Saturday, December 16, 2017

சம்பு புதுவிசை

என் கவிதை தொகுப்பிற்கு சம்பு புதுவிசையில் எழுதியது
ந.பெரியசாமியின்
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய வாசிப்பு மற்றும் சிறு அறிமுகக் குறிப்பு...
###
ந.பெரியசாமியின் நான்காவது தொகுப்பு இது. சுமார் 40 பக்கங்கள் அளவிலான இச்சிறிய தொகுப்பு முழுதும் நிறைந்திருப்பது குழந்தைகள். எல்லைகளற்று விரிந்து பரவும் அவர்களின் மன உலகம். அதில் அவர்களுக்கேயான புதிர்க்கனவுகள், குறுகுறுப்பு மற்றும் எதார்த்தத்தை குறுக்கீடு செய்கிற குழந்தை விருப்பங்கள் என இத்தொகுப்பு மிகுந்த அடர்த்தியாக வந்திருக்கிறது. குழந்தைகளின் ஒவ்வோர் அசைவையும் நாம் காண்பது நமது வளர்ந்த கண்களின் வழியாகவேதான் இருக்கிறது. இப்பொதுச்சமூகத்தின் பெரும்பகுதி வளர்ந்த கண்களின் வழியாகவேதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட வாழ்வு துரத்தும் நிலையற்ற ஓட்டத்திற்கும், இயந்திரத்தன மாக மாறிவிட்ட எல்லாவித உறவுநிலைகளின் முகமூடியை அணிந்து கொண்ட பிறகும் குழந்தைகளின் கண்கள் வழியாக இவ்வுலகைப் பார்ப்பது அரிதாகிப் போன ஒன்றுதானே? என்றும், எனினும் நம்மைச் சுற்றி குழந்தைகளின் பேருலகம் விரிந்து கிடக்கிறது. அவர்கள் குதூகலித்து விளையாடுகிறார்கள், சண்டையிடுகிறார்கள், ஏக்கங் கொள்கிறார்கள், அல்லலுறுகிறார்கள், அவர்களின் பிரபஞ்சம் வேறு த்வனியில் இயங்குகிறது. இந்த லௌகீக உலகின் எல்லைக்கு வெகு அப்பால் அவர்களது மின்மினிகள் பறக்கின்றன.
எல்லா விளையாட்டுக்ளும் முடிந்து வீடு திரும்பி அயர்ந்துறங்கும் குழந்தைகளின் கனவில் சதா ஒரு ரயில்வண்டி ஓடிக்கொண்டிருக்கி றது. ஒரு வினாடியும் அந்த ரயில் ஓய்வுக்கென நிற்பதில்லை. எந்த நிலையத்திலும் அதற்கு பச்சை, சிவப்பு விளக்குகள் கிடையாது. தண்டவாளத்திலிருந்து இறங்கி நிலத்தின் மீதும், நிலத்திலிருந்து விலகி நீரின் மீதும் பயணித்துக்கொண்டிருக்கிறது அந்த ரயில். எல்லா வண்ணக்கொடிகளையும் அசைத்தபடி உச்சபட்ச மகிழ்வில் நில்லாமல் அது போய்க்கொண்டிருக்கிறது, எவரின் கண்களுக்கும் புலப்படாமல்...
ந.பெரியசாமி அந்த ரயிலை அடையாளம் கண்டுகொள்கிறார். ரயிலும் அவரைக் கண்டுகொண்டு புன்னகைத்து ஸ்நேகிக்கிறது. பிறகு அவரின் குழந்தை ரயில் விளையாட்டு நொடியில் களைகட்டி விடுகிறது. ந.பெரியசாமி கவிதையின் சொற்களைக் கையில் வைத்துக்கொண்டு அந்த ரயிலை கவிதைக்குள் பிடித்துவிட கூடவே ஓடிச்செல்கிறார். இறுதிப் பெட்டியின் அரைஞாண் கயிற்றைப் பிடித்தும் விடுகிறார்.
இத்தொகுப்பு இரு விசயங்களைக் குறிப்பாக முன்வைக்கிறது. குழந்தைகளில் சித்திரங்களைப் படரவிடும்படியான கவிதைகளைக் கொண்ட இது குழந்தைகளுக்கானதல்ல. மாறாக, என்றோ கடந்து வந்துவிட்ட, நாம் கைமறதியாய் தவறவிட்ட அல்லது இப்போதும் காணத்தவறுகிற சிறுவர்களின் பேருலக அசைவுகளை நம்முன் விரித்துக்காட்டுகிறது. மற்றொன்று, மிக இயல்பாக மீண்டும் பின்னோக்கி குழந்தையாகக் கற்பிதம் கொள்ளும் மனநிலைக்கு நம்மை தகவமைக்கும் படியும் விழைகிறது.
நடப்பில் நிறைவேறாத ஏக்கங்களை தம் கற்பனையில் மாற்றை நிறுவி நிவர்த்திக்க முயலுகிறார்கள் குழந்தைகள். அந்த எண்ணங்களைக் கவிதையாக்கும்போது அறிவின் தடித்த மனம் குறுக்கிடாமல் கவனங்கொள்வது கடினம்தான். ந.பெரியசாமி தம் கவிமொழியை பிரத்யேகமாக இளகச்செய்து அந்த தடித்த மனதை எளிதில் கடக்கிறார். அதனாலேயே, இக்கவிதைகள் பெரிய எவ்வித முஸ்தீபுகளும் அற்று தொடங்கி இயல்பாக முடிவுறுகின்றன.
தனது விளையாட்டுக்காக ஒரு குழந்தையால் உருவாக்கப்பட்ட அலெக்ஸ் மரத்தை நம் தாவர வகைப்பாட்டியல் அறிவிற்குள் கண்டுணர இயலுமா? அம்மரத்தின் கீழமர்ந்து நிச்சலன மனதுடன் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறதே, இரு கைகள் நிறைய கல்லையும் மண்ணையும் அள்ளியள்ளி வீசிக்கொண்டிருக்கிறதே அது நம் பால்யமன்றி வேறென்ன? ஒரு மரத்திற்கு சடாரென அலெக்ஸ் மரம் எனப் பெயரிடுதலின் கபடமற்ற குழந்தைமையை ஒரு கவிதை சுட்டி நிற்பதை அப்போதுதானே நாம் உணரமுடியும்.
இந்தக் கவிதைகளின் உள்ளீடுகள் ந.பெரியசாமியின் கவிதை மனதை துலக்கம் கொள்ள ஏதுவாக இருக்கின்றன. அதிலிருந்து தனக்கான சிறு ஒளியை அவைகள் உருவாக்கிக் கொள்வதையும் காணமுடிகிறது.
எல்லாவற்றுக்கும் ஒரு துணை இருப்பதுபோல அசாதாரணக் கற்பனைதான் துணைவானம் என்பதும். வானிற்கு துணையாக இன்னொன்றை கற்பிதங்கொள்ள ஒரு கவிஞனுக்கு மொழியின் துணைமட்டும் போதாதுதானே. நிர்மலமான பாசங்கற்ற மனம்தான் அதைச் சாத்தியமாக்கம். அதனால்தான் இத்தொகுப்பின் கவிதை களில் குழந்தைகள் சதா காகிதத்தில் எதையாவது கிறுக்கி உருவங் கொடுக்கிறார்கள். அவர்களின் அருவி கொப்பளித்துக் கொட்டும் போது பூச்சிகள் நடுங்கத்தில் மரப்பொந்துகளில் அடைகின்றன. இக் குழந்தைகளின் சித்திரங்களுக்குள் ஒரு நீதி சதா ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடுகிறது. சாதாரணமாக அங்கு எழுதப்படும் சில தீர்ப்புகளினால் மட்டுமே அவர்கள் ஆற்றுப்படுத்தப் படுகிறார்கள்.
சிறிதான இத்தொகுப்பு குழந்தைகளின் சப்தத்தால் நிறைந்திருக்கிறது என்றோ கெட்டிப்பட்டுப்போன செவிக்குள்ளும் அச்சப்தம் ஒலிக்கிறது. புதிய அக்கறைகளுடன் சில கதவுகள் திறக்கப்படுகின்றன. ஏதாவ தொன்றை திறப்பதுதானே கவிதையின் சலனமும் கூட. அந்தச் சலனத்தை ந.பெரியசாமி இத்தொகுப்பில் கவனிக்கும்படி செய்திருக்கிறார்.
-தக்கை வெளியீடு, சேலம்.
தொடர்புக்கு : 9443479818

