Tuesday, June 30, 2015

மீதமிருக்கும் அன்புகளினாலான வண்ணங்களும் சிற்பங்களுமான சொற்களின் வெளி

மீதமிருக்கும் அன்புகளினாலான வண்ணங்களும் சிற்பங்களுமான சொற்களின் வெளி
- ஜீவன் பென்னி
நம்பிக்கையின் மிருதுவான சொற்களிலாலான கவிதையுடன் தன் தொகுப்பைத் தொடங்கியிருக்கிறார் ந.பெரியசாமி. பிரியங்களி னாலான சொற்களுக்கும் அவற்றினூடான செயல்பாடுகளுக்கும், காட்சிபடுத்துதலிலாலான அழகியல் வெளிக்கும் மிக அருகிலிருப்பது மான கவிதானுபவமே ந.பெரியசாமி கவிதைகளில் வழிந்திடும் சிறு சிறு துளிகளாகயிருக்கின்றன. சொல்லிக்கொண்டே செல்வதன் மூல மான அவதானிப்புகளும் விவரணைகளும் சொற்சித்திரங்களும் அவரின் முந்தைய தொகுப்புகளைவிட கொஞ்சமேனும் மேம்பட் டிருக்கின்றன மேலும் செழுமை அடைந்திருக்கின்றன, ஆனால் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தலின் மிக இளகியதன்மை இத் தொகுப்பிலும் படர்ந்திருக்கின்றன. சொற்சேர்க்கையின் அளவுகளும் கச்சிதத்தன்மையும் ஒரு இடைவெளி வரை பெருங்கவிதைகளிலும் படர்ந்திருப்பதை மிக உற்சாகமாக கவனிக்க முடிகிறது. குறிப்பாக சிறுகவிதைகளின் பிரதான அடர்த்திகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களினாலே வெற்றிகரமாக அமையப்பெற்றிருக்கின்றன. தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களின் நிழல் களையே வார்த்தைகளாக எல்லாக்கவிதைகளிலும் பரவவிட்டிருக் கிறார் ந.பெரியசாமி.
அகமன மாற்றங்களினூடாக மாறிவருகின்ற மதுவாகினியை மடி யிலிட்டு வலியின் சோர்வு கடக்க ஆசுவாசப்படுத்தி உறங்கவைக்கும் குழந்தைமையின் சந்தோசங்களையும், கேள்விகளையும், பதில் களையும், விளையாட்டுக்களையும் உணரமுடிகின்றன - வலியின் சித்திரங்கள், சாயற்கனி, நிலையானது - இக்கவிதைகளில். சிறு வெளிச்சங்களின் அசைவுகளும் அன்புகளும், சிறு சத்தங்களின் மெலிதான கோட்டோவியங்களும் மனதின் வெறுமைகளை, முன்னெப்போதுமில்லாத சமநிலையின் வேர்களை எப்படியோ மாற்றுகின்றன - அணிலாடுமறை, எனது கடல், சென்னசேகவர், வண்ணக்கிளி, வளர்ப்பு நிழல், நிலையானது - இத்தலைப்பிட்ட கவிதைகள். காட்சிகளின் அழகுநிலைகளின் ஈரப்பதங்களினாலான இச்சொற்கள் பல ஞாபகங்களை உருவாக்குகின்றன. புத்தரின் சாந்தியை ஒத்த அடர் திராட்சை நிறச்சாறு பரவிடும் அறைக்கு வரும் ஏங்கல்ஸையும், மார்க்ஸையும், ஜென்னியையும், இன்னும் அதிக மானவரையும் ஒரு திரையில் நகரும் பிம்பங்களெனக் காண்பிக்கிறார் “ஏங்கல்ஸ் வந்திருந்தார்..” கவிதையில். “யாரும் தீண்டாத மூலையில் / கழிவை மிதக்கவிட்ட குளத்தினுள் / முத்தமிட்டபடி இருந்தன ஆமைகள்” - இம் மூன்று வரியில் மிதந்துகொண்டிருக்கின்றன மொத்தக் கவிதையும். கவிதைகளுக்குள் நுழைந்து பழக்கப்பட்டு விட்ட பூனைகளும் காணக்கிடைக்கின்றன. மழையின் சொற்களிலாலான- உயிர்ப்பு, களியாட்டம், வெளியே மழை பெய்தது... மழை ஆகிய கவிதைகளின் அடர்ந்த குளிர் நிறைந்த சித்திரங்கள் இன்னுமின்னும் அமைதி கொண்டு ரசிக்கவும் அனுபவிக்கவும் வைக்கின்றன. ஜீவிதங்கள் முடிந்திடாத பெருவாழ்வின் நகரத்தையும், லௌகீக தேவைக்கான சோம்பல் படிந்த வாழ்வின் குவி மற்றும் குழி ஆடிகளின் மாறுபட்ட புரிதல்களையும். சரியான ஊதியங்களற்ற உழைப்பின் வலிகளையும், தரப்படுத்துதலின் வழியேயான வேதனைகளையும், புறாக்களின் முத்தங்களையும், வறட்டியாகி விட்ட நிலவையும், எதுவுமற்ற வாழ்வில் கிடைத்துவிடும் வெறுங்கையின் பிசுபிசுப்புகளையும் மனதின் ஓர்மையின் ஊடாக அனுபவிக்கவும் பிரியங்கொள்ளவும் முடிகின்றன.
காந்தி வந்து செல்லும் கவிதையில் வெளிப்பட்டிருக்கும் நிகழ்கால அரசியலுக்கான அங்கத சொற்றொடர்கள் வெகு சீக்கிரம் வசீகரிப்ப தான குறுங்கதையென இருக்கின்றன. நிழலில் வளர்த்து வருவதான பசுவின் சித்திரங்களும், நீலம் புயலுக்குப் பிறகான குட்டிப்பசுவின் வருகையுமான “வளர்ப்பு நிழல்” கவிதை பேசும் மௌன அழகியல் மிக அழகாகயிருக்கிறது. சாக்பீசால் வரைந்திடும் ஓவியங்களின் பூக்களும் கனிகளும் உயிர்பித்து மின்ன அவரவருக்கானவற்றை எல்லோரும் எடுத்துசென்றதும் தழும்பும் வெற்றிடமும், பிளந்த மாதுளையின் மிச்சமெனயிருக்கிற பிசுபிசுப்பின் வெறுமையும் கவனிக்கக் கிடைக்கின்றன - (எஞ்சியவை & நிலையானது தலைப் பிட்ட கவிதை). மெல்லிய சப்தத்தோடான இரண்டு தோட்டக்களால் நிறைவுபெறுகிறது அழகும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த வேடிக்கைகளினாலான இப்பெரும் வாழ்வு.
யாருமற்ற தனிமையின் நிகழ்வுகளை ஒரு உறைவிடம் என சொல் லும் இக்கவிதைகள், நிகழ்கால அரசியலையும் அதன் முன்னேற்றப் பாடல்களையும் எள்ளி நகையாடுகின்றன. ஒரு வரையறையில் நிகழ்த்துவதான இவ்வசைவுகளின் வாக்கியங்கள் எப்போதுமிருக் கும் துன்பங்களின் எண்ணிலடங்கா நுட்பங்களைச் சொல்கின்றன. பக்கத்து சீட்டின் சகமனிதன் சாய்ந்துகொள்ள வசதியாக தோள் தரும் மனிதனின் விருப்பமும் அவ்வாறில்லாத மனதின் செதில்களும் கலந்தும், கலைந்தும் கிடக்கின்ற தொகுப்பு இது. ஒரு நுட்பத்தில் உரை நடையின் கவித்துவ அழகு கொண்ட சொற்களென பாவிக்கப்படவும் வாய்ப்பிருக்கின்ற சில நெடுங்கவிதைகளின் இயல்புகள் கொஞ்சமேனும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. சிறு சிறு கவிதைகளின் தேர்ந்தெடுப்பு காரணிகளும், நுட்பச்செறிவும் ஒரு வழியில் நின்று வெறுமையை ஏற்படுத்தாமல், வாசிப்பிற்குப் பிறகும் எப்பொழுதும் மனதிற்குள்ளியங்குவதாக அமைக்கப்பட்டிருக்கும் அழகியலும் கொஞ்சம் கவனிக்கும் படியாகவும், ஆழ்ந்த புரிதலுக்குமானதாகவும் இருக்கின்றன. தொடர்ச்சியான இதன் வடிவங்கள் மற்றும் சொல் நேர்த்தியின் செயல்கள் சார்ந்து ந.பெரியசாமி கவிதைகளின் முன்னேற்றங்கள் ஆர்வங்கொள்ளும் விதமாகவும் நம்பும்படியாகவு மிருக்கின்றன. மீதமிருக்கும் நம்பிக்கைகளும் அன்புகளும் எவ்வளவு எழுதிய பிறகும் மீதமிருப்பவை தான், அதைத்தான் ந.பெரியசாமி தன் வானமென விரித்திருக்கிறார் சில பறவைகளுடன் நிறைய்ய நீலங்களுடனும்.
தோட்டாக்கள் பாயும் வெளி - ந. பெரியசாமி
- புது எழுத்து,- ஆகஸ்ட் 14 - ரூ70/-

