Thursday, January 22, 2015

நன்றி நாணற்காடன்


தோட்டாக்கள் பாயும் வெளி- ந.பெரியசாமி

நினைவை நனைத்து ஓடுகிறவன்.

பூக்களில் இருக்கும் அமைதி விதவிதமான பூக்கள் விற்கப்படும் மார்க்கெட்களில்

இருப்பதில்லை. ஜனத்திரளும், விலை பேசும் சம்பாசனைகளும், எடைத் தட்டுகளின் களக்

களக் சத்தங்களும், பூ மார்க்கெட்டின் நிதர்சனம். அவ்விடம் அப்படி தான் இருக்கிறது.

அப்படி தான் அவ்வளவு அமைதியற்று தான் இருக்க வேண்டும் போல அவ்விடம். அந்த

நெருக்கடிகளுக்குள் கடைவிரித்து கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் பூங்குவியலின்

எந்தவொரு பூவை உற்று கவனித்தாலும் அவற்றின் பதற்றம் நிறைந்த முகமே காண

முடிகிறது. யாரேனும் விலை கொடுத்து நம்மை வாங்கிப் போக மாட்டார்களா...என்ற

ஏக்கம் பூக்களின் கண்களில் நிறைந்திருக்கின்றன. இவ்விடத்தை விட்டகலும் நொடிக்காக,

தாயைத் தொலைத்த குழந்தையென திருதிருவென முழித்துக்கொண்டிருக்கின்றன

அவை. ஒருத்திகளின் தயவில் இந்தப் பூக்கள் மீட்கக் கடவது

பெரு நகரமொன்றின் ரயிலடி ஜனத்திரளாக நெட்டி நெருக்கி பிதுங்கி வழிகிற

கவிதைகளிலும் பதற்றங்கள் கூடிக்கொண்டிருக்கின்றன. புறாக்கூட்டத்தின் நடுவே

கல்வீசப்பட்டதைப்போன்ற படபடப்போடு கவிதைகள் சடசடக்கின்றன. தோட்டாக்கள்

பாயும் வெளி எத்தனை மூர்க்கமானதெனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

துப்பாக்கிகளின் துணையின்றி திரைப்படங்கள் நிகழ்வதில்லை இங்கு. எதிர்வீட்டுக்காரன்

எப்போதும் கைத்துப்பாக்கியோடே சுற்றித் திரிவது போலொரு மாயத்தை நமக்குள்

திரைப்படங்கள் திணித்துக்கொண்டிருக்கின்றன. மதுவாகினிகளும், அனாமிகாக்களும்

நிறைந்த பூமியின் வெளியில் தோட்டாக்கள் பாயத்தொடங்கிவிட்டன போலும்.

மதுவாகினிகளை சிறகுகளுக்குள் பொத்திப் பாதுகாக்க வேண்டும்.

மதுவாகினியின் மலர்விரல்கள் பற்றி எழுதத்தொடங்கும் எழுதுகோல் மயங்கி முயங்கி

தோட்டாக்களைத் தடவத் தொடங்கிவிட்டன.

என்றாவது நதி மேல் நோக்கியும் பாயும் என்ற நம்பிக்கையிலிருந்து ந.பெரியசாமி

தோட்டாக்கள் பாயும் வெளி.....விரிகிறது.

மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.....என்ற வரியோடு இந்தக் கவிதை

வெளி இரத்தம் சிதறிக் கிடக்கிறது.

மிகுந்த பதற்றத்தோடு தொடங்குகிற இரயிலானவன்.....கவிதை வாசிக்கும் நம்மையும்

பதற்றத்துக்குள்ளாக்குகிறது. கவிதை வளர வளர பதற்றமும் வளர்கிறது. இறுதியாக

ஓடிப்போய் நானும் இரயிலானேன் என முடிக்கும்போது தான் அவ்வளவு ஆசுவாசப்

படுகிறது மனம். ஒரு தற்கொலை நிகழாதிருக்க குழந்தைகள் தேவைப்படுகிறார்கள்.

நம்மைச் சுற்றி குழந்தைகள் நிறைவது வாழ்வை நீட்டிக்கச் செய்கிறது.

மூன்றாம் நாளில்.....இந்தக் கவிதை நாமாகவே உருவாக்கிக்கொள்ளும் தனிமையில்

ஊடுருவி உலாவுகிற மனிதர்களைக் காட்சிப் படுத்துகிறது. நான் என்பது நான்

மட்டுமல்லன் என்பதைச் சொல்லும் உன்னதத் தன்மையோடு விரிகிறது கவிதை.

