Saturday, August 6, 2016

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி
மழையின் ரகசியத்தை
தன் கூட்டில் உணர்த்தி
உள்ளிருந்தது.
வழிப்போக்கனொருவன் மரம் ஒதுங்கி
நீர் அற்றுப்போன தன் ஊரின்
தவிப்பைப் பாடலாக்கினான்.
குளங்களை விதைகளாக்கி வைத்திருக்கும்
கதை கூறி ஒன்றை அவன்
கைகளில் விழச் செய்தது.
குமரிகள் நீர் மொண்டபடி இருக்க
குழந்தைகள் விளையாடினர்
மிதக்கும் தாமரை நோக்கி
வாலிபர்கள் நீச்சலில்.
காட்சிகள் பெருக்கம் கொண்டபடி இருக்க
குளவிதையை ஏந்தி நடந்தான்.
----------------
அன்புக்குரிய லதா ராமகிருஷ்ணன் அவர்கள் ஆங்கில மொழிபெயர்த்திருப்பது மிகவும் வசீகரித்தும்.. பெருமை கொள்ளவும் செய்கிறது. அவருக்கு என் அன்பும் நன்றியும்.
The Weaverbird
revealing the secret of rain in its nest
remained inside.
A traveller came to rest under the tree
and made the anguish of his native town
bereft of water into a song.
Telling a tale that had in it ponds turned into seeds
It made it fall into his hands.
With young girls fetching water
children played happily.
The youths swam towards the floating lotuses.
With scenes forever swelling
He walked on holding the seed of pond in his hand.
நன்றி :  Anaamikaa Rishi

Tuesday, July 12, 2016

பயணத்தில் கண்ட கதை முடிச்சுகள்...


