் உணர்வுகள் அடைபட்டு "தலையணை" கவிதையில்,

மற்றொரு நாளில்
உரித்து வைக்கப்பட்ட ஆரஞ்சுகள் அருகே
சொடாபீம் அமர்ந்திருக்க
அதுவும் எனக்கென்றான்
கிழியும் வரை  வேறேதும் இல்லையென
நிபந்தனைக்குப்பின்

என கவிதையில் தந்தையின் பொறுப்புணர்வு மேலிடுகிறது. அதோடு தலையணை மேகத் துண்டாக கனவுலகில் மாயமாகிறது. இந்த சராசரி தந்தையை பார்க்கும் பொது டால்ஸ்டாயின் அன்னா கரினினாவில் வரும் சம்பவம் நினைவிற்கு வருகிறது. நாவலின் ஆரம்பத்தில் குழப்பம் மிகுந்த சூழ்நிலையில் ஒப்லான்ஸ்கி தன் மகன் மற்றும் மகளை அணைக்கும் பொது தந்தையின் மகள் மீதான அன்பு ஈர்ப்பு மிகுந்ததாகவும் அதுவே மகன்
மீது இடைவெளி கொண்டதாகவும் உணருவார் . இது அனுதின சாதாரண வாழ்வியல்  விசயமாக இருந்தாலும் இலக்கியத்தில் பிரபஞ்சமளவில் இயங்கும் மனித உணர்வாக மிளிருகிறது.
கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் சிறு விசயங்களை பெரியசாமி தன் கவிதைகளில் அழகியல் ததும்ப மெருகூட்டுகிறார். விலைவாசிப் பிரச்சனை சாமான்ய மனிதனின் மிகப்பெரிய எதிரி அதே நேரத்தில் அதிகம் கணக்கில் கொண்டு பேசப்படாத ஒன்று. எதைப்பற்றி பேசினாலும் அதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. தன் மாய வார்த்தைகளில் பிரச்சனையை இவர் கவிதைப்படுத்துகிறார்.  "வேர்கள் வான் நோக்கி வளர்ந்தன" கவிதையில்

ஆடுமாடுகள் அந்தரத்தில் பறந்தன
அந்தரத்திலேயே தங்கின
...................
லிட்டர் ஐம்பதுக்கு விற்றது காக்கைப்பால்
மும்மடங்கு விலை அதிகம் குருவிப்பால்
...............,,..........
இப்படிதான்
காக்கை மருத்துவரை அணுகினேன்
ஒரு  மண்டலம் காக்கைக் குஞ்சின் மூத்திரம் தேக்க
குணமாகிவிடும் தீராத மூட்டு வலியுமென்றார்.

என கேலியுடன் முடிந்தாலும்  அத்தியாவசியத் தேவைகளே  பூர்த்தியாக்கப்படாமலிருக்கும் அவலத்தைதான் கவிதை தாங்கி நிற்கிறது. இதே போன்ற வலியைத்தான் "யாருடைய கைகள் அவை" நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த சராசரி மனிதனுக்கு தன் குடும்ப தேவைகள் பூர்த்தியாக்கப்படாதது முற்றும் பெரிய பிரச்னை அல்ல, இவனை நோக்கி அரசியல் சதியும் வாழ்க்கையை இல்பொருளாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை "நெட்டிலிங்கப் பூ" நமக்கு தெரிவிக்கிறது. ஓருபுறம் கறைபடிந்த அரசியல் தன் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்க அதைத் தவிர்க்க "மூதாயில்”

பெரும் மூச்சிரைப்போடு
பாட்சா மலையுச்சி
அடையும் சராசரி மனிதனுக்கு காத்திருப்பது

விந்து உறைந்த லூப்புகளும்
விட்டு சென்ற பரா ஜட்டிகளும்
..................
டாஸ்மாக் பாட்டில் நீர் உறைகளென
மாசுபட்ட சீரழிந்த சமுகமே.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்தியில் இவனுக்கு இருக்கும் ஒரே ஆதரவு புத்தகங்களில் உயிர் கொண்டிருக்கும் எங்கல்சும், மார்க்சும், மார்க்வேசும், போர்ஹெவும் தான். தன் "மேல்தளத்தில் அமைந்த குறு அறைக்குள்" நுழைந்த உடனே இந்த மேதைகள் இவனது அந்தரங்க உலகத்தில் புத்தகங்களில் இருந்து உயிர் பெற்று உரையாடல் நடத்த வந்து விடுகின்றனர். நிஜ உலகிலிருந்து பாலாவும்  கலந்து கொள்கிறார். இந்த உரையாலில் சராசரி மனிதன் யாரும் பொருட்படுத்தாத தன் பிரச்சனைகளை முக்கியப்படுத்தி பேச ஒரு உத்தியை கண்டுபிடித்துவிடுகிறார். இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இயல்பாகிவிட்ட நிலையில் யதார்த்தத்தை மாயாஜாலமாக்குகிறார். "அக்டோபர் முதல் நாளில்" மரித்த தேசப்பிதாவை தட்டியெழுப்பி  கடைதெருவில் தன்னோடு நடக்க வைக்கிறார். சமூகச் சீரழிவை கண்ட தேசப்பிதா " ஐயோவென மயங்கி சரிகிறார் "பாகெட்  பாலை, அதுவும் கலப்படம், ஆட்டுப்பாலென கொடுத்து "இனி உங்கள் ஜனன நாளில் மட்டும் வாருங்கள்" என்று வழியனுப்பபடுகிறார்.
ஆக கவிதைத் தன் பாடுபொருளாக அன்றாட பிரச்சனைகளைத் தவிர்த்து தன் அழகியலுக்காக மாத்திரம் பொருண்மைகளைத் தேடுமானால்  அது   சமூகப்  பொறுப்பற்ற ஒரு  அழகு பொருள் மட்டுமே. அதே  நேரத்தில்  சமூகப் பிரச்னைகள் மட்டுமே கவிதையின் பொருண்மையானால் யதார்த்தம் இலக்கியத்தின் மீதான தன் பொறுப்பை உதாசீனம் செய்கிறது. இரண்டிற்குமான பொறுப்பு பரஸ்பரமானது. இவைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடமாகத்தான் நா. பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளியை  நான் பார்க்கிறேன். இங்கு காண்பிக்கப்படும் புற உலகம் யதார்த்த உலகமாக இருப்பினும் கவிஞனின் ஆன்மத்தின் வழியே யதார்த்தம் மாயத்தில்  கவிதைப்படுத்தப்படுகிறது.

நன்றி-இன்மை.காம்

Thursday, April 23, 2015

நன்றி - அடவி ஏப்ரல் 2015 இதழ்

நேசங்களுடனான பெருவாழ்வின் மீதமிருக்கும் நினைவுகளும் தீர்ந்துபோகாத அபத்தங்களுக்கு எதிரான சொற்களும் நிறைந்த
அடர் வெளி :
  - ஜீவன் பென்னி



 நவீன கவிஞனினுலகு நீண்ட முகம்பார்க்கும் கண்ணாடியைப் போலவேதானிருக்கும் என்று தோன்றுகிறது – இட வல மாற்றமாக -

நிகழ்கால உலகின் எல்லா இயக்கங்களும் ஒரு வெற்றிடத்தில் நடந்துகொண்டிருப்பதாய் தோன்றுமவனுக்கு இப்பிரபஞ்சத்தில்

எப்போதுமலைந்து கொண்டிருக்கும் முடிவற்ற ஒரு புள்ளியெனவே அவன் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறான். எல்லா

நியாயங்களும், சட்டங்களும், போதனைகளும், சரி/தவறுகளும், நம்பிக்கையற்றே அவனுடன் எப்போதும் பழகிவருகின்றன.

