Wednesday, May 30, 2012

நீ மட்டுமல்ல...

உன் வாசத்தின் தேசம் நெருங்க
பசுவின் மடியென புடைத்திருந்தன மரங்கள்
ஹுசேனின் ஓவியமாய்
ஊரின் முகப்பில்
உரித்து தொங்கவிடப்பட்ட மாடு
வரையத் தொடங்கியவனின் கோடுகளாய்
ஒழுங்கின்மையின் அழகில் தெருக்கள்
சுவரில் வழியவிடப்பட்டிருந்தன வீடுகள்
குழந்தைகளுக்கான நிறங்களை
ஒன்றிரண்டு பாழடைந்த வீடுகளும்
புராதனச் சின்னங்களாக
கதாமாந்தர்களின் ஒத்திகையை நினைவூட்டும்
வசிப்போரின் உடல்மொழி
வேறெதுவும் தெரியாதுபோலும்
தாய்மை கனிந்த வார்த்தைகளைத் தவிர
ஐயம் வேண்டாம்
கினற்று தவளையல்ல நான்
ஏன் மதுவாகினி
உன் வாழ்விடமும்
இவ்வளவு பேரழகாய் இருக்கிறதே...
0

நிறுத்தங்களற்ற பெருமைகள்

பார்வையின் ஈரம் மலர்த்தும்
வறண்ட பூக்களையுமென்றான்

தொட்டுச் செல்ல நாணத்தால்
உடல் சுருங்கும் செடிகளென்றான்
மற்றவன்

துப்பும் எச்சில் துளிர்க்கச் செய்யும்
மலட்டு விதைகளையுமென்றான்

உதிரும் ரோமங்கள்
உருவாக்கும் வலிமையான கயிற்றை
இது மற்றவன்

என்னில் பிறக்கும் வார்த்தைகள்
பாடமாகும் பள்ளியிலென்றான்

மற்றவனோ
தன் கனவு பிதற்றல்கள்
காவியமாகும் காலத்தாலென்றான்

இப்படியாக தொடர்ந்த
இருவரின் உரையாடல்களின்
வீச்சம் தாளாது இடை புகுந்தவன்
வாயடைக்கச் செய்தான்

நான் பெய்யும் மூத்திரத்தில்
மீன்கள் பறந்து வருமென...
0

காத்திருப்பு

விரிந்து கிடக்கும் பாலை நிலத்தில்
கையளவு நீரை கண்டடையும்
தவிப்புக்கு ஒப்பானது
வாழ்வின் துணையை அடைவதும்
தாகமற்றிருக்கலாமெனும்
நிம்மதி மூச்சுவிட
காத்திருந்தது போல்
ஏதோவொரு ரத்தபந்தம்
தன் மரணத்தால் நிகழ்த்தும் தள்ளிவைப்பு
பொதிந்து கிடக்கும் பழமையின் நாளை
மீண்டும் கண்டடைய
மண்டபங்கள்
மாய பூதங்களாக மறைந்து போக
கணக்கத் துவங்குகிறது உடல்
நுரைத்து நுரைத்து பொங்கும்
காதலாலும்...
காமத்தாலும்...
0

சிலை படிந்த பிசுக்கென...

சிரட்டையுள் தேங்கிய மழைநீர்
தாழம்பூவை சுகித்துக்கிடக்கும் நாகம்
பெரும் வனம் நுணுக்கி விதைகளாக அடைக்கும் பழம்
பூக்களை தன் உருவமாக்கும் வாசனை
கவிதைகளின் கூடு அடைந்த வார்த்தைகள்
முகவரியால் உயிர்துளிர்க்கும் கடிதங்கள்
தன் திறப்பால் உலகை விரிக்கும் கடவுச் சொல்
சிலைகளில் படிந்த எண்ணை பிசுக்கு
பாறைகளில் உறங்கிக் கிடக்கும் சிற்பம்
கண்ணீரில் நொறுங்கிக் கிடக்கும் உப்பு
தூக்கம் பிறப்பிக்கும் கனவு
நீரின் உயிராய் படிந்த பாசி...

இப்படித்தானே மதுவாகினி
அகம் பிணைந்து கிடந்தோம்
புறம் அறியா காலத்திலும்...