கதைகள் சொல்லவும் எழுதவுமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. வாசிக்கும் கதைகளை விடவும் கேட்கும் கதைகள் மர்மமான குகையுள் நுழைந்து கொண்டே இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. இந்த அனுபவம் எல்லோருக்கும் பொதுவானதாகவும் இருப்பதில்லை. அப்படி இருக்க வேண்டிய கட்டாயமுமில்லை. கணேஷ் வெங்கட்ராமனின் டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்ட கதைகளாக இருந்தபோதும் அதன் தன்மை சொல்லும் கதைகளாகவும் இருக்கின்றன.
சிறுவனாக இருக்கும்போது எங்கள் ஊரில் வருடாவருடம் டூர் சீட்டு நடத்தி முடிவில் டூர் போய் வருவார்கள். அப்படி வந்தவர்கள் ஊரில் பார்த்தவற்றை பொங்கப் பொங்க ஆர்வத்தோடு சொல்லியபடியே இருப்பார்கள். ஒரு ஊரை பார்த்து வருவதில் இவ்வளவு கதை இருக்கா எனும் ஆச்சரியம் எனைப் பிடித்தாட்டும். எங்கள் குடும்பத்தில் அப்படி யாரும் போய் வராமலிருப்பது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கும். நீயும் டூர் சீட்டில் சேரும்மா என அம்மாவிடம் ஆசையாய் சொல்ல பொழப்புல முளைச்ச புள்ளப் புடுங்கவே நேரம் போதல. இதுல பொங்க வச்சி பூச வேற போடனுமா போடா போக்கத்தவனேயென திட்டிட அதுகுறித்து அம்மாவிடம் எப்பொழுதுமே கேட்பதில்லை. ஆனால் டூர் போய் வந்தவர்களிடம் போய் கதைகேட்டு ரசிப்பேன். ஒரே ஊரைப்போய் பார்த்து வந்தபோதும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதை இருப்பதும் எனக்கு பெரும் வியப்பூட்டும்.
கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' தொகுப்பில் பெரும்பாலான கதைகள் அவர் பயணித்தின் பொருட்டு சென்று வந்த வெளிநாடுகள், அங்கு அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள், அவரை ஈர்த்த சூழல்களை கதைகளாக்கி சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆபத்தான இம் முயற்சியில் வெற்றியும் தோல்வியுமான கலவையோடு கதைகள் உள்ளன.
தைவானில் உள்ள டைசுங் நகரில் இருக்கும் புத்தர் சிலை பார்த்த அனுபவத்தை காட்சிபடுத்தப்பட்டிருப்பது நம்மையும் உடன் அழைத்துச் செல்லப்பட்டதுபோல் இருந்தது. சிரிக்கும் புத்தர் சிலை நம்மையும் ஆச்சரியப்படுத்தியது. இவருக்கு இரண்டாவது தரிசனமாக அமைந்தது அங்கு வேலை பார்க்கும் முதியவரின் முதுகில் பச்சை குத்தப்பட்ட புத்தர். வியர்வையோடு மினுங்கிய பச்சை புத்தரே நம் நினைவிலும் இருப்பார்.
ஒருவர் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் அவர் இத்தொகுப்பை வாசித்திருப்பாரேயானால் உறுதியாகச் சொல்லலாம் எவ்வித இன்னலும் இன்றி நிறைவான பயணத்தை அனுபவித்து விடலாம். அதற்கான வழிகாட்டுதலும் இத்தொகுப்பில் உள்ளன.
சம்பவம்-1
நண்பரின் அறை ஒன்று பகலில் பிளாஷ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சா¬லாயாகவும், இரவில் அவர் வாசிக்கும் நூலகமாகவும் மாற்றம் கொள்ளும். அங்கு வந்துபோகும் நண்பர்கள் தேவையான புத்தகத்தை எடுத்துபோய் வாசித்து பின் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அந்த அறைக்கு ஒருநாள் சென்றேன். பெரும் மாறுதலோடு இருந்தது. புத்தகம் இருக்கும் பிரோவின் முன் பெரிய பிளாஷ்டிக் மூட்டை வைக்கப்பட்டிருந்தது. என் பார்வையால் என்னுள் இருக்கும் கேள்விக்கு பதிலைத் தந்தார். நண்பர்களை திருடர்களாக்கிப் பார்க்க விரும்பவில்லை அதனால்தான் இம்மாற்றம் என்றார்.
சம்பவம்- 2
தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னங் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிகவுழன்று- பிறர்... என நீளும் பாரதியாரின் கவிதை வரிகளோடு அவரின் உருவம் பதித்த தாள் ஒன்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவர் அதை ரசித்து பார்த்தபடி இருந்தார். சிறிது நாள் கழித்து அவரின் வீட்டில் ஒரு விழாவிற்காக சென்றிருந்தேன். நான் பத்திரப்படுத்திய தாள் அங்கு அழகான சட்டமிட்டு மிகக் கம்பீரமாக தொங்கிக்கொண்டிருந்தது.
மேற்கண்ட சம்பவங்களும் தொகுப்பிலிருக்கும் சரவணரவி எனும் கதையை வாசிக்க நினைவில் வந்தன. சரவணரவி கதையிலும் வெகுநாட்களாக பாதுகாத்த போட்டோவை வீட்டிற்கு வந்திருந்த நண்பரிடம் காட்டி பெருமை கொண்டு பழைய நினைவில் லயித்திருந்தனர். அவருக்கு விருதிட்டு வழியனுப்பி வைத்தனர். ஆனால் அவர் விடைபெற்றுச் செல்லும்போது அவரோடு அப்புகைப்படமும் போய்விடுகிறது.
கெட்ட கெட்ட கனவாக வருது. எப்ப பாரு ஒரே கனவு, இடத்த மாற்றிப் படுக்கனும், கெட்டதை கனவில் கண்டால் நல்லது நடக்கும். நல்லதை கனவில் கண்டால் கெட்டது நடக்கும். கனவு கண்டமாதிரியே ஆகிடுச்சிப்பா, என இப்படியான சொல்லாடலை அடிக்கடி கேட்டபடியே இருப்போம். படைப்பாளிகளிடமிருந்தும் கனவு எப்படி தப்பி விட முடியும். கணேஷ் வெங்கட்ராமனும் 'கனவு நோயாளி' எனும் கதையில் இருளுக்கும் உடலுக்குமான உரையாடலில் நமை கவனிக்கச் செய்திடுகிறார்.
கலையும் பிம்பங்கள், வாசனை, சமிக்ஞை கதைகளில் வரும் கதை மாந்தர்களின் உலகு எனக்கு பரிச்சயம் இல்லாத உலகாக இருந்ததால் என்னால் அக்கதைகளோடு லயித்திருக்க முடியவில்லை. வெறுமனே சினிமா பார்த்து, சினிமா பார்த்து வருவது போன்ற மனநிலையே இருந்தது.
உறவுக்காரன், ஊர்க்காரன், ஆண்டான், அடிமை, படித்தவன், படிக்காதவன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே நேர்கோட்டுப் பார்வைதான் பெண் மீது என்பதை தொகுப்பில் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் சுட்டுகிறார் கணேஷ் வெங்கட்ராமன்.
வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணின் கதை கூறும் 'இரு குரல்கள்' மற்றும் தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களின் பலவீனங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை தன் எச்சில் பண்டமாக மாற்றுபவள் கதை கூறும் 'முதல் நாள்' கதைகளில் சக மனுசிகளின் துயர்களை கூறுவதன் மூலம் காலமாற்றம் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிந்தனை மாற்றம் இல்லாது இருப்பதை உணர்த்திடுகிறார். இரு கதைகளுமே வாசிப்பவர்களை தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவை.
பயணம் சார்ந்த கதைகளை தனிதொகுப்பாக்கி இருக்கலாம். இருவித மனநிலைகளோடு வாசிக்க வேண்டிய தொகுப்பாக உள்ளது கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்'
வெளியீடு- காலச்சுவடு.
nantri:malaigal.com