Sunday, June 21, 2015

நிழல் கதை

நிழல் கதை

எழுந்திரி நேரமாச்செனும் குரலுக்கு
போர்வைக்குள் பதுங்கும் குழந்தையாக
புலர்பொழுதில்
தன்னை காணாமலாக்கிக்கொண்ட பனி
வெளிவரத் துவங்கிய அந்தியில்
பெரும்வனமடங்கிய கனியின் நிழல்
தங்க இடமற்று தவித்தது
பிடித்தென் மூத்த கிழவியிடம் கொடுத்தேன்
பாதுகாப்பாக நிலாவில்
பதுங்கியிருக்கிறாள்
என்றாவது இவ்வுலகம்
விதையற்று தவிக்கையில்
விழச் செய்வதாகக் கூறி.
*

தித்திப்பு

நிலங்கள் ஐந்தின் பூக்களை
மனத்திரையில் காட்சிபடுத்தி
நினைவில் வடியும் வாசனைகளை
சுவைத்தபடி இருந்தேன்
பதற்றமாக வந்தவன்
தன் புத்தகத்தில் இருந்த ராணித் தேனியை
காணவில்லை என்றான்
புன்னகையோடு தலைவருட
மீண்டும் பக்கங்களை புரட்டினான்
தேனீக்களின் இசை குறிப்புகள்
அதிசயித்தவன் விழி விரிய
பெரும் வனமாகியது வீடு
பூக்கள் நிறைந்த வேப்பமர குச்சொன்றில்
தேன் கூடாகிக்கொண்டிருந்தேன்
தித்திப்பில் கனிந்துகொண்டிருந்தது உலகு.

