Thursday, November 27, 2014

பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. அருகில் அண்டியது பூனை. நீவிடத் துவங்கினேன். என் உடலின் வெப்பம் கைகளில் இறங்கியபடி இருக்க, சுகமாக அணைந்துகொண்டிருந்த பூனை விருட்டென ஓடத் துவங்கியது. சூழல் சலனத்தால் நினைவுகொள்ள மீண்டும் வாசித்தேன் 'குருதட்சணை' கவிதையை. குருவாகிறார் ஏகலைவன். சன்னமாக பேசத் துவங்கிய மொழி பெரும் கதகதப்பை ஏற்படுத்தியபடி இருக்கிறது.
பட்டாம்பூச்சிக்களுக்கு மலரை கொடுத்து, அலையடிக்கும் கடல் ரசித்து, நிழலோடு யுத்தம் செய்து, ஆழிலையின் பழுப்பு நிறத்திற்காக வருந்தி, பிரியத்தின் குருதியை கசிவித்து, நீரோவிற்கு நன்றியை தெரிவிக்கச் சொல்லி, கோப்பைகளில் வழியும் இரவொன்றில் உயிர்த்தெழும் புத்தனுக்காக காத்திருந்து, பூத்தலின் ரகசியம் பேசி சிவனாக மாறுபவனின் அசலான வாழ்வை பேசுகின்றன...
யாழியின்
மகா சிவராத்திரியும்
சில
தேநீர் கோப்பைகளும்...

Saturday, November 22, 2014

nantri: Nalla thambi

A poem by N. Periyasamy in Tamil. Translated to Kannada. Like this very much. Please see Tamil below
*ಬರೆಯಲು ಮರೆತ ಪುಟಗಳಲ್ಲಿ.....
ಪ್ರತಿ ದಿನ ಬರೆಯಲು ತೀರ್ಮಾನಿಸಿದೆ
ಹಾಲು ಬಿಳಿಯ ಹಾಳೆಗಳು ತುಂಬಿದ
ನೋಟ್ ಪುಸ್ತಕವ ಕೊಂಡು ತಂದೆ
ಒಂದೇ ಒಂದು ಚಿತ್ರ ಬಿಡಿಸುವೆ
ಆಸೆಯಿಂದ ಕೇಳಿದವನಿಗೆ ಇಲ್ಲ ಎನಲಿಲ್ಲ
ಮರ ಒಂದ ಬಿಡಿಸಿದ್ದ
ನಾಳೆಯಿಂದ ಬರೆಯುವ ಎಂದುಕೊಂಡೆ
ತುಂಬ ದಿನಗಳು ಕಳೆದುಹೋದವು.

ದಿಢೀರೆಂದು ನೆನಪು ಕಾಡಲು
ಬರೆಯಲು ನಿರ್ಧರಿಸಿ ಕೈಗೆತ್ತಿಕೊಂಡೆ
ಮೊದಲ ಪುಟದಲ್ಲಿದ್ದ ಮರ
ಮುಂದಿನ ಪುಟದಲ್ಲಿ ಚಿಗುರಿತ್ತು
ಪುಟ ತಿರುವಿದಾಗ ಅಲ್ಲಿ
ಕಾಗೆ ಗೂಡು ಕಟ್ಟಿತ್ತು
ಪುಟಗಳ ತಿರುವಿ ಹಾಕಿದಂತೆ
ಎಲೆಗಳು ಉದುರಿದ್ದವು
ಕಾಯಿಗಳೂ ಚದುರಿದ್ದವು
ಮರದ ನೆರಳಲ್ಲಿ ದಣಿವಾರಿಸಿಕೊಂಡವರು
ಹಣ್ಣುಗಳ ಆಯ್ದು ತಿಂದರು
ಉಗುಳಿದ್ದ ಬೀಜಗಳಲ್ಲಿ
ಕೆಲವು ಮೊಳಕೆ ಬಿಟ್ಟಿದ್ದವು
ಇಡೀ ವಿಶ್ವದಲಿ.
ತಮಿಳಿಲ್ಲಿ: ನ. ಪೆರಿಯಸಾಮಿ
ಕನ್ನಡದಲ್ಲಿ: K.ನಲ್ಲತಂಬಿ
*எழுத மறந்த பக்கங்கள்....
தினமும் எழுதத் தீர்மானித்தேன்
வெண்மை மிளிரும் தாள்கள் நிறைந்த
நோட்டு ஒன்றை வாங்கி வந்தேன்
ஒரே ஒரு படம் வரைஞ்சிக்கிறேன்
ஆசையாக கேட்டவனிடம் தந்தேன்
மரம் ஒன்றை வரைந்திருந்தான்
நாளையிலிருந்து துவங்கலாமென வைத்தேன்
நிறைய்ய கடந்தன நாட்கள்.
திடுமென நினைவு சுட
எழுதத் தீர்மானித்து எடுத்தேன்
முதல் பக்கத்தில் இருந்த மரம்
அடுத்த பக்கத்தில் துளிர்ந்திருந்தது
அடுத்தடுத்த பக்கங்களில்
காக்கை கூடு கட்டியிருந்தது
மேலும் பல பக்கங்களில்
இலைகள் உதிர்ந்து கிடக்க
காய்களும் இறைந்து கிடந்தன
மர நிழலில் அமர்ந்தவர்கள்
சேகரித்த பழங்களைத் தின்றனர்
துப்பிய கொட்டைகளில்
சிலது துளிர்தும் இருந்தன
பிரபஞ்சம் எங்கும்.