Thursday, June 30, 2016

தானியக்காளியின் முத்த விதைகள்...

தனித்திருந்தேன் மதிய பொழுதொன்றில். சூரியன் உடலுக்கருகில். எல்லாவற்றின் மீதும் எரிச்சல் அருவியாக கொட்டியபடி இருந்தது. எதன் மீதும் நாட்டங்களற்றிருந்தேன். பாலைக்கான நிறத்தை கொட்டியபடி இருந்தது காலம். வாசல் திறந்தது. முத்தம் ஒன்று உடல் அணைக்க சூரியன் விலகியது. குளிர்மையின் நிறம் அறையுள் நிரம்பிக்கொண்டிருந்தது. எல்லாவற்றின் மீதும் பற்றுகள் அரும்பத் துவங்கின. முத்தத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சக்திஜோதி முத்தத்தின் வலிமை உணர்ந்தவர்போலும். அவரின் பெரும்பாலான கவிதைகளில் முத்தத்தின் ஈரத்தை உணரலாம். மழைக்குப்பின் இலைகளில் தேக்கி வைக்கும் சொட்டு துளி போல் இவரின் கவிதைகளில் முத்தம் தொக்கி நிற்கும். மழைபோல் முத்தம் பேதமற்றது.

சக்திஜோதியின் கவிமுலை எப்பொழுதும் பாலை முத்தத்தின் ஈரத்தோடு நிறுத்தங்களற்று சுரந்தபடியேதான் இருக்கிறது. இது எல்லோருக்கும் வாய்க்காது. அவருக்கு வாய்த்திருக்கிறது. அவரும் அதை லாவகமாக கையாள்கிறார். நீர்த்துப்போகாது அவ் வார்த்தையை உயிர்ப்போடு வைத்திருப்பது அவரின் ஆளுமையாக இருக்கிறது. அக்கவிமுலை ஆதித்தாயின் முலையாகவும் மாறுகிறது. ஆதிப்பெண்களின் வலியை தன் கவிதைகளில் உணரச் செய்திடுகிறார்.