நன்றி : கணையாழி
*

Friday, June 19, 2015

பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...

பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...
வெய்யிலின் குற்றத்தின் நறுமணம் தொகுப்பு குறித்த என் வாசிப்பனுபவம்...
தங்க நாற்கர சாலைகளுக்காக பொக்லைனுக்குப் பிறந்த ராட்சச கைகள் புதைமேடுகளை அள்ளி வீச எழுந்த ஆதித்தாய் மாறிக்கிடக்கும் ஊரில் அவளின் அடையாளங்கள் அழிந்துபோய் இருக்க எங்களின் வாசனையை நுகர்ந்தபடி வீடு வந்து சேர்ந்தாள். சிதறிக்கிடக்கும் நாளிதழ்களை நோட்டமிட்டாள். மரம் தன்போக்கில் நின்றுகொண்டிருக்க அதன் இரு கிளைகளில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் தொங்கவிடப்பட்டிருந்த படம் பார்த்து அதிர்ந்தாள். இன்னமும் நீடித்தபடி இருக்கும் பாலியல் வன்கொடுமை செய்திகளை எல்லா நாளிதழ்களிலும் பார்த்தவள் எரிச்சலுற்று ஓங்கி ஒப்பாரியிடத் தொடங்கினாள். அடங்கா மிருகங்கள் இன்னும் நிகழ்த்தக்கூடும் தன் வேட்டையை. மான்கள் தப்பி ஓடித்தான் பிழைத்திருக்க வேண்டுமென. எங்களை அணைத்து பாதுகாப்பற்றுப்போன இம் மண்ணின் மீதமிருக்கும் கதைகளைத் கூறத் துவங்கினாள்.
கொலைதேசம் ஒன்றில் ஒரு இனத்தையே கொன்று கொன்று வெவ்வேறு காரணங்களைக் கூறி சடலத்தை பூவாக்கி புத்தருக்கு படைத்துக்கொண்டிருக்க, இக்கொடூரத்தின் சாட்சியாய் நின்றுகொண்டிருக்க இயலாது தவித்தபடி இருக்கும் புத்தரின் கதையைக் கூறி தன் மடியில் படுத்துறங்கும் நேசிக்கும் வளர்ப்புப் பிராணியைக் கொல்வதும் தன் சக உயிரிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைக் கொல்வதும் வேறு வேறானதல்ல என்றாள்.
பிழைக்குப் பிறந்த பிள்ளைகளைப் பார்த்து பதறி செத்துத் தொங்கும் குறியை அறுத்தெறிந்து மனித குமாரனாகிய அப்பாக்களின் துயர்தொடங்கி...
வனம் ஒன்றில் தனித்திருக்கும் பழந்தாயொருத்தியின் துயர்களை கசிய விட்டபடி இருக்கும் புல்லாங்குழல்...
துரோகங்களுக்குப் பின் தன் ரகசியப் பேழைக்குள்லிருந்த சர்ப்பமாக தன்னுடலை மாற்றி வேட்டையில் விரல்களில் ஊறும் ரத்தப் பிசுபிசுப்பை நக்கும் அம்மா...
எரியும் கஞ்சாபுகையில் சுவாசம் தேடி உடைந்த சாராய தம்ளரில் அம்மாவின் வாசனையை அறிபவன்...
வாழ்வு சாவு குறித்த புரிதலிருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடும் போதுமடா இனி செத்துத் தொலைக்கலாம் எனும் பெரும் நிறைவுகொள்ளும் தருணங்கள். மதுப்புட்டி ஒன்றை சில்க் சிமிதாவின் உடலாக்கி அதனுள் தம்புராவின் இசை நரம்புகளை பின்னி, ரெசோ செரஸின் பியனோ கட்டைகளில் தேங்கிய இசையை மீட்டெடுத்து, ஒசோ, புத்தன், மகதலேனா, சில்வியா பிளாத்தென ஆளுமைகளை புட்டியினுள் உலாவவிட்ட துயர் ஞாயிறொன்றில் விருப்பமுள்ளவர்களை சாக அழைப்பவன்..
துரோகத்தின் வலியால் ரௌத்திரம் கொண்டு கொலைக்கு அலைபவன்..
ஜீவன் மிக்க பறையையும், உணர்வுகளைக் கீறும் பாடலையும் பிள்ளையிடம் ஏற்றுக்கொள்ள இறைஞ்சும் நிலமற்ற தகப்பன்...
ஊராரின் நிர்வாண ரகசியம் அறிந்து அரைக்கூலியில் வாழ்வை நகர்த்தும் சுடலை நாசுவன்...
பிள்ளை விற்ற பெரும் வாழ்வில் பிரார்த்தனையிலிருப்பவனை கொல்ல உடலில் கடவுள் புணர்ந்த யோனிகளோடு இருப்பவன்...
எல்லாவிதமான சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு தன் மொழியையும் ஊரின் பெயரையும் ஞாபகப்படுத்த தாங்கவியலா துயரோடு அலைபவன்...