ஆடு மாடுகள் அந்தரத்தில் பறந்தன/ எனத் தொடங்கும் வேர்கள் வான் நோக்கி வளர்ந்தன

என்ற கவிதை தரும் அனுபவம் அலாதியானது. காக்கைப் பாலும், குருவிப்பாலும்

கட்டியமைக்கும் உலகம் அழகானது. காக்கை மருத்துவரும், காக்கா குஞ்சின் மூத்திரமும்

மூட்டு வலியிலிருந்து நம்மைக் காக்கச் செய்யும் என நம்பலாம்.

துளிகளை அனுப்பி/சன்னல் வழியே அழைத்து/தன் ஆட்டத்தைத் துவங்கியது

மழை/......வேடிக்கை பார்க்க/ காமக் களியாட்டத்தில் மனம். மழை பற்றிய எந்தக் கவிதை

வாசித்தாலும் பொன். இளவெனிலின் பதற்றத்தைப் பெய்தபடியிருக்கிறது மழை என்ற

வரிகள் மிதந்து வந்துவிடுகிறது. மழைக்கு உயிர் கொடுத்து உலாவவிடுகிற

பெரியசாமியின் வரிகளும் இனி நெஞ்சில் நிலைத்திருக்கும்.

திடுமென நினைவு சுடுவதும், புழுதி படிந்த வயோதிக நிலமும், நினைவில் மழை

பெய்வதும், காக்காவுக்கு மற்றொரு காக்கா துணையாக இருப்பதும், வானத்திற்கு

துணையாக யாருமில்லாதிருப்பதும், நிறைந்த மூத்திரப்பையின் வலியும், பிடித்து வந்த

பசுவின் நிழலும்.....என பெரிய சாமி சொற்களால் வரைந்து காட்டும் சித்திரங்களில்

மூழ்கிப் போவது இனிமையான கவிதையனுபவம்.

தொகுப்பு முழுக்க விரவிய எல்லாக் கவிதைகளிலும் மார்க்கெட் பூக்களின் அமைதியற்ற

அல்லது பதற்றம் நிறைந்ததொரு முகம் தென்படவேச் செய்கிறது. அதுவே

இத்தொகுப்பின் அல்லது பெரியசாமியின் கவிதையுலகின் அடிநாதமாகவும்

கொள்ளலாம்.

தோட்டாக்கள் பாயும் வெளியிலிருந்து மதுவாகினிகளை கவிதைகளே காக்கக்கூடும்

என்ற நம்பிக்கை வலுக்கிறது. அந்த நம்பிக்கைக்கு பெரியசாமியின் என்றாவது நதி மேல்

நோக்கியும் பாயும்... என்ற வரிகளிலிருந்து தீ மூட்டிக்கொள்வோம்.

Wednesday, January 21, 2015

nantri: Latha ramakrishnan

nantri: Latha ramakrishnan

பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004இல் வெலியானது. ஓசூர் தமுஎகச கிளைப் பணிகளில் பங்கேற்பது. ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி நண்பர்களுடன் இணைந்து மாற்று சினிமா திரிஅயிடுவது. புதுவிசை இதழின் நிர்வாகப் ஒறுப்பு என தனது தொடர்ந்த செயல்பாடுகளால் பரவலாக அறியப்பட்டவர்.


_ ‘மதுவாகினி’ தொகுப்பிலிருந்து.





“ஆசைகொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல் ஓட்டித் திரிந்தேன். வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள். தள்ளிப் பழகி சிறு சிறு காயங்களுடன் பெடல் அடித்துக்கொண்டிருந்தேன். விடாப்பிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனைகளோடு தொடர்ந்தேன். அதன் நுணுக்கங்கள் பிடிபட, வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன்.



இது என் கவிதைகளுக்கும் பொருந்தும்.



_ ‘தோட்டாக்கள் பாயும் வெளி’ தொகுப்பில் கவிஞர் ந.பெரியசாமி.





’மயிலிறகோ, மலைப்பாறையோ

உறுபாரமெதையும் இறக்கிவைக்க

திரும்பத் திரும்ப இங்கேயே வருகிறேன்.