ஓதற்பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, காவற்பிரிவு, பொருள்வயிற் பிரிவு, பரத்தையற் பிரிவு என வெளியேறிப்போயிருக்கும் தலைவனுக்காக காத்திருப்பின் வலியையும், காத்திருப்பின் காலங்களில் அவர்களின் நினைவில் இருக்கும் காதலையும் இன்றைய மொழியில் அதன் வலிமையோடு தந்தபடி இருக்கிறார் கவிதைகளில். அப்படியான கவிதைகளை இவரின் ஆறாவது தொகுப்பாக வந்திருக்கும் சொல் எனும் தானியம் தொகுப்பிலும் காணமுடிகிறது.

தான் பிறர் கையகப்படுத்தும் நிலம் அல்ல என்பதை உணர்ந்து நிலவை தனதாக்கிக் கொண்டு சூரியனை நோக்கி பயணிப்பவள்...

தன் வேலை நிமித்தமான பிரிவின் காலங்களை மகளின் ஓவியங்களில் கண்டடைபவள்..

புறப்புகார்களில் வெறுப்புற்று தன்னை தனிமைப்படுத்தி சொற்களின் ஆழம் கண்டு மௌனத்தில் ஆரவாரிப்பவள்...

தன் கனவின் ரகசியங்களை பறவைகளுக்கு இரையாக்குபவள்...

கால மாற்றத்திற்கேற்ப அப்பா மகள் உறவுகளில் ஏற்படும் மாற்றத்தை தன் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கத்தோடு கவனித்திருப்பவள்..

தன் இயல்பை கணித்து பஞ்ச பூதமாக பரிணமித்திருப்பவள்...

புதிரும் மாயங்களும் நிறைந்த வாயிற்கதவை என்றுதான் திறக்கப்போகிறீர்களோவெனும் எதிர்பார்ப்போடு இருப்பவள்...

வானுயர வலம் வரும் தேவனுக்காகவும், பால்ய சிநேகிதிக்காகவும் காத்திருப்பவள்...

வனதேவதையாக மின்னலை வெடிப்புறச் செய்து தீக்கோளமாகி நடனமிட்டு காமத்தை விளைவிப்பவள்...

உள்கிடக்கும் அழுக்கு, தோய்ந்த குருதி, துயருற்ற கண்ணீரின் உப்புப் படிமமென எல்லாவற்றையும் முத்தத்தால் கலைத்து காத்திருப்பவள்...

கூந்தலில் வழியும் பச்சை மழையை வேடிக்கை பார்த்திருப்பவள்...

முந்தானையில் நிரப்பி வந்த கூலியால் வீட்டின் பசியாற்றி நிலமெங்கும் காதலை விளைவித்துக்கொண்டிருப்பவள்...

தன்னிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யாவற்றையும் நேசிப்பவள்...

இங்கு எல்லாம் பெண்ணாகவே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கென்று ஏதுமில்லை எனும் நிலையில் இச்சமூகம் வைத்திருந்தபோதும் அன்பின் நிலமென இருக்கிறேன் எனும் பெருமிதம் கொள்பவள்...

தன்னுள் இருக்கும் காதல் சுரபியின் காரணம் தெரியாது வியந்து கிடப்பவள்...

விடுவித்துக்கொள்ள இயலாத சிலிப்புறும் கணங்களை வரிசையிட்டு விடுவித்துக்கொள்ளப்போவதாக பாவனை செய்பவள்...
சூரிய வாசம் உணர்ந்து தன்னை ஒப்புக்கொடுத்த தினத்தின் நினைவுகளை காட்சிப்படுத்துபவள்...

கடல் சேரா கூழாங்கற்களின் இசையை கேட்டபடி வெயில் நதியில் தகித்திருப்பவள்...

திளைத்திருந்த கணங்களை காட்சியாக்கி கொண்டாடக் கூப்பிடுபவள்...

மௌனப் பரிசில் நிரம்பி விடுபவள்...

