Wednesday, April 27, 2022

கவிதைகள்

 1. ழினோவா

பதினெட்டு  அகவைக்கேற்ற
கச்சிதத் தோற்றம்
வசீகரிக்கும் உடல்வாகு.
ஆம்  இல்லை பார்க்கலாம்
மிகச் சொற்பமான வார்த்தைகளே கிடைக்கும் பதிலாக.
மௌனித்திருப்பவனும் அல்ல.
தன்னுடன் முளைத்த காமிராவால்
காடு மலை நதிகளோடு
கதை பேசிக்கொண்டிருப்பவன்.

அன்றும் அப்படித்தான்
லயிக்கும்  அடர் கரும் வண்ணத்தை
பிம்பமாக்கி உரையாடியவனின் உடல் மெல்ல
நீலமாகிக் கொண்டிருந்தது,
புன்னகை மாறா இதழ்களுடன்.

2. திராட்சை தோட்டம்  சுமந்தவன்
*

தாங்க இயலாத வலிகளை
கண்ணீரில் வழியச் செய்தான்.
ஈரமேறிய மண்ணை பிசைந்து
சிறு சிறு உருண்டைகளாக்கினான்.
செல்லும் இடம்தோறும் சுமந்தே திரிந்தான்.
பாரம் அழுத்த
சோர்வுற்ற கணங்களில்
தூக்கி எறிய முயற்சித்தான்
இயலாதிருக்க சுமந்தே பழகினவன்
பனிப்பொழிவு நிறைந்த அதிகாலையில்
உடலில் கவிழ்ந்த வலியை சகிக்காது
வீசி எறிந்தான்.

உருண்டைகள்
திராட்சை தோட்டமொன்றில்
கனியாகியதைக் கண்டு
சமாதானம் கொண்டவன் நினைவில்
பருக நினைத்த பானம் அலையாடிக் கொண்டிருக்கிறது.


Tuesday, April 26, 2022

நன்றி: காலச்சுவடு



1.நிலவு காயும் வெளி

இன்று
கைகளுக்கு நீளும்
தன்மை கிடைத்தது.
நேற்றின் உடையில்
போதை ஏற்றியவளின்
ஜன்னலைத் திறந்தேன்
இன்றும் நேற்றின் உடையோடிருக்க
மகிழ்ந்தேன்.
ஒரு கணம் புத்தி
ஆசை கொண்டது.
நிர்வாணம் 
ததும்பும் நீரோடையின் குளிர்ச்சியைத் தரும்.
அறிந்திருந்தும்
செய்யாதிருக்கச் செய்தது இன்னொரு.
*

2. நிழலை புதைத்த நிலவு

குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு
பறித்த ஊற்றிலிருந்து
நீரை சேந்திக் கொண்டிருந்தவர்களைக் கடந்து
தொலைவாக இழுத்துச் சென்றாள்.
ஈச்ச மரத்தின் நிழலில்
எதிரெதிராக அமரச் செய்து
வானத்தை குவித்து கரைகட்டினாள்.
கொண்டுவந்த நிலவை
கிச்சுக்கிச்சா தாம்பூலம் கியாக்கியா தாம்பூலமென
ராகமிட்டவாறு ஒளித்தாள்.
கண்டுபிடிக்க கைகளை
மேகமாக்கி குவித்தேன்
வேறு இடத்திலிருந்து வெளியேற
தோல்விக்கு புன்னகையை பரிசளித்தாள்.
தொடர்ந்த விளையாட்டில்
பெற்றுக் கொண்டிருந்தேன்
புன்னகையை மட்டுமே.
தொடர் வெற்றியின்
சோர்வை விலக்க
நிலவை என் வசமாக்கினாள்
ராகமிட்டவாறு
ஆழ ஊன்றி அவளைக் கண்டேன்
நமட்டுச் சிரிப்பில்
ரகசியம் அறிந்தாற்போல்
குவித்த கைகளுக்குள் மரமிருக்க அதில்
தன் நிழலை புதைத்துக் கொண்டது நிலவு.
*

3. பகடையாட்டம்
தாயம்
ஆறு ஐந்து இரண்டிற்கு
வெட்டுண்டு
கட்டைகள் உருண்டோட
விழும் எண்ணிக்கைகள்
எதிர்வரும் காயை ஏமாற்றி
மலை மலையாக தாவி
நின்றிருந்த விருட்சம்
காலத்தை கனியாக்கியது
தாயம் இடாமலே.
குரல்கள் கலைந்து போக
ஆட்டக் களத்தில்
காய்கள் கனிகளாகவும்
கனிகள் காய்களாகவும்
மாற்றமடையும் கோடையின் கானல்.
*
4. குடை