மறுப்பேதுமின்றி தோள் தரும் பரிவுக்கு

தந்து தீராது வந்தனம்…’

_



_ ‘வரிகளின் கருணை’ என்று தலைப்பிட்ட என் கவிதையின் ஆரம்ப வரிகள் இவை. இந்தத் தலைப்பில் வெளியான ஏறத்தாழ 18 நவீன தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து நான் எழுதிய கட்டுரைகளடங்கிய தொகுப்பின் ‘சொல்லவேண்டிய சில’ பகுதியில் பின்வருமாறு கூறியிருந்தேன்:



“வாசிப்பனுபவத்தை வரிகளின் கருணையாகவே பாவிக்கத் தோன்றுகிறது. ஒரு கவிதைத் தொகுப்பு கையில் கிடைத்தவுடன் ஏதோ ஒரு புதிய உலகம் விரிய நான் அதற்குள் பயணிப்பதாய் ஓர் உணர்வு என்னை ஆட்கொள்ளத் தொடங்குகிறது. …..”



தோழர் ந.பெரியசாமியின் முதல் தொகுப்பு (நதிச்சிறை _ 2004இல் வெளியானது) எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. அவருடைய இரண்டாவது தொகுப்பு ‘மதுவாகினி’ அகநாழிகைப் பதிப்பக வெளியீடாக 2012 டிசம்பரில் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 73 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘தோட்டாக்கள் பாயும் வெளி’ 2014 ஆகஸ்டில் ‘புது எழுத்து’ மாற்றிதழ் பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 50க்கு மேற்பட்ட கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு கவிதைத்தொகுப்புகளிலும் எனக்கு மறுபடியும் வாய்த்தது ’வரிகளின் கருணை’!



பாரதிக்கு பராசக்தி, கண்ணம்மா, நகுலனுக்கு சுசீலா, கலாப்ரியாவுக்கு சசி, பிரம்மராஜனுக்கு சித்ரூபிணி…. போல் ந.பெரியசாமிக்கு மதுவாகினி! அவளாகவும், அவனாகவும், அவராகவும் உள்ள அவள் குழந்தையாய், குமரியாய், காதலியாய், மனைவியாய், தாயுமாகி, தானுமாகி, வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி இரண்டறக் கலந்திருக்கிறாள் இந்த இரு தொகுப்புகளின் வரிகளெல்லாம்! அவளாகியவள் சில கவிதைகளில் வெளிப்படையாக முகம் காட்டுகிறாள். சிலவற்றில் சூக்குமத் திருவை வெளிப்படுத்துகிறாள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் மதுவாகினி தொகுப்பின் முதல் கவிதை செடிமரம் கவிஞரின் நேர்மையான, நேர்த்தியான கவித்துவத்திற்கு சான்று பகர்ந்துவிடுகிறது!



செடிமரம்

நிலம் கீறி விதையிட்டு

பிரயத்தனங்களால் தழைத்திடாது

இறுகிக் கிடக்கும் பாறையினுள்

சுயம்புவாக முளைத்து மிளிரும்

செடிமரம் நீ

யென் செல்லமே



‘செல்லமே’ என்ற விளியின் அல்லது அறிவிப்பின் தளும்பல் கவிஞரின் கவிதைகளெங்கும் கனிவாகவும், தோழமையாகவும், அறச்சீற்றமாகவும், வாழ்க்கை குறித்த பிரமிப்பாகவும் வாழ்நிலை குறித்த வலியாகவும் உணரக் கிடைக்கிறது நமக்கு.



‘மிச்சமிருக்கும் நாட்களில்’ என்ற கவிதை சூழலியல் பாதிப்பு குறித்து வலியோடு சுட்டிக்காட்டிக்கொண்டே போய் இவ்வாறு முடிகிறது:



அவசமாக ஆயுளை விழுங்கும்

இழப்பின் பட்டியல் நீள

புகைந்து கிடக்கும் நம்மின்

நெடுங்கோபத்தை

சேகரிக்கத்தான் வேண்டியிருக்கிறது

விதைகளென.



பாறை என்ற கவிதையின் ஆரம்ப நான்கு வரிகளே ஒரு முழுநிறைவான தனிக்கவிதை யாவதாய் அத்தனை அடர்செறிவாய் அமைந்துள்ளது!



‘பேச விரும்பா துயர்களால்

கெட்டித்த பெண்ணாய் கிடக்கும்

பாறையிலமர்ந்து கவிஞன்

எழுதிக்கொண்டிருக்கிறான் தன் வலியை.