பனித்துளிகளை சுவைப்பவள்...

கிடைத்த  கிடைக்கும் முத்தங்களை, உடலை நெகிழச்செய்து கண்களை சிவப்பேற்றிய முதல் முத்தத்தோடு பொருத்திப் பார்ப்பவள்..

புராதன வேட்கை எதுவென அறிந்து கொள்ள இளமையை தொலைத்தேனா அறிந்தேனா எனும் குழப்பங்களோடு இருப்பவள்...

நீர்க்கால்களின் தடம் அறிந்து அருந்த வல்லவரை தன் இமைக்குள் வைத்து நீலவானமாக ஒளிர்விக்கச் செய்பவள்...

மாசற்றது நிர்வாணம் என பெருமை பூப்பவள்...

கசடுகள் நிரம்பிய மனதோடு காலங்காலமாக உடன் வாழும் சக இனத்தை தங்களின் சவுகரியங்களுக்காக பெரும் துரோகங்களை விளைவித்துக்கொண்டிருப்பதால் உண்டான தொடரும் தூக்கமற்ற இரவுகளின் வலியைக் கூறி சவம்போல் யுகாந்திர உறக்கம் எனை தழுவட்டும் என வேண்டுபவள்...

மனதில் தாவரங்களை வளர்த்தபடி இருப்பவள்...

நிலைத்திருத்தலில் தன் இயங்குதல்களை கண்டடைந்தவள்...

ஒளிர்தலின் மர்மங்களை சொற்களாக்கி பூசிக்கொண்டிருப்பவள்...

வீடு மட்டுமே தன் உலகமல்ல என வாழ்பவள்...

காயப்படுத்தியது போதும் ஒரு முத்தம் அல்லது ஒரு சொல் போதுமென இறைஞ்சுபவள்...

கொடுக்கப்படாத முத்தத்தை உடலில் துளிர்க்கச் செய்திருப்பவள்...
என எண்ணற்ற பெண்களை சொல் எனும் தானியம் தொகுப்பில் தரிசிக்க இயலுகிறது.

சொல்லப்படும் சமாதானங்களிலும் சுயமான சமாதானங்களிலும் தங்கள் வாழ்வை இயல்பாக நகர்த்தியபடி இருக்கும் பெண்களின் வலிகளை இத்தொகுப்பெங்கும் சக்திஜோதி விதைத்தபடி செல்கிறார்.

நன்றி- படிகம்

Thursday, June 23, 2016

சொற்களற்ற அனுபவங்கள்...


பாம்புகள் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். தன் தோலை உரித்து வெளியேறுவதன்
மூலம். அவ்வப்போது வாசகனும் தன்னை புதுப்பித்துக்கொள்ளச் செய்ய வேண்டி
இருக்கிறது. மொழி அதற்கான தேவையை உருவாக்கிவிடுகிறது.

