Saturday, December 29, 2012

நன்றி: கலாப்ரியா

எனது முதல் தொகுப்பான நதிச்சிறைக்கு  கலாப்ரியா அவர்கள் எழுதிய கடிதம் நீண்ட நாள்களுக்குப்பின் கிடைத்த சந்தோசத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...

யார் சொன்னது உங்களுக்கு கொஞ்சம் வார்த்தைகளே தெரியும் என்று. முதிர்ச்சியான கவிதைகைளை நன்கு அனுபவம் முற்றிய மொழியில் கற்றுள்ளீர்கள். கவிதைகளும் பல தளங்களில் பயணம் செய்கின்றன.

இந்த நாய்க்குட்டி ஓசி- என சிறு குழந்தை வியாபார விளையாட்டு விளையாடுகிறது. தலைப்பு வேண்டுமானால் தேவையற்றதாகத் தோன்றினாலும் எளிமையான கவிதை. நிறைய்ய யோசிக்க வைக்கிறது.

குளத்தில் மீன்கள் பறக்கிறதென ஓடும் சிறுமிக்குப் பின் ஒரு பெரிய பரிணாம உண்மை இருக்கிறது தெரியுமா. உண்மையிலேயே பறவை மீனிலிருந்து உண்டானது தெரியுமா. குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய மாதிரி பறவைகள் மீன்களிலிருந்து உருவானவையாம். அதனால்தானோ என்னவோ இரண்டும் - ஒன்று நீரிலும், இன்னொன்று வானிலும்- நீந்துகின்றன.

ஆம், நாம் சூன்யம் குறித்து விவாதிக்கிறோம் பயன்பாடு பற்றிய பகிர்தல் மனுஷர்களிடையே கிடையாது. நேயம் என்பதை மறந்தவன்தான் மனிதன்.

விட்டு விட்டு நனைந்து
வேடிக்கை கதைபேசி - ஏன் உங்களுக்கு கவிதை பாஷை வராது என்று தோன்றியது எனத் தெரியவில்லை. அழகாய்க் கைவருகிறது கவிமொழி.
புதிது புதிதாய்ப் பிறக்கும்
கோலப் பெண்டுகளின்
காலைமுகம்
இன்று என்ன கோலம் போட்டிருப்பாள் எதிர்வீட்டு மதினி என்பதுதான் ஒவ்வொரு நாளும் அந்த அழகான எதிர்வீட்டு மதினி பற்றிய என் முதல்ப் பதிவாயிருக்கும். வெளித் தின்ணையில் படுத்துறங்கும் அந்த பால்ய நாட்களில். வாசல் தெளித்து கோலம்போட்டு தன் வீட்டுக்குள் நுழையும் முன் மீதித் தண்ணீரில் ஒரு கை எடுத்து அன்பாய்த் தெளித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கேலிப்புன்முறுவல் உதிர்த்துப் போவாள் அந்த மதினி. இல்லையென்றால் உள்ளங்காலில் ஒரு அன்பான அடி. அவள்தான் நினைவுக்கு வந்தாள் உங்கள் கவிதையை படிக்கிறபோது.

நேர்முகத் தேர்வுக்கோ, தேர்வுக்கோ போய்விட்டு வருகிறபோது அவள்தான் முதலில் ஆர்வமாய் விசாரித்துவிட்டு சாமி படத்தருகே போய் திருநீறு பூசிக்கொள்வாள். இந்த வேலை தம்பிக்கு கிடைக்கும் என்று. அவள் வீடு மாற்றிப்போன பின்னரே வேலை கிடைத்தது. இப்போது எங்கேயிருக்கிறாளோ "நானொரு குழந்தை நீயொரு குழந்தை" என்று கணவனுடன் பழைய சினிமாப் பாட்டுப்பாடிக் கொண்டு...

வானமும் புத்தகம் வாசிக்கும் மொட்டை மாடிக் காட்சி. காகம் எச்சமிட்டு மழை பெய்து கழுவுதல் என்பதுதான் சற்று நீளமான படிமமாக்கி விட்டது அனுபவம் வேறு மாதிரியும் - உண்மையிலேயும் - இருக்கலாம். ஆனால் நல்ல கவிதை.

'கற்க கசடற' - அருமையான செறிவான கவிதை. ஒண்ணாம் வகுப்பில் சேர தலையைச்சுற்றிக் - அல்லது தலைமேலாக வலது கையால் இடது - காதைத் தொடச்சொல்கிறதெல்லாம் இப்போ எங்கே நடக்கிறது? பிள்ளை பிடிப்பது போல் நர்சரி ஸ்கூலுக்கு குழந்தைகள் பிடித்துப்போகிற காலம் இது. எனினும் சுத்தியலடிமாதிரி ஒரு வீனீஜீuறீsமீ வுடன் கவிதை முடிந்திருக்கிறது தொகுப்பின் மிகச் சிறப்பான கவிதை.

'மண் தேசம்' கவிதையும் இயல்பான வாழ்வு வெளிப்பாடாக அமைந்த ஒன்று.

நிறைய நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். நிறைய படியுங்கள். நிறைய எழுதுங்கள். தமிழ் கவிதையுலகில் உங்கள் தடம் அழுத்தமாகவே பதியக் காத்திருக்கிறது காலம்.

வாழ்த்துக்களுடன்
என்றும் உங்கள்
கலாப்ரியா
18-09-2005.

Wednesday, December 26, 2012

நள்ளிரவில் பிதாவோடு

நுழைய மறுத்தார்
என் அன்பின் பொருட்டு
அடுத்த அடியை எட்டி வைத்தார்
சவப்பெட்டி ஆனியின் துயரோடு
வாடை நிறைந்த தரைகள்
பிசுபிசுப்பை சகித்தார்
Bejois பிராந்தியை கலயம் நிரப்பினேன்
மேய்த்தலின் மகிழ்வை பகிரத் துவங்கினார்
பாவிகள் இதை அறியாது
விளக்குகளையும் வேதங்களையும்
பிரகாசிக்கச் செய்தபடி...

Tuesday, December 4, 2012

பிழை முடிச்சுகள்

சுருக்கம் கொள்வதில்லை
ஊர் என்பது வெறும் பெயர்களோடு
நெடிய வரலாறுகளின்
முடிச்சுகளால் ஆன கூடுகள்

காட்சியாகும் சில முடிச்சுகள்
கனவுகளை பரிசளித்து
ஏக்கப் பெருமூச்சுகளை வெளியேற்றும்

போக்க இயலாத ரத்த வாடையால்
உழன்று பித்தாவதும்...

மனிதத்தின் மீது வீழ்ந்த
இழி நிலை எச்ச
முடிச்சொன்று அண்மையில்
அதியமானின் காதல் நெல்லி
ஔவையின் கைகளில் கனியாகி
கலப்புமணம் கொண்ட நீட்சியை பொசுக்கியது

தீ கங்குகளை அடைகாக்கும் மனங்கள்
பெருக்கம் கொண்டு இனி
விழாதிருக்கட்டும்
பிழை முடிச்சுகள்...

நன்றி: வல்லினம் இணைய இதழ்