Wednesday, December 18, 2013

வறண்ட நீர்த்துளிகள்...



 
தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் பழுதடைந்து விடுகிறது. சரிசெய்யும் பிரிவில் இருந்த வேலையாள் மூன்று நாள் விடுப்பில் சென்றிருந்தார். மற்றைய வேலையாட்கள் முயற்சிக்கிறார்கள். ஒரு பொழுதே கழிய சரிசெய்ய இயலவில்லை. நிர்வாகத்தின் அழுத்தம் தாளாது காண்ட்ராக்டில் பழுது நீக்க ஆட்கள் வருகிறார்கள். அவர்களாலும் இயலாது போக நிர்வாகம் பெரும் பதற்றமாகிவிடுகிறது.

விடுப்பு முடிந்து வழக்கம் போல் வேலைக்கு வருகிறார். அவரது உயர் அதிகாரி  மூன்று நாளாக நிகழ்ந்ததைக் கூறாமல் அந்த இயந்திரத்தின் பெயரைக்கூறி பழுது ரிப்போர்ட் வந்திருக்கு போய் பார்த்து வாவென ஆனையிடுகிறார். இவரும் சென்று பார்த்து ஒரு மணி நேரத்திற்குள் பழுது நீக்கிவிடுகிறார். இயந்திரம் உற்பத்திகளை பிறப்பிக்கிறது. நிர்வாகம் இயல்பாகிறது.

இப்படியான தொழிலாளர்கள்  ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நிறைய்ய உண்டு. ஒவ்வொருவரும் தனக்கான தனித்திறன்களோடுதான் பணியாற்றுகிறார்கள். அரசின் கொள்ளை (கொள்கை) மாற்றத்தால் உலகமயமாக்கல் வருகிறது. அதன் பாதிப்பு வெகு விரைவாகவே தொழிற்சாலைகளுக்குள் ஆபத்தினை உண்டாக்குகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் 10 இயந்திரம் இருப்பின் 10 வேலையாட்கள்  இருப்பார்கள். ஆனால் வளர்ச்சியால்10 இயந்திரங்களை இயக்க ஒன்றிரண்டுபேர் போதுமானதாக இருக்கிறது. மீதி ஆட்கள் விருப்ப ஓய்வு கட்டாய ஓய்வு எனும் பெயர்களில் வெளியேற்றம் நிகழ்கிறது. தனிமனித தேவையும் திறமையும் பலனற்றுப்போகிறது. வெளியேறிய சிலர் வேறுவேறு தொழில் செய்து பிழைக்கிறார்கள். சிலரோ மன அழுத்தத்தால் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிட, காலப்போக்கில் மதுவே உணவாக மாற்றம்கொள்ள அவர்களது குடும்பம் பெரும் சிக்கலுக்குள்ளாகிறது.

நண்பர் ரகுபதி மிகத் தேர்ந்த எலக்ட்ரீசன். அவரும் ஆட்குறைப்பிற்கு ஆளாகியது பெரும் அதிர்ச்சியானது.  நிர்வாகத்தின் நோக்கத்திற்கு திறமை, திறமையின்மை என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்களது நோக்கத்தில் வெற்றிகொள்வது மட்டுமே அவர்களுக்கு இலட்சியம். பாதிப்பிற்கு உள்ளான நண்பர் பெரும் குடிகாரராக மாறினார். அப்படி மாறியிருக்கத் தேவையில்லைதான். அவரைத் தேடி ஓசூரில் சிறுதொழில் நடத்தும் முதலாளிகள் அலைந்துகொண்டே இருப்பார்கள்.  எவ்வளவு போதையில் இருந்தாலும் டெஸ்ட்டரை கையில் பிடித்தால் பிதாமகனாகிவிடுவார். பிரச்சினை சரிசெய்யப்பட்டதும் மீண்டும் போதை மனநிலைக்குத் தயாராகிவிடுவார். ஒரே மாதிரியான சுழற்சி, பாதுகாப்பான வேலை என்ற மனநிலையில் பெரும் கட்டத்தை நமக்கு நாமே போட்டுக்கொள்வதால் சூழல் மாற்றம் கொள்ள புதிய சூழலுக்கு தன்னை தகவமைக்காமல் நொடிந்து போகிறார்கள் பெரும்பாலானோர். வீதியில் டீக்கடை, கபாப் கடை, வடை போண்டா கடையென எதையாவது செய்து வாழ்வை மீட்டெடுக்கும் தொழிலாளிகள் ஓசூரில் நிறைய்ய உண்டு. ரகுபதி போன்று சிக்கிச் சிதைந்த தொழிலாளிகளும் நிறைய்ய...

பனி முடிய வீட்டிற்கு செல்லும்போது ஏதாவது மூலையில் யாராவது வீழ்ந்து கிடக்க மனம் பதற்றம் கொள்ளத் தொடங்கிவிடும் ஐய்யோ ரகுபதியாக இருக்கக் கூடாதென. நிறைய்ய நாட்கள் அப்படி கிடந்திருக்கிறார். தூக்கி சென்று வீட்டில் விட்டிருக்கோம். நம்பிக்கையூட்டும் சின்னஞ்சிறு நீர்த்துளி கூடவா இவரது வாழ்வில் இல்லாது வறண்டபோயிருக்குமென தூக்கம்கெட்டு யோசித்து கிடந்ததுண்டு. ஓசூரில் தொழிலாளிகள் ஆளுமைகளோடு இருந்த காலங்களில் தொழிற்சங்கக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்ததுண்டு. பெரும் வெற்றிகளையும் நியாயங்களையும் அடைந்ததுண்டு. ஆனால் நடப்பு காலங்களில் தொழிற்சங்கம் பெரும் சவாலை சந்திக்கிறது. கோரிக்கைகளை வைத்து போராடி வெற்றி கொள்வது என்பது பெரும் கனவாகிவிட்டது. தற்சமயம் நிர்வாகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்து ஒன்றிரண்டு பலன்களை மட்டுமே அடைய முடிகிறது. நிர்வாகம் அழித்து அழித்து போடும் கோடுகளில் வரிசை குலையாது ஒழுங்காக நடக்கவைக்கும் வேலையை தொழிற்சங்கள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் அவலம்தான். எல்லாவற்றிற்குமான நியாயங்கள் கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மே-1ம் மிட்டாய் சப்பும் சம்பிராதய தினமாக மாறிக்கொண்டிருக்கிறது.