வாசிப்பின் ஆரம்ப காலங்களில் கவிதைகளை உரத்து வாசித்து ஒலியை உள்வாங்கி
ஒளிப்படமாக்கி பார்ப்பதுண்டு. எவ்வளவு அவசர கதியில் இருந்தாலும் ஏதோவொரு
ஒளிப்படம் நம்மை நிதானிக்கச் செய்வதுபோல சில கவிதைகள் நிதானிக்கச்
செய்தன. பின் கவிதைகளை ஓவியமாக்கிப் பார்த்து ரசிக்கத் துவங்கினேன். இதை
என் வாசிப்பின் அடுத்த படிநிலையாக பார்த்தேன். சில ஓவியங்கள்
தூக்கமிழக்கச் செய்தன. வேறு ஓவியங்களை வரையவும் தூண்டின. எதையும்
உற்றுநோக்கி உள்பிரியும் வேர்களோடு பயணிக்கச் செய்து திரளும் சிறு சிறு
முடிச்சுகளை நீவிப்பார்த்து மனம் லயித்துப்போய் கிடப்பதுண்டு. இப்படியான
சூழலில் நரனின் ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ தொகுப்பின் கவிதைகள்
புரிதல் சார்ந்த விளையாட்டுகளை நிகழ்த்திப் பார்க்கச் செய்தன. சில
கவிதைகள் கைகளை மூடிக்கொண்டு உள் இருப்பதை அறிய செய்யும் விளையாட்டில்
தோற்பதும் ஜெயிப்பதுமான நிலை இருக்க ஆர்வம் குறையாது தொடர்ந்து பயணிக்கச்
செய்தன. சிறு சிறு கீச்சுமூட்டலில் கைகளை எளிதில் விரித்திடும்
குழந்தைகளாக இல்லாமல் அதற்கான சிரத்தையையும் உழைப்பையும் கோரின கவிதைகள்.
சில கவிதைகள் பிரிக்க இயலாது பசைகள் இறுகிப்போயி இருந்ததால் போதும் என்று
கடக்க வேண்டியும் இருந்தது. வேறு சந்தர்ப்பங்களில் மீண்டும்
முயற்சிக்கலாம் என விட்டுவிட வேண்டியதாகிவிட்டது.

‘சிறிய தோட்ட’ தொகுப்பின் முதல் கவிதை உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி
அனிச்சையாக கைகள் அருகிலிருக்கும் குழந்தைகளை வருடத் துவங்கின. போரில்
எதையெல்லாம் செய்யக்கூடாதென்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கும் நம்
காலத்தில் நடந்த சிங்கள அரசின் இன அழித்தொழிப்பு போர். தொலைக்காட்சியில்
பார்த்த குழந்தைகளின் முகம் என்றும் நீங்கா காட்சியாக மனதில் இருக்கும்.

அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா குழந்தையின் உடலுக்கென...

என முடியும் இக்கவிதையின் நீட்சியாக பார்க்கலாம் ‘எப்படியும் இறக்கப்
போகிறோம்’ கவிதையை. உழவு கழப்பையை கழு முனையாக நிமிர்த்தி வைத்து ஒழுங்கு
குலையாது வரிசையாக நின்று தற்கொலை செய்துகொள்ளம் விவசாயிகளின் உதிரங்களை
குதிரைச் சக்தியாக்கி விரைந்து அழிவை உண்டாக்கி வெற்றிகொண்டபடி இருக்கும்
வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரபோக்கை சுட்டுகிறது
கவிதை. ஆனால் நாமோ எதையும் கண்டுகொள்ளாது நம் மலைகளை டெண்டர் விட்டு
மெருகேற்றி சமதள பலகையாக்கி பூங்காக்களில் வேடிக்கை பார்ப்பதை கவலையோடு
‘காதை மூடிக்கொள்’ கவிதையில் காட்சிபடுத்தியுள்ளார். காலங்களையும்,
வரலாறுகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், மூதாதையரின் வாழ்வையும்
தாங்கி ஆதி உயிராய் இருக்கும் மலைகளை சிறு சிறு ஜெலட்டின் குச்சிகளால்
தகர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதன் துயரம் எப்பொழுது போராட்டமாக
உருக்கொள்ளுமோ தெரியவில்லை.

ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் அவன் மட்டுமே அந்நிறுவனம் சார்ந்து
இருப்பதில்லை. அவனது குடும்பமும் அந்நிறுவனம் சார்ந்தே இருக்க வேண்டியதாக
இருக்கிறது. குடும்பத்தின் நிகழ்வுகளைக்கூட தீர்மானிப்பது
நிர்வாகமாகத்தான் இருக்கிறது. நேரடியாக வேலை பார்க்காவிட்டாலும் குடும்ப
உறுப்பினர்களும் நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக
இருக்க வேண்டி இருக்கிறது. ஒருவனுக்கு மட்டும் குறைந்த கூலியை
கொடுத்துவிட்டு ஒரு குடும்பத்தையே தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும்
உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் போக்கை வெளிப்படுத்துகிறார் ‘’ஷூ’’
கவிதையில்.