Tuesday, August 29, 2017

Siva Sankar SJ

nantri: Siva Sankar SJ
·
திராட்சையின் சாயலை விழுங்கியவன்
------------------------------------------------
(குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
ந.பெரியசாமி)
மாலைப் பொழுதொன்றில்
உரையாடலை துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை
இன்னொரு யானைதான்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
மற்றொரு குருவி
இந்த மரத்துக்கு
அதோ அந்த மரம்
அப்ப வானத்துக்கு..?
.......................................
மௌனித்திருந்தேன்
(பக்:20)
"நாம் குழந்தைகளை நம் உயரங்களுக்கு தூக்கிக் கொள்கிறோம்.ஒருபோதும் அவர்கள் உயரத்திற்கு குனிவதில்லை"
குட்டிமீன்கள் வரைந்து தள்ளும் ஒரு உலகம் பெரியசாமியின் வழியாக நம் கண்களை திறக்ககிறது.குட்டிமீன்கள்தான் நிறங்களின் கடவுளர்கள்.அந்த கைகளின் லாவகம் புது பிரபஞ்சத்தை உருவாக்க வல்லது.அதை அறிய நாம் குனிய வேண்டும்.தரையோடு தரையாக தவழவேண்டும்."பெரிசு" தவழ்ந்திருக்கிறார்.
என் வானத்தின் குட்டிமீன்கள் எனக்கு கற்று தந்தது ஏராளம்.அதுவோர் தனி மொழியுலகம்...
1)மூத்த நந்தன்- "மீதியை சாப்பிட்டுட்டு பாதியை வச்சிருக்கேன்பா " என்பான்.அம்மா ஒட்டகச்சிவிங்கி/ஜிராஃபி என சொல்லிக்குடுக்க இவன் ஒட்டாஃபி என்பான்.
2)மற்றொரு குட்டிமீன் ஆயிஷா -மழையோடு பேசுவாள்.காக்கைக்கும் பூனைக்கும் பெயர் சூட்டுவாள்
3)ஆமினா - சின்ன சொல்லில் பெரியவர்களை கேலிச்சித்திரமாய் தீட்டி விடுவாள்.
4)சின்ன நந்தன் உலகத்தையே குட்டியாய் மாற்றிவிட்டான் ..
குழந்தைகளிடம் கொடுக்கப்படும் தாள்கள் பாக்கியம் செய்தவை..அதன் எல்லைகளுக்கு வெளியேதான் கிடக்கிறோம் நாம்
தமிழ் சினிமாவின் அதிகப்பிரசங்கி குழந்தைகள் -செய்யப்படுபவை..அசலான குழந்தைகள் இதுபோன்ற கவிதைகளில்தான் உலவுகிறார்கள் குட்டிமீன்களாய்..
அந்த வானம் பூரிப்பூட்டுகிறது,வண்ணங்களை பொழிகிறது..பாடல்களை தூவுகிறது..
நாம் உயரங்களை குறைப்போம்..தவழ்வோம்..மீன்களாவோம்..
Child is the father of man. (Father..?/ Man.....?)
அன்பும் வாழ்த்தும் ந.பெரியசாமி
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
தக்கை வெளியீடு
விலை:30/-