_ ’அமுதசுரபி’ என்ற கவிதையில் கர்ணனைப் பற்றிய கனிவு நியாயமானது. எனவே, நிறைவானது. ஆனால், ‘வனதேவதை’ கவிதையில் ராமன் என்ற பிம்பங் குறித்துக் கட்டமைக்கப்பட்டுள்ள கோபமே ‘அவன் மணமானவன் என்று தெரிந்தும் அவனைத் துரத்தும் சூர்ப்பனகையை, சீதையை அவள் விழுங்கப் போவதால், தாக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்போதும், பெண் என்பதால் கொல்லாமல் விட்டு மூக்கறுத்து அனுப்பும் ராமனை கயவனாக, நடந்ததை அண்ணனிடம் திரித்துக் கூறும் பொய்யள் சூர்ப்பனகையை வனதேவதையாக்கி அவளிடம் மண்டியிட்டுத் தவழ்வதாக ராமனை எள்ளிநகையாடச் செய்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.



‘தீட்டுறிஞ்சி’ என்ற தலைப்பிலான கவிதை, வேறு சிலருடைய கவிதைகளில் காணக்கிடைப்பதுபோல் பெண்கடவுளர்களைப் பற்றி கேலிபேசாமல், ‘நாப்கீன்கள் கிடைக்க வேண்டினாள்’ என்று செல்லியம்மன் கேட்பதாகக் கூறுவதில் ஒருவித கரிசனமே தொனிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



நிறைய கவிதைகளை அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்டிக்கொண்டே போகலாம். காட்சிப்படுத் தல்கள், கதைசொல்லல்கள் இருந்தாலும் அவை கவித்துவம் குறையாமல் கட்டமைக்கப் படுவதில் தகுந்த கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் கவிஞரின் சீரிய மொழியாளுமையும், துல்லிய கவிப்பார்வையும் புலனா கின்றன. இந்தக் காரணத்தால் , சில கவிதைகளின் மொழிநடையும், கட்டமைப்பும் எளிமை யான, உரைநடைத்தன்மையோடு இருப்பது பிரக்ஞாபூர்வமான தெரிவு என்பது புரிகிறது. எடுத்துக்காட்டுகள் : ‘வேறென்ன செய்ய?, சுமைதாங்கிக் கற்களல்ல.





‘நதிச்சிறை, மதுவாகினி எனும் என் இரு தொகுப்புகளிலிருந்தும் அடுத்த பரிணாமம் கொண்டதாய் இத்தொகுப்பு இருக்கிறதென நம்புகிறேன்” என்று ‘தோட்டாக்கள் பாயும் வெளி’ தொகுப்பின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார் கவிஞர். ஒரு வாசகராக என்னால் இரண்டிற்குமிடையே ஒரு தொடர்ச்சியையே உணர முடிகிறது. இதை நான் குறையாகச் சொல்லவில்லை. காலவழுவமைதி தானே வாழ்வின் சாராம்சமே! காலத்தால் முன்னோக்கி நகர்ந்திருப்பதில் ‘தோட்டாக்கள் பாயும் வெளி’யில் அகவயமாகவும், புறவயமாகவும் அதிக வலி கூடியிருப்பதாய் தோன்றுகிறது. இந்தத் தொகுப்பின் முதல் கவிதை ‘நம்பிக்கை’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது:



நம்பிக்கை



துளிகளாக முகம் பட்டு

நினைவை நனைத்து ஓடினாள்

கல்குத்தி முள்கிழித்த

ரணங்களோடு தொடர்கிறேன்

என்றாவது நதி

மேல்நோக்கியும் பாயுமென்று….

                                

தலைப்புக்கு எதிர்நிலையில், இந்தக் கவிதை ஒருவித நம்பிக்கையின்மையையே முன்னிலைப்படுத்துவதாக ஒரு வாசகராக உணர்கிறேன். இந்த வரிகளை மதுவாகினி தொகுப்பில் மஞ்சள் நிற தேவதைக்கு என்ற கவிதையின் வரிகளான



‘கைகோர்த்து கவிதை பேசி நடக்க

தனித்த உலகைக் கேட்குமென்

மஞ்சள் நிற தேவதையிடம்

கனவுகள் மெய்ப்படும்

செல்லமென்றேன்’



என்ற வரிகளின் எதிர்பார்ப்பில் ஒரு உணரக் கிடைக்கும் நம்பிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இந்த முரண்பாடு அல்லது மனப்போராட்டம் கவிதை யின் அடிப்படைக்கூறுகளுள் ஒன்று.