காலையில் விடைபெறும் போது மனைவியின்
உதட்டைக் கவ்வி அவள் நாவை என் எச்சிலால்
ஈரப்படுத்துவேன்
-பதிலீடாய் அவளும்-
தினமும் அலுவலம் வந்ததும்
என் எஜமானனின் ‘’லீ கூப்பர்’’ கால் பதாகைகளை (ஷூ)
நாவால் நக்கி சுத்தப்படுத்துவேன்.

மனைவியின் நாவால் வலதுகால் ‘’ஷூ’’ சுத்தமாச்சு.
இத்துயர் அறியா உழைப்பாளிகள் இன்னமும் விசுவாசமாக வாழ்ந்துகொண்டிருப்பது
பெரும் சோகம்.

சாதாரணங்களை அசாதாரணங்களாக மாற்றுகையில் படைப்பாளிகளின் நுட்பம்
கொண்டாடப்படுகிறது. கல் குதிரை முதுவேனிற்கால இதழில் வந்த இசையின்
‘’நளினக்கிளி’’ கவிதை எல்லோரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.
இத்தொகுப்பில் இருக்கும் ‘பறவை’ கவிதையும் அப்படியானதொரு நுட்பமான
பார்வையை அழகியலோடு வெளிப்படுத்தும் கவிதைதான். பச்சை குத்தப்பட்ட பறவையை
பறவையாகவே பார்க்கும் இக்கவிதையில் இயங்கும் குழந்தை மனம் எல்லோருக்கும்
பிடித்தமானதாகவே இருக்கம். தன் நுட்பத்தால் வாசகனை வியப்பிற்கு
உள்ளாக்கும் நிறைய்ய கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு. ‘பேரம் படியாத போது
கவிதையில் இருக்கும் லாடக்காரன், வரைந்த மலைப்பாம்பில் அயர்ச்சியோடு
தூங்கியவன், யோனியை குளிர்ந்த சூரியனாக்குபவள்... என நீளும் கவிதைகள்
உண்டு.

எதையாவது செய். பிறரின் கவனத்தை நூல் அளவிலேனும் ஊடறுத்து விடு
என்பதாகத்தான் பட்டது வரையப்பட்ட குகைக்கும், வரையப்படாத குகைக்குமான
வேறுபாடுகளை கூறும் ‘தைலவர்ண கரம்’ கவிதை.

நாளிதழ்களில் வரும் குழந்தைகளுக்கான பகுதியில் செய்துபார்க்கும்
பயிற்சிக்காக வரையப்படும் உருவங்கள் அதில் காட்சிபடுத்தியுள்ளதை விடவும்
வேறுவிதமான அழகியலோடு குழந்தைகள் வெளிப்படுத்துவதுண்டு. இத்தொகுப்பிலும்
சில கவிதைகள் வேறுவிதமான அனுபவங்களை ஏற்படுத்துகின்றன. மொழியில்
எனக்கிருக்கும் பற்றாக்குறையால் அதன் நுட்பங்களை காட்சிபடுத்த
தெரியவில்லை. என் வாசிப்பின் போதாமையை உணரச்செய்தன கவிதைகள்.
படைப்பாளியின் அனுபவங்களை கண்டடைவதும் அதன் காட்சியமைப்பில்
லயித்துப்போவதும். அக்காட்சியமைப்பு நெடுநேரம் மனத்திரையில்
ஒட்டிக்கிடப்பதும் நிகழ்ந்தபடியே இருக்கிறது. ‘பசியோடிருக்கும்
கரையான்கள்’, ‘மரமேறத் தெரியாதெனச் சொன்னவன்’, ‘2 பாயிண்ட் தீவிரம்’
போன்ற கவிதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