நகரமயமாக்கலின் கொடூரங்கள் எல்லா சமநிலைகளையும் எல்லா விதங்களிலும் பாதிக்கின்றன. ஒரு பச்சைமரமும், பட்டாம்பூச்சியும் ஒரு

சூழலை மனிதனை ஒத்தே பாதிக்கின்றன. அதன் காரணிகளும் வழிமுறைகளும் ஒன்றாகவே பயணப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரே உயிர்,

ஒரே வாழ்க்கை. தன்னிருப்பிடங்களை இழப்பதற்காக நிர்பந்திக்கப்படும் இவைகளின் உடைந்த வாழியல் முறை பெருமளவில் அச்சூழலின்

காரணிகளை  பாதிக்கத்தொடங்குகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு காலமும், வாழ்வும், நெகிழ்வும், மரணமுமிருக்கின்றன, மிகத்

துரதிர்க்ஷ்டமாக இவைகளின் வரிசைகளையும் காரணிகளையும் விழுமியங்களையும் ஒன்றுக்கொன்று பாதிப்பதாக முரண்படுவதாக

மாற்றிக்கொண்டிருப்பதுதான் நகரமயமாக்கல். வளர்ச்சியென்பதன் பொருட்டு தினந்தோறும் மாறிக்கொண்டே வரும் இருப்பிடசூழலின்

தொடரிணைப்புகளான இயற்கைச்சூழலும், வாழ்வாதாரங்களும் நெருக்கடிகளையே எற்படுத்துகின்றன. இவைகளை அனுபவிப்பதன்

வலிகளையும், நுண்ணுணர்வுகளுடனான வேதனைகளையும், தோரனைகளாகவும், வெறும் எழுத்து கூட்டங்களாகவும் இல்லாமல் ஒரு

பிரக்ஞையின் வழியாக தொடர்ந்து தூலாவிக்கொண்டிருக்கும் ஒரு சக மனிதனின் அகவயமான திரட்சியான தேடல்களை பெரியசாமி

கவிதைகளாக்கியிருக்கார். என்றுமே தீர்ந்திடாத காமத்தின், காதலின், நட்பின், துரோகத்தின் இடைவிடாத சொற்களையும், ஒரு

தலைக்குனிவை, காத்திருத்தலை, உறவுகளின் நிச்சயமிண்மைகளை, மதுவின் வாசனைகளை, பூவின் அகோர மரணத்தை, அரசியலின்

வெக்கங்களில்லாத சொற்களையும் விழுந்துகொண்டிருக்கும் இலைகளெனச் சொல்லிச்செல்கின்றன பெரியசாமியின் சொற்கள்.

   தொடர் வளர்ச்சிக்காகவும், பெரு வியாபார லாபங்களுக்காகவும்  அறுபடும் உறவுகளுக்கானதும், உயிர்துறத்தலுக்கும்,  தொடர்

வாழ்விற்கானதும், நினைவுகளுக்கானதுமான தொடர்ச்சியான பிரதிகள் யிவை. மயில் தோகையின் எளிய அன்புகளாகவும்

நேசங்களாகவுமிருக்கின்ற சேகரங்களேதுமில்லாத இவ்வாழ்வின் தொடர் தேடல்கள் இந்த வரிகள். ‘தன் மயக்கம்’-கவிதையின் வெளி

அளப்பரியது, சொல்லி முடிக்கப்பட்ட அவ்வரியின் மீதான நினைவுகள் திரும்பத்திரும்ப வெவ்வேறு யிடங்களுக்கு கூட்டிச்செல்கின்றன.

மேலும் எதிர்த்தனங்களின் வழியே ஒரு தேடுதலையும் உருவாக்குபவை. பூனையாகி ஒரு நினைவில் நின்றிடும் ‘அம்மா’ சார்ந்த சொற்களும்,

கடவுளுக்கான எதிர் அதிகார அரசியலின் மையமிட்டு சொல்லப்பட்டிருக்கும் ‘நரபலிகள்’ கவிதையும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.

’மெய் வருத்தம்’ – உடல் மனமாகி இன்பங்கொண்டு முடிந்த பின் நிகழ்வதான அதிகாலை அயர்ச்சியில் அவ்வளவு அன்பிருக்கிறது, மேலும்

மனதின் புரிதலுமிருக்கிறது. தான் ஏமாந்து போகும் சூழலுக்கு மாற்றாகவே அவரின் கனவுகளில் மழையும் வெய்யிலும்

பொழிந்துகொண்டேயிருக்கின்றன. அவை தானிந்த சொற்கள், அவ்வளவு குளிர்ச்சியாகயும், அலைகளாகவும், வெப்பம் தகிக்கும்

சொற்களாகவுமிருக்கின்றன யிந்த சொற்கள். ‘நகரின் பரிசு’ கவிதையில் நிகழும்/நிகழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனின் செயல்பாடுகள்

ஒரு காட்சிநிலையின் அழகியலோடு யினைந்து மனதிற்கு மிகுந்த நெருக்கம் கொள்கின்றன. ‘நமக்கல்ல’, ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’

தலைப்பிட்ட இரு கவிதைகளும் நிகழ்கால அரசியல் மொழியையும் அதன் அதிகாரலாப நோக்கங்களையும் தீயிட்டுக்கொழுத்துகின்றன.

புரிதலுக்கான அன்பின் மொழிகளையும் அதன் நித்தியத்துவத்தையும் தவிப்பையும் இக்கவிதைத்தொகுப்பிலுள்ள சில கவிதைகளில்

உணரவும் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் முடிகிறது. சிறுவயதின் பால்யகாதலியின் நினைவுகளாலான ‘மதுவாகினி’ கவிதை

மேலும் மேலும் எல்லோர் மனங்களிலும் உயிர்பித்துக்கொண்டேயிருக்கின்றன. முடிவுறாத அந்நிகழ்வுகளிலான அக்கவிதைகளின்

முடிவுச்சொற்கள் ஒரு ஓவியத்தின் அமைதியென கனமான புன்னகையுடனும், புதிர்களுடனும், மௌனமாகவுமிருக்கின்றன. குழந்தைகள்

வரைந்து கொண்டிருக்கும் சித்திரங்களின் மொழிகளையும் அழகுகளையும் ரசிக்காமல் அவர்களின் திசைகளை திருப்புவதிலும் அவற்றை

கலைப்பதிலும் நாம் கொண்டிருக்கும் வேகமும் ஆர்வமும் தான் தற்கால வாழ்வின் பெரும் வேதனைகளாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

ந.பெரியசாமியின் கடவுள்கள் அவரைப்போலவே மிக எளிமையாகவுமிருக்கிறார், ஒவ்வொரு பிரார்த்தனைகளை மிக எளிதாக

நிறைவேற்றுபவராகவும் இருக்கிறார். ‘மயில்’, ‘கசப்பு’, ‘காட்சிகள்’, ’புலி வால் பிடித்த கதை’, ‘காத்திருந்த துளி’ ஆகிய கவிதைகளின் வெளியும்

அவை யுண்டாக்கும் காட்சிகளும், சிறு கவிதைப்பிரதிகளின் முக்கிய செயல்பாடான அடர் செறிவுகளான நீட்சிகளின்

சொற்களெனயிருக்கின்றன, அவை ஒரு இசையின் வடிவத்துடன் மிக நெருக்கம் கொள்ளவும் வைக்கின்றன. மதுவின் வாசனைகளின்

மீதமிருக்கும் சொற்களை உள்ளடக்கிய பிரதிகளும், சில நெருக்கமான வரிகளும் இவைகளிலுள்ளன, ஆனால் இவை வெறும்

போதையாகயில்லாமல் நிறைவான நேசத்துடனே இருக்கின்றன. முத்தங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனின் கவிதைகளுக்கான

உரையாடல்கள் எப்பொழுதும் போலவே நெருக்கமாகவும் அணைத்துக்கொள்ளும் படியாகவே யிருக்கின்றன.

   தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்வும் நிலையும் அவமானமும் வெற்றிடமும் நினைவுகளும் வெளியும் ஒரு

சகிப்புத்தன்மையும் பல கேள்வியும் தொடர்ந்து உணர்த்துதலின் வழியிலான பிரதிகளாக பெரியசாமியிடமிருந்து வெளிவந்து

கொண்டிருக்கின்றன. அவர் இவ்வாறு கலைத்துக்கொண்டிருக்கும் வாழ்நிலைக் காட்சிகளின் பிம்பங்கள் முன்னெப்போதுமில்லாத

அளவுகளினூடே எந்த யிடைவெளியுமற்று அவரின் சுயம் சார்ந்த கேள்விகளாகயில்லாமல் பொதுப்பரப்பில் கரைந்து கொண்டிருக்கும்

பிரக்ஞையின் கேள்விகளாகவும் பதில்களாகவும் எதிர் சொற்களாகவும் மையங்கொண்டுள்ளன. சற்று நீண்ட கவிதைகளின்

இயங்குநிலைகளிலாலான கவிஞரின் வார்த்தைகள் மிகப்பலவீனங்களுடனே அனுகப்பட்டும் தெரிவு செய்யப்பட்டுமிருக்கின்றன,

கொஞ்சமேனும் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பிரதிகள் உருவாக்கும் சவால்களின் தேடல்களும் சுதந்திரங்களும் அகமன

விசாரனைகளும் உணர்வலைகளும் ரசிக்கும் படியும் பிரியங்கொள்ளும் படியாகவுமே யிருக்கின்றன, மேலும் நேசங்களுடனான

பெருவாழ்வின் மீதமிருக்கும் நினைவுகளையும் தீர்ந்துபோகாத அபத்தங்களுக்கு எதிரான சொற்களும் நிறைந்த அடர் வெளியென

பரவியுமிருக்கின்றன இக்கவிதைகள்.

மதுவாகினி –
 ந.பெரியசாமி –
அகநாழிகை பதிப்பகம் – டிசம்பர் 12 – ரூ 70/-             


நன்றி - அடவி ஏப்ரல் 2015 இதழ்

Wednesday, April 15, 2015

பேசி நகரும் பிரியங்கள்...

nantri:yaavarum.com

பேசி நகரும் பிரியங்கள்...


