Wednesday, July 26, 2017

Vasu Devan

ந. பெரியசாமியின் ”குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்” என்ற தொகுப்பு குழந்தைகளின் உலகம். கருவறை முதல் யோனி வாயிலில் ஜனிக்கும் குழந்தைகள் பெரியசாமியின் கவிதைகளில் தஞ்சமடைய குதூகூலத்துடன் குதிக்கிறது..மழலைகளின் ஒவ்வொரு அங்க அசைவையும் துல்லியமாக கவனித்து கவிதைகளை குழந்தைகள் பார்வையில் எழுதியுள்ளியுள்ளார். இந்தக் கவிதைகள் வாசித்து உள்வாங்குபவர்கள் குழந்தைகளே ஆசான்கள் என்பதை உணர்வார்கள்…அன்பையும், எல்லையில்லா கருணையையும் குழந்தைகள் மேல் பொழிந்து முத்தமிடுகிறார்…
இரண்டு கவிதைகள்.
(1) இறுக மூடினான்
முன்பின் கதவுகளை.
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை.
துவட்டிக் கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்.
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்.
சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை.
(2) குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்
பாட்டியின் கதை மோதிரத்தை.

பாவண்ணன்

உங்கள் நூலகம் இதழில்
பாவண்ணன் எழுதிய மதிப்புரை...
கவிதைத்தேரின் பவனி
பெரியசாமியின் ‘குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’
பாவண்ணன்
”பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு
வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா, இது அலெக்ஸ் மரம் என்றான்
சரிசெய்யும் பதற்றத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என் பெயர்தான்”
இந்தக் கவிதையில் வெளிப்படும் என் என்கிற தன்னுணர்வில் தெறிக்கும் குழந்தைமை ஒரு முக்கியமான அனுபவம். நான் என்னும் தன்னுணர்வோடு ஆட்காட்டி விரலால் தன் நெஞ்சைத் தொட்டு தன்னால் உருவாக்கப்பட்டதற்கு உரிமை கொண்டாடும் ஒரு குழந்தையின் கூற்று ஒரே தருணத்தில் புன்னகையையும் சிந்தனையையும் தூண்டிவிடுகின்றன. தினசரி வாழ்க்கையில் சாதாரணமாக நம் கவனத்திலிருந்து முற்றிலும் நழுவியோட வாய்ப்புள்ள ஒரு அனுபவம் என்றே இதைச் சொல்லவேண்டும். ஆனால் பெரியசாமியின் கவிதைக்கண்கள் சரியான தருணத்தில் அதைத் தொட்டு மீண்டு வருகின்றன. நான், எனது என்பவை மானுடத்தின் அடிப்படை உணர்வுகள். இவ்வுணர்வுகள் வழியாகவே ஓர் உயிர் தன் அகத்தைக் கட்டமைக்க முற்படுகிறது. வாழ்க்கையில் அது ஒரு கட்டம். இறுதியாக ஒரு கட்டமும் உள்ளது. இறுகப் பற்றி வாழும் இவ்வுணர்வுகளை தானாகவே கரைந்துபோகச் செய்யும் கட்டம். கடற்கரையில் கட்டியெழுப்பப்பட்ட மணல்வீட்டை அலைகள் கரைப்பதுபோல கரைந்துபோக அனுமதிக்கும் கட்டம். கவிதையை வாசித்து முடிக்கும் கணத்தில் இந்த முனையிலிருந்து அந்த முனைவரைக்கும் மனம் மானசிகமாக ஒரு பயணத்தை நிகழ்த்தி முடித்து, மீண்டும் தொடங்கிய புள்ளிக்கு வந்து நின்றுவிடுகிறது. நினைவின் வழியாக நிகழும் இந்த அனுபவமே இந்தக் கவிதையின் அனுபவம். இது பெரியசாமி என்னும் கவிஞர் நாம் மூழ்கித் திளைப்பதற்காகவே கட்டியெழுப்பியிருக்கும் பேருலகம்.
பெரியசாமியின் கவிதைகள் காட்சிகளால் நிறைந்தவை. வனவிலங்குகளைப் படமெடுப்பதற்காக கூரிய புலனுணர்வுடன் காத்திருக்கும் புகைப்படக் கலைஞர்களைப்போல குழந்தைகளின் சொற்கள் அல்லது செயல்கள் வழியாக நிகழும் அற்புதத்துக்காக அவர் விழிகள் ஒவ்வொரு கணமும் காத்திருக்கின்றன. இந்தப் பொறுமை, அவர் காட்சிப்படுத்தும் கவிதைகளுக்கு ஒருவித தனித்தன்மையை வழங்குகின்றன.
மாலைப் பொழுதொன்றில்
உரையாடலைத் துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை
இன்னொரு யானைதான்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
மற்றொரு குருவி
இந்த மரத்துக்கு
அதோ, அந்த மரம்
அப்ப வானத்துக்கு?
மெளனித்திருந்தேன்
அன்றுதான் ஒரு தாளில் வரைந்து அனுப்பினாள்
துணை வானம் ஒன்றையும்
ஒரு நிலா ஒரு சூரியன்
நிறைய நட்சத்திரங்களையும்
யாவரும் கண்டுகொண்டிருப்பது
அவள் அனுப்பிய துணைகளைத்தான்
வானத்துக்கும் சூரியனுக்கும் நிலவுக்கும் துணை வேண்டுமேயென கவலைப்படும் குழந்தைமையோடு இரண்டறக் கலந்திருக்கும் கவிதையனுபவத்தை மகத்துவமானதென்றே சொல்லவேண்டும். பெரிய பெரிய படிமங்களாலும் தர்க்கங்களாலும் கட்டியெழுப்ப முடியாத வினோதமான அனுபவத்தை மிக எளிய சொற்களால் ஒரு காட்சியின் வழியாக முன்வைத்துவிடுகிறார் பெரியசாமி. இதுவே அவருடைய கவித்துவம்.
எண்ணற்ற குழந்தைச் சித்திரங்களை பெரியசாமி தன் கவிதைகளிடைய தீட்டி வைத்திருக்கிறார். அக்குழந்தைகளின் ஏக்கங்களுக்கும் கனவுகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் விளையாட்டுகளுக்கும் புதுப்புது வண்ணங்களைக் குழைத்து பளிச்சிட வைக்கிறார்.
இத்தொகுதியின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று மழையின் பசியாற்றியவர்கள்.
மழையின் பசியாற்றினோம்
ஆவல் பீறிடக் கூறினேன்
நட்சத்திரங்களாகக் கூரையில் மின்னும்
துளிகளிடமிருந்து மீண்டு
பரிகாசமாகச் சிரித்தவனின்
கரம்பற்றி அழைத்துச் சென்றேன்
என் துளிர்த்த காலத்திற்கு
உத்தி பிரித்து விளையாடிய காலையில்
சிறுசிறு தூறல்களும் உடனாட
மழைக்குப் பசிக்குமென
கொட்டாங்கச்சியில் தட்டி வைத்தோம்
சுடச்சுட இட்லிகளை
கரைத்து விழுங்கின் தெம்பாய்
ஊரைச் சுத்தம் செய்தோடியது
மழை
குழந்தையின் சொற்கள் அசலான குழந்தைமையோடு வெளிப்படும்போது, இயற்கையாகவே அதில் கவித்துவம் நிறைந்துவிடுகிறது. தனக்குப் பசிப்பதைப்போல மழைக்கும் பசிக்குமென ஒரு குழந்தையால் மட்டுமே யோசிக்கமுடியும். எவ்விதமான தயக்கமும் இல்லாமல் மழையின் முன் உணவை நீட்டியளிக்க ஒரு குழந்தையால் மட்டுமே முடியும். உள்ளார்ந்த அன்போடும் பரிவோடும் மண்கட்டியை இட்லி என்று சொல்லி ஒரு குழந்தையால் மட்டுமே அடுத்தவருக்கு அளிக்கமுடியும். மண்ணின் பசியையும் தாகத்தையும் மழை பொழிந்து தணிக்கிறதென்பதுதான் நம்பிக்கை. இக்கவிதையில் மழைக்கே பசிக்கிறது என்று நம்புகிறது ஒரு குழந்தை. அந்தப் பசியைத் தணிக்க தன் கைகளால் உணவை வழங்கி மனம் களிக்கிறது.
சித்திரம் தீட்டுதல் பெரியசாமியின் கவிதைகளில் திரும்பத்திரும்ப வரும் செயல்பாடு. குழந்தைளின் பிஞ்சு விரல்களின் கோணல்மாணலான கிறுக்கல்களால் நிறைந்த சித்திரங்களே அவை. குழந்தைமையின் தொனியோடு அக்கோடுகள் இணையும்போது அவை அழகான கவிதைகளாகிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக பிரம்ம அவதாரம் என்னும் கவிதையைச் சொல்லலாம். எவ்விதமான விளக்கங்களும் தேவையற்ற நேரிடையான கவிதை.
முட்டைகள் நான்கிட்டு
அடைகாத்தான்
அது நான்கு வானங்களைப்
பிறப்பித்தது
வெக்கை மிகும் பொழுதுகளில்
மழை பொழிவிக்க
ஊற்றும் மழையால்
வெளி நடுங்கும் காலங்களில்
வெயிலடிக்க
அப்பிய இருளோடு உலகிருக்க
நிலவு முளைக்க
சகஜீவராசிகள் பனியில் சுருங்கிக் கிடக்க்க
கதகதப்பூட்டவென
வேலைகளைப் பங்கிட்டுக் கொடுத்து
வேறு முட்டையிட தயாரானான்.
பிஞ்சுக்குழந்தை கட்டளையிடும் இடத்தில் நின்றுகொள்ள, அதை மனமார ஏற்றுப் பணிந்து கடமையாற்றும் இடத்தில் நின்றிருக்கிறது வானம். ஆகிருதிகள் முக்கியமிழந்து கற்பனையும் குழந்தைமையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தச் சித்திரம் தீட்டும் விருப்பம் பவனி என்னும் கவிதையில் வேறொரு விதமாக வெளிப்படுகிறது.
தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாகக் கூறிச் சென்றான்
வர்ணங்களைச் சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவரப் பணித்தான்
மகாபாரதம் தொடரில் கண்ணுற்ற
ரதம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான்
ஒளிர்வில் வீடு மீனுங்க
நின்றது பேரழகோடு
மற்றொரு நாளில்
புரவிகளை உயிர்ப்பித்துப் பூட்டினான்
அதிசயித்து ஊர்நோக்க
வானில்
பவனி வந்தான்
இது குழந்தையின் ரதம். குழந்தை பூட்டிய குதிரை. குழந்தையின் பவனி. கண்ணும் கற்பனையும் நிறைந்தவர்களுக்கு மட்டுமே இந்த பவனியின் தரிசனம். பெரியசாமியின் கவிதைப்பயணத்தை மறைமுகமாகக் குறிப்பிட இக்கவிதை பெரிதும் உதவக்கூடும். அதுவும் ஒருவகை பவனி.
ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது பெரியசாமியின் கவிதைகள் குழந்தைகளின் பார்வை வழியாக உலகத்தைப் பார்க்க முனையும் விழைவுள்ளவை. அவை தர்க்கமற்றவை. ஒருங்கிணைவற்றவை. எவ்விதமான உள்நோக்கமும் இல்லாதவை. அபூர்வமான தருணங்களில் கவிதானுபவமாக மாறக்கூடிய ஆற்றலையும் கொண்டிருப்பவை.
(குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம். கவிதைகள். ந.பெரியசாமி. தக்கை வெளியீடு. 15, திரு.வி.க.சாலை, அம்மாப்பேட்டை, சேலம்-7. விலை.ரூ.30)