நன்றி: மலைகள். காம்

Tuesday, December 3, 2013

நன்றி: உயிர் எழுத்து

கிளி பச்சை நிற தேவதை

பார்வையிடுவோரின் நினைவில்
இலைகளை உதிர்த்து
ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன
மரக்கட்டைகள் உயிரற்று
வேலிகளாக குரோட்டன்ஸ் சூழ்ந்திருக்க
நிலத்தையும் தங்களோடு சேர்த்து
விளையாடிக் கொண்டிருந்தனர்
பெரும் சப்தத்தால்
எல்லோரையும் சூழச் செய்தவள்
கண்களை இறுக மூடச்சொல்லி
கிளிபச்சை நிற தேவதையானாள்
தன் புன்னகையால் வசீகரித்து
தேவைகளை கேட்டறிந்தவள்
சொற்களை பிறப்பித்து பொம்மைகளாக்கி
கையளித்து மறைந்தாள்
அவரவர்களும் தன் பொம்மைகளோடு
உரையாடியபடியே கலைந்தனர்...

நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்

பாட்டியிள் வீடு சென்று
பூப்போட்ட பம்பரம் எடுத்து வரவும்
சின்ன தாத்தா தோட்டத்தில்
மர உச்சியமர்ந்து கொய்யா தின்றிட
ஐந்து - சீ-யில் படிக்கும்
ஆனந்தை கிள்ளி வைக்க
ஹெட்மிஸ் வீடு அடைந்து
தலை வீங்க கொட்டு இட
குளத்தங்கரை செல்லியம்மன்
தலையிலிருக்கும் சிகப்புக் கல் தோண்ட
விளையாட தர மறுக்கும்
மூன்று - பி- அருணாவின்
கார் பொம்மையை காணாமலடிக்க
நட்சத்திரம் ஒன்றை பிடித்து
அறையுள் ஒளித்து வைக்கவென
பட்டியலிட்டபடியே இருந்தாள்
உடலில் முளைத்த சிறகுகளுக்கு
முத்தமிட்டபடி...

பூ அரவம்

புதர் நிறைந்த காடொன்றை
செப்பணிட்டுக் கொன்றிருந்தவர்கள்
விடுகதைகளுக்கு விடையை தேடி
களைப்பகற்றிக் கொண்டிருந்தனர்
அய்யோ அரவமென அலறியவனின் திசைநோக்க
வெண்ணிறத்தில் நீண்ட உடலை மடக்கி
தலை தூக்கி நின்றது
அடித்திடலாமா விட்டுடலாமாவென்ற
விவாதங்கள் நிகழ்ந்தபடி இருக்க
பாம்பு தன் வாயிலிருந்து
பூக்களை உதிர்த்தது
பணிந்து கலைந்தனர்
கனவை கேட்டவர்கள் களித்து
இனி நல்லகாலம் உனக்கென்றார்கள்...

மாயமுட்டை

கண்கள் திறப்புகொள்ள அதிர்ந்தேன்
எனதறையின் மூலையில்
சற்றே பெருத்த முட்டை
இடும் விலங்கினம் ஏதமற்றிருக்க
கல் விழுந்த குளமானேன்
பூனை ஒருபோதும் முட்டையிடாது
உலகறிந்த உண்மை
ஏற்கனவே வீட்டில் வளர்த்த
கோழியின் உருவம் உயிர்பெற்றது
அடிக்கடி சுத்தம் செய்ய
நீர் வறண்ட வீடானதால்
விற்று தொலைத்துவிட்டோம்
அறையின் கதகதப்பு
முட்டையிட ஏதவாக
இருக்கக் கூடுமென நினைத்த கணம்
ஆசனவாய் இலேசாக வலிக்கத் தொடங்கியது...

யாசகம்

கண்ணாடியிலிருந்து வெளிவந்த உருவம்
என்னைப்போலிருக்க நெருங்கினேன்
நீர்கொட்ட கலைந்த ஓவியமாக
உருவற்ற முகமாக இருக்கத் தயங்கினேன்
கைகளை இறுகப் பிடித்தது
காதலியின் முதல் தொடுதலை நினைவூட்ட
காய்ச்சல் ஏற்பட்டது உடலுக்கு
நடுங்கும் கைகளும் துடித்த உதடும்
எதையோ கேட்க முற்பட
தேவனானேன் நிவர்த்திக்க
திறப்பிற்கு வழியற்று
நிறைந்த மூத்திரப்பையின் வலியோடிருக்கிறேன்
அவசரமாக காட்சியாக்க வேண்டும்
விரைவில் உறங்கச் செல்லென யாசித்தது
கனவு..

நன்றி: உயிர் எழுத்து