நினைவிலிருக்கும் வாழ்வின் உடல்களைப் புதைத்து பனங்கிழங்கையாவது பற்றிக்கொண்டு வாழ முற்படுபவனென இம் மண் தந்த பெரும் துயர்களோடு வாழ்ந்தவர்களின் கதைகளைக் கூறிய அலுப்பில் உறங்கினாள் ஆதித்தாய்.
மழை நிரம்பிய குளம் பார்க்க வந்த சூரியனை தன் தூண்டிலில் சிக்கவைத்திட காத்திருக்கும் கிழவன்...
கடல்நிரப்பி தாவரங்களின் வேர்களாக கிடக்கும் எலும்புக்கூடுகளை உயிர்ப்பித்து பயணிக்கும் மழைத்துளி...
ராட்டினக்காரனுக்காக காத்திருக்கும் சிறுவர்களாக மழைக்காக காத்திருந்து மழையைச் சேகரிக்கும் குருவிகள்..
தவளை வீட்டில் வசித்து தாமரைத் தண்டோடு உரையாடி தொலைத்தவைகளை குலசாமி தருமென நம்பி கழுதியிரவில் வெண்குதிரையேறி பறந்த ஆலமரத்தான்...
முற்றத்தில் மலர்ந்த கோலம் ரசித்து, முதல் முத்தத்தின் இசை உணர்ந்து, சுடரும் ஒளியின் நடனம் ரசித்து, யாமத்தின் ருசியை முலைக்காம்புகளில் தேடி திருடத் துணியும் கணத்தை உருவாக்கும் திராட்சை பூக்களின் பாடல்...
தன் தொட்டிச் செடிக்கு மழையைக் கொண்டு வர கனவில் தொலைந்து சாப்ளின் நாயோடும், நகுலனின் பூனையோடும் விளையாடிக்கொண்டிருப்பவன்...
நாடோடியின் மனற் திராட்சையை ருசிக்கத் துவங்கிய பாலையின் அனற்காற்று...
குறிஞ்சி யாழின் சாதாரிப்பண் மீட்க காந்தள் மலர்ச்சூடி மலைக்குறவனாக உருமாறி மீ மிருக நடனமாடுபவன்...
மன்புழுக்களின் முத்தங்களில் மயங்கி நிற்கும் வேர்கள்..
உளுந்து துவையலுக்கு உடலையே எச்சிலாக ஊறச்செய்யும் அம்மாக்களின் கதை...
சாராயம் மணக்கும் உதடுகளால் சமணமுனி சொன்ன நிசி மழை கூத்து...
தான் இருக்கும் அறையின் நிர்வாண ரகசியம் அறிந்த மீன்களுக்கு தொட்டியாகி சகோதரனும் காதலியும் முத்தமிட்டுக்கொள்பதை அறிந்துகொண்டவன் கதையென விவரித்த காட்சிகளில் வியப்புற்று, அதனோடு பயணித்து நாமும் நம் கனவுகளோடு ஆகாயம் பறக்கச் செய்தாள் ஆதித்தாய்.
தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் ரகசியம் அறிந்தவர்கள் குழந்தைகள். ஒரு பட்டாம் பூச்சியை வாங்கி அது பறந்து திரிய பூங்காட்டையே உருவாக்கச் செய்து, உடலையே இனிக்கச் செய்யும் முத்தத்தை கொண்டிருப்பவள்...
என்றோ பார்க்க நேர்ந்த சிறுமியோடு வய்லட் நிறப்பூ குறித்த உரையாடலில் மணந்திருந்து வய்லட்நிற முத்தங்களைப் பெற்று இன்னமும் வெற்றிருக்கையில் உதிர்ந்து கிடக்கும் நாவல் பூக்களை வேடிக்கை பார்த்திருப்பவன்...
கணக்கிலடங்கா முத்தங்களைப் பெற்றதன் நிமித்தம் பொம்மைகளில் களித்த வேடிக்கையில் தாயை தொலைத்த குழந்தை...
பொருள் தேடி பொருள் தேடி எதனோடும் லயித்திருக்க இயலாது ஓடிக்கொண்டே இருப்பவர்களின் அசைக்காதிருக்கும் சபிக்கப்பட்ட கழுத்தை நினைவூட்டி ஆகாயத்தை விரித்தும் சுருக்கியும் வி¬ளாயடுபவளென குழந்தைகளின் கதையைக் கூறியவள் மீண்டும் தொடர்ந்தாள்.
தன் கறுத்த தேவதையின் முத்தத்தை முட்களாலும் துளைக்க இயலாத காற்றின் குமிழியாக்கி அவளற்ற பொழுதுகளில் குமிழியின் விரல் பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பவன்...
நம்முள் இருக்கும் இசையை நாம் கண்டடையும் தருணம் மலரும் பூக்களைக் காண இயலாததை ஒத்தது. நம் விருப்பியவளின்/விரும்பியவனின் வருகை அதைச் சாத்தியப்படுத்தும். தன்னுள் இருக்கும் வாத்தியத்தை கண்டெடுக்க கோருபவன்...
காமத்தின் யாமருசி அறிந்தவன்...
பிரியத்திற்குரியவளால் மொத்த வாழ்வுக்கும் போதுமான கனவுகளை நிரப்பிக்கொண்டவன்...
பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...