ந. பெரியசாமி

Wednesday, November 19, 2014

நன்றி- புத்தகம் பேசுது

ஆசை கொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல் ஓடித் திரிந்தேன். வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள். தள்ளிப் பழகி சிறுசிறு காயங்களுடன் பெடல் அடித்துக் கொண்டிருந்தேன். விடாப்பிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனைகளோடு தொடர்ந்தேன். அதன் நுணுக்கங்கள் பிடிபட வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன். இது என் கவிதைகளுக்கும் பொருந்தும்... என்று தன் தொகுப்பின் முன்னுரையில் எழுதும் ந.பெரியசாமி நதிச்சிறை, மதுவாகினி ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே கொடுத்தவர். தமிழ்ச்சூழலில் தொடர்ந்து இயங்கிவரும் ஒரு படைப்பாளி. புதுவிசை இதழின் குழுவில் அங்கம் வகிப்பவர்.

தனது மன அவசங்களையும், புறஉலகின் யதார்த்தங்களையும், சமூகத்தின் மீதான கோபதாபங்களையும், அடர்த்தியான கவிதை மொழியில் வெளிப்படுத்தும் இவர் குழந்தைமையின் அன்பிலும், கருணையிலும் மனம் நெகிழ்பவர். தோட்டாக்கள் பாயும் வெளி என்னும் இவருடைய மூன்றாவது தொகுப்பு நல்ல சில கவிதைகளை உள்ளடக்கிய பிரதி. இருளும் ஒளியும் என்ற தலைப்பிலான அவருடைய ஒரு கவிதையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மரம்
தன் நிழலைக் கிடத்தி
இரண்டாகக் கிழித்தது என்னை.
அம்மணச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன்
வெய்யில் சுட்டது.
கூலிச் சீருடை அணிந்து
பிழைப்புக்குத் தயாரானேன்
சுருங்கியது மர நிழல்.

-சிகப்பு


Monday, November 3, 2014

என்றும் ஆறாதது பிரியத்தின் காபி

ஒன்றைப்பற்றி சரியான புரிதலற்றிருக்க
அது குறித்து பொதுவான கருத்துரைப்பது அறமாகாது...