கடவுளல்ல நான் எனும் பிரகடனம் உங்களுக்கான கடவுள் அல்ல என்பதாகவும் கொள்ளலாம். நான் எனக்கான கடவுள். என் மொழியால் சுமையற்றவனாகி காற்றாய், நதியாய் , மழையாய் மாறும் வல்லமை கொண்டவன் என்பதைக் கூறும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் தொகுப்பின் துவக்க கவிதையே நம்பிக்கையோடு தொடரச்செய்கிறது. இக்கவிதையின் நிழல் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் படிந்திருக்கிறது.

அகத்தில் அறம் அழித்து புறத்தே அறம் பேசித் திரிவோரின் வாழ்வில் பறவையாகி எச்சமிட்டு, கூழாங்கற்கள், மீன்குஞ்சுகளோடு குளிர்ந்த நீராக ஓடி சர்க்கரை கடலாகிறார்.

ச்சீ எனும் சொல்லில் மௌனத்தின் கலகம் உடைத்து, பசி ஏப்பத்தை புளிச்ச ஏப்பமென நினைக்கும் கடவுளை ஏசி, எப்பொழுதும் எந்த நிலம் சுதந்திரம் அளிக்கக்கூடியது என்பதை உணர்ந்து, பட்டாம்பூச்சியாகி மூத்திரம் பெய்து, எது கருணை என்பதை கேள்விக்குட்படுத்தி அதிகாரத்தை மண்ணுளியான் பாம்பாக புறந்தள்ளி, ராதையின் மார்பில் உறைந்திருக்கும் இரத்தத் துளிகளில் கண்ணன்களின் வஞ்சகங்களை காட்சிபடுத்தி, சாதும் மிரளக்கூடும் தருணத்தை நினைவூட்டி, அழிக்க நினைப்பவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் ஆலோசனைக்கூறி, புத்தனோடு  நீச்சலடித்து, சமணனோடு குகை அடைந்து கற்சிலைப் பெண்ணின் கதை கூறி வாழ்வையும் மரணத்தையும் இரு உதடுகளாக்குகிறார்.

சமகாலத்தின் வன்முறை நெருக்கடிகளினால் துயரத்தோடும் கோபத்தோடும் இருந்த நிலையில் வேறு வேறாக கூடுபாய்ந்து எதிர்வினையாற்றி அவ்வப்போது சமநிலையற்று தத்தளிப்போடு யாருமற்ற வீட்டில் இருந்தவரிடம் அதுவும் வெள்ளிக்கிழமையில் ரிது வந்திட வாசிப்பில் நமக்கும் இசை பற்றிக்கொள்கிறது. ரிதுவின் இடத்தில் நான் மதுவாகினியை வைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்களுக்கான ஆன்மாவை வைத்துக்கொள்ளலாம். இனி நாம் பிரியங்களாலும், முத்தங்களாலும் நிறைய்யப்போகிறோம். நம் பின்னணியில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன.

கருநீலப்புடவையில் அரக்கு மணத்தோடு தேவதையாக வலம் வரும் ரிதுவின் காதலை இதழ்களால் வேட்டையாடுகிறார். தப்படிகளின் பின்னோக்கிச் சென்ற காலங்களின் குறியீடாக இருக்கும் பொம்மையை தீயிலிட அதன் ஆன்மாவை மழைத்துளியாக்கி பருகும் காட்சி ரசித்து, கனவில் வந்த கருநிலப்புடவை ரிது குறித்து புகாரிட்டு பொறாமையைத் தூண்டி, ரிதுவின் ஆசிபெற்ற ரிது நீ மட்டும்தான் என தன் நதியின் கடைசி மீன் இதுவென நம்பிக்கையூட்டி, மீதமிருக்கும் வெள்ளிக்கிழமையையும், உள்ளங்கை வெப்பத்தையும் நினைவூட்டி தன்னுள் நிகழும் மாற்றங்களுக்கு ரிதமானவள் நீதானென் எதிர்பார்ப்பைச் சொல்லி, இன்பதுன்பங்களின் வடிகாலாக இருக்க சிறு மணல்வீடு போதுமெனும் எளிய மனசுக்காரனாக மாற்றம்கொண்டு, உன்னில் இருந்து வரும் நாகம் கூட ரோஜாக்களை மட்டுமே தந்து செல்லும் உண்மை கூறி, இரவாக மாற்றம்கொள்ளும் ரிதுவின் ஆடல் பாடலில் தகிக்கும் வெப்பம் உணரும் கனவைச்சொல்லி, தன்னில் படிந்து கிடக்கும் வெக்கை நினைவுகளை கொலை செய்து ரிதுவின் குளிர்ந்த கரம் பற்ற நாளாக நீடிக்கும் ஒத்திகைபார்த்து, யாருக்கும் புலப்படாமல் அகவாழ்வில் நிரம்பியபடியே இருக்கம் பழச்சாற்றின் ருசி காட்டி, பிரியங்கள் பேசி நகர உண்டாகும் சில்லிடலை சிலாகித்து. விடியலுக்குப் பின் நிற்கும் நிர்வாண உண்மையின் பொதுபுத்தியை கிண்டலடித்து, வாழத் தகுதியற்ற சமதளம் நீக்கி ரிதுவை வானில் நீந்தச்செய்கிறார்.

மூத்திரத்தை தங்கக்கிண்ணத்தில் ஏந்தச்சொல்லும் கோபம், காமத்தை கையில் பிடித்தபடி உபதேசித்துத் திரியும் மிஸ்டர் எக்ஸ்-கள் மீதான எரிச்சலை நாமும் உணரச்செய்திடுகிறார்.

தொகுப்பில் கீற்றாக ஒரு குழந்தை புகார்களோடு வந்துபோவதும், எல்லாகாலங்களுக்கும் நாயகனாக கொண்டாடக்கூடியவர் சே எனும் உண்மையையும் கூறும் கவிதைகள் புன்னகைக்க வைக்கிறது. வேறு நாயகன் வராது போன துயரமும் தொடரச்செய்திடுகிறது கவிதை.

சிறுசிறு தெறிப்புகளில் மின்னலாக மனம்வெட்டும் கவிதைகளோடு வந்திருக்கும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் எல்லோருக்குள்ளும் அலைவீசும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு
புதுஎழுத்து
2/205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.

Sunday, March 22, 2015

தன் மூட்டையே பற்றிப் படரும் பாகற்கொடி

நன்றி - திணை

கவி என்பவன் தன் சுய வியாபகத்துக்காக உற்பத்தியாக்கும் சரக்கு அல்ல.
கவிதை உண்மையில் நடைமுறை வாழ்வில் சம்பவிப்பது
                                                                                                                                -பிரமிள்

ஏனிந்த மேகங்கள் ஊர் ஊராக திரிகின்றனவென ஆதங்கம் கொள்ளும் ரோஸ் ஆன்றா தன் நிலத்தின் மனங்களையும் வண்ணங்களையும் அதன் பண்பு மாறாது அத்துத் தெறித்த பாசி மணிகளாகக் கிடக்கும் வார்த்தைகளில் தனக்கானதை கொத்திச் சேகரித்து நமக்கான வாழ்வின் அனுபவங்களையும் கீற்றாக காட்டிச் செல்கிறார்.

தன் மூட்டையே சுற்றி படர்ந்து பூத்துக் குலுங்கும் பாகற்கொடியென  சுட்டுப் பொசுக்கினாலும் எனக்கான இடத்தில்தான் நிற்பேன் என தன் ஆளுமையில் நம்பிக்கையோடு இருப்பவன் வாழ்வில் அன்றாடங்களில் நிகழும் போக்குகளில் சமூகம் எவ்வாறெல்லாம் குறுக்கிடுகிறதென அறியத் துவங்க கடும் சினம் கொள்பவனை பிரியங்கள் பாந்தமாய் இருக்கச் சொல்லும் வேண்டுதல் இயல்பாக இருந்தபோதும் ஆத்திரம் கொண்டு சினத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன கவிதைகள். இச்சினத்தை சமயங்களில் பகடியாகவும் வெளிப்படுகிறது.

குவாரி குத்தகைதாரர்கள் சூழல் குறித்து அறம் போதிப்பது போன்று பூக்காமலிருக்கும் சிலுவை மரத்தினடியில் அமர்ந்து அன்பை போதித்து வாழச் சொல்லி எவரும் எளிதில் நெருங்கிவிடாது பறண்டி பெரிதாக சுவரெழுப்பும் பெருச்சாளிகளின் இரட்டைத்தனமான வாழ்வு குறித்தும், என்றென்றும் பீடத்திலிருப்பவன் பீடத்திலேயே இருப்பது குறித்தும் பகடி செய்பவர், வாஸ்துக்காரன் சொல்லியவாரே அமைந்த வீட்டில் குடியேறியதால் அடிக்கடி சகியின் அணைப்பிற்கு உள்ளாவது குறித்த குசும்பையும் வெளிப்படுத்துகிறார்.