A being with no shell, open to pain,

Tormented by light, shaken by every sound

_ Rilke



நவீன தமிழ் இலக்கிய வெளியில் முனைப்பாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டி ருக்கும் தோழர் சி.மோகன் ஒரு சமயம் தனக்குப் பிடித்த வரிகளாக அலைபேசிக் குறுஞ்செய்தியில் அனுப்பித் தந்த வரிகள் மேலே தரப்பட்டுள்ளன. அத்தகைய வலிகூடிய வரிகள் இத்தொகுப்பில் நிறையவே உள்ளன.



உதாரணத்திற்கு ‘இருளும் ஒளியும்’ தலைப்பிட்ட கவிதை:



மரம்

தன் நிழலைக் கிடத்தி

இரண்டாகக் கிழித்தது என்னை.

அம்மணச் சிறுவனாகி

மிதந்தலைந்தேன் குளத்தில்

அருகிலிருக்கும் நந்தவனத்தில்

எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை.

தொழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்.

காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்.

மயக்கத்தில் புரண்டேன்

வெய்யில் சுட்டது.



கூலிச் சீருடை அணிந்து

பிழைப்புக்குத் தயாரானேன்

சுருங்கியது மர நிழல்.



_ஒரு வகை split-personality நிலை. இந்தப் ‘பிளவு-நிலை’ _ தனிமனித அளவிலும், சமூக அளவிலும் தினந் தினம், ஒவ்வொரு தருணத்திலும் தவிர்க்க முடியாமல் கவிஞன் மீது கவிந்திறங்கியபடியே. ஒருமுறை 104 டிகிரி காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும்போது ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா’ கணக்காய் ’புயல்கரையொதுங்கியபோது’ என்ற கவிதையெழுதினேன்… உள்ளும் புறமுமான அந்தக் கொதிநிலை மிகவும் அச்சுறுத்துவதாயிருந்ததில் ‘இனி இத்தகைய பரிசோத னைகளை மேற்கொள்ளவே கூடாது; ஆள் உயிரோடு இருந்தாலே, வாழ்க்கை என்னும் நெடுங்கவிதையை வாழ்ந்துபார்த்துக்கொண்டிருந்தாலே போதுமானது என்ற ஞானம் தோன்றிவிட்டது! என்றுமே நோயுமாகி, மருந்துமாகி கவிஞரை வாழ்வித்துக்கொண்டிருக்கிறது கவிதை என்பது உண்மைதான்!



தோழர் ந.பெரியசாமியையும் அவ்வாறே கவிதை திரும்பத்திரும்ப மீட்டெடுத்த படியே! தலையணையாக மேகத்துண்டு வாய்க்கிறது கவிஞருக்கு [தலையணை]! இன்னொரு சமயம் கவிஞன் விண்மீன்களாகிக்கொண்டிருக்கிறான்! (கவிதை: பக்கம் 49) ஏதுமறியாக் குழந்தையாக மலை மினுங்கிக் கொண்டிருக்கிறது (மூதாய்).அவருடைய கவிப்பார்வையில்); உயிரைத் துளி நீராக்கி பசிய இலையொன்றில் மிதக்கச் செய்ய முடிகிறது கவிஞரால்! புலி வால் பிடித்த கதை என்ற தலைப்பிட்ட கவிதை முழுக்க முழுக்கக் குறியீடுகளால் ஆனது! ஆதிக்கத்தில் வழிந்த எச்சில் மிக அடர்செறிவான கவிதை



குழந்தைகள், அவர்களின் மாய உலகம், நிராதரவான நிலை, பள்ளியில் அவர்கள் அடையும் அக, புற பாதிப்புகள் என நிறைய கவிதைகள் குழந்தைகளைக் கருப் பொருளாகக் கொண்டிருக்கின்றன.



இயற்கை இவருடைய கவிதைகளில் இரண்டறக் கலந்திருக்கிறது! இவருடைய கவிதைகளில் சிலவற்றின் தலைப்புகள்: பூனையாவாள் அம்மா நதி ஈந்த எறும்பு, அணிலாடுதுறை, ஓணான் உருவாக்கிய பகை, வண்ணக்கிளி, நெட்டிலிங்கப்பூ,



காந்தியை நுனிப்புல் மேய்வதாய் சகட்டுமேனிக்கு அடிமட்டமான வார்த்தைகளில் பழிப்பது என்றுமே சில படைப்பாளிகளின் பொழுதுபோக்காக இருந்துவருகிறது. கவிஞர் ந.பெரியசாமி அவர்களில் ஒருவர் அல்ல என்பதை அவருடைய கவிதை அக்டோபர் முதல் நாளில்… எடுத்துக்காட்டுகிறது.