வானம் சிந்தத் துவங்கியது.
சட்டைப் பையின் கவிதையிலிருந்து
வெளியேறிய குடையால்
எரிச்சலடைந்தவன் 
மடக்கி எறிந்தான்.
துளிகள் மீண்டும்
உடலுள் பூத்துக் கொண்டிருக்க
கவிதையின் இறுதி
வரியிலிருந்த பெண்
துப்பட்டாவை விரித்தாள்.
பிணைந்த வெப்பம்
ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தது.

Monday, April 25, 2022

கவிதைகள்

 1.

நடைபயிற்சி உரையாடல்.
*
தங்கரளிச் செடிக்கு மட்டும் ஏன்
இப்படி வேர்த்திருக்கெனக் கேட்டாள்.
வியர்வையல்ல பனித்துளி
சற்று நேரத்தில்
சூரியனில் கரைந்திடுமென்றேன்
உரையாடலைக் கேட்டவாறு
வந்துசேர்ந்த மற்றொரு சிறுமி,
வானம் 
இந்த செடிக்கு மட்டும்
இத்தனை முத்தங்கள்
இட்டுள்ளதென்றாள்.

வியந்து வியர்த்துச் சிவந்தது இளவானம்.
*

2.

மழை இப்போதைக்கு
வராதென்றாள்
வானத்திடம் பேசி
வந்த சிறுமி. 

எட்டிப் பார்த்த வானத்தின்
வெய்யில் வர
நிழல் மழை 
பெய்யத்துவங்குகிறது
பூமியெங்கும்.
*
3.
வந்தமரும் கிளியிடம்
கேட்டபடியே இருந்தது
தன் பின்பக்கம் அறிய ஆவல் கொண்ட இலை. 

பின்பக்க உருவே
முன்பக்க நிழலென
சன்னமான காற்றிற்கு
வீழ்ந்தது இலை.

அறிந்து கொண்டது
வேறு இலை.
அது கனியோடு பறந்தது.

Friday, April 22, 2022

நன்றி: வாசகசாலை

 

1.அமைதி
மண்டையுள்
தாள்கள் 
படபடத்துக் கொண்டிருந்தன.

கழிந்த காலம் மட்டுமல்லாது
நிகழ் எதிர் கால
எழுத்துக்களும் இசைத்துக்கொண்டிருந்தன
ஒன்று மற்றொன்றோடு
உராய்வு கொள்ள
பற்றி எரிந்திடுமோ
பயம் 
உடலைக் கவ்வியது.

நீடிக்க விடாதிருக்க
காக்கை இட்ட எச்சம்
எடை கல்லானது.

அங்கொரு
அழகிய நித்திரை 
நிகழக் கண்டீர்கள்.
*
2. பிராயம்

மழை வாங்கியக் குளங்களில்
முட்டைகளாக வந்த
ஆலங் கட்டிகள்
ஓயாத தவளைகளின்
செம்மையாக  ஒலிப்பதை
வியக்கும் சிறுவனொருவன்
காலத்தின் கரையில்
வேடிக்கைப் பார்க்கும் 
மிதவையாக கலங்குகிறான்
வானத்தில்.
3.அழைப்பு

என்றாவது 
ததும்பும் மனதோடு
பேச அழைத்தால்
காலத்தை கச்சிதமாக்கும்
அழைப்பின் ஓசை
நிமிடங்கள் கடந்து
பதற்றம் கவ்விக் கொள்ள
இதைத்தான் என்றில்லாது
நினைவின் உரையாடல்கள் 
தட்டான்களாக வெப்பத்தில்
மிதக்கும் ஸ்மைலிகளாகின்றன.
4. தரிசிப்பு
*
வெட்கம்
கால்களைப் பின்ன
தயக்கத்தோடு சொற்கள்
பெயரைக் கேட்டது
சிரித்தவள் சிரித்தபடியே.

கடிகாரம்
இரண்டு இரவு
மூன்று பகல் கடக்க
மீண்டும் கண்டபோது
சிரிப்பி என்றழைத்தேன்.

அன்றைய நாளில்
கண்டோரெல்லாம் களிப்புடனிருந்தனர்.