தொகுப்பில் தொட்டாற்சிணுங்கியை இன்னொருக்கா சுருங்கச் செய்து விளையாடும் சிறுவனும் வந்து போவது நாம் பால்யத்தில் கொஞ்சம் விளையாண்டு வரச் செய்கிறது.

 எல்லோருக்கும் இயல்பாக படுவது கவிஞர்களுக்கு வேறொன்றாக தெரியும். அவசரமற்ற மனநிலையும் அதற்கு தோதாக இருக்கும். வயலில் மொட்டுக்களாக அமர்ந்திருக்கும் கொக்கு, வீழ்ந்தெழும் அதீதப் பறவையின் சிறகடிப்பு, பூக்களின் கைபிடித்து பாதுகாப்பாக  கரை சேர்க்கும் காற்று, பயந்து விழும் கனி, கண்ணாடியின் உட்புக முயற்சிக்கும் முத்துக் குயில், அணில் கடித்து மீந்ததை இருட்டுக்குள் கொண்டு போகும் வௌவ்வால்களென தொகுப்பில் லயித்து வாசிக்கவும் செய்திடுகிறார்.

வாழ்வில் நம் அவசர புத்தியால் எடுக்கும் பிழையான முடிவுகள் ஏற்படுத்தும் வினைவுகளை அறிந்தும் நிதானமற்று இருப்பது இயல்பாகிப்போவதை சிறகு ஒடித்து வந்தது நுணுக்கங்களை அறிந்து கொள்ளாது கழுகின் வாயில் சிக்கிக் கொள்வதாக முடித்திருக்கும் கவிதை நன்றாக சித்தரிக்கிறது. தொகுப்பில் தலைப்பு இல்லாதிருப்பது இப்படி எழுதும்போதோ அல்லது குறிப்பிட்டு சொல்லும்போதோ பக்க எண்ணை நினைவில் கொண்டு சொல்ல இயலாது இவ்வாறான தடுமாற்றம் ஏற்படுத்துவதை ரோஸ் ஆன்றா கவனத்தில் கொள்ளலாம்.

பெரும் இரைச்சலில் சிக்கிக் கொள்ளும் வலியை ஓடி நசுங்கும் நீர் பாட்டிலாக்கி, பங்காளிச் சண்டையில் கேட்பாரற்று நிற்பவர்களின் துயரை மழை நீராக வடியச் செய்து, கெடா குட்டியை ஈனாத ஆட்டை கொண்டாடும் சமூகத்தை அன்னம்மையாக காட்டி, வீட்டுச் செடியோடு தன் கம்பீரத்தை இழக்க விருப்பமற்று கருகிப்போகும் காட்டுச் செடியின் மூலம் இடமாற்றமே வாழ்வு என இச்சமூகம் நிர்பந்தப்படுத்தி வைத்திருக்கும் பெண்களின் துயர் கூறி, தொட்டிகளில் விடப்படும் மீன் குஞ்சுகள் இறந்துபோவது நியதியாக்கப்பட்ட அவலத்தோடு, வீட்டிலிருக்கும் பொருட்களில் தன்னை கரைத்துக்கொண்ட அப்பாவின் நினைவுத் துயரென வாசிப்பவர்கள் தன் சார்ந்த துயரங்களிலிருந்து மீட்டெடுக்கவும் செய்கிறார்.

வீட்டின் வெளியில் எரியும் விளக்கு வெளிச்சம் பக்கத்து வாசலுக்கு போய்விடாதபடி பார்த்துக்கொள்ளும் பெரும்பாலானவர்களின் மனப்போக்கு உடன் இருக்கும் உயிரிகள் மீதான கரிசனத்தை துடைத்து போட்டுவிட்ட சூழலில் வாழ்கிறோம் என்பதை ரோஸ் ஆன்றாவும் நினைவூட்டுகிறார். அலைபேசி டவரால்தான் சிட்டுக்குருவிகள் அழிந்துகொண்டிருக்கின்றன எனும் உரையாடல் உண்மையல்ல குருவிகளுக்கான வாழ்விடங்கள் சுருங்கிப்போனதுதான் உண்மையான காரணம் என்றொரு ஆய்வு வந்ததை நினைவூட்டும் விதமாக இருக்கிறது குஞ்சு பொறிக்க அலையும் தாய் பறவையின் துயர் கூறும் கவிதை. வெட்டுக்காரன் சுற்றிப் பார்த்து போனபின்பு மரத்திற்கும் பறவைக்குமான நெருக்கம் குறித்து நினைவில் தைக்குமாறு ரோஸ் அன்றாவின் வரிகள் உள்ளன.

''வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மரம் செடி கொடிகளின் பெயரைக்கூட தெரியாத படைப்பாளர்கள்தான் அதிகம். அதில வந்தமரும் குருவிகளின் பெயரைக்கூட தெரியாது, அவர்தம் படைப்புகளில் ஒரு மரம் ஒரு குருவி என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்'' என கொம்பு(குறிஞ்சி பெரும்பொழுது 2014) இதழில் கோணங்கியின் 'த' நாவல் குறித்த கட்டுரையில் கோணங்கி பயணிக்கும் ஊர்களில் இருக்கும் அரிதான மரங்கள், உயிரினங்களின் பெயர்களை பதிவுசெய்யும் அவரின் நுணுக்கம் குறித்து சிலாகிக்கையில் மேற்கண்டதை சொல்லும் நக்கீரனின் கூற்றை நாம் எவ்விதத்திலும் மறுக்க முடியாது. நாம் வாசிக்கும் கவிதை கதைகளில் இப்படியான அபத்தத்தை பார்க்கத்தான் செய்கிறோம். ஆனால் ரோஸ் ஆன்றா அவ்வாறெல்லாம் இல்லாது தன் மன்சார்ந்த (கொன்ன மரம், வராச்சி மரம், கும்புடுபுட்டான், முத்துக் குயில்) போன்று மரம் செடிகொடி மற்றும் உயிரினங்களின் பெயர்கனை கவிதைகளில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

புது ஊருக்குச் செல்ல அப்பகுதியின் சொல்லாடல்களை எளிதில் உள்வாங்கிக்கொள்ள இயலாது மலங்க முழித்து பேசுவோரின் செய்கையை உற்றுப்பார்த்து அர்த்தம் கொள்வதை போல், பற்றுதலையும் மெனக்கிடலையும் கோரும் கவிதைகளோடு வந்திருக்கும் ரோஸ் ஆன்றாவின் 'நிலமெங்கும் வார்த்தைகள்' கவனிக்கப்பட வேண்டிய தொகுப்பாக வந்திருப்பது மகிழ்வுக்குரியதாக இருக்கிறது.

வெளியீடு
புது எழுத்து
2/205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்-635 112
விலை-ரூ.70

Wednesday, March 11, 2015

nantri: manal veedu

ந.பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி
மதிப்புரை : வெளி ரங்கராஜன்

ந.பெரியசாமி தன்னுடைய கவிதைகளில் கையாளும் உரையாடல் மொழி அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களிலிருந்து பெறப்பட்ட தாகவும் அதே சமயம் ஒருவித எல்லையற்ற புனைவுத்தன்மையை உள்ளடக்கியதாகவும் உள்ளது. அது அவருடைய சொல்லாடல்களில் ஒரு இயல்பான ஓட்டத்தையும், ஒரு வினோத மான உறவுநிலையையும் சாத்தியப்படுத்துவதாக உள்ளது. 

கொசகொசவென கட்டங்கள் வரைந்து
சிறுசிறு புள்ளிகளை அடைத்து
அப்பா இது பூச்சிகளின் வீடென்றாள்
கோடுகளை அடுக்கி 
குட்டியாய் பொந்து வைத்து
அப்பா இது எலிவீடென்றாள்
பெரிது பெரிதாய் சதுரமிட்டு
தடுப்புகள் நிறைய வைத்து
அடுக்கத் தொடங்கியபடி
அப்பா இது பொம்மைகள் வீடென்றாள்
உயர்ந்த மரம் வைத்து 
கூடு ஒன்றை நெய்து
அப்பா இது காக்கா வீடென்றாள்
தடித்த குரலின் அதிர்வில் 
தாளிலிருந்து தத்தமது வீடுகளிலிருந்து
பூச்சிகளும் பொம்மைகளும்
நகரத் தொடங்கின சமையலறைக்கு 
- என்றபடி குழந்தைகள் அநாயசமாக வரையும் சித்திரங்கள் உருவாக்கும் உலகம் இவரது கவிதைகளில் இன்னொரு தளத்தை முன்வைக்கின் றன. இன்னும் சித்திரங்கள் வாகனமாவது, நிலவை தொட்டுப் பார்ப்பது, மீந்த மின்னலை சிப்பியுள் அடைப்பது என எல்லாம் சாத்தியப்படுகின்றன இங்கு. வண்ணக்கிளிகள் தானே சம்பவங்களை சித்திரங்களாக்கி உலகை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

இவை வாழ்வின் சாத்தியங்களை அதிகப் படுத்தும் தன்மை கொண்டிருக்கின்றன. பசுநிழல் சூலுற்று குட்டி நிழலாகிறது. கட்டங்கள் உயிர் பெறுதல், பொம்மைகளோடு உரையாடல், பாம்பு பூக்களை உதிர்த்தல், நட்சத்திரம் ஒன்றைப் பிடித்து அறையில் ஒளித்து வைத்தல், மேகத் துண்டு தலையணையாதல் என பட்டியல்கள் நீளுகின்றன. குழந்தைகள் ஒரு வினோத உலகில் சஞ்சரிக்க எண்ணற்ற வழிகள் கொண்டுள்ளனர். நிறைய வானங்களை உருவாக்கி நமக்கான வானத்தை தேர்ந்து கொள்ளும் சாத்தியமும் உண்டு.