Monday, August 28, 2017

Karl Max Ganapathy

1996 ம் வருடம். முதல் முறையாக வேலைக்கு சென்ற வெளியூர் ஓசூர். அந்த ஊருக்குச் சென்ற முதல் நாளின் குளிர் நிரம்பிய அந்தப் பேருந்து நிலையமும், எப்போதும் துவைக்காத சால்வையொன்றை போர்த்தியபடியே திரியும் உள்ளூர் மனிதர்களும் இன்னும் நினைவில் இருக்கிறார்கள். ஆறே மாதம்தான் இருக்க முடிந்தது என்னால். அந்த குறைந்த காலத்துக்குள் நிறைய நண்பர்கள். ஆதவன் தீட்சண்யா, போப்பு, பெரியசாமி, தங்கபாண்டி, தமிழன், பவித்ரன் குமார் இவையெல்லாம் இப்போதும் நினைவில் இருக்கும் பெயர்கள்.
எல்லாருமே இடதுசாரிகள். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். தொழிற்சங்கங்களில் பங்குபெறுபவர்கள். ஆதவன் மட்டும் தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இப்போதும் அதில் இருக்கிறார். தேவா என்ற ஒரு நண்பரின் கடையில்தான் மாலை நேரங்களில் நண்பர்கள் சந்திப்போம். நான் மிகவும் புதியவன் அவர்களுக்கு. ஆனால் ஒரு இனிய தோழமையை உணர்த்தும் நண்பர்களாக அனைவரும் இருந்தார்கள். எல்லாருக்கும் படிக்கும் பழக்கம் இருந்தது. அதிசயமாக எல்லா பேச்சிலர்களும் தங்களது அறைகளை சுத்தமாக வைத்திருப்பார்கள். நிறைய புத்தகங்கள் இருக்கும். அது குறித்த உரையாடலுக்கு பஞ்சமிருக்காது.
அப்போது நடந்த ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவை’ ஒட்டி ஆதவனின் கவிதைத் தொகுப்பு ஒன்றும், தோழர்கள் அனைவரின் ஒவ்வொரு கவிதைகள் அடங்கிய ஒரு தொகுப்பும் வெளியிடப்பட்டது. ‘பனியெனக் கவியும்’ என்பது அந்த தொகுப்பின் பெயர் என்று ஞாபகம். அதில் தான் எனது முதல் கவிதை வெளிவந்தது. பெரியசாமியின் கவிதை ஒன்றும் அதில் வந்தது.
எனது அந்த கவிதைக்குப் பிறகு கிட்டத்தட்ட பத்தொன்பது ஆண்டுகள் நான் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. எனது முதல் சிறுகதையை 2014 ன் இறுதியில் எழுதத் தொடங்கி 2015 ன் இறுதியில் பத்து கதைகளை எழுதி முடித்தேன். அதுதான் 2016 பெப்ருவரியில் தொகுப்பாக வெளிவந்த 'வருவதற்கு முன்பிருந்த வெயில்'. தமிழனின் கவிதை ஒன்றும் ‘பனியெனக் கவியும்’ தொகுப்பில் வெளி வந்திருந்தது. அதற்குப் பிறகு அவர் வேறு எதுவும் எழுதவில்லை போல. நண்பர்களில் பெரியசாமி மட்டும் விடாப்பிடியாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். கோபாலும் தான். ஆதவனையும் போப்பையும் இதில் சேர்க்க முடியாது. அவர்கள் ஏற்கனவே அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருந்தார்கள்.
பெரியசாமியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இப்போது வெளிவரும் ‘குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீல வானம்’. நதிச்சிறை, மதுவாகினி, தோட்டாக்கள் பாயும் வெளி ஆகியவை முந்தைய தொகுப்புகள். இந்த தொகுப்பு முழுக்கவும் குழந்தைகளைப் பற்றியும், குழந்தைமையைப் பற்றியும் பேசும் கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. ‘’குழந்தைகளை அவர்களின் பாட்டிலே விளையாடவிட்டு, அருகிலிருந்து பார்க்கும் ஒரு கவிஞனின் பார்வை இந்தத் தொகுப்பில் நிறைந்திருக்கின்றன’’ என்று நூலுக்கான முன்னுரையில் சொல்லியிருக்கிறார் கவிஞர் ரியாஸ் குரானா. உண்மைதான்.
பெரியசாமியின் கவிதையுலகம் அவரைப் போலவே மிகவும் எளிமையானது. கவிதை அது அடையக் கூடிய வீச்சின் எல்லைகளைப் பற்றிய எந்த பரபரப்பும் இல்லாத மெல்லிய உணர்வுகளை பேசுவதில் கவனம் குவிப்பவையாக இருக்கின்றன அவரது கவிதைகள். நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே ஆகிருதியாகவே இப்போதும் இருக்கிறார் அவர்.
தனி மனித வாழ்வு நிறுவனமயப்பட்ட அமைப்பு முறை ஒன்றில் ஆழமாக பிணைக்கப்பட்டிருக்கும் சூழலில், வெளிறிப்போய்க் கொண்டிருக்கும் குழந்தைமையின் இழப்பைக் குறித்து மென்மையான குரலில் பேசும் பல கவிதைகள் இதில் இருக்கின்றன. ‘இழந்த வாழ்வு அல்லது கைவிடப்பட்ட குழந்தைமை’ என்பதைப் பாட முயல்கையில் இயல்பான ‘இருமை’ ஒன்று கட்டமைந்துவிடுவதாகத் தோன்றுகிறது. அது இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை மாத்திரமல்ல, பெரியசாமியின் கவிமனதையே ஒரு சட்டகத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறது. அது கவிதையை ஒரு எல்லைக்குள் முடக்குகிறது.
குழந்தமை என்பது எல்லைகளற்ற சுதந்திரத்தின் குறியீடு. அதைக் கவிதையாக்குகிறபோது ஒரு பரந்த வெளிக்குள் வைத்து அதைக் கவிஞன் எவ்வாறு சொல்கிறான் என்பதும், குழந்தைமை ஒரு வன்முறை இயக்கத்தின் அபத்தக் கூறாக எங்ஙனம் உருமாற்றப்படுகிறது என்பதைச் சொல்வதிலும் இருக்கிறது கவிதையின் ரசவாதம். ஆனால் அதை நோக்கி நகராமல் விம்மலாக அல்லது ஏக்கமாக முடிகின்றன பல கவிதைகள்.
மொத்தமாக கவிதைகளைப் படிக்கையில் அவை நமது பால்யங்களை நோக்கி நம்மைத் திருப்புகிற, நாம் எளிமையாகக் கடந்து போகிற குழந்தைகளைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற உணர்வெழுச்சிக்குள் இழுத்து விடுகிற கவிதைகளாக இருக்கின்றன. அதிலுள்ள விசும்பல் தொனி, கவிதை புகாராக மாறுவதைத் தடுக்கிறது. அந்த தொனியின் மூலமே அது நம்மிடம் உரையாட முயல்கிறது. வீட்டை விட்டு வெளியேறுகையில் நமது காலைக் கட்டிக்கொண்டு நாம் வெளியேறுவதை மறுத்து அடம் பிடிக்கும் குழந்தையைப் போல.
Periyasamyக்கு எப்போதுமிருக்கும் எனது அன்பு!