விநோதினி

அண்மையில் #குட்டி_மீன்கள்_நெளிந்தோடும்_நீலவானம்எனும் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. தொகுப்பு முழுவதும் மழலைமையை இரசித்துச் செதுக்கிய கவிதைகள்.
"துணை வானம்" எனும் தலைப்பிலமைந்த கவிதையில் யானைக்கு யானை துணை, குருவிக்குக் குருவி துணை என்பது போன்ற வாழ்வியல் எதார்த்தங்களைக் கவனிக்குத் தொடங்கும் குழந்தை, வானத்துக்குத் துணையேதென்று வெற்றுத் தாளில் வானமொன்றை வரைந்து துணைக்கனுப்பி வைக்கிறது.
"பாம்புகள் பாம்புகளாயின" எனும் தலைப்பிலமைந்த கவிதையில், கார்டூன் படங்களில் பொம்மைகளை உயிர்ப்பித்து விளையாடிவிட்டு மீண்டும் பொம்மையாக்கி விடுதல் போல, தென்னங்கீற்றுகளில் செய்த பாம்புகளை உயிர்ப்பித்திருக்கிறார்.
"புதைந்த குரல்களி"ன் கீழே, குழந்தைகளின் நுண்ணுணர்தல் திறனைச் சரியாகப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
வெற்றுத் தாளை வனமாக்கியவன்
*******************************
முயற்சியால் வெற்றி கொண்டான்
மேகங்கள் உருவாகியிருந்தன
வேடர்களுக்குச் சிக்காத
பறவைகளை மிதக்கச் செய்தான்
புற்களை உருவாக்கி
மரங்களை வளர்த்து
வீடொன்றைக் கட்டினான்
வெளிச்சம் வேண்டி
நிலவைப் பிறப்பித்தான்
நிறைவுகொள்ள
வேறு தாளை எடுத்து
நதியை உருவாக்கத் துவங்கினான்
சனியன்
சதா கிறுக்கிக்கிட்டே இருக்கு
அப்பாவின் குரல் கேட்டு அதிர்ந்தான்
ஒரு நதி
துவக்கத்திலேயே வறண்டது..
*************************
இக்கவிதையில் வெளிச்சத்திற்கென நிலவைப் பிறப்பிப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, கவிஞருக்கும் நல்ல கருணையுள்ள மனம் தான் வாய்க்கப்பட்டிருக்கிறது. நானாகவிருந்தால், சந்தேகமே வேண்டாம் கண்டிப்பாகச் சூரியனைத் தான் வரைந்திருப்பேன். தவிர, குழந்தைகளின் கற்பனைத் திறனைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டுமேயன்றித் தடை போடுதல் தவறென்ற பொதுநல நோக்கும் உள்ளது.
இவை மட்டுமல்ல, இது போன்று நிறையக் கவிதைகள் இருக்கின்றன. தொகுப்பில் பெரும்பான்மையாகச் செய்தான், வரைந்தான் என்பது போன்று சுட்டியதிலிருந்து கவிதைகளுக்குப் பின்னணி இசைப்பது ஒரு அவன் தான் என்பதும் தெளிவாகிறது.
வாழ்த்துகள் அண்ணா.