ஆனால் வினோதங்கள் இப்படியே எல்லையற்று நீள முடிவதில்லை. குழந்தைகளை அடுத்தநாள் பள்ளிக்கு அனுப்பவேண்டியிருக் கிறது. நவீன கூலியாய் சீருடை அணியவேண்டி யிருக்கிறது. கால் பதியும் நிலம் ஓணானை தின்பதாக இருக்கிறது. தத்துவவாதிகளாலும், கலைஞர்களாலும், தேவதைகளாலும், வார்த்தை களாலும் நிரம்பிய அறைகள் வெறும் அறைகளாக இல்லாதிருந்தும் வெளியே இரைச்சல்கள் தனிமை யைக் குலைக்கின்றன. பொய்களால் பாத்திரங் களை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டியுள் ளது. கண்ணாடியுள்ளிருந்து உருவங்கள் வெளிப்பட்டு தோற்றப்பிழைகள் நடந்தவாறு உள்ளன. புறாவின் சிறகைப்பற்றி மேலே செல்லும் போது வீடு நிலவாகத் தெரிகிறது. மரம், முயல், இணைமுயல், வேடிக்கை பார்க்க கல் என மனம் நிலைகொள்ளும் வெளியில் திடீரென தோட்டாக் கள் பாய்கின்றன. 

ஒரு இறுக்கமற்ற சொல்லாடல் தன்மை மாறிக் கொண்டிருக்கும் வாழ்க்கைத்தோற்றங்களை நெருக்கமாக உரையாடிச் செல்கிறது. யதார்த் தத்தை விழுங்கிக்கொண்டே புனைவுவெளியில் உறவாட இவை சாத்தியங்களை முன்வைக் கின்றன. யதார்த்தங்களும், வினோதங்களுமாக மாறிக்கொண்டிருக்கும் இத்தோற்றங்கள் ஏதோ ஒரு சலனத்தை புலப்படுத்தியபடி உள்ளன.

(வெளியீடு : புது எழுத்து)
nantri: manal veedu

Tuesday, March 10, 2015

ஏக்கம்

காலை நடை
மைதானம் நோக்கி மாறியது
அங்குதான் மரங்களை விட்டுவைத்துள்ளார்கள்
நாவல் கொன்றையோடு
கசகசாவும் நிறைந்திருக்கும்
ஒத்தையாய் நிற்கும் வேம்பில்
சடை சடையாய் காக்கைகள்
கொண்டுசென்ற இட்லியை பிட்டெறிந்து
பினி நீக்க இலை பெறுவேன்
வைத்தியர் சொன்ன
மண்டலக் கணக்குகள் முடிய
மறந்தேன் மைதானத்தை

தினசரி கனவில்
உடலிலிருந்து வேப்பம் பழங்கள்
உதிர்ந்து கொண்டிருக்க
கரைந்துகொண்டிருக்கின்றன காக்கைகள்.
*
தேவதை சாத்தான்

புடைத்துத் தொங்கும் நெல்லிகள்
மாடியில் உருள
மருண்டு ஓடிய அணிலோடு
லயித்திருந்த அந்தியில்
செங்குத்தாக நிற்கும்
சுழல் படிகட்டுகளில்
கொலுசை இசைத்தபடி
மறைந்து மறைந்து
தாவி ஏறிய நைட்டி
அன்பில் தேவதையாகவும்..
பேரன்பில் சாத்தானாகவும்...
நன்றி: படிகம் நவீன கவிதைக்கான இதழ்

Tuesday, February 24, 2015

உலகமும் நிகர் உலகமும்

நன்றி: பாவண்ணன்

உலகமும் நிகர் உலகமும் - பெரியசாமியின் ‘தோட்டாக்கள் பாயும் வெளி’

நம் பார்வையில் தென்படும் உலகத்துக்கு நிகரான இன்னொரு உலகை சொற்களால் கட்டியெழுப்பும் ஆற்றல் குழந்தைகளிடமும் குழந்தைமை மிகுந்த கவிஞர்களிடமும் மட்டுமே உள்ளது. கவிதைகளில் வெளிப்படும் உலகம், வெளியுலகத்தின் நேரடியான பிரதியல்ல. அதன் சாயலை உருவகமாகவும் படிமமாகவும் கட்டியெழுப்பவே கவிதை முயற்சி செய்கிறது. ஒரு சின்ன மரப்பாச்சியை குழந்தையாகவும் தாயாகவும் தந்தையாகவும் தாத்தாவாகவும் அரசனாகவும் சுட்டிக்காட்டி கதைசொல்வது  குழந்தையின் உலகத்தில் மிகவும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். தன்னிச்சையான அந்தச் சொற்கோவையை உருவாக்க முடியும்போதுதான் கவிஞனுக்கும் அந்த வெற்றி சாத்தியமாகிறது. அந்தப் புள்ளியை தன் சொல்லால் தொடக்கூடிய ஒரு சில கவிஞர்களில் ஒருவர் பெரியசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த மதுவாகினி தொகுப்பில் அத்தகு அடையாளங்களைக் கொண்ட சில நல்ல கவிதைகள் இருந்தன. அதன் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் ’தோட்டாக்கள் பாயும் வெளி’ தொகுப்பில் காண முடிகிறது.
’தோட்டாக்கள் பாயும் வெளி’ என்னும் தலைப்புக்கவிதையே தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை. ஒரு வீட்டின் மாடி. அமைதி மிக்க சூழல். கொண்டு சென்ற தாளில் ஒருவன் ஒரு முயலை வரைகிறான். பிறகு, துடிப்பு மிக்க அந்த முயல் சுற்றி வந்து விளையாட ஒன்றிரண்டு மரங்களையும் வரைகிறான். சில கணங்களுக்குப் பிறகு, அந்த முயல் கூடி மகிழ ஓர் இணைமுயலையும் வரைகிறான். மரங்கள் அடர்ந்திருக்கும் தனிமையில் அந்த முயல்கள் விளையாடி மகிழ்கின்றன. ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொள்கின்றன. உறவின் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. ஆனந்தக் காட்சியை உட்கார்ந்து வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கும் பொருட்டு ஓரமாக ஒரு பாறையையும் வரைகிறான். ஒருபுறம் முயல்களின் ஆனந்தம். இன்னொருபுறம் கண்டு களிக்கும் மானுடனின் ஆனந்தம். இந்தக் கணங்கள்  நீடித்திருந்தால் இந்த உலகம் ஆனந்தத் தாண்டவம் நிகழும் களமாக மாறியிருக்கும். ஆனால் அக்கணங்கள் நிலைமாறிவிடுகின்றன. ஒரே கணத்தில் எங்கிருந்தோ தோட்டாக்கள் பாய்ந்து தாக்கும் களமாக அது மாறிவிடுகிறது.
அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயரமான ஒரு கோட்டையை அல்லது மாளிகையை வியப்போடு பார்த்து மகிழும் ஒரு மனிதன் அக்கணமே அந்தக் கோட்டை அல்லது மாளிகை சரிந்துவிழுந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கிறான் என்கிறது உளவியல். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல ஆனந்தமும் குரூரமும்  மனத்தின் இரு பக்கங்களாக உள்ளன. வதைபடுவதைக்கூட ஆனந்தத்தின் ஒரு பக்கமாக மாற்றிப் பார்த்துக்கொள்கிறது மனம். மனத்தின் விசித்திரத்தை ஒரு சித்திரமாக்க பெரியசாமியின் கவிதை முயற்சி செய்கிறது. மெல்லிய சத்தத்துடன் இரண்டு தோட்டாக்கள் பாய்கின்றன என்று எழுதும் பெரியசாமி அந்தத் தோட்டாக்களைச் செலுத்தியவன் யார் என்பதைச் சொல்லாமல் புதிராக நிறுத்திவிடுகிறார். இந்தப் புனைவுதான் அச்சித்திரத்துக்கு ஒரு கவிதைத்தன்மையை அளிக்கிறது. கவிதையின் முதல்  வரியிலிருந்து வரைகிறீர்கள், உருவாக்குகிறீர்கள், தருவிக்கிறீர்கள், போடுகிறீர்கள் என ஒவ்வொரு நடவடிக்கையிலும் அதில் ஈடுபடுகிற  மனிதரைப்பற்றிய குறிப்பு தெளிவான உருவத்துடன் இடம்பெற்றிருக்க, கடைசிகட்ட தோட்டாவைப் பாய்ச்சும் நடவடிக்கையில் எவ்விதமான குறிப்பும் இல்லை. தோட்டாவைப் பாய்ச்சியது அவராகவும் இருக்கலாம் அல்லது அவரைப்போலவே வேறொரு இடத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொருவராகவும் இருக்கலாம். ஆனந்தமும் குரூரமும் ஒரே நெஞ்சில் உறையும் உணர்வுகள் என வரையறுத்துக்கொள்வதற்கான சாத்தியத்தை அளிக்கும் கணத்திலேயே ஆனந்தம் உறையும் நெஞ்சம் ஒன்று, குரூரம் உறையும் நெஞ்சம் இன்னொன்று என வேறொரு சாத்தியத்தையும் அளிக்கிறது கவிதை. உளவியலாளன்போல கவிஞன் திட்டவட்டமாக நம்ப மறுக்கிறான். நம்ப மறுப்பதாலேயே அவன் கவிஞனாக இருக்கிறான்.
’நிலையானது’ இன்னொரு நல்ல கவிதை. இதுவும் ஒரு விளையாட்டுச் சித்திரம். மனத்தின் விசித்திரத்தைக் காட்டும் சித்திரம்.
அந்தி வேளையில்
விளையாடிக் கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள்
தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில்
சூரியகாந்திப் பூ
அடுத்தடுத்து  வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காயென
கட்டங்களை நிரப்பினர்
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவைகளை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவரவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர்
எனக்கானதை நிரப்ப கட்டங்களற்று
வெறிச்சோடிப் போனேன்