Friday, August 4, 2017

-கணியன் பூங்குன்றன்



ஒரு பொருட் பன்மொழி
-கணியன் பூங்குன்றன்
குழந்தைகளின் உலகம் என்கிற ஒற்றைக் குவிமையத்தை தேர்ந்து கொண்டு, சிறிதும் பெரிதுமான கோடுகளால் வெவ்வேறு சாயல்களில் வரையப்பட்டிருக்கும் விதவிதமான சித்திரங்களின் தொகை இது. வளர்ந்து பெரியவர்களாகி இந்த உலகத்திற்கு தகுந்தாற்போல, தங்களைப் பொருத்திக் கொள்ள கற்பதற்கு முன்பாக, குழந்தைகள் தங்களின் களங்கமற்ற வசீகரத்தோடு தம்போக்கில் உலவித் திரிகின்றனர். அப்பருவத்தில் அவர்கள் கொள்ளும் பரபரப்பு, ஆனந்தம், வினோதம், கற்பனை, கனவு முதலியன அவற்றின் இயல்பு எளிமை காரணமாக எல்லோரையும் ஈர்த்து நிறுத்தும் தன்மையுடையது. அத்தகைய தருணங்கள் பலவற்றை தனது வார்த்தைகளால் ஒற்றியெடுத்து, ஒவ்வொன்றையும் ஒரு கவிதையாக ஆக்கிப் பார்த்திருக்கிறார் பெரியசாமி. உலகப் புகழ்பெற்ற ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை அதன் ஆசிரியர் ‘முன்பு ஒரு காலத்தின் குழந்தைகளாக இருந்த பெரியவர்களுக்கு’ சமர்பணம் செய்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு பெரியவரின் நோக்கிலிருந்து எழுதப்பட்டவை எனலாம் இக்கவிதைகளை. மொழியின் இலக்கணத்திற்கு தன் கற்பனைகளை ஒப்புக்கொடுக்கத் தொடங்கும் கணத்திலிருந்து தான் ஒரு குழந்தை, தனது குழந்தமையிலிருந்து வெளியேறத் தொடங்குகிறது எனலாம். குழந்தைகளினுடைய அன்றாடத்தனத்திலிருந்து உருவாகும் கவித்துவம் என்பது பெரும்பாலும் அதனுடைய மொழி வழுவலிலிருந்து பிறப்பதுவே. சொற்களின் கண்ணாடித் தடுப்பை ஊடுருவிப் போனால் மாத்திரமே அதன் முழுவனப்பையும் கொண்டுவர முடியும். பெரியசாமி அதற்காக ஒரு தூண்டில்காரனின் பொறுமையோடுக் காத்திருக்கப் பழகுவாரெனில், நெளிந்தோடும் நீலவானத்தில் குட்டிமீன்களோடு சில நட்சத்திர மீன்களையும் பிடிக்கக்கூடும்.
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் – ந. பெரியசாமி – தக்கை, 15, திரு.வி.க.சாலை, அம்மாபேட்டை, சேலம்-3. பக்.40 ; விலை.ரூ.30.

Wednesday, July 26, 2017

Vasu Devan

ந. பெரியசாமியின் ”குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்” என்ற தொகுப்பு குழந்தைகளின் உலகம். கருவறை முதல் யோனி வாயிலில் ஜனிக்கும் குழந்தைகள் பெரியசாமியின் கவிதைகளில் தஞ்சமடைய குதூகூலத்துடன் குதிக்கிறது..மழலைகளின் ஒவ்வொரு அங்க அசைவையும் துல்லியமாக கவனித்து கவிதைகளை குழந்தைகள் பார்வையில் எழுதியுள்ளியுள்ளார். இந்தக் கவிதைகள் வாசித்து உள்வாங்குபவர்கள் குழந்தைகளே ஆசான்கள் என்பதை உணர்வார்கள்…அன்பையும், எல்லையில்லா கருணையையும் குழந்தைகள் மேல் பொழிந்து முத்தமிடுகிறார்…
இரண்டு கவிதைகள்.
(1) இறுக மூடினான்
முன்பின் கதவுகளை.
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை.
துவட்டிக் கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்.
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்.
சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை.
(2) குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்
பாட்டியின் கதை மோதிரத்தை.