தறுதலை என்ற தலைப்பிட்ட கவிதையில் பின்வரும் வரிகள் இடம்பெறுகின்றன:

பிழைக்க புகுந்த நவீனக் கூட்டில்

அடைந்து கிடக்கின்றேன்

வம்புதும்பற்ற

அற்பக் கூலியாக’



.இத்தனை அருமையாகத் தன் நிலையை ரத்தினச்சுருக்கமாக எடுத்துரைக்கும் கவிதைசொல்லி அற்பக் கூலியல்ல : அற்புதக்கூலி! என்று சொல்லத் தோன்று கிறது!



நினைவுகள் வசிக்க

தேவையாயிருக்கின்றன

மயிலின் தோகைத் துணுக்குகள்



என்று ‘நினைவில் வசிக்கும் தோகை என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும் வரிகளின் கவித்துவமும், அது வரவாக்கும் நெகிழ்ச்சியும் கனமானவை. இந்த இரண்டு தொகுப்புகளிலும் மலரும் முள்ளுமாக தனக்கான மயிலின் தோகைத்துணுக்குகளை, தேர்ந்தெடுத்த, ஆழமான வார்த்தைப்பிரயோகங்கள், கருப்பொருள்கள் மூலம் தன் கவிதைவரிகளெங்கும் தூவிக்கொண்டிருக்கிறார் தோழர் ந.பெரியசாமி. அவற்றை வாசிக்கும் நமக்கும் நமக்குத் தேவையான மயிலின் தோகைத்துணுக்குகள் நிறையவே கிடைக்கின்றன!