பாலா கருப்பசாமி

பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும் என்று யேசு சொன்னார். ஜே.கே. அறிந்ததினின்றும் விடுதலையென்றார். இரண்டும் ஒன்றுதான். இருப்பதிலேயே கடினமானது எளிமையைக் கண்டடைவதுதான். காற்றில் நடனமிடும் இலையை பற்றும்போது நடனம் மட்டும் சிக்குவதில்லை என்கிறார் தேவதச்சன். மழை இலைமீது தாளமிடுகிறது. இலை என்ன செய்கிறது எனக் கேட்கிறார் நகுலன். இரண்டும் ஒன்றேதான். இலையா காற்றா மழையா எனப் பிரித்தறியமுடியாதபடி அது நிகழ்கிறது. அந்த நிகழ்வைப் பிடிப்பதுதான் கவிஞனின் சவால்.
ந. பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் குழந்தைகளின் உலகைத் தொடும் ஒரு முயற்சி. குழந்தைகள் குறித்தான கவிதைகளில் எழுதுபவர் யார் என்பது பெரிய கேள்வியாய் வந்து நிற்கிறது. எழுதுபவன் மறைந்துபோய், அந்த உலகத்தோடு கரையும் இடங்களில் மட்டுமே அது கவிதையாக முடியும். இந்தத் தொகுப்பில் 34 கவிதைகள் உள்ளன. இதில் நான்கு கவிதைகள் மட்டுமே சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. கவிதை நெகிழ்ந்து குழந்தைகளின் உலகைத்தொடும் அனுபவம் இதில் கைகூடியிருக்கிறது. இந்த எண்ணிக்கையை நான் ஒரு குறையாகப் பார்க்கவில்லை. குழந்தைகள் குறித்தான கவிதைகள் மிகச் சிரமமானவை.
மழையின் பசியாற்றியவர்கள்
மழையின் பசியாற்றினோம்
ஆவல் பீறிடக் கூறினேன்
நட்சத்திரங்களாகக் கூரையில் மின்னும்
துளிகளிடமிருந்து மீண்டு.
பரிகாசமாகச் சிரித்தவனின்
கரம்பற்றி அழைத்துச் சென்றேன்
என் துளிர்த்த காலத்திற்கு.
உத்தி பிரித்து விளையாடிய காலையில்
சிறுசிறு தூறல்களும் உடனாட
மழைக்குப் பசிக்குமென
கொட்டாங்குச்சியில் தட்டி வைத்தோம்
சுடச்சுட இட்லிகளை.
கரைத்து விழுங்கி தெம்பாய்
ஊரைச் சுத்தம் செய்தோடியது
மழை.
அதேபோல், எளியவர் என் கடவுள் என்ற கவிதையையும் குறிப்பிடவேண்டும். முழங்காலளவே இருக்கும் மகளைக் குளிப்பாட்டும் ஒவ்வொரு நாளும் ஒரு கோவில் செப்புச்சிலையை, தாய் தெய்வத்தைத் தொடுவதாகவே ஒரு உணர்வை அடைவேன். பாதங்களின் மேல் சோப்போ மஞ்சளோ போடும்போது சமயங்களில் கண்ணீர்கூட வந்துவிடும். இத்தகு உணர்வை இந்தக்கவிதை அளித்தது 'வடை தூக்கும் காக்கைக் கதையில்/உறக்கம் கொள்ளும்/என் கடவுள் எளியவர். / நெற்றியில் பூசும் திருநீறுக்கே/ மலையேற்றம் கொள்ளும் / என் குடிசாமி போல"
வாஞ்சையின் கடும் ஈரம், புதைந்த குரல்கள் ஆகிய இரண்டு கவிதைகளும்கூட முக்கியமானவை. ந. பெரியசாமிக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

அ. ராமசாமி

அ. ராமசாமி
குழந்தைகள் குளியல்போடும் மழையின் தோட்டம்.
========================================
சொல்வோருக்கும் கேட்போருக்குமிடையே உருவான - உருவாகக்கூடிய வாழ்வின் சம்பவங்கள், கவிதையின் சம்பவங்களாதலே பெரும்பான்மையான கவிதைகளின் வெளிப்பாடு. நிகழ்காலக் கவிதைகள் உருவானதை முன் வைப்பதைவிட, உருவாகக் கூடியதைப் பற்றிய நினைப்புகளையே அதிகம் எழுதிக்காட்டுகின்றன. அந்தவகையில் அவை எதிர்காலக் கவிதைகள்.
எல்லாவகையான கவிதைகளிலும் அழைப்பின் வழியாகவே கவிதைச் செயல் நிகழ்கிறது. அந்த அழைப்பு உருவாக்கும் ரகசியத்திறப்பு கவிதையின் வாசிப்புத் தளத்தை உருவாக்கக்கூடியது. இந்தத் தன்னிலை இப்படியான தன்னிலைகளையே அழைக்கும் என்ற தேய்வழக்கில் வெளிப்படும் காதல் கவிதைகளும் புரட்சிக் கவிதைகளும் பல நேரங்களில் பாதிக் கிணறைத் தாண்டுவதில்லை.
அழைக்கும் தன்னிலை தனது இருப்பையும் அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு உச்சரிக்கும் சொல்திரட்டின்வழியாக வரையும் சித்திரங்கள் ஒருதடவைக்கும் கூடுதலாகவே வாசிக்கச் செய்யும். அழைக்கப்பட்ட தன்னிலையின் மீதான இருண்மை கவிதையின் நிகழ்வை இருண்மையாக்கிக் குழைத்துத் தீட்டப்படும் அடுக்கடுக்கான வண்ணச்சேர்க்கையாக நகரும்.
ந. பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் அழைக்கும் தன்னிலைக்கும் அழைக்கப்படும் முன்னிலைக்குமிடையேயான சம்பவங்களாக இல்லாமல் மூன்றாவதொன்றை முன்வைக்கும் - வரைந்துகாட்டும் சொற்கூட்டங்களாக இருக்கின்றன. வெளிப்படையான கருப்பொருளோடு- பின்னணிக்காட்சிகளோடு பலவித உணர்ச்சிகளைத் தேக்கிவைத்திருக்கும் குழந்தைகளை - குழந்தைமைத்தனங்களை எழுதிக்காட்டும் கவிதைகளைத் தந்துள்ளார் .மழை, வானம், தோட்டம், காற்று என வெளிப்படையாகத் தெரியும் பரப்பைக் கவிதை விரிப்பதால் இருண்மை குறைந்து எளிமையின் அருகில் அழைத்துச் செல்கின்றன. குழந்தைகளைப் பற்றிய கவிதைத் தொகுப்பாக வந்திருக்கும் ந.பெரியசாமியின் தொகுப்பிலிருந்து ஒரு கவிதைமட்டும் இங்கே.
=============================================
அதன் தலைப்பு: வெளியே மழை பெய்கிறது
----------------------------------------------
கொசகொசவெனக் கட்டடங்கள் வரைந்து
சிறுசிறு புள்ளிகளை அடைத்து
பூச்சிகளின் வீடென்றாள்
கோடுகளை அடுக்கி
குட்டிகுட்டியாய் பொந்து வைத்து
எலி வீடென்றாள்
பெரிதாய் சதுரமிட்டு
தடுப்புகளில் அடுக்கி
பொம்மை வீடென்றாள்.
உயரமாக மரம் வளர்த்து
கூடொன்றை நெய்து
குருவி வீடொன்றாள்.
வேகமாக ஓடியவளை
தொடர்ந்து நகர்ந்தன.
வெளியே
மழை பெய்தது.

மீன்கள் பறக்கும் வானம்

மீன்கள் பறக்கும் வானம்

- ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து

( நான்காவது கோணம் - ஏப்ரல் மாத இதழில் வெளியானது )




கவிதை மனநிலையின் மைய இழைகளை எப்போதும் சில கண்ணிகள் இணைத்தபடியே இருக்கும். அந்தக் கண்ணிகளின் வடிவங்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பன. நம் காலத்தில் அது ஒரு குழந்தையாகவும் நிற்கிறது.

பொதுவாகவே நாம் நம் குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்ப்பதில்லை. நம் கனவுகளின் ஒட்டுமொத்த உருவமாக, நமது எதிர்காலத்துக்கான முதலீடாக, உற்பத்திக்காரர்களாக, நமது கட்டளைகளுக்குக் கீழ் படிந்து நடக்கும் நம் சேவகர்களாக, பிராய்லர் கோழிகளாக என பல்வேறு வடிவங்களில் அவர்களைக் காணுகிறோம்.

கவிஞர் ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பு குழந்தைகளைக் குழந்தைகளாகக் கண்ட கவிதைகள். குழந்தைகளின் அழகியல் தருணங்களைப் பதிவு செய்த கவிதைகள் நிறைந்த ஒரு தொகுப்பு.