குழந்தைமனம் ஆசைப்பட்டதெல்லாம் நடக்கிறது. பெரியவர்களுக்கு எதன்மீது ஆசைப்படுவது என்றே தெரியவில்லை. அல்லது எந்த ஆசையை முதலில் முன்வைப்பது என்றும் புரியவில்லை. குழப்பம். தடுமாற்றம். தெளிவு பிறக்கும் சமயம், நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிகள்  என எதுவுமே இல்லை. கவிதையில் ஒரு விஷயம் தெளிவாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது கட்டங்களில் தமக்குப் பிடித்ததை வரையும்போது, குழந்தைகள் மனத்தில் ஆசை மட்டுமே உள்ளதே தவிர, இது நடக்கும் அல்லது நடக்கவேண்டும் என்கிற விழைவு எதுவுமே இல்லை. ஆசை ஒரு தூய உணர்வாக மட்டுமே உள்ளது. ஆனந்தமாக இருப்பதற்காகவே ஆசைப்படுகிறார்கள். தற்செயலாக அந்த ஆசைகள் நிஜமாகின்றன. அது அவர்கள் ஆனந்தத்தை இருமடங்காக்குகிறது. வேடிக்கை பார்க்கும் பெரியவர் குழந்தையோடு குழந்தையாகச் சென்று தனது ஆசையையும் வரைந்து வைத்திருக்கலாம். அதற்கு எந்தக் குழந்தையும் தடை சொல்லப் போவதில்லை. மாறாக, அவர் அக்குழந்தைகளோடு சேர்ந்துகொள்வதைத் தவிர்க்கிறார். ஏதோ கூச்சம் அல்லது இது விளையாட்டுதானே என்கிற எண்ணம் அவரைத் தடுத்துவிட்டது. குழந்தைகளின் ஆசைகள் நிறைவேறிவிட்டதை கண்ணாரப் பார்த்துவிட்ட கணத்தில், அவருக்கு அது உறுத்தலாக இருக்கிறது. ஏமாந்துவிட்டோமோ என எண்ண வைக்கிறது. ஆனால் அப்போது அவர் வரைந்துவைக்க ஒரு கட்டமும் இல்லை. காலமும் இல்லை. ஆசைக்குரியதை கற்பனை செய்துகொண்டாலும், அது தற்செயலாக நிலையான பொருளாகிவிடுகிறது. கற்பனை என்பது குழந்தைமைக்கே உரிய குணமென்பதால், அப்படி விளையாட்டாக ஆசைப்படுவதும் சாத்தியமாகிறது. குழந்தைமையைத் துறந்த மனம் நிலையானதின்மீது ஆசை கொள்கிறது. விளையாட்டு ஆசைகளை அது விழைவதில்லை. விளையாட்டு ஆசை நிலையானதாக மாறிவிடும்போது, ஒரு சின்ன துணுக்குறலுடன் வெறுமையில் உறைந்துபோவதை அதனால் தவிர்க்கமுடிவதில்லை. பொருள் நிலையானதல்ல, குழந்தைமையே நிலையானது. 
’அக்டோபர் முதல் நாளில்’ புனைவம்சம் மிகுந்த நல்ல கவிதை. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் சிறுகதையை நினைவூட்டக்கூடிய கவிதை. பெரியசாமியின் கவிதையில் வருகை புரிவது கடவுள் அல்ல. மகாத்மா காந்தி. சிற்றுண்டி முடித்து வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பவனிடம் வந்து ஆட்டுப்பால் கிடைக்குமா என்று கேட்கிறார். பட்டியே இல்லை, ஆட்டுக்கு எங்கே போக என்றபடி காந்தியை அவன் பரிதாபமாகப் பார்க்கிறான். பிறகு, இருவரும் சேர்ந்து ஆட்டைத் தேடிக்கொண்டு செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக, ஒரு கறிக்கடையின் வாசலில் உரித்துத் தொங்கவிடப்பட்ட ஆட்டைப் பார்த்துவிட்டு, காந்தி மனம் உடைந்துவிடுகிறார். அவரைத் தேற்றி வேறு பக்கமாக அழைத்துச் செல்கிறான் அவன். அந்தப் பக்கத்தில் சிலர் மது அருந்திவிட்டு போதையில் அமிழ்ந்திருக்கிறார்கள். அரசு ஏன் இதைத் தடுக்கவில்லை என்று கேட்கிறார் காந்தி. கடையை நடத்துவதே அரசுதான் என்று பதில் சொல்கிறான் அவன். காந்தி தலையில் அடித்துக்கொண்டபடி மயங்கிச் சரிகிறார். மயக்கத்தைத் தெளியவைத்து, அருந்துவதற்கு பாக்கெட் பால் வாங்கி தண்ணீர் கலந்து கொடுக்கிறான் அவன். ஒரு சில மிடறுகள் விழுங்கும் காந்தி பால் ஏன் சுவையில்லாமல் இருக்கிறது என்று கேட்கிறார். எல்லாவற்றிலும் கலப்படம் என்று சொல்கிறான் அவன். அவர் மனம் நொந்து தலைகுனிகிறார். அவன் அவரை ஆறுதல் படுத்தி, அவருடைய பிறந்த நாளன்றுமட்டும் வந்து செல்லுமாறு சொல்லி வழியனுப்பி வைக்கிறார். ஒருவித கிண்டல் தொனியுடன் எழுதப்பட்ட அரசியல் கவிதை என்றே இதைச் சொல்லவேண்டும். காந்தி நம்முடன் பெயரளவில்மட்டுமே இருக்கிறார். அவருடைய கொள்கைகளும் பெயரளவில் மட்டுமே நம்முடன் இருக்கின்றன. எதைப் பெற்று, நாம் எதை இழந்தோம் என்று நம்மை யோசிக்கத் தூண்டும்படி உள்ளது கவிதை.
’மூதாய்’ குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு கவிதை. ஆதி காலத்திலிருந்து நின்றிருக்கும் குளிர்ந்த மலை உச்சியே மூதாய் என்று குறிப்பிடப்படுகிறது. எப்போதும்போல மலை உச்சியில் குளிர் பரவியிருக்கிறது. இனிமையான காற்று வீசுகிறது. ஒருநாளும் மாற்றமின்றி  வீற்றிருக்கிறது அது. ஆனால் மனிதர்களால் அப்படி இருக்கமுடியவில்லை. தரையில் ஒருவிதமாகவும் மலையுச்சியில் இன்னொரு விதமாகவும் இருக்கிறார்கள். மலையுச்சியில் அவர்கள் நடத்தையே மாறிவிடுகிறது. ஏதுமறியாத குழந்தையாக மலை மினுங்கிக்கொண்டிருக்கும்போது, எல்லாக் கள்ளங்களும் நிறைந்தவர்களாக மனிதர்கள் விளங்குகிறார்கள். குழந்தைமை உதிர்ந்துவிடும்போது, கள்ளம் நுழைந்துவிடுகிறது. மூதாய் இன்னும் குழந்தைமை மாறாத நிலையில் இருக்கும்போது, மூதாயின் வழிவந்தவர்கள் குழந்தைமையை தொலைத்துவிட்டு சிதறி அலைகிறார்கள்.
மாதுளையை முன்வைத்துப் பேசக்கூடிய ‘எஞ்சியவை’ இன்னொரு அழகான கவிதை.
பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர்த் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றால் தொலிகளை
மாதுளைக்குத்தான் எவ்வளவு நிறைவான வாழ்க்கை. அதன் முத்துகள் ஒருவருக்கு உணவாகின்றன. தரையில் சிந்தும் சாற்றின் துளிகல் எறும்புகளுக்கு உணவாகின்றன். யாருக்கும் உணவாகமுடியாத தோல், வைத்தியத்துக்குப் பயன்படுகிறது. எதுவுமே எஞ்சவில்லை. தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்னும் திருக்குறளை நினைத்துக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. தகைமை மிக்கார் வாழ்வில் ஒருசில சமயங்களில் எதுவுமே எஞ்சாமல் கூட போகக்கூடும். அது அவர்களுடைய தகைமையை இன்னும் கூட்டுமே தவிர ஒருபோதும் குறைத்துவிடாது. மாதுளையை முன்வைத்த கவிதையை வாசிக்கும்போது மானுடரைப்பற்றிய நினைவும் தன்னிச்சையாகவே முளைக்கிறது. இந்த மாநிலம் பயனுற வாழாத வாழ்க்கைக்கு என்ன பொருள் சொல்லமுடியும்?
’நித்திரையை உருட்டும் பூனை’ இன்னொரு நல்ல கவிதை. தனக்குள் உறையும் பூனையின் குணத்தையே பெரியசாமி பூனையாக உருவகப்படுத்தி எழுதுகிறார். அந்தப் பூனை மனத்துக்குள்ளேயே கால்மடக்கி உறங்கியபடி இருக்கிறது. எப்போதாவது திடுமென எழுந்து வெளியே செல்கிறது. பிடிக்காதவர்களின் இல்லங்களில் நுழைந்து ஆட்டம் போடுகிறது. அவர்களின் தூக்கத்தைக் கலைக்கிறது. அவ்வப்போது அந்த வீட்டில் வசிக்கும் நண்பர்களையும் நகத்தால் பிறாண்டி விடுகிறது. பூனையின் குணத்தை அறிந்தும்கூட அதற்கு பால் ஊற்றி வளர்க்கிறான் அவன். அதை வருடி உற்சாகப்படுத்தவும் செய்கிறான். அது ஒரு செல்லப்பிராணியாக நெஞ்சிலேயே வளர்கிறது. படித்து அசைபோட நல்ல கவிதை.
உலகின் நிழலாக உள்ள இந்த நிகர் உலகை கவிஞர்கள் ஏன் தீட்டிக் காட்டவேண்டும் என்பது முக்கியமான கேள்வி. புது இடங்களுக்குச் சென்று திரும்புகிறவர்கள், கண்ணில் பட்ட பல காட்சிகளையெல்லாம் படங்களாக எடுத்துத் தொகுத்து வைத்துக்கொள்வதை நாம் பார்த்திருப்போம். அந்த ஊர் என்பது அந்தப் படங்கள் மட்டுமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அதே சமயத்தில் அந்த ஊரின் அடையாளங்களாக அந்தப் படங்கள் உள்ளன என்பதையும் மறுக்கமுடியாது. கவிதைகளில் கட்டியெழுப்பப்படும் நிகர் உலகமும் அப்படிப்பட்டவையே. பெரியசாமியின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கவிதையாக்கங்களில் தென்படும் அவருடைய வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