Sunday, January 11, 2015

தோட்டாக்கள் பாயும் வெளி – ந.பெரியசாமி நவீனம் கடந்து எட்டிவைக்கும் முதலாவது காலடி.
நா.பெரியசாமின் மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் – தோட்டாக்கள் பாயும் வெளி. இது புது எழுத்து வெளியீடாக வர இருக்கிறது. இவருடைய முதலாவது தொகுதியைப் படித்திருக்கவில்லை. இரண்டாவது தொகுப்பான ”மதுவாகினி” யை படித்திருக்கிறேன். அது குறித்து சிறு குறிப்பொன்றையும் எழுதியிருந்தேன். ஆனால், இந்த வெளிவர இருக்கின்ற தொகுப்பு அவருடைய இரண்டாவது தொகுப்பிலிருந்து பலவகைகளில் வேறுபட்டிருக்கிறது. இந்த வேறுபாடு என்பது வளர்ச்சியா என ஒரு கேள்வியை எழுப்பினால், கவிதை குறித்த பார்வைகள் வேறுபடும் வாசிப்புக்களைக் கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான பதில்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்தப் பதில் அனைத்தும், மதுவாகினி என்ற தொகுப்பில் இருக்கும் கவிதைகளிலிருந்து அதிகம் வேறுபட்டது என்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டதாகவே இருக்கும்.
கவிதை எடுத்துரைப்பு பெரிதும் மாறியிருக்கிறது. கவிதைச் சம்பவங்கள் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அருகருகே சொற்களை இணைக்கும் இவருடைய பாணி மாத்திரம் மாறியிருக்கவில்லை. இந்தப் பாணி நவீன கவிதையின் ஒரு முக்கிய குணம்தான். கவிதைச் சம்பவங்களை பிரதிக்குள் எப்படி அமைக்கிறார் என்பது முக்கியமாகப்படுகிறது. அந்தச் சம்பவங்களை இணைத்து கதையாடும் பிரதிச் செயல் என்பது, நிச்சயமாக நவீன கவிதையை கடந்து செல்ல முனையும் இன்றைய கவிதைகளின் இயங்குமுறைமையை தன்னிடம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இவருடைய இந்த்த் தொகுதி முக்கியமானது என்றே கருதுகிறேன்.
இந்த்த் தொகுப்பிலிருக்கும் அத்தனை கவிதைப் பிரதிகளுக்கும் பொதுவான ஒரு வாசிப்பாக இதைச் சொல்லவில்லை என்பதும் முக்கியமானது.
நவீன கவிதைகள் எப்படியும் சூழலில் பங்கேற்பாளராக தன்னை வைத்துக்கொள்ளும். சூழலின் நேரடி பங்கேற்பாளராக தன்னை அப்பாவித்தனமாக நவீன கவிதைகள் காட்டிக்கொள்ளும். அதுதான் நவீன கவிதையின் பெருமையும் கூட. யாரவாது குசு உடுவது தொடங்கி, கொலை செய்வதுவரை தனது மூக்கை நுழைத்து கருத்துக்களை சொல்ல நவீன கவிதைகள் தயங்கியதே இல்லை. இந்த மனோபாவத்தை நவீன கவிதையின் மீது ஏற்றிவைத்திருப்பதற்கு பல காரணங்கள் இல்லாமலும் இல்லை. வாழ்வின் எந்த அம்சத்திலும் நான் கட்டாயம் இருக்க வேண்டுமென்று நவீன கவிதை அடம்பிப்பதாக நான் ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால், அப்படி ஒரு இடத்தை நவீன கவிதையின் மீது சுமத்தியிருக்கிறார்கள். ஏதோ அனைத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் நவீன கவிதைக்கு இருப்பதுபோல, அது எந்த இடத்திலும் நுழைந்து தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறது. இது ஒருவகை அரசியல் மனோபாவம்தான். இது இனி நீடிக்க வாய்ப்புகளே இல்லை. இது ஒருவகைத் தலையீடு.
சூழலில் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தகின்ற தலையீடு.
ஆனால், இன்றை கவிதைகள் அதாவது, நவீனத்தை கடக்க முற்படுகின்ற அல்லது கடந்த கவிதைகள், சூழலோடும், வாழ்க்கையோடும் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்வதில்லை. சூழலை வேறொன்றாகவும், கவிதையை வேறான்றாகவும் பார்க்க முற்படுகிறது. வாழ்வு,மற்றும் சூழல் போன்றவை புனைவுகளால் ஆனது என தெளிவாக நம்புகிறது. அதனால்தான், ஒரு உண்மைக்கு கொடுக்க வேண்டிய இடத்தை அது புனைவுக்கு கொடுக்க மறுக்கிறது. அதேநேரம் இன்று உண்மை என நம்மிடம் இருப்பதெல்லாம் புனைவுகள்தான் என அது தெரிந்து செயற்படுகிறது. வாழ்வின் தருணங்களிலோ, சூழலின் இயங்குதலிலோ நவீனம் கடந்த கவிதைகள் தலையிடுவதில்லை. ஆனால், அவைகளை கவிதைப் புனைகளுக்கான, வெறும் கவிதைச் சம்பவங்களாக மாத்திரமே கணிக்கின்றன.
சூழலை பார்வையாளராக உருவாக்க மாத்திரமே நவீனம் கடந்த கவிதைகள் முயற்சிக்கின்றன. பங்கேற்பாளர்களாகவோ அல்லது, வாழ்வின் சாட்சியங்களாகவோ அவை பொருட்படுத்துவதே இல்லை. அந்த அவசியமும் நவினம் கடந்த கவிதைகளுக்கு இல்லை.