காலி செய்ய இயலாத கோப்பைகளோடு இருப்பவனின் கதைகளென பெரும் காதலில் களித்திருக்கச் செய்தாள்.
இச்சமூகம் எல்லோருக்கும் நிறைவான வாழ்வை தந்துவிடவில்லை. மூன்று வேளையும் பசியாறினேன் என்பது பலருக்கு பெரும் கனவு. சில வீடுகளில் வாழும் நாய்களுக்குக் கிடைக்கும் உணவை பலருக்கு பண்டிகை நாட்களில்தான் பார்க்க முடியும். இப்படியான அவலச் சூழலில் எதையாவது செய்து பசியாற வேண்டித்தான் இருக்கிறது. ஒற்றைக் குச்சியின் முனையில் படுத்து வித்தைக் காட்டும் குழந்தையைப் பார்த்து பிச்சையிடாது போவோரின் சட்டையை பிடித்து உலுக்கி பிச்சையிடு இல்லையேல் குழந்தையை தாங்கும் கையைத் தட்டிவிடுவென ஆவேசமானாள்.
நம் ஏமாற்றங்களின் பட்டியல் நீளமானது. நிலம் இழந்த கதைகளில் மனம் பதைக்கும். பிறர் கொழுக்க தூண்டில் முள்ளில் செருகப்படும் மண்புழுவாக வாழ்ந்து மடிந்த நம் பாட்டன்களின் வாரிசுகளானவர்கள் சுரப்பற்றுப்போன முலை பெருத்த நகரத்தில் திருடர்களாக அலைவுறும் அவலக் கதையைக் கூறினாள்.
குற்றங்களின் வழியாக கடவுளை அடையும் வழியைக் கூறிய கன்னியாஸ்த்திரி...
மூதாதைகளிடம் உறிஞ்சிய ரத்தத்தை மீண்டும் மண்ணில் சிந்த வைக்க அம்பு தூக்கி நிற்கும் வழித்தோன்றல்களின் ஆவேசம்...
தேவைகளை மட்டும் உறிஞ்சிக்கொண்டு மீதியை குப்பையாக்கும் போக்கு நம்பிடையே தொன்றுதொட்டு வரும் பழக்கம். பஃப்பூன்களை வெறும் சிரிப்பூட்டும் எந்திரமாக மட்டுமே பார்த்து காட்சி முடிய வெளியேறிவிடுவோம். அவர்கள் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் அக்கறையற்றுதான் இருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு போதைக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்க்கான இடத்தைத்தான் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு அள்ளிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்கள்மீதான அக்கறையைக்கூட வெளிப்படுத்த தவறிவிடுகிறோம் என பஃப்பூன்கள் குறித்த கதையைக் கூறினாள்.
கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்பர். முல்லையும் குறிஞ்சியும் திரிய பாலை என்பர். ஆனால் பாலைக்கான சூழல் அதிகம் பொருத்தமாக இருப்பது நெய்தல் நிலத்திற்குத்தான்.பிழைத்துத் திரும்புதல் நிச்சயமற்ற வாழ்வு ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாட்டின் சிறைபிடிப்பும் சித்ரவதைகளும் பெரும் துயர்தான். வான்விரிந்த கடலை கழிவு நீர் குட்டையாக்கி காக்கும் கொற்றவையை கதிர்வீச்சால் நோய்மை அடையச் செய்த பாவனை அரசுகளின் பிரகடனங்களை நம்பி வாழ்வை நகர்த்தும் பரதவர்களோ பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையில் கழுகின் அலகில் சிக்கித் தவிக்கும் மீனாக வாழ நேர்ந்த துயரை கடலின் மொத்த கரிப்பையும் தன் கண்ணீர் துளிகளாக்கி அலுப்பில் அயர்ந்தாள் ஆதித்தாய்.
நீண்டு கொண்டிருந்த இரவில் கேட்ட கதைகளால் தூக்கமற்றுப்போய்விட அவளின் துயர்களை பெரும் குளமாக்கி சக மனிதர்களை மீன்களாக்கி பொரியைத் தூவி எல்லோரையும் ஓரிடத்தில் குவியச்செய்து விதை இழந்து நிலம் இழந்து தொழில் இழந்து நிலம் சார்ந்த வாழ்வின் அழகியலை இழந்து மோசடிகளுக்க துணை போகும் கள்ள மௌனத்தோடு நிலங்களை தொலைத்து பெரும் அறுவடைக்காக கனவு கண்டு பொருள்தேடி ஓடியபடி இருக்கும் வாழ்வில் எழுந்த குற்றஉணர்வுகளை பகிர்ந்தபடி இருந்தேன்.
நன்றி - திணை