5. விநோதங்கள்
*

காலனியுள் காலத்தை சொருகி
கச்சிதமான தோற்றத்தோடு
ஐந்து
ஏழு
ஒன்பது சுற்றுகள்
இன்னும் இன்னுமென
அடிகளின் கணக்கீட்டை
அறிவியல் காட்டிட
நம்பிக்கை பெருக்கெடுத்த ஆற்றில்
மிதந்து கொண்டிருந்தனர்.

இன்னும் எதை எதையெல்லாம்
பார்க்கவேண்டி இருக்குமோ
நடந்து செல்வதை
வாழ்வாக கொண்டவன்.

6. கதையல்ல...
குட் மார்னிங் தொடங்கி
குட் நைட் முடிய
உறவாடி மகிழ்திருப்பாயே
நீர் ஊற்றா தொட்டிச் செடியானதேன்
பொம்மைகள் பழசானதோ
புதியது வாங்கிடலாமா?

தலையாட்டி மறுத்தவள்
என் கைபட தளிர்களாக துளிர்த்திடும்
இருப்பதே போதும்
விளையாட விருப்பம் இல்லை
பொம்மைகள் மீது
வெடிமருந்து நாற்றமப்பா.

தொலைக்காட்சியில்
உக்ரைன் நிலத்தின்
அழிவுக் காட்சிகள்.





Wednesday, April 20, 2022

நன்றி: அம்ருதா

 

1. மன அவசம்.

*

திடும்மென

நடந்துகொண்டிருந்தவனின் முன்

பொற்குவியல்

திசை எட்டும் கண்கள் சுழற்றி

தனதாக்கிக் கொண்டான்

திருடன் திருடன் என்றவாறு

கிளியொன்று பறந்த 

குழப்பத்தில்

மகிழ்வு கணம் புதைந்து

முகிழ்ந்தது

ஒரு வீச்சம்.


2.காத்திருப்பு

*

நழுவிய

கனியின் சுவையை

சொல்வதெப்படி

நடுக்கத்தில் மொழி. 


காத்திருப்பேன்

பயிற்சியோடு

மற்றுமொன்று

நழுவிடும் கணத்திற்கு.


3. இறைஞ்சுதல்


தொங்கியபடி

வீட்டின் மீது

கனிந்திருந்தது மதியம்.


இன்னும் கொஞ்சமென

மின்விசிறியிடம்

இறைஞ்சியபடி சிறுமி. 


எஞ்சிய

கதைகளை கேட்டேன்

தூங்கும்போது என்றபடி

ஓடிப்போனாள்.

Sunday, April 17, 2022

 நன்றி: நுட்பம் இணைய இதழ்



ந. பெரியசாமி கவிதைகள்

1. காட்சி
அந்தரத்தில்
நீண்டிருந்தது கோடு
மேலிருந்து கீழும்
கீழிருந்து மேலுமாக
அலகுகள் பிணைந்திருந்த
பறவைகளைக் கண்ட கணத்தில்
என் அருகாமையிலிருந்த காலி இருக்கையில்
நீ அமர்ந்து சென்ற கண நேரம்
அத்தனை மகத்தானது.

2. மலர்ந்த தேநீர்

இன்னும் கொஞ்ச நேரம்
அமர்ந்திருந்திருக்கலாம்
உரையாடல்
சற்றே நீடித்திருக்கலாம்
நமை ஈர்த்த சிறுமி
விளையாட்டை முடிக்காது இருந்திருக்கலாம்
எல்லாமும்
காரண காரியமற்றே
சடுதியில் முடிந்திடுகிறது
இருப்பினும்
நினைவில் தங்கி வாழ்ந்திருக்க
ஏதாவது நிகழத்தான் செய்கிறது
அன்று மலர்ந்த தேநீருக்கு
ஏன்தான் அத்தனை சுவையோ...



3. சவாரி

உருவாக்கப்பட்டிருந்த
வடிவமைப்பு வனத்துள் அமர்ந்திருந்தனர்
ஊஞ்சலாடிய சிறுமி
சலிப்படைந்து இறங்கி
அவனை அழைத்து
யானை சவாரி வேண்டுமென்றாள்.

தோற்றம் கொண்டான்
முதுகில் அமர்ந்து
சற்று பயணித்தவள் குதித்து
அடங்கொண்டாள்
யானை லத்தியை பார்க்கவேண்டுமென.

கணநேரம் நின்று இயங்கியது வனம்
அவன் காதலியின் வெடித்த
சிரிப்போசைக்கு.