பாவண்ணன்

உங்கள் நூலகம் இதழில்
பாவண்ணன் எழுதிய மதிப்புரை...
கவிதைத்தேரின் பவனி
பெரியசாமியின் ‘குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’
பாவண்ணன்
”பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு
வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா, இது அலெக்ஸ் மரம் என்றான்
சரிசெய்யும் பதற்றத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என் பெயர்தான்”
இந்தக் கவிதையில் வெளிப்படும் என் என்கிற தன்னுணர்வில் தெறிக்கும் குழந்தைமை ஒரு முக்கியமான அனுபவம். நான் என்னும் தன்னுணர்வோடு ஆட்காட்டி விரலால் தன் நெஞ்சைத் தொட்டு தன்னால் உருவாக்கப்பட்டதற்கு உரிமை கொண்டாடும் ஒரு குழந்தையின் கூற்று ஒரே தருணத்தில் புன்னகையையும் சிந்தனையையும் தூண்டிவிடுகின்றன. தினசரி வாழ்க்கையில் சாதாரணமாக நம் கவனத்திலிருந்து முற்றிலும் நழுவியோட வாய்ப்புள்ள ஒரு அனுபவம் என்றே இதைச் சொல்லவேண்டும். ஆனால் பெரியசாமியின் கவிதைக்கண்கள் சரியான தருணத்தில் அதைத் தொட்டு மீண்டு வருகின்றன. நான், எனது என்பவை மானுடத்தின் அடிப்படை உணர்வுகள். இவ்வுணர்வுகள் வழியாகவே ஓர் உயிர் தன் அகத்தைக் கட்டமைக்க முற்படுகிறது. வாழ்க்கையில் அது ஒரு கட்டம். இறுதியாக ஒரு கட்டமும் உள்ளது. இறுகப் பற்றி வாழும் இவ்வுணர்வுகளை தானாகவே கரைந்துபோகச் செய்யும் கட்டம். கடற்கரையில் கட்டியெழுப்பப்பட்ட மணல்வீட்டை அலைகள் கரைப்பதுபோல கரைந்துபோக அனுமதிக்கும் கட்டம். கவிதையை வாசித்து முடிக்கும் கணத்தில் இந்த முனையிலிருந்து அந்த முனைவரைக்கும் மனம் மானசிகமாக ஒரு பயணத்தை நிகழ்த்தி முடித்து, மீண்டும் தொடங்கிய புள்ளிக்கு வந்து நின்றுவிடுகிறது. நினைவின் வழியாக நிகழும் இந்த அனுபவமே இந்தக் கவிதையின் அனுபவம். இது பெரியசாமி என்னும் கவிஞர் நாம் மூழ்கித் திளைப்பதற்காகவே கட்டியெழுப்பியிருக்கும் பேருலகம்.
பெரியசாமியின் கவிதைகள் காட்சிகளால் நிறைந்தவை. வனவிலங்குகளைப் படமெடுப்பதற்காக கூரிய புலனுணர்வுடன் காத்திருக்கும் புகைப்படக் கலைஞர்களைப்போல குழந்தைகளின் சொற்கள் அல்லது செயல்கள் வழியாக நிகழும் அற்புதத்துக்காக அவர் விழிகள் ஒவ்வொரு கணமும் காத்திருக்கின்றன. இந்தப் பொறுமை, அவர் காட்சிப்படுத்தும் கவிதைகளுக்கு ஒருவித தனித்தன்மையை வழங்குகின்றன.
மாலைப் பொழுதொன்றில்
உரையாடலைத் துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை
இன்னொரு யானைதான்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
மற்றொரு குருவி
இந்த மரத்துக்கு
அதோ, அந்த மரம்
அப்ப வானத்துக்கு?
மெளனித்திருந்தேன்
அன்றுதான் ஒரு தாளில் வரைந்து அனுப்பினாள்
துணை வானம் ஒன்றையும்
ஒரு நிலா ஒரு சூரியன்
நிறைய நட்சத்திரங்களையும்
யாவரும் கண்டுகொண்டிருப்பது
அவள் அனுப்பிய துணைகளைத்தான்
வானத்துக்கும் சூரியனுக்கும் நிலவுக்கும் துணை வேண்டுமேயென கவலைப்படும் குழந்தைமையோடு இரண்டறக் கலந்திருக்கும் கவிதையனுபவத்தை மகத்துவமானதென்றே சொல்லவேண்டும். பெரிய பெரிய படிமங்களாலும் தர்க்கங்களாலும் கட்டியெழுப்ப முடியாத வினோதமான அனுபவத்தை மிக எளிய சொற்களால் ஒரு காட்சியின் வழியாக முன்வைத்துவிடுகிறார் பெரியசாமி. இதுவே அவருடைய கவித்துவம்.
எண்ணற்ற குழந்தைச் சித்திரங்களை பெரியசாமி தன் கவிதைகளிடைய தீட்டி வைத்திருக்கிறார். அக்குழந்தைகளின் ஏக்கங்களுக்கும் கனவுகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் விளையாட்டுகளுக்கும் புதுப்புது வண்ணங்களைக் குழைத்து பளிச்சிட வைக்கிறார்.
இத்தொகுதியின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று மழையின் பசியாற்றியவர்கள்.
மழையின் பசியாற்றினோம்
ஆவல் பீறிடக் கூறினேன்
நட்சத்திரங்களாகக் கூரையில் மின்னும்
துளிகளிடமிருந்து மீண்டு
பரிகாசமாகச் சிரித்தவனின்
கரம்பற்றி அழைத்துச் சென்றேன்
என் துளிர்த்த காலத்திற்கு
உத்தி பிரித்து விளையாடிய காலையில்
சிறுசிறு தூறல்களும் உடனாட
மழைக்குப் பசிக்குமென
கொட்டாங்கச்சியில் தட்டி வைத்தோம்
சுடச்சுட இட்லிகளை
கரைத்து விழுங்கின் தெம்பாய்
ஊரைச் சுத்தம் செய்தோடியது
மழை
குழந்தையின் சொற்கள் அசலான குழந்தைமையோடு வெளிப்படும்போது, இயற்கையாகவே அதில் கவித்துவம் நிறைந்துவிடுகிறது. தனக்குப் பசிப்பதைப்போல மழைக்கும் பசிக்குமென ஒரு குழந்தையால் மட்டுமே யோசிக்கமுடியும். எவ்விதமான தயக்கமும் இல்லாமல் மழையின் முன் உணவை நீட்டியளிக்க ஒரு குழந்தையால் மட்டுமே முடியும். உள்ளார்ந்த அன்போடும் பரிவோடும் மண்கட்டியை இட்லி என்று சொல்லி ஒரு குழந்தையால் மட்டுமே அடுத்தவருக்கு அளிக்கமுடியும். மண்ணின் பசியையும் தாகத்தையும் மழை பொழிந்து தணிக்கிறதென்பதுதான் நம்பிக்கை. இக்கவிதையில் மழைக்கே பசிக்கிறது என்று நம்புகிறது ஒரு குழந்தை. அந்தப் பசியைத் தணிக்க தன் கைகளால் உணவை வழங்கி மனம் களிக்கிறது.
சித்திரம் தீட்டுதல் பெரியசாமியின் கவிதைகளில் திரும்பத்திரும்ப வரும் செயல்பாடு. குழந்தைளின் பிஞ்சு விரல்களின் கோணல்மாணலான கிறுக்கல்களால் நிறைந்த சித்திரங்களே அவை. குழந்தைமையின் தொனியோடு அக்கோடுகள் இணையும்போது அவை அழகான கவிதைகளாகிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக பிரம்ம அவதாரம் என்னும் கவிதையைச் சொல்லலாம். எவ்விதமான விளக்கங்களும் தேவையற்ற நேரிடையான கவிதை.
முட்டைகள் நான்கிட்டு
அடைகாத்தான்
அது நான்கு வானங்களைப்
பிறப்பித்தது
வெக்கை மிகும் பொழுதுகளில்
மழை பொழிவிக்க
ஊற்றும் மழையால்
வெளி நடுங்கும் காலங்களில்
வெயிலடிக்க
அப்பிய இருளோடு உலகிருக்க
நிலவு முளைக்க
சகஜீவராசிகள் பனியில் சுருங்கிக் கிடக்க்க
கதகதப்பூட்டவென
வேலைகளைப் பங்கிட்டுக் கொடுத்து
வேறு முட்டையிட தயாரானான்.
பிஞ்சுக்குழந்தை கட்டளையிடும் இடத்தில் நின்றுகொள்ள, அதை மனமார ஏற்றுப் பணிந்து கடமையாற்றும் இடத்தில் நின்றிருக்கிறது வானம். ஆகிருதிகள் முக்கியமிழந்து கற்பனையும் குழந்தைமையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தச் சித்திரம் தீட்டும் விருப்பம் பவனி என்னும் கவிதையில் வேறொரு விதமாக வெளிப்படுகிறது.
தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாகக் கூறிச் சென்றான்
வர்ணங்களைச் சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவரப் பணித்தான்
மகாபாரதம் தொடரில் கண்ணுற்ற
ரதம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான்
ஒளிர்வில் வீடு மீனுங்க
நின்றது பேரழகோடு
மற்றொரு நாளில்
புரவிகளை உயிர்ப்பித்துப் பூட்டினான்
அதிசயித்து ஊர்நோக்க
வானில்
பவனி வந்தான்
இது குழந்தையின் ரதம். குழந்தை பூட்டிய குதிரை. குழந்தையின் பவனி. கண்ணும் கற்பனையும் நிறைந்தவர்களுக்கு மட்டுமே இந்த பவனியின் தரிசனம். பெரியசாமியின் கவிதைப்பயணத்தை மறைமுகமாகக் குறிப்பிட இக்கவிதை பெரிதும் உதவக்கூடும். அதுவும் ஒருவகை பவனி.
ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது பெரியசாமியின் கவிதைகள் குழந்தைகளின் பார்வை வழியாக உலகத்தைப் பார்க்க முனையும் விழைவுள்ளவை. அவை தர்க்கமற்றவை. ஒருங்கிணைவற்றவை. எவ்விதமான உள்நோக்கமும் இல்லாதவை. அபூர்வமான தருணங்களில் கவிதானுபவமாக மாறக்கூடிய ஆற்றலையும் கொண்டிருப்பவை.
(குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம். கவிதைகள். ந.பெரியசாமி. தக்கை வெளியீடு. 15, திரு.வி.க.சாலை, அம்மாப்பேட்டை, சேலம்-7. விலை.ரூ.30)