(தோட்டாக்கள் பாயும் வெளி. ந.பெரியசாமி. புது எழுத்து பதிப்பகம். 2/2015, அண்ணா நகர். காவேரிப்பட்டினம். விலை.ரூ.70)

Saturday, February 21, 2015

ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்





புங்கை மரத்தின் சிறு கிளையை ஒடித்து வந்தவன் ஏம்பா மரத்தோட ரத்தம் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்கிறது என்றான். பதிலற்று அவன் கேள்வியை ரசித்தபடி இருக்கையில் ஆசிரியர் ஆசிர்வதிக்கப்பட்டவர்களென்று தோன்றியது. உலகம் குழந்தைகளை கடவுளாக பார்க்கப்படுவதால் கடவுளின் உலகோடு நெருக்கமாக இருப்பவர்கள் பாக்கியவான்கள்தானே. உடனிருக்கும் ஓரிரு குழந்தைகளின் செய்கைகளும் பேச்சுகளும் வேறுவேறு உலகை தரிசிக்கச் செய்திடுகையில் வெவ்வேறு குடும்பச்சூழல், கலாச்சாரப் பின்னணி என பல்வேறுபட்ட புதிது புதிதான குழந்தைகளோடு பழகிக் கிடக்கும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு உண்டுதானே. புதிய அனுபவங்களும், தரிசனங்களையும் கிடைக்கப் பெறும். வனமிழந்த கதையோடு வந்திருக்கும் ஆசிரியர் கே.ஸ்டாலினை பொறாமையோடே பார்க்கிறேன்.

என் நினைவை மடைமாற்றி விட்டது மகனின் உற்சாகக் குரல். தூரத்தில் கிளி சோதிடர் வந்துகொண்டிருந்தார். இன்னும் சிறிது காலத்திற்க்குள் கன்னிகை ஒருத்தி உன் வாழ்வில் குறுக்கிடுவாள் என கிளி சோதிடர் கூறிய இரண்டாம் நாளின் நள்ளிரவில் புதிரான உரையாடலோடு அறிமுகமாகி சிநேனமானாள் தோழி. அதனால்தான் என்னவோ கிளி சோதிடரைக் காண்கையில் மகிழ்வு பனிக்கும். அவரை அழைத்து சோதிடம் பார்த்தேன். உணவிட்டு உபசரிக்க வீட்டிற்குள் அழைத்துப்போனேன். மகன் கிளியோடு உரையாடத் துவங்கினான்.

'எதுவுமற்ற கதை' என முடிக்காது விட்ட அம்மா சொன்ன கதையை சொல்லத் துவங்கினான். கவனியாதுபோல அவனைக் கவனித்துக் கொண்டிருக்க, நான் பார்த்திராத உலகை பார்க்கச் செய்தான். கதை சொல்லும் பாட்டி தாத்தாக்கள் அரிதாகிவிட அவ்விடங்களை சோட்டா பீம்கள் ஓரளவிற்குகேனும் எடுத்துக்கொண்டதாகப் படுகிறது. அன்றையத் தொடரின் நீட்சியாக பொம்மைகளோடு வேறுவேறு கதைகளை புனைந்தபடி இருக்கிறார்கள்.

மிஸ் விளையாட்டில் களைத்துத் தூங்கி தான் கண்டடைந்த ஏழு சூரியன்கள் ஏழு சந்திரன்களை தன் காலத்தோடு கட்டிவைத்தவனின் கதையைக் கூறினாள். கிளி ஆர்வத்தோடு மேலும் கேட்க, தன் கால்பட்ட நீரை அருந்திய குளத்து மீன்களை தங்கமீன்களாக்கியவள் பெரிய மனுசி ஆகிவிட தன் அப்பாவின் அண்மையைத் தொலைத்து துயருறும் கதையை வருத்தம் மேலோங்கச் சொன்னான்.

மாற்றி மாற்றி கோடாரிகளைத் தந்தபடி இருக்கும் தேவதைகளின் கதையை மீண்டும் நினைவூட்டி, வாங்கித் தர மறுத்த பலூன்களைத் தன் ஏக்க விழிகளால் வானில் பறக்கச் செய்து, தான் வாங்கும் மதிப்பெண்களை பட்டியலிட்டு, பெண் குழந்தைகளற்ற சபிக்கப்பட்ட வீடுகளை காட்சியாக்கி, தன் வெட்கத்திற்கு வண்ணமிட்டுக் காட்டி, பைத்தியங்களுக்குப் பரிசை தர திருவிழாக்களில் வேண்டுமென்றே தவறவிடும் கதையை கூறி, எச்சில் பாசத்தோடு இருக்கும் தன் சிலேட்டில் படம் வரைந்து காட்டி, வனம் உலாவும் குழந்தைகளுக்கும் குரங்குக்குமான கனவுலகைச் சொல்லி, வகுப்பறைவிட்டு வெளியேறிய குதூகலத்தில் தன் பாட்டில் நீரை மழை நீராக்கிய மாலையைக் காட்சிபடுத்தினான்.

பயமுறுத்தியபடி இருக்கும் பொதுத்தேர்வின் தேதி காட்டும் நாட்காட்டியை வெறுக்கும் தன் அண்ணனைப் பற்றிக் கூறினான். விபத்து பார்த்த அன்று வீட்டிற்கு வந்ததும் தன் பொம்மைகளை ஒளியவைத்ததை நினைவுபடுத்தி சொன்னான். குழந்தைகளாகிவிட முடியாத பெரியவர்கள் மீதான தன் கேலியைச் சொல்லி சிரித்தான்.