சில சம்பவங்கள் நினைவில் இறப்பதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நண்பர்களோடு சின்னசேலம் ரயில் பாதையின் அருகில் விளையாடிய களைப்பகற்ற ரயில் நிலையத்தின் உள்ளிருந்த மரத்தினடியில் அமர்ந்திருந்தோம். அருகிலிருந்த காத்திருப்பு பலகையில் அமர்ந்திருந்த மூன்று பெரியவர்கள் உரையாடலில் எங்கள் கவனம் குவிந்தது. இதுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் மானம் இருக்காதா? ரயில்வே ட்ரேக் ஓரத்தில் ஒதுங்கி நடக்கக்கூட வழியில்லாம அசிங்கம் செய்து வைக்குதுங்க. ஆம்பள வராங்களேன்னு கொஞ்சம்கூட மரியாத இல்லாம ஒட்காந்திருக்காளுங்கவென திட்டியபடி இருந்தார்கள். அவர்கள் வாயில் மூத்திரம் பெய்ய வேண்டுமென்ற ஆத்திரம் எழுந்தது. அவசரமாக வெளியே வரும் மலம் அறியுமா ஆம்பளையா பொம்பளையான்னு? அவங்களுக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி வெளியே வந்து மலம் கழிக்க. அப்பகுதியில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் கழிப்பறை கிடையாது.  வேறு என்னதான் செய்வார்கள். அரசின் பொதுக்கழிவறையும் அப்பகுதிக்கு கட்டித்தரவில்லை. அப்படியே கட்டினாலும் தண்ணீர் வராது. அவர்களோடு சேர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கவோ போராடவோ ஒருநாளும் வரமாட்டார்கள். அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட விசயமென்றால் போதும் கலாச்சாரம் கலங்கிப்போச்சு வெட்கம்போச்சு மானம் போச்சு என புலம்பித் திரிவார்கள். பெண்களின் வாழ்வும் வலியும் சார்ந்து எவ்வித அக்கறையும் புரிதலுமற்று ஒழுக்கம் சார்ந்து ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டிருப்பவர்களை பரிகாசப்படுத்துகிறது நறுமுகை தேவியின் 'சாத்தான்களின் அந்தப்புரம்'

மற்றவர்களால் உணர்ந்து கொள்ளப்பட இயலாத உணர்வும் அனுபவமும் நிறைந்த பெண்கள் மீது ஆண் சார்ந்த ஒடுக்குதலாலும் அதிகாரங்களாலும் உண்டாகும் வலியைக்கூறி எதிர்புணர்வையும் ஏற்படுத்துகின்றன பெரும்பாலான கவிதைகள்.

எதையாவது பற்றிக்கொண்டு வாழ அலைவுறாது தானே வேறொன்றுக்கு பற்றுதலாக இருக்கத் துடிக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன கவிதைகள்.

நண்பர்களாக இருந்துகொண்டே வேற்று ஆடவர்களோடு இணைத்துப்பேசி நடைபாதையில் பள்ளம் பறித்தபடி இருக்கும் மலின யுத்தியால் மண்டை பெருத்து அலையும் கூட்டம் சகித்து, காதல் சார்ந்தோ காமம் சார்ந்தோ எழுதப்படும் கவிதைகளில் இருக்கும் பெண்ணை எழுதுபவரோடு சுருக்கிப் பார்த்து பரிகாசப்படுத்தும் கழுகுப்பார்வையை பொருட்படுத்தாது தொடர்ந்து இயங்குவார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது தொகுப்பு.

ஏமாற்றம், விரக்தியால் உண்டாகும் வலி, நிறைவேறா தன் விருப்பம் ஏற்படுத்தும் வலி, இழப்பின் வலி, காதலை சுமக்கும் வலி, பிரிவின் வலி, மறதியின் வலி, அக்கறையின்மையின் வலி, தீரா காமத்தின் வலி, முத்தத்தின் வலி, மூத்திரத்தின்வலி, நிராகரிப்பின் வலி, தோற்றப்பிழையின் வலி, ஒடுக்கப்படுவதின் வலி, செய்திகள் உண்டாக்கும் வலி, உயிர்தெழாத தேவனின் வலியென தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் தகிக்கும் வலியோடு இருக்கின்றன.

தன்னை ஒப்புக்கொடுத்தல், குழந்தையின் கோபம், உயிர்த்தெழும் பிரியம், காத்திருப்பின் காதல், பிரிவின் காதல், சமாதானத்திற்குப் பதுங்கும் காதல், ஒற்றைச் சொல்லில் உலாவரச்செய்யும் காதல், செல்லக் கோபங்கள், அருந்தும் பிரியத்தின் காபி, சங்கப் பாடலில் தலைவியின் காத்திருப்பை நினைவூட்டல், கடந்த காலத்தை இன்றைய நினைவில் நிகழ்காலமாக்கல், மிதக்கும் குழந்தமையென பயணிக்கும் கவிதைகளில் ஆசுவாசம் கொள்ள முடிகிறது.

பழக பழக பாலும் புளிக்கும் என்பர். சிலரின் ஆளுமையில் வியந்து நெருக்கம் கொள்ள பூஞ்சை பூத்த அவர்களின் செயல்பாடுகளால் உடைபடும் அபிப்ராயங்கள் எல்லோருக்கும் நிகழ்வதுண்டு. 'பிம்பங்கள் உடைபடும் தருணம்' கவிதையும் அப்படியாததொன்றுதான்.