விநோதினி

அண்மையில் #குட்டி_மீன்கள்_நெளிந்தோடும்_நீலவானம்எனும் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. தொகுப்பு முழுவதும் மழலைமையை இரசித்துச் செதுக்கிய கவிதைகள்.
"துணை வானம்" எனும் தலைப்பிலமைந்த கவிதையில் யானைக்கு யானை துணை, குருவிக்குக் குருவி துணை என்பது போன்ற வாழ்வியல் எதார்த்தங்களைக் கவனிக்குத் தொடங்கும் குழந்தை, வானத்துக்குத் துணையேதென்று வெற்றுத் தாளில் வானமொன்றை வரைந்து துணைக்கனுப்பி வைக்கிறது.
"பாம்புகள் பாம்புகளாயின" எனும் தலைப்பிலமைந்த கவிதையில், கார்டூன் படங்களில் பொம்மைகளை உயிர்ப்பித்து விளையாடிவிட்டு மீண்டும் பொம்மையாக்கி விடுதல் போல, தென்னங்கீற்றுகளில் செய்த பாம்புகளை உயிர்ப்பித்திருக்கிறார்.
"புதைந்த குரல்களி"ன் கீழே, குழந்தைகளின் நுண்ணுணர்தல் திறனைச் சரியாகப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
வெற்றுத் தாளை வனமாக்கியவன்
*******************************
முயற்சியால் வெற்றி கொண்டான்
மேகங்கள் உருவாகியிருந்தன
வேடர்களுக்குச் சிக்காத
பறவைகளை மிதக்கச் செய்தான்
புற்களை உருவாக்கி
மரங்களை வளர்த்து
வீடொன்றைக் கட்டினான்
வெளிச்சம் வேண்டி
நிலவைப் பிறப்பித்தான்
நிறைவுகொள்ள
வேறு தாளை எடுத்து
நதியை உருவாக்கத் துவங்கினான்
சனியன்
சதா கிறுக்கிக்கிட்டே இருக்கு
அப்பாவின் குரல் கேட்டு அதிர்ந்தான்
ஒரு நதி
துவக்கத்திலேயே வறண்டது..
*************************
இக்கவிதையில் வெளிச்சத்திற்கென நிலவைப் பிறப்பிப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, கவிஞருக்கும் நல்ல கருணையுள்ள மனம் தான் வாய்க்கப்பட்டிருக்கிறது. நானாகவிருந்தால், சந்தேகமே வேண்டாம் கண்டிப்பாகச் சூரியனைத் தான் வரைந்திருப்பேன். தவிர, குழந்தைகளின் கற்பனைத் திறனைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டுமேயன்றித் தடை போடுதல் தவறென்ற பொதுநல நோக்கும் உள்ளது.
இவை மட்டுமல்ல, இது போன்று நிறையக் கவிதைகள் இருக்கின்றன. தொகுப்பில் பெரும்பான்மையாகச் செய்தான், வரைந்தான் என்பது போன்று சுட்டியதிலிருந்து கவிதைகளுக்குப் பின்னணி இசைப்பது ஒரு அவன் தான் என்பதும் தெளிவாகிறது.
வாழ்த்துகள் அண்ணா.

பாலா கருப்பசாமி

பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும் என்று யேசு சொன்னார். ஜே.கே. அறிந்ததினின்றும் விடுதலையென்றார். இரண்டும் ஒன்றுதான். இருப்பதிலேயே கடினமானது எளிமையைக் கண்டடைவதுதான். காற்றில் நடனமிடும் இலையை பற்றும்போது நடனம் மட்டும் சிக்குவதில்லை என்கிறார் தேவதச்சன். மழை இலைமீது தாளமிடுகிறது. இலை என்ன செய்கிறது எனக் கேட்கிறார் நகுலன். இரண்டும் ஒன்றேதான். இலையா காற்றா மழையா எனப் பிரித்தறியமுடியாதபடி அது நிகழ்கிறது. அந்த நிகழ்வைப் பிடிப்பதுதான் கவிஞனின் சவால்.
ந. பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் குழந்தைகளின் உலகைத் தொடும் ஒரு முயற்சி. குழந்தைகள் குறித்தான கவிதைகளில் எழுதுபவர் யார் என்பது பெரிய கேள்வியாய் வந்து நிற்கிறது. எழுதுபவன் மறைந்துபோய், அந்த உலகத்தோடு கரையும் இடங்களில் மட்டுமே அது கவிதையாக முடியும். இந்தத் தொகுப்பில் 34 கவிதைகள் உள்ளன. இதில் நான்கு கவிதைகள் மட்டுமே சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. கவிதை நெகிழ்ந்து குழந்தைகளின் உலகைத்தொடும் அனுபவம் இதில் கைகூடியிருக்கிறது. இந்த எண்ணிக்கையை நான் ஒரு குறையாகப் பார்க்கவில்லை. குழந்தைகள் குறித்தான கவிதைகள் மிகச் சிரமமானவை.
மழையின் பசியாற்றியவர்கள்
மழையின் பசியாற்றினோம்
ஆவல் பீறிடக் கூறினேன்
நட்சத்திரங்களாகக் கூரையில் மின்னும்
துளிகளிடமிருந்து மீண்டு.
பரிகாசமாகச் சிரித்தவனின்
கரம்பற்றி அழைத்துச் சென்றேன்
என் துளிர்த்த காலத்திற்கு.
உத்தி பிரித்து விளையாடிய காலையில்
சிறுசிறு தூறல்களும் உடனாட
மழைக்குப் பசிக்குமென
கொட்டாங்குச்சியில் தட்டி வைத்தோம்
சுடச்சுட இட்லிகளை.
கரைத்து விழுங்கி தெம்பாய்
ஊரைச் சுத்தம் செய்தோடியது
மழை.
அதேபோல், எளியவர் என் கடவுள் என்ற கவிதையையும் குறிப்பிடவேண்டும். முழங்காலளவே இருக்கும் மகளைக் குளிப்பாட்டும் ஒவ்வொரு நாளும் ஒரு கோவில் செப்புச்சிலையை, தாய் தெய்வத்தைத் தொடுவதாகவே ஒரு உணர்வை அடைவேன். பாதங்களின் மேல் சோப்போ மஞ்சளோ போடும்போது சமயங்களில் கண்ணீர்கூட வந்துவிடும். இத்தகு உணர்வை இந்தக்கவிதை அளித்தது 'வடை தூக்கும் காக்கைக் கதையில்/உறக்கம் கொள்ளும்/என் கடவுள் எளியவர். / நெற்றியில் பூசும் திருநீறுக்கே/ மலையேற்றம் கொள்ளும் / என் குடிசாமி போல"
வாஞ்சையின் கடும் ஈரம், புதைந்த குரல்கள் ஆகிய இரண்டு கவிதைகளும்கூட முக்கியமானவை. ந. பெரியசாமிக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