நன்றி: உயிர் எழுத்து

Tuesday, May 29, 2012

காத்திருந்த துளி
 
 துளி நீராக்கினேன் உயிரை
பசிய இலையொன்றில் மிதக்கச் செய்தேன்
பெரும் மழை பொழிய கரையவில்லை
சூரியன் வெப்பத்தை அதிகரிக்க
உயிர்ப்போடே இருந்தது
காற்று சுழன்று சுழன்று வீசிட
உதிர்ந்து போகாது
இலை நரம்புகளில் உருண்டோடி விளையாடியது
தாகம் மிகுந்த பறவையிடம்
இலை முடிச்சாக தோன்றி தப்பியது
விளையாடும் சிறுவர்களிடம்
இலையையும் மறைத்து
தனை காத்த துளி
மரம் வெட்டப்படுவதற்கு முந்தைய நாளின்
மதிய பொழுதொன்றில்
நிழலடைந்த மதுவாகினியின்
கண்ணம் வழிந்து அவலுள்
கரைந்துபோனது...
nantri: vallinam.com





Monday, May 14, 2012

நகைப்புக் காலம்












ஆழமிகு கிணற்றிலிருந்து
ராட்டிணங்களின் துணையின்றி
மேலேறி வந்தன முக்காலமும்
பெருமைபேசி பயணிக்கத் தூண்டின
வாழ்ந்த காலமும்
இருக்கும் காலமும்
ஏற்கனவே அறியப்பட்டிருக்க
எதிர்காலத்தின் புதிர் மினுங்க
பயணித்திட ஆவல் மிகுந்தது
எப்படியும் போகத்தானே போகிறாய்
புத்தி கூற
தயங்கிய கால்கள்
நோக்கின கடந்த காலத்தை
சிற்சில இன்பங்கள் இருந்தபோதும்
துன்பமிகு நாளே நிறைந்திருக்க
நிதானிக்கத் துவங்கினேன்
உன் நிழல்தரும் மண்
பறிக்கப்படுவதை பார்க்கத் தவறாதெவென
நடப்புக் காலம் நகைத்து மறைந்தது…

nantri:malaikal.com

Tuesday, May 8, 2012

தயக்க இலைகள்

குறுக்கும் நெடுக்குமாக
பின்னலிடப்படும் விவாதங்களின்போது
தெருப்பிள்ளையாராக தேமேவென இருப்பேன்
மௌனங்களின் அழுத்தங்களை
நகைப்பின் வழியே கசியவிட்டு
கைகுலுக்கி தனிமைகொள்ள
இருளோடு பேசிப்பேசி
துளிர்க்கும் தயக்க இலைகளை
கிள்ளி வீசிக்கொண்டிருப்பேன்
கூடுதலாகிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களின் எண்ணிக்கை...

நன்றி: உயிரோசை.காம்

Friday, May 4, 2012

சென்ன கேசவர்


பருவத்தில் பன்றியும் அழகுதான்

உரையாடலில் நகைப்பை சேர்த்தது
பவித்திரமான ஆடவனும்
பன்றி தலை பதிந்த யுவதியும் இருந்த
சிற்பம் பார்த்த கணம்
தகிக்கும் வெய்யலை விழுங்கி
மிளிர்ந்த சிற்பங்கள்
சூடு தாங்காத பாதங்களில் உருபெயர்ந்து
தத்தித் தத்தி நடைபயின்றன வளாகமெங்கும்
காட்டி பெருமைகொள்ள
அவசர அவசரமாக நிழல்படமாயினர்
கொக்கு நிறத்தவளோ
எதையும் விட்டுவிடாதிருக்க
கண்களை குளமாக்கி
அடுக்கியபடியிருந்தாள் சிற்பங்களை
தனியாத தாகத்தோடு
விழுங்கிய ரெக்கார்டர்களை
குரல் கம்ம துப்பியபடி கைடுகள்
மிடறு விழுங்கிய எச்சில்கள்
ஸ்கலிதமாய் பிசுபிசுத்து
ஏக்கத்தோடு திரிந்தனர் யுவன்கள்
யாரும் தீண்டாத மூலையில்
கழிவை மிதக்கவிட்ட குளத்தினுள்
முத்தமிட்டபடி இருந்தன ஆமைகள்
சென்னகேசவன் படியமர்ந்து பார்த்தபடியிருந்தார்.