குழந்தைகளையும் அவர்களின் குழந்தைமையையும் இழக்கத் துவங்கும் பருவம் ஒன்றுண்டு. அது அவர்கள் பள்ளிக்குச் செல்லும் பருவம். அரசுப்பள்ளிகளில் கூட பெரிய ஆபத்தில்லை. அங்கெல்லாம் இன்னும் ஓட்டாங்கரம் , கபடி, கோ கோ, நொண்டி என இணைந்து விளையாடுகிறார்கள். காக்காக் கடி கடித்து ஒரே மாங்காயைப் பகிர்ந்துண்ணுகிறார்கள்.. ஆனால் இந்தத் தனியார் பள்ளி மாணவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்கள். ஆண்டொன்று ஆவதற்குள் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

பள்ளி வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தின்பண்டங்களையும் உணவையும் யாரிடமும் பகிராமல் கீழே மேலே சிந்தாமல் உண்ண வேண்டும், விளையாட்டெல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் அதுவும் கணினி முன் அல்லது அறைச்சுவர்களுக்குள் என படிப்படியாக சிறகுகளைக் கத்தரித்து நடக்கவும் ஓடவும் மட்டுமே பழக்கத் தொடங்கிவிடுகிறார்கள் பறக்கத் தெரிந்த பறவைகளை.

இப்படி பிராய்லர் கோழிகளாக, பலன்களுக்காக மட்டுமே லாப நோக்கில் வளர்த்தப்படும் குழந்தைகள் தங்களது குறும்புகளை, விளையாட்டுகளை, குழந்தைத் தருணங்களை என யாவற்றையும் இழந்து விடுவதில் என்ன பிழை நேரப்போகிறது.


பள்ளிக்கூடம்

அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாக சோப்பு வாங்க
பூனை மீது பழி போடுவாள்

விருந்தினரின் செருப்புகளை ஒளித்து
புறப்படுகையில் பரபரப்பூட்டி
நாயின் மீது சாட்டிடுவாள்

தேவைகளை வாங்கிக் கொள்ள
உறுதியளித்த பின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட்,வண்டி சாவிகளை

கொஞ்ச நாட்களாக 
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்

மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது
அவளை பள்ளிக்கு அனுப்பி

பள்ளிக்கூடங்கள் அப்பட்டமான வதைக்கூடங்களாகிவிட்டன என்பதற்கான நிகழ்கால சாட்சியாய் நிற்கிறதிந்தக் கவிதை.

குழந்தைகள் தங்கள் ஓவியங்களின் மூலம் உயிர்களைப் பிறப்பிக்கிறார்கள், இயற்கையை சிருஷ்டிக்கிறார்கள். அது கோணல் மாணலாக இருந்தாலும் ஒரு அழகுடன் இருக்கிறது. ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்குடன் அந்த ஓவியம் இருப்பதில்லை ஆகவே அது எக்காலத்துக்குமான நவீன ஓவியமாகிறது.அதன் புள்ளிகளில் , கோடுகளில், கிறுக்கல்களில் உயிர்ப்பானது ஓவியம் மட்டுமல்ல இந்தக் கவிதையும் கூட


அருவி

இறுக மூடினான்
முன்பின் கதவுகளை
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை
துவட்டிக்கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்

சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை 


இவரது கவிதைகளில் இருப்பதெல்லாம் குழந்தைத் தருணங்கள் தாம். அவை தரும் அனுபவங்கள் அந்தத்தக் கணத்துக்கான கொண்டாட்டங்கள். குழந்தைகள் நமது வானின் நட்சத்திரங்கள். நமது வானத்தை ஒளியூட்டி வருபவர்கள். அவர்களல்லாது நாம் ஒரு வானம் என்று யார் அடையாளப்படுத்துவது ? சொல்லப்போனால் அவர்களால் தான் நாம் வானமாக இருக்கிறோம் .

நட்சத்திரம்

நுழைந்ததும்
காத்திருந்தார் போல் இழுத்தான்
அறையுள் கலர்
கலராக நட்சத்திரங்கள்
அறிமுகப்படுத்துவதாக
நீண்ட பெயர்ப்பட்டியலை வாசித்தான்
வானில் இருத்தல் தானே 
அழகென்றேன்
எங்க டீச்சர் சொல்லிட்டாங்க
அதெல்லாம் கோள்களாம்
அப்போது பூமியிலிருந்து
ஒரு நட்சத்திரம்
வானுக்குத் தெரிகிறது

குழந்தைகளைக் கடவுளாக்கிக் கவிதையாக்குவது தொன்று தொட்டு நாம் செய்வது தான். அப்படியான கவிதைகளிலெல்லாம் குழந்தைகளின் சிறு செயல்களெல்லாம் வரங்களாக்கி படைப்புகளாக்கப்படும். ந.பெரியசாமியும் அதைச் செய்திருக்கிறார். கொஞ்சம் தனித்த தன்முத்திரையுடன்


எளியவர் என் கடவுள்

ஈரமாக்கியது நீதான்
குற்றச்சாட்டோடு எழுவார்

சமாதானம் கொள்வார்
எட்டணா சாக்லேட்டுக்கும்
மெனக்கிடாத பொய்களுக்கும்

சிறு அறைதான்
சிங்கம் உலாவ 
பெரும் வனமாகவும்
மீனாக துள்ளிட ஆறாகவும்

பூங்காக்களில் சறுக்கும் 
பலகை போதும்
புன்னகை சிறகு விரிக்க

வடை தூக்கும் 
காக்கைக் கதையில்
உறக்கம் கொள்ளும்
என் கடவுள் எளியவர்

நெற்றியில் பூசும் திருநீறுக்கே
மலையேற்றம் கொள்ளும்
என் குடிசாமி போல

கடைசி வரிகள் இதை ஒரு குழந்தைக் கவிதை என்று மட்டும் அடையாளப்படுத்தாமல் எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களது எளிய கடவுளின் வழியாகச் சொல்கிறது.


குழந்தைக் கவிதைகளின் தொகுப்பென்ற வகையில் இது வழக்கமான தொகுப்பு தான். ஆனால் இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகள் வழக்கமான கவிதைகள் அல்ல. இது நவீன பிள்ளைத் தமிழ். இவை குழந்தைகளை அறிவுறுத்தாத அச்சுறுத்தாத மொழியில் பேசுகிறது. மேலும், குழந்தைகளுக்கு மாறுவேடம் எல்லாம் போடாமலும், அவர்களைக் கடவுளாக்காமலும் இயல்பான குழந்தைமையைக் கவிதையாக்கியிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகம் ; நாம் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும், இந்தக் கவிதைகளையும்