ஏன் இதை விவாதிக்கிறேன் என்றால், இந்த நவினம் கடந்த கவிதைகள் தமிழில் உருப்பெறத்தொடங்கியிருக்கின்றன. அதற்கு இங்கு விரல்விட்டு எண்ணக்கூடிய சில கவிஞர்களையும் இனங்காட்டி முடியும். இது கவிதையின் சமகால பங்களிப்பு. அல்லது கவிதையின் புதிய மாற்றம் என்றே சொல்வேன். ந.பெரியசாமியின் இந்த தொகுப்பிலும் இப்படியான பல கவிதைகள் இருக்கின்றன. உண்மையில் இவரது கவிதைச் செயல் அடுத்த நிலைக்குத் தாவியிருக்கிறது என்று இதைவைத்தே நான் சொல்கிறேன். அதற்கு மிகச் சரியான உதாரணமாக, அவரின் தொகுப்பின் பேரில் அமைந்திருக்கும் – தோட்டாக்கள் பாயும் வெளி – என்ற கவிதையை சொல்ல்லாம்.
கவிதைத் தொகுப்புகள் விற்பனையாவதில்லை. பதிப்பகங்கள் விரும்பி பதிப்பிப்பதில்லை எனவும், இது போன்றும் பல கதைகள் நிலவுகிற இன்றைய நிலையிலும் தமிழ் கவிதை தன்னை பெரியதொரு மாற்றத்திற்குள் உட்படுத்திக்கொண்டிருக்கும் காலமும் இதுதான். இதை புரிந்துகொண்டு, விமர்சனங்களையும், விவாதங்களையும் முன்வைக்காமல் நமது விமர்சகர்கள்தான் (இன்று விமர்சகர்கள் இருக்கிறார்களா? சிலரைத் தவிர) தள்ளிப்போட்டுக்கொண்டு போகிறார்கள். கவிதையை அடையாளம் காணும் வாசிப்பிற்கேற்ற புரிதலை தமிழ் விமர்சகர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை. (சிலரைத்தவிர) அந்தச் சிலரும், சிறு குறிப்பு என்றளவிலே தமது பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கவிதைப் பிரதியின் எல்லைக்குள்ளாக ஒரு சூழலையும், கவிதைச் சம்பவங்களாலான ஒரு வாழ்வையும் (அல்லது வாழ்வின் தருணங்களையும்) புனைவதும், அந்தப் புனைவை புறத்திலுள்ள வாழ்வுக்கும், சூழலுக்கும் பதிலீடற்ற ஒரு புதிய அனுபவமாக மாற்றுவதுமே நவீனம் கடந்த கவிதையின் அடிப்படைச் செயலாகும். அது எந்த வகையிலும் பிரதிபலிப்போ, பதிலீடோ அல்ல. முற்றிலும் புதிதாக எதிர்கொள்ள வேண்டிய புனைவு விதிகளால் வழிநடாத்தப்படுகின்ற ஒரு பிரதி அவ்வளவே. அதில் சூழலையோ, வாழ்வையோ (அல்லது வாழ்வின் தருணங்களையோ) தேட முடியாது. அதற்கு எந்த வித்த்திலும் வழிகாட்டியாக நவீனம் கடந்த கவிதைகள் செயற்படாது. ஆனால், கவிதைப் பிரதியில் இயங்கும் புனைவுச் சம்பவங்களுமக்கும், புறத்தே உண்மையாக மாறிவிட்ட புனைவுச் சம்பவங்களுக்குமிடையே இருக்கும் இடைவெளி என்பது ஒரு மனோநிலை மாற்றம் மாத்திரமே. அந்த மாற்றம், கவிதையனுபவங்களால் ஏற்படக்கூடிய ஒன்றுதானே தவிர வேறில்லை.
அந்த மனநிலை மாற்றம் எப்படிப்பட்டதெனில், இன்றைய வாழ்வும், சூழலும் நல்லநிலையில் இல்லை என்பது மாத்திரமல்ல, இற்றைவரை கண்ட்டைந்த மதங்கள், த்த்துவங்கள், விஞ்ஞானகொடைகள் எதனாலும் சரிசெய்ய முடியாதுபோயிருக்கின்ற வாழ்வும், சூழலும் என்பதும் அதற்குள்ளே அடங்கியிருக்கிறது.. எனவே, இப்படியான சூழலையும், வாழ்வையும் மீண்டும் நினைவூட்டவும் பாதுகாக்கவும் கவிதைக்குள் அமர்த்திவைக்க நவீனம் கடந்த கவிதைகள் அனுமதிப்பதில்லை. முடிந்தவரை வன்முறையற்ற, தனக்கு ஏற்ற, எந்தப் பாதிப்புகளுமற்ற, அதிலும் இருக்கின்ற வாழ்வைவிட அழகிய வாழ்வை கவிதைச் சம்பவங்களாகப் புனைந்து காட்டும் கற்பனைச் செயலை நவீனம் கடந்த கவிதைகள் அவாவி நிற்கின்றன.
ஆம், ந.பெரியசாமி அவர்களும் இந்த தொகுப்பினாடாக அதில் பங்கேற்க வருகிறார். இன்னும் நவீன கவிதைகளின் பணியைச் செய்கின்ற கவிதைப் பிரதிகளும் இதிலுண்டு என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தோட்டாக்கள் பாயும் வெளி
மாடிக்கு ஏறுகிறீர்கள்
அமைதியான சூழல் இருக்க
கொண்டு சென்ற தாளை விரித்து
பிடித்த முயலை வரைகிறீர்கள்
ஏனோ நிறைவுகொள்ளாதிருக்க
ஒன்றிரண்டு மரங்களை உருவாக்குகிறீர்கள்
அழகு சூழ மகிழ்ந்தீர்
கணத்தில் கவலையடைந்தீர்கள்
முயல் தனித்திருக்குமென
இணை ஒன்றை தருவிக்கின்றீர்
இரண்டும் முத்தமிட்டபடி
சந்தோசமாக உலவிக்கொண்டிருக்கிறது
உங்களுக்கான இடமற்றிருப்பதை உணர்ந்து
நிழலான மரத்தினடியில்
ஒரு கல்லைப் போடுகிறீர்கள்
அமர்ந்து வேடிக்கையில் களித்திருக்க
மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.