நீர் கரைத்துக்கொள்ளும். சக்கரை உப்பு என்ற பாகுபாடெல்லாம் அதற்கு கிடையாது. காதலும் அப்படித்தான் பாகுபாடற்றது. தான் இருந்தும் தன்னை இல்லாததுபோல் உணரச் செய்யும்  தன்மை காதலுக்குத்தான் உண்டு. 'திரும்பி ஓடும் கவிதை' நல்ல காட்சியைத் தந்தது.

மிதந்தலையும் பெருங்காமம், மாறத் துவங்கம் தன்னியல்பு, தலைமுறைகளின் சிந்தனைமாற்றம், தன்னை ஒப்புக்கொடுத்து மீட்கும் சிறு சிறு சந்தோசங்கள் என அனுபவங்களைத் தரும் கவிதைகளில் லகுவாக பயணிக்க முடிகிறது.

சிறு துளி உடலில் ஏற்படுத்தும் சில்லிடலில் நெகிழ்ந்து போகக் கூடியவர்கள் நாம். எப்பொழுதும் தளர்ந்த பாகு நிலையில்தான் நாமிருக்கிறோம். எதிர்பாராத கணத்தில் எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கம் பரிசு நமை எப்படியெல்லாம் மகிழ்த்திருக்கும். அப்படியானதொரு பரிசை வாழ்நாள் முழுவதும் உடன் வைத்திருக்க ஆசைகொள்வோம். அதை பயன்படுத்த முடியாதபோதும். நம் வீடுகளிலும் இருக்கும் இப்படியானதொரு அன்பின் பரிசை நினைவூட்டியது தேவியின் 'உடை' கவிதை.

சமகால விளம்பரங்கள் குறித்த எரிச்சல், புனிதப்படுத்தப்படும் ஆணின் நிர்வானம் குறித்த ஏளனம், அரசின் மீதிருக்கும் தன் விமர்சனத்தை நய்யாண்டி மூலம் கடந்து செல்தலில் நமக்கான மனநிலையும் காட்சிபடுத்துகின்றன கவிதைகள்.

சிலருக்கு பிரியத்தைக் கூட  அன்பாய் வெளிக்காட்டத் தெரியாது. அப்படியானவர்களை 'அமுதவிஷம்' கவிதையில் தேனீக்களோடு ஒப்புமைப்படுத்தியிருப்பது சரியானதாக இருக்கிறது.

மற்றவர்களால் முழுமையாக அறிந்து கொள்ள இயலாத பெண்ணின் வாழ்வில் இருக்கும் உன்னதங்களைக் கூறும் கவிதை ஏதும் இத்தொகுப்பில் இல்லாதிருப்பது ஏமாற்றமே. கொஞ்சம் நிதானித்திருந்து சில கவிதைகளை தவிர்த்திருந்திருக்கலாம்.

கேரளாவில் கிராம வளர்ச்சி சார்ந்த திட்டக்குழுவின் தலைவராக இ.எம்.எஸ் அவர்கள் இருந்தபோது ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் போடப்படும் விளக்கு உடனுக்குடன் உடைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. யார் உடைக்கிறார்கள் என்பதை மறைந்திருந்து கண்கானிக்க அப்பகுதி பெண்கள்தான் உடைக்கிறார்கள். ஏன் என விசாரிக்க அப்பகுதியில்தான் சிறுநீர், மலம் கழிக்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். விளக்கின் வெளிச்சம் அவர்களுக்கு சங்கடங்களை உண்டாக்குவதால் உடைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்கின்றனர். இது தோழர் இ.எம்.எஸ் க்கு தெரியவர பெண்களுக்கு எது தேவை என்பதை அவர்கள் சார்பில் நாமே தீர்மானிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? இனி ஊர் கூட்டங்களில் அவர்களையும் பங்கெடுக்கச் செய்து அவர்களின் ஆலோசனைப்படியும் செயல்பட வேண்டும் என்கிறார். இச்சம்பவத்தை கேள்விப்பட்டு நீண்ட நாளகியும் தேவியின் சாத்தான்களின் அந்தப்புரம் தொகுப்பை வாசித்து முடிக்கையில் இச்சம்பவம் நினைவிற்கு வந்தது சரியானதாகத்தான் இருக்கிறது.

சாத்தான்களின் அந்தப்புரம்
நறுமுகை தேவியின் கவிதைகள்
புது எழுத்து பதிப்பகம்

nantri:malaigal.com