கடவுளைக் காட்டும் சிறுமியின் கொலுசு ஓசையை இசைத்து கோடை விடுவிப்பைக் கொண்டாடும் மனநிலையை சித்திரமாக்கிக்கொண்டிருந்தான்.

குழந்தைகளின் கைபடாத பலூன்களின் நிராசையைக் கூறி சிறுவர்களுக்கும் சிட்டுக்குருவிக்குமான நட்பைக் காட்டி அம்மாவுக்கும் மகளுக்குமான அவிழா புதிரைப் போட்டான்.

பதிலற்ற கிளி தன் வெட்டப்பட்ட இறக்கையைக் காட்டி வனம் அலைய முடியாத துயரைக் கூறியது. தன்னால் ஒரு குடும்பம் பசியடங்குவதின் பெருமையைச் சொல்லி ஆறுதல்கொண்டது. மனிதர்களின் அறமற்ற செய்கையால் வனமிழந்து தவிப்பதைக் கூறிட வருத்தப்பட்டவன் தன் கைகளை இலையாக்கி அரிசிகளை இட்டு தின்னக்கொடுக்க வனங்கள் மீண்டும் உருவாக்கப்படும் எனும் நம்பிக்கையில கிளி மகிழ்ந்தது.

வெளியீடு
வம்சி புக்ஸ்
19 டி.எம்.சரோன்
திருவண்ணாமலை.
விலை-ரூ-70
nantri:puththagam pesuthu

கெடாகறியில் மிதக்கும் பூங்கொடியின் ஏக்கம்


நள்ளிரவில் பதற்றத்தோடு எழச் செய்த அலைபேசியில் ஊரிலிருக்கும் உறவின் பெயர் மினுங்க, யார் மண்டையைப் போட்டார்களோவென யோசிப்போடு உரையாட நாளை அம்மாவுக்கு கோர்ட்டில் தீர்ப்பு ஒசூரில் ஒரு லாட்ஜிலும் ரூம் தரமாட்டேன்கிறார்கள் என புலம்பினார், பக்கத்து வீட்டினர் ஊருக்குச் சென்றிருக்க தெம்பாய் கிளம்பினேன் அழைத்து வர. தங்கியிருக்கையில் அவர்களின் உரையாடலில் தெளிவாக விளங்கிய உண்மை இனி எக்காலத்திலும் லஞ்சம் இருந்தபடியேதான் இருக்கும். கடுகளவிற்குக்கூட அது குறித்த எவ்வித உறுத்தலும் இல்லாது இருக்கும் பொதுபுத்தியை தீர்ப்பும், தீர்ப்பை ஒட்டி நடந்த நிகழ்வுகளும் காட்சிகளாக நினைவில் வந்தது. மயூரா ரத்தினசாமியின் மூன்றாவது துளுக்கு சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையாக இருக்கும் 'சுழற்சி' கதையை வாசித்து முடிக்கையில். எக்காலத்திற்கும் பொருத்தமான கதையிது.
நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லத் தெரிந்திருப்பதால் வாசிப்பில் சோர்வடையச் செய்யாமல் பதப்படுத்தி விடுவதால் தொடர்ந்தாற்போல் நூலில் பயணிக்க முடிகிறது.
சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் தனித்து விளையாடியபோது சிக்கியது ஒரு தட்டான். அதை பிடித்து கற்களை தூக்கச் செய்து தீப்பெட்டி லாரியில் லோடு ஏற்றினேன். திடீர் யோசனையில் அருகில் கிடந்த சோளத்தக்கையை சிறிதாக ஒடித்து நூலில் கோர்த்து தட்டான் வாலில் கட்டிவிட்டேன். அது எங்கும் போகதிருக்க கிணற்றடிபோய் தண்ணிக் குடித்து திரும்பி வருகையில் சோளத்தக்கையை தூக்கியவாறு தட்டான் பறக்கத் துவங்கிவிட்டது. துரத்தியபடி ஓடினேன். மொச்சையின் மணம் ஒரு கணம் நினைவை தடுமாறச்செய்ய கண்களிலிருந்து தப்பியது தட்டான். பெருத்த சோகத்தில் விளையாடப் பிடிக்காமல் வெறுமனே திண்ணையில் படுத்துக் கிடந்தேன். சிறிது நேரம் பழகியதற்கே இப்படியென்றால் வருடக் கணக்கில் பழகிய ஆட்டுக்குட்டியை பிரிவதும் பெரும் துயரம்தான். மூன்றாவது துளுக்கு கதையில் வரும் பூங்கொடியின் துயரம் வாசிப்பவரின் துயரமாகவும் மாற்றம்கொள்ளும். காதுகுத்து கெடா வெட்டிற்கு போய் வந்த நிறைவைத் தந்தது கதை.
இலக்கிய வாசிப்பு துவங்கிய காலகட்டம். அப்பொழுது நண்பர் காஃப்காவின் உருமாற்றம் நாவலைத் வாசிக்கத் தந்தார். ஒரு மனிதன் தன் நிலையிலிருந்து உயரிய நிலைக்குப் போக யோசிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் அக்கதையோ கரப்பான் பூச்சியாக மாறுவதுபோன்றிருக்க இந்த எண்ணமே எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்க, கதையை வியப்பும் ஆச்சரியமும் ஆர்வமுமாக படிக்கச்செய்தது. அந் நாவலை படித்த நாட்களின் நினைவுகளை ஏற்படுத்தியது மயூராவின் 'பல்லி வேட்டை' கதை. மீண்டும் வாசிக்கச் செய்தது. வாசித்து முடிக்க நெடுநேரம் சிரித்தபடி இருந்தேன். என் சகி பல்லியாகவும் நான் ஓணானாகவும் மாறுவதுபோன்ற சித்திரம் தோன்றியதால்.
80களில் வந்த பெரும்பாலான திரைப்படங்கள் நிறைவான மனநிலையை ஏற்படுத்தும். நாம் பார்த்த கேள்விப்பட்ட நம் வீதிகளில் நிகழும் கதையாகவும் கதைமாந்தர்களாகவும் இருந்ததால். படம் பார்க்கிறோம் என்ற நினைவற்று நாமும் அப்படத்தில் கேரக்டராக மாறி இருப்போம். 'ஒற்றைச் செருப்புகள்',. ஜோசப் என்பது வினைச்சொல்' கதைகளைப் போன்று தொகுப்பில் இன்னும் சில கதைகளை குறிப்பிடலாம். கதையை வாசித்து முடிக்க நல்ல சினிமா பார்த்து வெளியேறிய மனநிலையை ஏற்படுத்துகின்றன. வாசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான தொகுப்பாக மாறிவிட இருவும் ஒரு காரணமாக அமையலாம்.
'பூஜ்ஜியத்தின் கீழ் பத்தாயிரம் வாசனை அல்லது வடிவக் கொலை வழக்கு' கதை மயூராவை நினைவில் வைத்திருக்கச் செய்திடும் கதையாக இருக்கிறது.
'இது நம்ம ஜாதி' கதை நிகழ்கால சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. நம் தேசம் சார்ந்தவன், நம்ம மாவட்டக்காரன், நம்ம ஊர்க்காரன், நம்ம சாதிக்காரன் எனும் எளிய வார்த்தைகளை நம்பிக்கிடக்கும் அப்பாவி மனிதர்களின் நம்பிக்கையை சுயத்திற்காக காவு வாங்கும் வஞ்சகர்களின் ஏமாற்றுகளையும் துரோகங்களையும் நாம் தினசரி வாழ்வில் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். 'படித்தவன் சூதும் வாதும் செய்ய ஐய்யோவென போவான் எனும் பாரதியின் சாபம் நினைவில் வந்தது இது நம்ம ஜாதி கதையை வாசிக்கையில். தன் பேரனை இழந்து தவிக்கும் அப்பாட்டியின் வலியை லாப அரசியலாளர்கள் என்றாவது உணரத் துவங்கினால் தீக்குளிப்பும், கலவரக் கொலைகளும் இல்லாது போகும்.
தொகுப்பில் சில கதைகளை தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது. தொகுப்பாக்கும் போது பெரும் மனப்போராட்டமே நிகழும். நம் படைப்பை கைவிட்டு வெளியேறும் கெட்டித்த மனநிலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. களைகள் இருந்தாலும் செழிப்பான பயிரின் வளர்ச்சியே வயலின் ஆரோக்கியத்தைக் காட்டும். மயூரா ஆரோக்கியமான மனவயலோடு இருக்கிறார். தொடர்ந்து நல்ல கதைகள் தருவார் என நம்புவோம்.
எதிர் வெளியீடு
96, நீயூ ஸ்கீம் ரோடு
பொள்ளாச்சி-642002
விலை-ரூ.130
nantri:malaigal.com