‎Meenaa Sundhar

Meenaa Sundhar பெறுநர் Periyasamy Periyasamynatarajan
25 மே


#கவனிக்கப்பட வேண்டிய கவிதைத் தொகுப்பு-(6)
#குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
#.பெரியசாமி.
தக்கை வெளியீடாக தோழர் ஆதவன்தீட்சண்யாவின்அழகிய அட்டைப்பட வடிவமைப்பில்,ஓவியர் கார்த்தியின் விரல் நளினத்தில் மிளிர்கிறது "குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் "
இனிய நண்பர்,கவிஞர் ந.பெரியசாமி பழகுதற்கினியர்.குழந்தைகள் மீது பெருநேசம் கொண்ட அவரே ஒரு வளர்ந்த குழந்தை.பழகும்போது அத்தனை இயல்பும்,எளிமையும் கொண்டவர்.இலக்கியம்வழி பலகாலமாக அறிமுகமாயிருப்பினும் நேரில் பார்க்கையில் அன்பால் நெகிழ்த்தியவர்.ஓசூரில் வசிக்கும் அவரின் பூர்வீகம் கடலூர்.
குழந்தைப்பாடல்களால் மனங்கவர்ந்த கவிஞர்களுள் இவர் குழந்தைகள் பற்றிய அனுபவங்களை இன்றைய மொழிநடையில் மனம் அள்ளிப் போகிறார்.ஓர் உளவியலாளரைப் போலக் குழந்தைகளை மிகக்கூர்மையாகக் கவனித்து அவர்களின் பூடகமில்லா வாழ்வை கவிப்படைப்பாக்கியிருக்கிறார்.
சித்திரம் வரையும் சிறுவனை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.
#இறுக மூடினான்/முன்பின் கதவுகளை
திரைச்சீலைகளால் மறைத்தான்/ஜன்னல்களை/துவட்டிக் கொள்வதென துண்டுகளைக் கொடுத்தான்/அவனது அடுத்த கோமாளித்தனமென/பரிகசித்துக் கொண்டிருக்கையில்/சாரலில் நனையத் துவங்கினோம்/சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்/அருவியை.
ந.பெ.வின் மொழிநடை சிக்கலில்லாதது.யாவரும் படித்த நிலையில் உள்வாங்கிக் கொள்ளத்தக்கது.குளத்தைத் தூர்த்து கட்டிய வீட்டில் வசிக்கும் சிறுவன் வீட்டின் தரைக்குக் கீழே வாத்து.கொக்கு.பாம்பு,மீன்,உள்ளிட்டவைகளின் சத்தம் கேட்கிறது என்பது இயற்கையை அழித்த குற்றத்தின் அச்சம் நம்மைக் கவ்வும் புதிய கட்டுமானம்.அந்தக் கவிதை இப்படி முடிகீறது.
#மதிய பொழுதொன்றின்
வெய்யிலுக்காக வீட்டின் முன் ஒதுங்கியவர்/அப்பொழுதெல்லாம் அடர்ந்த மரங்கள் சூழ/பெரும்குளம் இருந்தது இங்கேயென்றார்.
நதிச்சிறை,மதுவாகினி,தோட்டாக்கள் பாயும் வெளி தொகுப்புகளைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் இத்தொகுப்பு வாசிப்பில் புதிய அனுபவம் தரக்கூடியது.
வாழ்த்துகள் ந.பெரியசாமி.

நன்றி : Anaamikaa Rishi



எனது மூன்று கவிதைகளும் கவிஞர் அனாமிகா ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பும்..
1. வெற்றுத் தாளை வனமாக்கியவன்
---------------------------------------------
முயற்சியால் வெற்றிகொண்டான்
மேகங்கள் உருவாகியிருந்தன
வேடர்களுக்குச் சிக்காத
பறவைகளை மிதக்கச் செய்தான்
புற்களை உருவாக்கி
மரங்களை வளர்த்து
வீடொன்றைக் கட்டினான்
வெளிச்சம் வேண்டி
நிலவைப் பிறப்பித்தான்
நிறைவுகொள்ள
வேறுதாளை எடுத்து
நதியை உருவாக்கத் துவங்கினான்.
சனியன்
சதா கிறுக்கிக்கிட்டே இருக்கு.
அப்பாவின் குரல்கேட்டு அதிர்ந்தான்.
ஒரு நதி
துவக்கத்திலேயே வறண்டது.
Turning a blank sheet into a jungle
He strove hard and succeeded.
Clouds have formed
He made birds, elusive to the hunters,
to float
Growing grass
Planting trees
He built a house.
For light
he brought into being the Moon.
The sheet filled to the brim
he took another one
and began to create river.
“Damn this good-for-nothing fella…
Scribbling always”
Hearing his father’s voice
he became shell-shocked.
The river dried up
at the very start itself.
-----------------------------------------------------------------------
2. அலெக்ஸ் மரம்
------------------------------
பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு
வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா இது
அலெக்ஸ் மரம் என்றான்
சரிசெய்யும் பதட்டத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என்பெயர்தான்.
ALEX TREE
He who came with the lilt and leap of a calf
just released from the cattle-shed
showed me his drawing.
“Banyan tree is beautiful” said I.
“No dad,
this is Alex tree”, said he.
Growing apprehensive
I hastened to correct him,
insisting.
Refusing to accept
he said
“No father
My tree 
can have just my name.”
-------------------------------------------------------------------------
3. இது கதையல்ல
--------------------------------
அன்று வானம்
நெருக்கமான நட்சத்திரங்களோடு இருந்தது
தூண்டிலை
வான்நோக்கி வீசிக்கொண்டிருந்தான்
செய்கை புரிதலற்றிருக்க வினவினேன்
பூத்திருக்கும் மீன்களை
பிடிப்பதாக கூறினான்
பார்க்கக் கேட்டேன்
அனுப்பிவிட்டேனென்றான்
அழும் குழந்தைகளுக்கு
கதை சொல்ல.
THIS IS NO TALE-SPINNING
That day the sky was overcrowded with stars
in close clusters.
He was throwing the angler towards the sky.
Unable to comprehend, I asked.
He said he was catching the stars that have bloomed.
I asked him to show.
He said he had sent them
for telling tales
to weeping children.
நன்றி : Anaamikaa Rishi