Thursday, June 11, 2015

தூய்மை ராஜாவின் வாத்துகள்

1.
தூய்மை ராஜாவின் வாத்துகள்
*
தன் வல்லமைகளை
அறிந்தே மௌனித்திருக்கும் வாத்துகளை
குளம் மிதக்கும் தாமரையின்
உருவம் பொறித்த குடுவையினுள்
நுழையச் செய்திட்டனர்.

தூசுகள் படிந்து பரனில் கிடந்த
செங்கல்நிற பழந்துணியால்
அதன் வாயை இறுகக் கட்டினர்,

தன் உளறல்களைக் காட்சியாக்கி
அற்புதம் நிறைந்ததென
மிருதங்கத்தில் பெருமிதம் இசைத்தனர்.

குணமாக்கப்படாத அவஸ்தைகளோடு
தன் வங்கிக் கணக்கெண்ணை
மனனம் செய்தபடி வாத்துகள்

உலகம் மெச்சிக்கொண்டிருக்கிறது
தூய்மை ராஜாவை.
*
2.
மழைவெய்யில்

வானின் துண்டாகக் கிடக்கும் மொட்டைமாடியில்
நானும் நியும்
இத்தருணத்திற்கான காத்திருப்பின்
காலங்களை அறியாய்.

மிட்டாய்களின் நிறங்களை ரசிக்கும்
சிறுவனாகிறேன்
மேலும் சின்னஞ்சிறுவனாவேன்
உன் ஸ்தனங்கள்
அருந்தக் கிடைக்குமெனில்
அற்புதங்கள் கனவுகளுக்கானவை
விட்டுவிடலாம்.

சீம்பால் துண்டுகளாக
உன்னுடனான சம்பவங்களின் நினைவுகள்
விழுங்கி விழுங்கி
உலகைத் தித்திப்பாக்குகிறேன்

உண்மைதான் அன்பே
இறுகத் தழுவி முத்தமிடு
நாளை உலகத்தார்
சிறுவர் சிறுமிகளாவர்
வெய்யிலும் மழையும் கலந்து பெய்யும்.

நாம் மட்டும் அறிவோம்
வெய்யில் நீ மழை நான்  என்பதை.

nantri:pudhu Ezuthu

Thursday, June 4, 2015

நிலத்தின் நிழல் மொழி

நிலத்தின் நிழல் மொழி
-ந.பெரியசாமி

கவிதையை வாசிக்கையில் நினைவில் எனக்கானதொரு காட்சியை ஓடச் செய்தால் அக்கவிதை நல்ல கவிதை என்பது என் அனுமானம். அப்படியானதொரு கவிதையோடு நெருக்கம் கொள்ள முடியும். அதற்கான திறப்புகளை அக் கவிதை கொண்டிருப்பது இயல்பு. சிலரின் தொகுப்புகளில் சில கவிதைகள் அப்படியானதொரு நெருக்கத்தை ஏற்படுத்தும். பா.வெங்கடேசனின் நீளா அப்படியானதொரு அண்மையைத் தந்தது.

எல்லா ஆண்களுக்குள்ளும் பெண் மனம் இருப்பது இயல்பு. ஆனால் அப் பெண் மனம் ஒரு படைப்பாளியாக மாற்றம் கொள்வது மகா உன்னதம். நீளா தொகுப்பில் அப்படியானதொரு படைப்பாளியை நீங்கள் சந்திக்க இயலும். பாடுபொருட்களின் மீதான அவரது பார்வை தாய்மையின் கனிவும் காதலும் சரியான புரிந்துகொள்ளலும் ததும்பித் வழிகிறது..

ஒரு படைப்பில் படைப்பாளியின் வாழ்நிலத்தின் வாசனை இருப்பது அப்படைப்பை ஒளிரச்செய்யும். கவிதை மட்டுமின்றி பா.வெங்கடேசனின் பிற படைப்புகளிலும் வாழ்விடத்தின் வாசனையை உணரலாம். நீளா தொகுப்பிலும் வாழும் நிலத்தின் தன்மை அது ஏற்படுத்தும் மாற்றம், அப்பகுதியின் இயற்கை, காவல் தெய்வங்கள் என நிறைய்ய குறுக்கீடு செய்யும் விசயங்களும் உண்டு.

