Monday, February 27, 2017

Suthenthiravalli Manivannan
குட்டி மீன்கள் நெளிந்தோடு்ம் நீலவானம்
_______________________________________________
ந.பெரியசாமி
_______________
மெட்ரிக் மேல் நிலை பள்ளி ஒன்றில் ஏழு வருடங்களாக எல்.கே.ஜி.,யு.கே.ஜி.க்கு வகுப்பெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் பள்ளி திறக்கும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே காய்ச்சல் வந்து விடுவது போன்ற பயம் அப்பி கொள்ளும். பள்ளியில் எல்.கே.ஜி.க்கு நான்கு பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் ஏறதாள அறுபது குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் இருப்பார்கள். பள்ளி திறந்த முதல் இரண்டு வாரம் குழந்தைகளை பராமரிப்பது மிக சிரமம். அறையின் கதவுகள் மூடியே இருக்கும் சில நாட்கள்.சில குழந்தைகள் தவிர்த்து மற்ற குழந்தைகள் அழுது உருண்டு எதுவும் கேட்காது சிரமபடுத்துவார்கள். குழந்தைகளின் குணங்களிலிருந்து அவர்களது பெற்றோர்களை அறிந்து கொள்வோம். ஒரு பெண்குழந்தையின் அப்பா அவளை வகுப்பறையில் விட்டுட்டு அங்கேயே பத்து பதினைந்து நிமிடங்கள் நின்று அவள் புத்தக பை சாப்பாட்டு பை அதனதன் இடத்தில் வைத்துகொண்டு தனது இருக்கையில்இருந்து ஆசிரியரை கவனிக்கும் வரை நின்று கொண்டிருப்பார். மாலையில் அவளை தூக்கிகொண்டு முகம் முழுக்க முத்தம் பதித்து கொண்டு குழந்தை சிரிக்க சிரிக்க கொண்டு செல்வார். அந்த குழந்தை ஆசிரியருக்கோ மற்ற குழந்தைக்கோ எந்த சிரமமும் தராது இருப்பாள். பல குழந்தைகள் பழகுவது வரை வகுப்பறையை சிறைசாலை போன்றே உணர்வதுண்டு. அறுபது குழந்தைகள் இருந்தாலும் கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் குணங்களை தனி தனியே புரிந்துவைத்து கொள்வோம்.
கவிஞர் ந.பெரியசாமி யின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் என்ற கவிதை தொகுப்பு குழந்தைகளின் அக புற உலகின் அழகியலை இயல்பாகவும் கற்பனையும் கலந்து சித்தரிக்கிறது. குழந்தைகளின் உலகம் விசித்திரமானது கவிதைகளுக்குள் அடங்கிவிடாது என்பதே எனது எண்ணம்.
தொகுப்பின் முதல் கவிதை
அலெக்ஸ் மரம்
________________
பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு
வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா இது
அலெக்ஸ் மரம் என்றான்
சரிசெய்யும் பதட்டத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என் பெயர்தான்.
இந்த கவிதை அதிகமாக கவர்ந்தது. குழந்தைகளின் ஏற்க மறுக்கும் குணத்தை இயல்பாக சித்தரிக்கிறது. அபாரமானதும் கூட.
கனவு மோதிரம்
___________________
குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்.
பாட்டியின்
கதை மோதிரத்தை.
குழந்தைகளின் கற்பனை அழகியலை இக்கவிதை சித்தரிக்கிறது.
உடனாளிகளோடு உண்பவள், துணை வானம் ,வெற்று தாளை வனமாக்கியவன் ,தலையணை, மிஞ்சிவிட்டதான மிளிர்வு ,அருவி,
போன்ற கவிதைகளும் எனக்கு பிடித்தமானவை.குழந்தைகளை மொழிக்குள் வசமாக்கியிருக்கிற முயற்சியும் கூட. வாழ்த்துகள். தக்கை பதிப்பக வெளியீடு.
______________________________________________
எஸ்.சுதந்திரவல்லி.