ஆற்றுப்படுத்தல்

ஆற்றுப்படுத்தல்
ந.பெரியசாமி.
ஆற்றுப்படுத்தல் சங்க காலத்தில் அரசனைக் கண்டு பரிசினைப் பெற்று வரும் பாணர்கள் எதிரில் வரும் பாணர்களிடம் தான் போன பாதை, பார்த்த அரசன், கிடைத்த பரிசுகளின் விபரங்களைக் கூறி அவனது பதற்றத்தை தணிய வைத்து அனுப்புவது. ஜி.எஸ்.தயாளனின் 'வேளிமலைப் பாணன்' தன் நிர்வாணத்தால் அடர்காட்டை தனதாக்கி, மகிழ்வின் விளையாட்டை பெருக்கம் கொள்ளச் செய்து, மேகங்களுக்கு ஆசையை தூண்டுபவனாக இருந்தபோதும், தன் அனுபவங்கள், சூழல், ரசனை, காதல், கலவி, குழந்தமையாதல் என கலவையான மனநிலையோடு பயணிக்கச் செய்து நம்மையும் ஆற்றுப்படுத்துகிறார்.
சிரிங்க கொஞ்சம், நேராக பாருங்க என கேட்டு எடுக்கப்படும் ஸ்டுடியோ போட்டோக்கள் அடையாளப்படுத்த மட்டுமே பயன்படும். வெளிகளில் எடுக்கப்படும் போட்டோக்கள் ரசிக்கவும் கொண்டாடவுமாக தன்னுள் வெளிச்சங்களை பொதித்து வைத்திருக்கும். பார்வையாளரின் ரசனைக்கேற்ப அவ்வெளிச்சம் மினுக்கம் கொள்ளும். இவைகளை நாம் கவிதைகளோடும் பொருத்திப் பார்க்கலாம். களம் வந்தடையும் பயிர்களை முறம் அள்ளித் தூற்ற பதற்கள் பறந்துபோகும். நல்ல நெல்மணிகளே குவியும். அள்ளிப் பார்த்து பெருமிதம் கொள்ளும் உழவனின் மனநிலை வாசகர்களுக்கும் நல்ல தொகுப்புகளை வாசிக்க கிடைக்கும். அப்படியானதொரு மனநிலையைத் தரக்கூடிய தொகுப்பாக இருக்கிறது ஜி.எஸ். தயாளனின் 'வேளிமலைப் பாணன்'.
காதல் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அது ஒரு மகா உணர்வு. அதை ஏனோ தனோவென்று கடந்திட இயலாது. நுட்பமான கடத்தல் அது. அந்நுட்பம் கைவரப்பெற்றவர்கள் கொண்டாடுகிறார்கள். அறியாதவர்கள் கொலைகாரர்களாக மாறிவிடுகிறார்கள். நொதித்து நொதித்து நினைவில் சுவையூட்டியபடி இருக்கம் காதல் அனுபவம் உன்னதமானது. பால்யம் துவங்கி பாடையேறும் வரை குறுக்கிடும் பெண்ணின் நினைவில் உயிர்ப்பை வைத்திருக்கும் காதல் மகாஉன்னதம்.
காதலும் காமமும் சரியாக புரிந்துகொள்ளப்படாமலேயே கெட்ட செயல், கெட்ட வார்த்தை என மறைத்துவைக்கத் தவறான வழிகாட்டுதல்களால் அதிகாரம் குவிந்தவர்கள் ஆண் எனும் சிந்தனைப்போக்கு மட்டரகமான செயல்பாடுகளையே வெளிப்படுத்துகிறது.
கணவன் இன்னுயிர் செல்லுங்கால் தன்னுயிரும் தானே நீங்குவது- தலையாய கற்பு.
தன்னைக் கொண்டவன் இறந்ததைக் கண்டு தன்னுயிர் பிரியத் தீக்குளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு உயிர் நீங்குதல் - இடையாய கற்பு.
கைம்பெண்ணாக உயிர் நீங்கும் வரை வருந்தி வாழ்தல்- கடையாய கற்பு.
இவ்வாறான மூவகை கற்புகளை பெண்ணின் ஒழுக்கத்தோடு தொடர்புபடுத்தி பண்டைய காலம் தொட்டு எதிர்வரும் காலம் தோறும் ஓரவஞ்சனையோடு சொல்லப்படும் ஒழுக்கம் தொடரத்தான் செய்யும். பிழையான இச்சிந்தனையை ஆனிவேராக ஊன்றச்செய்ததால் பிழையான அனுகுமுறையே பெண்மீது நீடிக்கிறது.
ஆண் எனும் திமிர் பெருத்த சமூகத்தை பார்த்து காறித் துப்பி உண்மை பேசும் பெண்களை இச்சமூகம் பிடாரிகள் என தூற்றுகிறது.
....................
ஒவ்வொரு உமிழ்தலிலும் ஒரு காரணம் சேர்ந்து விடுகிறது
நாகரம்மனை நாகராஜாவாக மாற்றிய மோசடிக்கு
மருமக்களின் வழி மக்கள் வழியாக மாறிவரும் தந்திரத்திற்கு
பெண்களை பர்தாவுக்குள் சிறையெடுத்த வகாபிசத்திற்கு
பெண்ணை பாதிரியாகவும் ஏற்க இயலாத வக்கிரத்திற்கு
புத்தத் துறவியென்றால் மழித்த தலையோடு
குழல் குறியும் வேண்டுமென்னும் வஞ்சத்திற்கு
உமிழத்தான் செய்வாள்
பேயை உமிழ்ந்து விரட்டிய வரலாற்றில் வந்தவள்
துப்பி விரட்டினாலும் அந்தக் கோபிகையின்
கொப்பூழைச் சுற்றிப் பதிந்திருந்தன
ஓராயிரம் கண்ணன்களின் பார்வைச்சுவடுகள்
ஒவ்வொரு பார்வையையும் பிடித்துக் கடாசுகிறாள்
விந்து சொட்டி நிற்கும் கருவிழிகளை
உதாசீனம் செய்கிறாள்
நாசூக்கை நையைப் புடைக்கிறாள்
பூடகத்தின் பூட்டைகளை நறுக்கி எறிகிறாள்
கோபத்தின் உச்சத்தில்
வேடிக்கையாளர்களுக்கு
சேலையோடு சேர்ந்து பாவாடையையும் தூக்கிக் காட்டுகிறாள்
அருகிலிருந்தும் மறைவிலிருந்தும்
பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்
இரு காவலர்களும் நழுவியிருந்தனர்
விரைத்த குறிகள்
விந்து வெளிப்படாமலேயே சுருண்டு கொள்கின்றன
பிடாரி
அடாங்காப் பிடாரி
அகங்காரி
மாகாளி
லிங்கக் குண்டத்தை வெற்றுடலால் மிதித்துக் கடந்து
குதப்பிய வெற்றிலையோடு
தனியாளாய்த் திட்டியபடி திரிகிறாள்.
என முடிவுறும் தயாளனின் பிடாரி கவிதை. சக மனுசிகளுக்கு செய்த, செய்துக்கொண்டிருக்கும், செய்யப்போகும் துரோகங்களின் வரலாறு. 'சேலையோடு சேர்ந்து பாவாடையையும் தூக்கிக் காட்டுகிறாள்' தெரியும் பெண்குறி பார்க்க திராணியற்றது ஆண்திமிர். வெளிச்சத்தில் அதன் ஆகிருதியை காணத் தயங்குபவர்கள். எல்லாம் இருளிலேயே. அவசர அவரசமாக திமிரை நிருபிக்கும் பதற்றம். தோல்வியுற்றுத் தொங்கும் முகம் பார்க்க தெம்பற்றவர்கள். சுயமைதுனம் செய்துகொள்ளக்கூட அவர்களின் நிழலான உருவத்தின் கருனை தேவை என்பதை உணராதவர்கள். உண்மை பேசும் பிடாரிகளை எதிர்கொள்ள முடியாத சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அடைப்புகளை பிய்த்தெறிந்து ஆக்கிரமிப்புகளை சூழ்ந்து தவியாக தவிக்க வைக்கும் மழை நீராக பாய்ச்சலை உண்டாக்கும் நாள் கட்டாயம் வந்தே தீரும். அதிகாரத்திற்கு உண்மை தேவையில்லை சாட்சியமே போதும் எனும் நிலை மாறும். மயிர்கள்/ சிரைக்கப்படாத என் நிர்வாணம்/ அழிக்கப்படாத காடுகளைப் போல் /கம்பீரம் வீசுகிறது எனும் சுகிர்தராணியின் கவிதை வரிகளை நினைவூட்டியது இக்கவிதை.