பா.வெங்கடேசனுக்கும் எனக்கும் வாழ்நிலம் ஒன்றுதான். இத்தொகுப்பில் நிலம் சார்ந்த கவிதைகள் என்னை ஆகர்சிக்கின்றன. சில கவிதைக்கான தருணங்கள் அவருள் முகிழ்க்கும்போது அவருடன் நானிருந்த நிலக்காட்சிகள் இப்போதும் படர்ந்து நினைவை கிளர்த்துகிறது. சமதளமற்ற மேடு பள்ளங்களோடு இருக்கும் ஓசூர் நிலம் வெப்பங்களை தனக்குள் வைத்துக்கொண்டு எங்களுக்கு குளிர்விப்பை தரவல்லது. (அதை நாங்கள் இப்போ மாற்றம்கொள்ளச் செய்துவிட்டோம் என்பது தனிக்கதை) பலதரப்பட்ட கலாச்சார சூழல் குவியப்பெற்றது. ஒற்றைத் தன்மை இவ்வூருக்கு கிடையாது. சிறு பயணத்திலேயே மனதை மடைமாற்றிக்கொள்ள முடியும். திப்புவின் காலடித்தடங்களையும் இம் மண் தன்னுள் கொண்டுள்ளது. பாறை ஓவியங்கள், நடுகல் சிற்பங்கள், கல்திட்டை சமாதி என வரலாற்றுத் தொல்லியலின்  எச்சங்கள் இன்னும் இப்பகுதியில் உண்டு.  இந்நிலத்தின் பன்முகத்தன்மையை இவரின் தாண்டவராயன் கதையில் விரிவாக தரிசிக்க முடியும்.

வெட்கப்படுதல், வெறித்துப் பார்த்தல் எனும் இரு நிலைகள் நிர்வாணத்தில் உண்டு. பெரும்பாலானோர் இந்நிலைகளிலேயே சுருங்கிப்போவதும், இத்தனை நிர்வாணத்தை பார்த்தேன் என்ற கணக்கீடுகளில் பெருமை கொள்வதுமே நிகழ்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்நிர்வாணத்தில் இருக்கும் ஒளிர்வை கண்டடைந்து தன் மொழியை கண்ணாடியாக்கி பிரகாசமாய் பிரதிபலிக்கச் செய்யும் ஆற்றல் இருக்கும். நீளா தொகுப்பில் பெட்டதம்மனின் நிர்வாணத்தின் ஒளிர்வை என்றென்றைக்குமாக மங்காதிருக்கும் ஒளிர்வாக மாற்றம் கொள்ளச் செய்திருக்கிறார். (பெட்டதம்மன் ஓசூர் பகுதியில் இருக்கம் ஒரு காவல் தெய்வம்) 'இடறும் காதல்' கவிதையில் வரும் பெட்டதம்மனை பார்த்துவந்த நாளின் கனவில் பெட்டதம்மன் உயர்ந்தபடியும் அகன்றபடியும் விரிந்துகொண்டே இருந்த காட்சி இன்னமும் மனம் அகலாதது.

சாமார்த்தியசாலியான கரிக்கும் பெண் எவராலும் கணிக்க இயலாத தளர்வு கொள்ளும் தருணத்தை உணரச் செய்து அவளின் முட்டாள்தனத்தை காட்சியாக்கி நிழலாய் தொடரும் மற்றொரு காதலையும் தரிசிக்கச் செய்யும் 'கரிக்கும் பெண்' கவிதையில் துவங்கிய காதல் தொகுப்பெங்கும் உணர்வின் முடிச்சுகளாக நீண்டு நமக்கான காதலில் தியானித்திருக்கவும் செய்திடுகிறது நீளா.

சில துணுக்குறல்கள் என்றாவது ஏற்படும். நம்மை துணுக்குறச் செய்த விசயத்தை மீண்டும் தரிசிக்க இயலாது போய்விடுவதும் உண்டு. அப்படியே அதைக் காண நேர்ந்தாலும் முந்தைய அனுபவத்தை மீண்டும் அதனால் ஏற்படுத்த இயலாது. முதல் காதல், முதல் முத்தம் இவைகளோடு முதல் துணுக்குறலையும் சேர்த்துக்கொள்ளலாம். 'அப்பா மயில்' கவிதை அப்படியானதொரு நிகழ்வின் அனுபவப் பகிர்வு.

ஆர்வமும் வாய்ப்பும் ஒருங்கிணைய பயணங்கள் வாய்ப்பதுண்டு. செல்லும் இடங்களின் பொதுவான அம்சங்களை மட்டுமே கண்டு வந்து சிலாகிப்பதில் மட்டுமே ஒரு பயணம் நிறைவுகொண்டுவிடாது. அப்பிரதேசத்தின் ஆன்மாவை கண்டுணர்ந்து தனக்குத் தெரிந்த கலைகளில் வெளிப்படுத்தி அதற்கானதொரு பிரத்யோக வண்ணத்தை உருவாக்கி விடுவதே நிறைவுகொள்ளும் பிரயாணமாக அமையும். தொகுப்பில் அப்படியானதொரு நிறைவுகொள்ளும் பயணங்களை நாமும் தரிசிக்க இயலும்.

 'முத்தியால் மடுவின் மோகினி' கவிதையில் பா.வெங்கடேசனுக்கு கோணங்கியோடு நிகழ்ந்த அனுபவம் பொறாமைக்கொள்ளத் தக்கது. உடன் போகாது போன வருத்தத்தை படியச் செய்தது கவிதை. முத்தயால் மடு முத்தங்கள் சூழப்பட்ட பகுதி சிறு அறுவியும் குறுகலான ஆறும் பழமையோடு ஓடிக்கொண்டிருக்கும். அப்படியான சூழலில் கோணங்கியின் உடல்மொழியோடு உரையாடலைக் கேட்பது மகா உன்னதம். என்றாவது எனக்கும் வாய்க்குமா எனும் எதிர்பார்ப்பை எதிர்படுத்திய கவிதை.