Saturday, February 18, 2017

 தோழர்
Elancheral Ramamoorthy
ந.பெரியசாமியின் நான்காவது கவிதைத் தொகுப்பு
“குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்”
பூங்கா தேவதை
தன் பிரசன்னத்தால்
எல்லோரும் சூழச் செய்தாள்
குட்டி தேவதை
கண்களை இறுக மூடச் சொல்லி
தேவைகளைக் கேட்டறிந்து
சொற்களைப் பிறப்பித்துப் பொம்மைகளாக்கி
கையளித்து மறைந்தாள்
அவரவரும் தம் பொம்மைகளோடு
உரையாடியபடியே கலைந்தனர். பக்-19
குழந்தைமையின் மீது கொள்கிற அக்கறைகள் அதிகமாகவேண்டிய காலம் இது. ந.பெரியசாமியின் கவிதைகளில் குழந்தைகள் உலகம் பற்றிய கனவு நனவுச் சித்திரங்கள் கொண்ட நூல் இது. மற்ற தனது தொகுப்புகளிலிருக்கிற கவிதைகளுடன் புதிய கவிதைகள் இணைக்கப்பட்ட தொகுப்பு இது. இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் சொற்றொடரைப் பேசத் துவங்கியதும் குழந்தைகளுக்குப் பாடம் வாசிக்கவும் ஓவியங்கள் வரையவும் நடனமாடவும் கற்றுக் கொடுத்துவிடவேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுகிற பொருளியல் புகழ் நோய் அதிகரித்துவிட்ட காலம். குழந்தைகளின் செயல்பாடுகளை ஆச்சர்யத்துடன் பேசி மகிழ்வதும் அதன் மீது எதிர்கால புகழ் போதையை ஏற்றுவதுமாக நடுத்தரக் குழந்தைவாசிகள் பழக்கப்பட்டுவிட்டார்கள். நவீன வாழக்கையில் குழந்தைகள் ஏற்கும் கதாபாத்திரங்கள் மிகவும் சிக்கலானது. பெற்றோர்களுக்குப் புகழையும் செல்வத்தையும் அள்ளி அள்ளிக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கடமைப்பட்டவர்களாக இருப்பதை ந.பெரியசாமி தன் கவிதைகளில் பேசுகிறார்.
குடும்பத்தில் குழந்தைகள் வெகுவாகக் குறைந்து போய்விட்ட காலமும் இது. அச்சுருத்தும் எதிர்காலப் பொருளாதார வாழ்வு. பணத்தையும் பணப்பரிவர்த்தனை அட்டைகள் கடன் அட்டைகள் சூழப்பட்ட வாழ்க்கையில் ஆறுதல் தந்து கொண்டிருப்பவர்கள் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையும் சுட்டுவது எதிர்காலத்தை நமக்கான எதிர்காலத்தை. ஆனால் அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அக்கறையோ ஆர்வமோ சிலாகிப்போ இல்லாதவர்கள் குழந்தைகள். உண்மையைப் பேசுவதனால் குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர்களில் சில கலைஞர்களாக மாறத்துவங்குகிறார்கள். குழந்தைகள் மூலமாகத் தான் அச்சத்தை உணர்ந்து விடுபடக்கற்றுக் கொள்கிறோம். எந்தத் திணிப்பையும் எதிர்க் கேள்விகளால் கட்டுடைப்பைச் செய்கிற முதல் கலைஞராக அறியப் படுகிறவர்கள்
குழந்தைகள் பற்றிய விவரணைகள், செய்திகள், விவர அட்டவணைகள் சமகாலத்தில் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரே குழந்தையை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு அதிகமான வசதிகளைப் பெற்று உலகம் தெரியாமல் வளர்கிற குழந்தையும் சமூகத்தில் உள்ளது. அதே போல ஏழை எளிய மக்களின் சேரிகளில் ஒரு சத்துணவு ஆயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வசிக்கிற குழந்தைகளும் உண்டு. எந்த இடத்திலும் இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அவர்களின் கனவுகளுக்குரிய இடங்கள்தான். காணவிரும்புகிற இடங்கள்.
குழந்தைமை அறியாத ஒன்று ஏற்றத்தாழ்வும் அதன் பகிரங்கங்களும். அவன் ஏன் மிகவும் சிவப்பாக அழகாக குண்டாக இருக்கிறான். விளம்பரங்களில் வரும் குழந்தைகள் எங்கிருந்து வருகிறது. நிஜமாகவே அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அதே போல அவர்கள் விரும்புவது வாங்கித்தருகிறார்களா பெற்றோர்கள் எனும் சந்தேகங்கள் எழும். அவர்களின் சந்தேகக் கேள்விகள்தான் இந்த உலகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டிப்பார்க்கத் தோன்றும் விசயம்.
ந.பெரியசாமியின் இந்த நூலில் உள்ள கவிதைகளில் குழந்தைமையின் நவீன மனஉலகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள சிறார் இலக்கிய வகைமையிலிருந்து நவீன கவிஞனின் பார்வையில் குழந்தைமையின் கனவுகள் பற்றிய சொற்களைக் காணமுடிகிறது. புத்திசாலித்தனமிக்க குழந்தைகளுக்கும் கவிஞனுக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை உணரக்கூடியதாக இக்கவிதைகள் உள்ளது. பல நூறு குடும்பங்கள் உள்ள ஒரு தெருவில் நான்கைந்து குழந்தைகள் மட்டுமெ தெருவில் விளையாடிப்பார்க்கும் அருகதை கொண்டவர்கள் நாம். நம்முடைய பிரதான பொழுதுபோக்கே குழந்தைகளின் அறிவார்த்தமான செயல்பாடுகளைக் குற்றம் சொல்வதும் மறுத்து வாதிடுவதும்தான்.
நிழல் சுவை
உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
உருமாற்றப் படையெடுப்புகள்...
எனக்கிது போதுமென
கொடுத்தத் திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்.-------பக் 34
மேலே குறிப்பிட்ட கவிதையில் உள்ள பண்புருவமும் புனைவும் மாய எதார்தமும் நிறைந்த கவிதையாக அமையப்பெற்றதாகும். முப்பது கவிதைகளே அடங்கிய தொகுப்பு என்றாலும் கவித்துவத்தின் பளுவை உள்ளடங்கிய தொகுப்பு. Intuition எனும் உள்ளுணர்வு மிக்க கவிதைகள் பல உண்டு. குழந்தைகள் உள்பட பல எளிய வாசகர்கள் வாசித்து அறிய முடியாத வண்ணம் முழுமையாக நவீன கவிதையின் உருவகங்களும் படிமங்களும் நிறைந்தவையாக இருப்பது விமர்சனத்திற்குரியது. ந.பெரியசாமி விரும்பும் “கொட்டுக்காய்“த் தனமிக்க விமர்சனம் இது.
குழந்தையின் மனத்திலிருந்தும் கவிஞனின் மனத்திலிருந்தும் வெளிப்படுகிற சொற்கள் முற்றிலும் பல முரண்களையும் திருப்பங்களை அரூபமான கனவிலி சம்பவங்களையும் சொல்கிறது. மிக இயல்பாக மிக எளிய முறையிலேயே விவரித்திருக்கலம். “அப்படியா நான் நினைத்தேன்..நான் அந்தப் பொருளில் சிந்திக்கவில்லையே“ குழந்தைகள் மனம் எதிர் கேள்விகள் கேட்கிற தொனியில் சில கவிதைகள். என்றாலும் எதாவது குறிப்பிடவேண்டுமே என்பதல்ல.. எளிமைக்கும் நவீன வடிவத்திற்குமான அமைப்பியல் என்பதே தர்க்கத்தை விளைவிக்க வைப்பதே..நவீனத்திற்குத் தர்க்கம்தான் அவசியம்..
வாழ்த்துக்கள் பெரியசாமி.. தக்கை நண்பர்களுக்கும் அன்பு...