பேருந்து நிலையம் பயணத்திற்காக ஏறி இறங்கும் இடம் மட்டும் அல்ல. குழைவு, காதல், காமம், கள்ளத்தனம், சைகைகள், கண் அசைவில் விலை நிர்ணயிக்கும் விபச்சாரம், திருட்டு என ஒட்டுமொத்த உலகத்தின் கூறுகளையும் ஒரு பஸ் நிலையம் வைத்திருக்கும். ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்குமான பிரத்யோக வாசனை உண்டு. அவசர அவசரமாக ஓடிக்கொண்டே இருந்தால் அவ்வாசனையை உணர முடியாது. இரவில் எங்காவது ஓரமாக உட்கார்ந்து வேடிக்கையில் இருக்கவேண்டும். வண்ணங்களின் வகைமைகளை உணரலாம். சில்மிசத்தால் செருப்படி படுபவனின் முகக்கூறுகளை அங்கு தான் காணமுடியும். ஒவ்வொரு பஸ் நிலையமாக இறங்கி இறங்கி வேடிக்கைப் பார்த்து ஊர்சென்ற நாட்களின் நினைவில் இருக்கச் செய்தது 'மஞ்சள் நிறப் பேருந்து நிலையம்' கவிதை.
காமம் காமம் என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை
குளகு மென்று ஆண்மதம் போலப்
பாணியும் உடைந்து அது காணுநர்ப் பெறினே.
-மிளைப் பெருங் கந்தன்
எழுதிய குறுந்தொகை பாடலொன்றில் காமம் இகழ்ச்சிக்குரியது அல்ல. அது எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை யானையின் நீடித்த காமம் குறித்து தலைவன் தேர்பாகனுக்கு விளக்குவதாக உள்ள இப்பாடலைப் போல் தயாளன் நமக்கு காமம் சார்ந்து சில கவிதைகளை இத்தொகுப்பில் வைத்துள்ளார்.
ஆண் எனும் திமிர்த்தனங்களால் காமத்தின் நுட்பங்களை அறிய முடியாது. காமம் சரணகதியாலே மினுக்கம் கொள்ளும். சரணாகதியடைய சரணாகதியடைய அதன் ஒளிர்மை கூடிக்கொண்டே இருக்கும். காமத்தின் சூத்திரம் சரணாகதி என்பதை தன் கவித்துவ வரிகளால் தயாளன் நமை வசீகரிக்கிறார்.
கழுவப்படாத யோனியில் படிந்திருக்கும் உப்புச்சுவை தீண்ட உருக்கொள்ளும் காற்றில் தக்கையாக மிதந்தலைந்து சோர்வுகொள்ளும் காட்சியை அவளீந்த இரவை அவளாலேயேனும் தர முடியுமா எனும் ஏக்கம் கொள்ளச் செய்திடுகிறது 'தோழிக்கு உரைத்தது' கவிதை.
காமத்துப்பாலை
கறவை சூட்டுடன் பருகத் திணித்து
யோனியை வாயெனவும்
வாயை யோனியெனவும்
லாவகமாய்த் திரித்து
வியர்வைத் திவலைகள் உடைந்து சிதற
அவளீந்த இரவை
அவளாலேனும்
திரும்பத் தரவியலுமா.
நினைவில் விழிக்கும் காமம் உடலை வெப்பமேற்றிக் கொண்டிருக்க இணை இருந்தும் இல்லாது போக உண்டான தகிப்பைக் கூறுகிறது 'கிணற்றிரவு'
.......................
சலனமுற்ற கிணறு
வேறு வழியின்றி
விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
தொகுப்பில் இருக்கும் 'வெவ்வேறு உயிர்கள்' கவிதையை வாசிக்கையில் மீண்டும் தன்னிடம் வரச்செய்திடுகிறது கிணற்றிரவு கவிதை. சகியின் சமிக்ஞை வந்து கொண்டிருந்தபோதும் அதை அறியாது போல் இருக்கும் நிலையை உணர முடிகிறது. அகத்திலிருந்து புறத்திற்கும், புறத்திலிருந்து அகத்திற்குமான ஊசலாட்டத்தில் நாம் சிக்குண்டவர்கள்தானே.
குழந்தை தூங்கிவிட்டாள்
மனைவி அனுப்பும்
கூடலின் சமிக்ஞைகள்
ஒவ்வொன்றாய் வந்தடைகின்றன
அருகில் படுத்திருக்கும் என்னை
நானோ ஏதொன்றும் அறியாதவன் போல
உலகின்
சுடுமணற் பரப்புகளை மேவிக் கிடக்கிறேன்.
என முடிவுறும் இக்கவிதையில் அலைவுறுகிறது ஆதங்கம்.
மூத்திரம் பெய்தல் தனிநபர் சார்ந்தது. நீண்டநேரம் அடக்கிவைத்து பின் வெளியேற்றுகையில் உண்டாகும் நிம்மதி சுகம் அளிக்கக்கூடியது. அச்சுகத்தை ஒருவர் மட்டுமே அனுபவிப்பதில் யாதொரு குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் கலவி அப்படியானதா? இருவர் சார்ந்ததுதானே. அதில் ஆண் என்பதனாலேயே ஆத்திரத்தில் வெளியேற்றி ஆனந்தித்திருத்தல் சரியானதுதானா? உடனிருப்பவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகாதா, எல்லாவற்றிலுமா சிந்தனையை சுயத்தோடு வைத்திருக்க வேண்டும். தயாளனின் 'தலைவியின் கூற்று' கவிதை நமைநோக்கி பெரும் கேள்வியை எழுப்புகிறது. கூடல் கொள்ளும் நாட்களிலெல்லாம் இணையின் வேட்கை தணித்திருக்கிறோமாவென? பிறகு ஏன் ஆண் ஆண் என மதம் கொண்டு அலைகிறீர்கள் என்பதாகப் படுகிறது.
காமப்பெருந் தீ அணையும்
கடைசி நொடியை நெருங்க நெருங்க
வேகமெடுத்த ஆக்ரோஷம்
ஸ்கலிதம் செய்ய
ஆட்டத்தை நிறுத்துகிறது கட்டில்
வேட்கை தணியாத அவளோ
எழுந்து தன் யோனியை
கூரிய வாளெடுத்து
சீவி செதுக்கித்
திறந்து வைக்கிறாள்.
தயாளன் பெண் உடலை, வலியை, உணர்வை பேதம் பாராது நெருங்குகிறார். மலிவான சுகம் கொண்டு ஆண் எனும் மாயையில் மகிழ்வோரை தொலும்பாக உடைத்து போட்டபடி இருக்கிறார். இவ்வுடைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்களாக நாமும் இருப்போம்.
காமத்தின் வெதுவெதுப்பை இசையாக்கிய தி.ஜானகிராமன்,பரத்தமையுள் காதல் நுட்பம் பேசும் ஜி.நாகராஜன், கேட்பதல்ல காதல், தருவதுதான் என்ற ந.பிச்சமூர்த்தி, மனப்பிறழ்வுகளை காட்சியாக்கிய கலாப்ரியா,கல்யாண்ஜி, மீகாமம் தந்த க.மோகனரங்கன், வழிபாட்டுக் காமம் காட்டிய பாலகுமாரன், மாந்த்ரீகத் தன்மையால் சிலிர்க்கச் செய்திடும் என்.டி.ராஜ்குமார், ஆணாதிக்கம் என்பது காரியம் முடிந்ததும் திரும்பி படுத்துக்கொள்வது என்ற மகுடேஸ்வரன் மேலும் கு.ப.ரா, தஞ்சைபிரகாஷ், சம்பத், கி.ரா, சாருநிவேதிதா என காமம் குறித்து பேசும் தமிழிலக்கியத்தின் நீளும் பட்டியலில் அதன் பரிணாமத்தோடு தனக்கான நுண்ணுனர்வை லாவகமாக கையாள்பவராகவும் இருக்கிறார் ஜி.எஸ்.தயாளன்.
மேக்காலே வடக்காலே என இயற்கையின் அறிவோடு இருக்கும் நம் பாட்டிகள் திசையறியாது திசையற்று தினறும் நம் வாழ்வை ஆதி அறிவால் கேலி பேசியபடியே இருப்பதாகக் கூறுகிறது 'திசையறிதல்.' கவிதை.
--------------------
தாழ் பணிந்து
குஞ்சாமணியைத் திறந்து பார்க்க
வளர்ந்த குழந்தையுடையதாய் இருந்தது
சிறு குழந்தையுடையதாய் அது மாறும் நாளில்
தன் வலி
தன் அழுகை
தன் விளையாட்டு
எல்லாவற்றையும்
படைத்துவிட முடியும்
என முடிவுறும் மொழிதம் கவிதை. தனக்கானதை தானே படைக்கும் இயல்போடிருக்கும் குழந்தைகளின் மனஉலகோடு நெருக்கம் கொள்ளல் எளிதில் வாய்த்திடுவதில்லை என்பதை உணர்த்துவதாக உள்ளது.