தேவதைகளின் தீராத் துயரம், காமம், வாதைகளறிந்து இரவுகளற்று இருக்கும் 'சொல்லப்படும் நிலவு' கவிதை ஹம்ப்பி பயணத்திற்குப்பின் எழுதப்பட்ட கவிதை. அப்பயணத்தில் பத்மபாரதி பாலசுந்தரம் நானும் வெங்கடேசனோடு சென்றிருந்தோம். மறக்கமுடியாத பயணமாக என்றென்றும் இருக்கக்கூடியது. கிருஷ்ணதேவராயர் கால மக்களின் காதலும் காமமும் வாதைகளும் அப்பாறைகளில் படிந்து கிடந்தது.  எங்கெங்கு காணினும் பாறைகள். துங்கபுத்திரா நதி அருகில் ஓடிய போதும் அக்காலத்தின் பாலை நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் நீடித்திருக்கு. நாங்கள் சென்றது திருவிழா நடந்த சமயம். கர்நாடகப்பகுதியின் எல்லா ஆட்டவகை ஆட்டக்கலைஞர்களும் வந்திருந்தனர். ஒரு ஆட்டக்காரரின் ஆளுமை எங்களைக் கட்டிப்போட்டது. எதிர்பாரா தருணத்தில் வெங்கடேசன் நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து வணங்கினார். பதறிய அக்கலைஞர் தூக்கி அணைத்தார். அக்கலைஞனின் கண்களில் அப்படியானதொரு மிளிர்தல். பரவசப்படுத்தியது அவரது ஆட்டம். அன்றைய இரவு எங்களை தக்கையாக்கியது. எங்களின் துயர்களை கண்ணீரிலும் சொற்களிலும் கரைத்தோம்.   ஹம்பி எங்களை பிதுக்கி வெளியேற்றியது. 'சொல்லப்படும் நிலவு' கவிதை வாசிப்பில் மீண்டும் அந்த இரவிற்குள் சென்றுவரச்செய்தது.

தன் மொழியின் அனுபவத்தை அகல் விளக்காக்கி அணையா நெருப்பை சுடரச் செய்வதன் மூலம் திருவாளர் ப்ரெட்டின் காதலை வாசிப்பின் மனங்களில் கடத்தும் 'திருவாளர் ப்ரெட்டின் தனிமொழி'

சமகாலத்தில் இருக்கும் சிறுவனின் கேள்விகளை ஆதிச் சிறுவனின் கேள்விகளாக்கி காலத்தை நகர்த்தும் 'நகரும் காலம்'

குரலை குறுந் துகள்களாக்கி பரணியில் சேர்க்கும் அணில் வசிக்கும் 'அணிலாடுமறை'

பார்த்திராத ஒன்றை சட்டகத்துள் படமாக்கி சுவற்றில் அறைந்துவிட தொங்கும் காட்சியில் கடவுளை ஒளிய வைக்கும் 'கடலை வரைதல்'

சக படைப்பாளியின் மனம் நோகக் கூடாதெனும் பதற்றம் தொற்றிய 'தவிர்த்த கவிதை'

தன் நிழலால் மட்டுமே தன்னை வெல்ல முடியுமெனும் நிலையை ஸ்திரப்படுத்தியிருக்கும்  'நீளா'

பீத்துணி போர்த்தி குழந்தைகளின் உலகில் நுழையும் தேவதைகளின் 'உருமாற்றம்'

நாணம் கொள்ளச் செய்யும் வார்த்தைக்கு உயிர் கொடுத்து பரிசளிக்கும் 'புத்தகம் அல்ல அவள் கேட்பது'

பருவங்களின் தன்மையை தன் இல்லக் கதவின் தாள் திறப்பில் மாற்றங்கொள்ளச் செய்யும் கருணை தேவதையை சிறுமியின் முகமாய் காட்டும் 'அடை'

இரவை அழிக்கும் மழை கூறிய கதைகளை தன் கதைகளாக கொண்டு நிற்கும் கல்யாளிகளின் 'இது எனது ஆயிரத்தோறாவது இரவாக இருக்கலாம்'

தன்னை மட்டுமே உலகமாக்கப் பார்க்கும் சகியின் நம்பிக்கை மிளிரும் 'வேற்றுலகக் கவிதை'

தன்னை நிரப்பிக் கொள்ளத் துடிக்கும் முத்தத்தின் வரலாற்றைக் கூறும் 'தனியே ஒரு முத்தம்' என நீளும் கவிதைகளோடு இருக்கும்  பா.வெங்கடேசனின் நீளா ரசனையான வாசிப்பனுபவத்தையும், பழைய நினைவுகளையும் மீண்டெடுக்கச்செய்தது. 

நீளா
காலச்சுவடு வெளியீடு

நன்றி- சிலேட்