Saturday, February 11, 2017

Leena Manimekalai
தக்கை வெளியீடாக வந்திருக்கும் நண்பன் கவிஞர் பெரியசாமியின் நான்காவது கவிதை தொகுப்பு. அவ்வளவு மென்மையாகவும் அவ்வளவு கனமானதுமான "கொட்டு'க்காய்கள். தொகுப்பை வாசித்து முடிக்கும்போது வீடெங்கும் குழந்தைகள் நிரம்பி, மடியில் ஒன்று, தோளில் ஒன்று, முதுகில் ஒன்றென ஒரே சலசலப்புடன் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. வெறும் தாள்களையும் வார்த்தைகளையும் குழந்தைமையைக் கொண்டு மாய நிலமாக மாற்றிப் பார்க்கிறார் கவிஞர். புதைந்த குரல்கள், வலியின் சித்திரங்கள், அலெக்ஸ் மரம், அருவி, கனவு மோதிரம், வாஞ்சையின் கடும் ஈரம் போன்ற கவிதைகள், குழந்தைகளின் பிரத்யேக உலகத்திற்கு உள்ளே அழைத்துச் செல்வதும் வெளியிலிருந்து அவதானிப்பதாகவுமாய் நம்மோடு உரையாடுகின்றன.
குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்
பாட்டியின்
கதை மோதிரத்தை
- இது மேற்கோள் கவிதை யல்ல. கவிஞன் அடைகாத்த மழழைப்புலம்.
சித்திரங்கள் உயிர்பெற்று வரும் motiff திரும்ப திரும்ப வருவதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி நல்ல வாசக மனம் இருந்தால், கவிஞனோடும் கவிஞன் படைக்கும் குழந்தைகளோடும், நாமும் பொக்கை விழுந்த வானத்திலிருந்து விழும் நட்சத்திரங்களுக்காக ஆவென வாயைப் பிளந்துக் கொண்டு நிற்கும் உற்சாகம் வாய்க்கும்.
பெரியசாமிக்கு என் அன்பு முத்தங்கள். <3