அ. ராமசாமி

அ. ராமசாமி
குழந்தைகள் குளியல்போடும் மழையின் தோட்டம்.
========================================
சொல்வோருக்கும் கேட்போருக்குமிடையே உருவான - உருவாகக்கூடிய வாழ்வின் சம்பவங்கள், கவிதையின் சம்பவங்களாதலே பெரும்பான்மையான கவிதைகளின் வெளிப்பாடு. நிகழ்காலக் கவிதைகள் உருவானதை முன் வைப்பதைவிட, உருவாகக் கூடியதைப் பற்றிய நினைப்புகளையே அதிகம் எழுதிக்காட்டுகின்றன. அந்தவகையில் அவை எதிர்காலக் கவிதைகள்.
எல்லாவகையான கவிதைகளிலும் அழைப்பின் வழியாகவே கவிதைச் செயல் நிகழ்கிறது. அந்த அழைப்பு உருவாக்கும் ரகசியத்திறப்பு கவிதையின் வாசிப்புத் தளத்தை உருவாக்கக்கூடியது. இந்தத் தன்னிலை இப்படியான தன்னிலைகளையே அழைக்கும் என்ற தேய்வழக்கில் வெளிப்படும் காதல் கவிதைகளும் புரட்சிக் கவிதைகளும் பல நேரங்களில் பாதிக் கிணறைத் தாண்டுவதில்லை.
அழைக்கும் தன்னிலை தனது இருப்பையும் அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு உச்சரிக்கும் சொல்திரட்டின்வழியாக வரையும் சித்திரங்கள் ஒருதடவைக்கும் கூடுதலாகவே வாசிக்கச் செய்யும். அழைக்கப்பட்ட தன்னிலையின் மீதான இருண்மை கவிதையின் நிகழ்வை இருண்மையாக்கிக் குழைத்துத் தீட்டப்படும் அடுக்கடுக்கான வண்ணச்சேர்க்கையாக நகரும்.
ந. பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் அழைக்கும் தன்னிலைக்கும் அழைக்கப்படும் முன்னிலைக்குமிடையேயான சம்பவங்களாக இல்லாமல் மூன்றாவதொன்றை முன்வைக்கும் - வரைந்துகாட்டும் சொற்கூட்டங்களாக இருக்கின்றன. வெளிப்படையான கருப்பொருளோடு- பின்னணிக்காட்சிகளோடு பலவித உணர்ச்சிகளைத் தேக்கிவைத்திருக்கும் குழந்தைகளை - குழந்தைமைத்தனங்களை எழுதிக்காட்டும் கவிதைகளைத் தந்துள்ளார் .மழை, வானம், தோட்டம், காற்று என வெளிப்படையாகத் தெரியும் பரப்பைக் கவிதை விரிப்பதால் இருண்மை குறைந்து எளிமையின் அருகில் அழைத்துச் செல்கின்றன. குழந்தைகளைப் பற்றிய கவிதைத் தொகுப்பாக வந்திருக்கும் ந.பெரியசாமியின் தொகுப்பிலிருந்து ஒரு கவிதைமட்டும் இங்கே.
=============================================
அதன் தலைப்பு: வெளியே மழை பெய்கிறது
----------------------------------------------
கொசகொசவெனக் கட்டடங்கள் வரைந்து
சிறுசிறு புள்ளிகளை அடைத்து
பூச்சிகளின் வீடென்றாள்
கோடுகளை அடுக்கி
குட்டிகுட்டியாய் பொந்து வைத்து
எலி வீடென்றாள்
பெரிதாய் சதுரமிட்டு
தடுப்புகளில் அடுக்கி
பொம்மை வீடென்றாள்.
உயரமாக மரம் வளர்த்து
கூடொன்றை நெய்து
குருவி வீடொன்றாள்.
வேகமாக ஓடியவளை
தொடர்ந்து நகர்ந்தன.
வெளியே
மழை பெய்தது.

மீன்கள் பறக்கும் வானம்

மீன்கள் பறக்கும் வானம்

- ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து

( நான்காவது கோணம் - ஏப்ரல் மாத இதழில் வெளியானது )




கவிதை மனநிலையின் மைய இழைகளை எப்போதும் சில கண்ணிகள் இணைத்தபடியே இருக்கும். அந்தக் கண்ணிகளின் வடிவங்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பன. நம் காலத்தில் அது ஒரு குழந்தையாகவும் நிற்கிறது.

பொதுவாகவே நாம் நம் குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்ப்பதில்லை. நம் கனவுகளின் ஒட்டுமொத்த உருவமாக, நமது எதிர்காலத்துக்கான முதலீடாக, உற்பத்திக்காரர்களாக, நமது கட்டளைகளுக்குக் கீழ் படிந்து நடக்கும் நம் சேவகர்களாக, பிராய்லர் கோழிகளாக என பல்வேறு வடிவங்களில் அவர்களைக் காணுகிறோம்.

கவிஞர் ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பு குழந்தைகளைக் குழந்தைகளாகக் கண்ட கவிதைகள். குழந்தைகளின் அழகியல் தருணங்களைப் பதிவு செய்த கவிதைகள் நிறைந்த ஒரு தொகுப்பு.