ஒரு சொல்லில் காலத்தை எழுத்தை அழிக்கும் ரப்பரைக் கொண்டு அழியாது நினைவில் வைக்க வேண்டியவைகளை நினைவூட்டுகிறது 'அழியும் ரப்பர்' கவிதை.
எல்லா ஆசிரியர்களாலும் நெருங்கிவிட முடிவதில்லை குழந்தைகளோடு. கஞ்சிபோட்ட சட்டையாக எப்பொழுதும் விரைத்தபடியாக திரியும் சில ஆசிரியர்களைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கும். தாம் செய்யும் பணி எத்தகைய மகத்துவமானது என்பதை அறியாமலேயே டிசிப்ளின் சப்ஜெக்ட் என்பதிலேயே முனைப்பாக இருந்து குழந்தைமையின் அற்புத உலகை காண வழியிருந்தும் நுழைந்து விடாதிருக்க பெரிய பூட்டை போட்டு சாவியையும் காலபோக்கில் தொலைத்து விடுகிறார்கள். எதோ ஒரு சில ஆசிரியர்களை மட்டுமே குழந்தைகள் நெருக்கமாக உணருகிறார்கள். அவர்களின் காலத்திற்கும் அவர்களை நினைவில் வைப்பார்கள். நமக்கு பிடித்த ஆசிரியர்களையும் நினைவூட்டுவதாக இருக்கிறது 'கறாம்புறாம் சித்திரம்' கவிதை.
சமையலுக்காக வாங்கி வந்த கீரைக் கட்டை ஆய்ந்து விடுவதைப்போல மரங்களை எல்லாம் ஆய்ந்து எடுத்துவிட்டார்கள். இரையோடு திரும்பிய காக்கை குருவிகள் தன் குஞ்சுகள் செத்துக்கிடப்பதைப் பார்த்து அலறுகின்றன.அமர்ந்து அழக்கூட வழியற்றுப்போக அவைகளின் சாபம் நம்மை கட்டாயம் சீரழிக்கும். மூன்று நாள் மழையைக்கூட தாங்க முடியாமல் நம் வாழ்வை புரட்டிப்போட்டன. ஏதும் செய்ய இயலாது தவித்தோம். இன்னும் இருக்கிறது பாடாய் படத்தத்தான் போகிறது இயற்கை. இப்பொழுதுதான் கொஞ்சமாக விழிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பதே ஆறுதலாக இருக்கிறது. நம் படைப்பாளிகளும் சூழல் மீதான கரிசனத்தை அவசியத்தை வாய்ப்பிருக்கிற இடங்களிலெல்லாம் சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தயாளனும் இத்தொகுப்பில் சூழல் மீதான தன் அக்கறை வெளிபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே இருந்த பெரும்காட்டை நினைவூட்ட மிஞ்சிய இரு மரங்களின் உரசலில் உண்டாகும் 'கூப்பாடு'.
அழைப்பாரற்ற அம்மிக் கொத்துபவனின் கூப்பாட்டை எதிரொலிக்கும் சரிந்த 'கடைசி ஆலமரம்'.
குளங்களில் சாக்கடையை கலக்கச் செய்த கீழான மனிதர்களின் செயலில் செத்து மிதங்கி நீர் உயிரிகளை காட்சிபடுத்தும் 'குளமிருந்தது'
தண்ணீர் பாம்புகளை பார்க்க இயலாது செய்து அவைகளின் இருப்பிடமான கிணற்றை தூர்த்துவிட்டு பிள்ளைகளுக்கு மணிக்கு நூறு இருநூறு என காசுகொடுத்து நீச்சல் பழக்கும் தன் மடத்தனத்தைக் சுட்டும் 'சடையப்பர் குளம்'
பச்சையற்று போவதை பார்க்க சகிக்காத வானம் அவைகளின் பொருட்டு பெய்விக்கும் மழையை நமக்காக பெய்கிறதென ஆறுதல் கொள்ளும் மனித மனத்தை காட்சிபடுத்தும் 'கிளைக்காகத்தான் மழை தூறுகிறதோ' என இயற்கை மீதான நம் வன்முறையை சுட்டியபோதும் நம்பிக்கையூட்டி ஆற்றுப்படுத்தும் கவிதையையும் தொகுப்பில் வைத்துள்ளார்.
சில மலைகளையும் காடுகளையும் திமிர்த்து நிற்கும் அதன் கம்பீரத்தை கண்ணுறுகிறபோது உங்களால் எங்களை ஒன்றும் புடுங்க முடியாதென சொல்வதாகப்படுகிறது.
மண்ணாக
கல்லாக
நீராக வெந்நிர் ஊற்றாக
உலோகமாக எண்ணைய்க் கிணறாக
நிலக்கரியாக எரிகுழம்பாக
புதையலாக முது மக்கள் தாழியாக
ஏதேனும் ஒன்றாக
தந்து கொண்டேயிருக்கும் பூமி
வந்து கொண்டேயிருக்கும் பூமியிலிருந்து
கொண்டு
முடிந்த மட்டும் தோண்டு
முடிவற்றுத் தரும்
தோண்டு.
என முடிவுறும் தயாளனின் 'இல்லையென்றில்லை' கவிதையை அதன் குரலாக பார்க்கலாம். ரொம்ப நல்லவண்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறான் எனச் சொல்லும் வடிவேலுவின் வசனமும் நினைவுக்கு வருகிறது. இயற்கை நல்லவைகளை மட்டுமே பிரதிபலிப்பதாக இருக்கிறது. நாம் அதனிடம் வேறு எதையோ கற்றுக்கொள்கிறோம்.
எழத்து
ரணத்தை ஆற்ற முடியும்
கொதித்தபடியே இதயம் துடித்துக்
கொண்டிருப்பதை
சாந்தமாக்கவும் கூடும்
ஒரு வரியும் நான் எழுதப்போவதில்லை.
பிற இடங்களில் வசிப்பவர்களை விடவும் கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஈழம் சார்ந்து அதிக புரிதலும் , தகவலும் தெரிந்துகொண்டவர்களாக இருப்பார்கள். வாதைகளின் சாட்சியங்களை அடிக்கடி காணக்கூடியவர்கள். அவர்களின் உணர்வின் வெளிப்பாடாக தயாளனின் 'ஒரு வரியும் எழுதப்போவதில்லை' கவிதையை காண முடியும்.
'அப்பாவைப் பார்க்க கன்னியாகுமாரி போய்க்கொண்டிருக்கிறேன்' எனும் கவிதை வாசிக்க ஞானக்கூத்தனின் 'அம்மாவின் பொய்கள்' கவிதை நினைவில். குழந்தைகளை பயமுறுத்த அப்பாவை பூச்சாண்டியாகவும் கோபக்காரர்களாகவும் சொல்லி வைத்திருப்பார்கள். குழந்தைகள் பயம் கலந்த நெருக்கத்தோடு அப்பாவிடம் இருப்பார்கள். அப்பா அப்படியானவர் இல்லை என உணரும் தருணத்தில் அம்மாவின் பொய்கள்தான் இது என அறிய அப்பாவிடம் சிநேகம் பூப்பார்கள். இக்கவிதையில் 'மேலிருந்து அப்பா சற்றே நகைக்கிறார்' எனும் வரிகளை நெருக்கமாக உணரமுடிந்தது.
உடலைப் பிரிந்த உயிர்
ஆலய மணியில் நுழைந்து
துக்கமணி ஓசையோடு வெளியேறி
காற்றோடு காற்றாக காற்றில் காற்றேயாகும் என முடிவுறும் 'துக்கமணி' கவிதை வாசிக்க ஆம்புலன்ஸ் சைரன் ஒலிகேட்டு ஏற்படும் பதற்றம் நினைவோடியது. எப்பொழுது கேட்க நேர்ந்தாலும் ஏற்கனவே கண்ட விபத்து காட்சிகளெல்லாம் நினைவில் வந்து வதைக்கும்.
தொகுப்பின் இறுதியில் இருக்கும் 'தன்னானே' கவிதையில் தயாளனின் ஆசைபட்டியல் அழகு.
ஆத்திரம், ஆவேசம், உணர்ச்சிவயப்பட்ட கொந்தளிப்பு நிலைகளில் எதையும் அணுகலாகாது. அதில் வார்த்தைக் கழிவுகள் மட்டுமே மிஞ்சும். தெளிவற்ற நிலையே தொடரும். நிதானிக்கத்தான் தெளிவு பிறக்கும். நிதானிக்க நிதானிக்க தெளிவின் மேன்மையை உணரலாம். தயாளனின் கவிதைகளில் மேன்மைகொண்ட தெளிவுகளை தரிசிக்க முடிகிறது. தயாளனுக்கு நிதானிக்கத் தெரிந்திருக்கிறது.
வெளியீடு-காலச்சுவடு பதிப்பகம்.
நன்றி: ்நான்காவது கோணம்.