குழந்தைகளையும் அவர்களின் குழந்தைமையையும் இழக்கத் துவங்கும் பருவம் ஒன்றுண்டு. அது அவர்கள் பள்ளிக்குச் செல்லும் பருவம். அரசுப்பள்ளிகளில் கூட பெரிய ஆபத்தில்லை. அங்கெல்லாம் இன்னும் ஓட்டாங்கரம் , கபடி, கோ கோ, நொண்டி என இணைந்து விளையாடுகிறார்கள். காக்காக் கடி கடித்து ஒரே மாங்காயைப் பகிர்ந்துண்ணுகிறார்கள்.. ஆனால் இந்தத் தனியார் பள்ளி மாணவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்கள். ஆண்டொன்று ஆவதற்குள் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

பள்ளி வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தின்பண்டங்களையும் உணவையும் யாரிடமும் பகிராமல் கீழே மேலே சிந்தாமல் உண்ண வேண்டும், விளையாட்டெல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் அதுவும் கணினி முன் அல்லது அறைச்சுவர்களுக்குள் என படிப்படியாக சிறகுகளைக் கத்தரித்து நடக்கவும் ஓடவும் மட்டுமே பழக்கத் தொடங்கிவிடுகிறார்கள் பறக்கத் தெரிந்த பறவைகளை.

இப்படி பிராய்லர் கோழிகளாக, பலன்களுக்காக மட்டுமே லாப நோக்கில் வளர்த்தப்படும் குழந்தைகள் தங்களது குறும்புகளை, விளையாட்டுகளை, குழந்தைத் தருணங்களை என யாவற்றையும் இழந்து விடுவதில் என்ன பிழை நேரப்போகிறது.


பள்ளிக்கூடம்

அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாக சோப்பு வாங்க
பூனை மீது பழி போடுவாள்

விருந்தினரின் செருப்புகளை ஒளித்து
புறப்படுகையில் பரபரப்பூட்டி
நாயின் மீது சாட்டிடுவாள்

தேவைகளை வாங்கிக் கொள்ள
உறுதியளித்த பின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட்,வண்டி சாவிகளை

கொஞ்ச நாட்களாக 
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்

மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது
அவளை பள்ளிக்கு அனுப்பி

பள்ளிக்கூடங்கள் அப்பட்டமான வதைக்கூடங்களாகிவிட்டன என்பதற்கான நிகழ்கால சாட்சியாய் நிற்கிறதிந்தக் கவிதை.

குழந்தைகள் தங்கள் ஓவியங்களின் மூலம் உயிர்களைப் பிறப்பிக்கிறார்கள், இயற்கையை சிருஷ்டிக்கிறார்கள். அது கோணல் மாணலாக இருந்தாலும் ஒரு அழகுடன் இருக்கிறது. ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்குடன் அந்த ஓவியம் இருப்பதில்லை ஆகவே அது எக்காலத்துக்குமான நவீன ஓவியமாகிறது.அதன் புள்ளிகளில் , கோடுகளில், கிறுக்கல்களில் உயிர்ப்பானது ஓவியம் மட்டுமல்ல இந்தக் கவிதையும் கூட


அருவி

இறுக மூடினான்
முன்பின் கதவுகளை
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை
துவட்டிக்கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்

சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை 


இவரது கவிதைகளில் இருப்பதெல்லாம் குழந்தைத் தருணங்கள் தாம். அவை தரும் அனுபவங்கள் அந்தத்தக் கணத்துக்கான கொண்டாட்டங்கள். குழந்தைகள் நமது வானின் நட்சத்திரங்கள். நமது வானத்தை ஒளியூட்டி வருபவர்கள். அவர்களல்லாது நாம் ஒரு வானம் என்று யார் அடையாளப்படுத்துவது ? சொல்லப்போனால் அவர்களால் தான் நாம் வானமாக இருக்கிறோம் .

நட்சத்திரம்

நுழைந்ததும்
காத்திருந்தார் போல் இழுத்தான்
அறையுள் கலர்
கலராக நட்சத்திரங்கள்
அறிமுகப்படுத்துவதாக
நீண்ட பெயர்ப்பட்டியலை வாசித்தான்
வானில் இருத்தல் தானே 
அழகென்றேன்
எங்க டீச்சர் சொல்லிட்டாங்க
அதெல்லாம் கோள்களாம்
அப்போது பூமியிலிருந்து
ஒரு நட்சத்திரம்
வானுக்குத் தெரிகிறது

குழந்தைகளைக் கடவுளாக்கிக் கவிதையாக்குவது தொன்று தொட்டு நாம் செய்வது தான். அப்படியான கவிதைகளிலெல்லாம் குழந்தைகளின் சிறு செயல்களெல்லாம் வரங்களாக்கி படைப்புகளாக்கப்படும். ந.பெரியசாமியும் அதைச் செய்திருக்கிறார். கொஞ்சம் தனித்த தன்முத்திரையுடன்


எளியவர் என் கடவுள்

ஈரமாக்கியது நீதான்
குற்றச்சாட்டோடு எழுவார்

சமாதானம் கொள்வார்
எட்டணா சாக்லேட்டுக்கும்
மெனக்கிடாத பொய்களுக்கும்

சிறு அறைதான்
சிங்கம் உலாவ 
பெரும் வனமாகவும்
மீனாக துள்ளிட ஆறாகவும்

பூங்காக்களில் சறுக்கும் 
பலகை போதும்
புன்னகை சிறகு விரிக்க

வடை தூக்கும் 
காக்கைக் கதையில்
உறக்கம் கொள்ளும்
என் கடவுள் எளியவர்

நெற்றியில் பூசும் திருநீறுக்கே
மலையேற்றம் கொள்ளும்
என் குடிசாமி போல

கடைசி வரிகள் இதை ஒரு குழந்தைக் கவிதை என்று மட்டும் அடையாளப்படுத்தாமல் எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களது எளிய கடவுளின் வழியாகச் சொல்கிறது.


குழந்தைக் கவிதைகளின் தொகுப்பென்ற வகையில் இது வழக்கமான தொகுப்பு தான். ஆனால் இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகள் வழக்கமான கவிதைகள் அல்ல. இது நவீன பிள்ளைத் தமிழ். இவை குழந்தைகளை அறிவுறுத்தாத அச்சுறுத்தாத மொழியில் பேசுகிறது. மேலும், குழந்தைகளுக்கு மாறுவேடம் எல்லாம் போடாமலும், அவர்களைக் கடவுளாக்காமலும் இயல்பான குழந்தைமையைக் கவிதையாக்கியிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகம் ; நாம் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும், இந்தக் கவிதைகளையும்