நாம் எவ்வளவு அப்பாவிகளாக இருந்து ஏமாற்றம் கொண்டு அடிமை வாழ்விற்குப்
பழகிப்போகிறோம் என்பதை ‘கனவு தானே நண்பா...’ கவிதை சுட்டுகிறது.
தொடர்ந்தாற்போல் இருக்கும் ‘இங்கே’, ‘உணவு வு...ண...உம் குறிப்பிடத்தக்க
கவிதைகள். நம்மை ஆளும் நாற்காலி சாயம்போன பழுப்பேறிய சிந்தனை படிந்து
அதில் அமரும் முகம் மட்டுமே மாறிக்கொண்டிருக்க நாம் வாழ்வில் எவ்வித
மாற்றமும் அற்று உடலில் இருக்கும் சவுக்கடி விளாறுகளை
‘ரே-பான்’,’ரீபோக்’-களால் பளபளத்திருப்பதை வல்லரசு வாழ்வில் மக்கள்
மகிழ்கிறார்கள் என வாய் கூசாது அரசுகளின் புழுகு நீடிப்பதை
உணர்த்துகிறது.

பெரும் துயர்களையும், அழிவுகளையும் அவ்வப்போது மட்டும் நினைவில்
வைத்திருந்து காலப்போக்கில் எவ்வித சலனமும் இன்றி மறந்து விடுகிறோம்.
நம்மை மறதி மிக்கவர்களாக வைத்திருப்பதில் ஊடகங்கள் பெரும்
பங்காற்றுகின்றன. ஆனால் படைப்பாளிகளோ அதை நமக்கு நினைவூட்டிக்கொண்டே
இருப்பார்கள். இதை முரகாமியின் ‘யானை காணாமலாகிறது’ கதை வெகு அற்புதமாக
சித்தரித்திருக்கும். நரனும் ‘நிறை மஞ்சள் கோதுமை’ கவிதையில் போபாலில்
அடுக்கி வைக்கப்பட்ட ஓராயிரம் மண்டை ஓடுகளை நினைவூட்டி மீண்டும் அதற்கான
சூழலில் வாழ்கிறோம் அணுஉலைக் கழிவால் உண்டாகப்போகும் அழிவை நினைவு
படுத்துகிறார்.

தேசத்தில் நாம் தொலைத்தவைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில்
தேசத்தையே தொலைத்துக்கொண்டிருக்கிறோம் எனும் உண்மை உரத்துக் கூறுகிறது
இத்தொகுப்பு.

கவிதைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. வேறுவிதமான பார்வைகளோ, முயற்சியோ
இல்லை என சலிப்பும் வருத்தமும் அடைந்து பேசிக்கொண்டிருப்பவர்களின்
கைகளில் நம்பிக்கையோடு திணிக்கலாம் நரனின் ‘ஏழாம் நூற்றாண்டின்
குதிரைகள்’ தொகுப்பை.


வெளியீடு
கொம்பு
எண்-11, பப்ளிக் ஆபிஸ் ரோடு,
தேவி தியேட்டர் எதிரில்,
நாகப்பட்டினம்-611 001
விலை-ரூ.60.

nantri:malveedu

Wednesday, June 22, 2016

கதை மாந்தரான கனவுகள்

கதை மாந்தரான கனவுகள்


சிகரெட்டின் வெளிச்சம் மட்டுமே உள்ள அறையில் மது அருந்தினோம். கடைசி புகையை இழுத்து இருட்டாக்கினாள். லைட்டரின் ஒளியில் அவளின் முகம் பிரகாசித்தது. எதையோ பேசியபடி இருந்தோம் அம் மீச்சிறு வெளிச்சத்தில்...

தன்னுடைய மொழிபெயர்ப்புப்  புத்தகமென நீட்டினார். ஆர்வம் பொங்க கைகளை நீட்டினேன். தராமல் மீண்டும் பையில் வைத்துக்கொண்டார். வேறு நிலத்தின் கலாச்சாரம் பண்பாடு மொழிப்பற்று என பேசிக்கொண்டே இருந்தார். நான் புத்தகத்தை பெற மீண்டும் கைகளை நீட்டினேன். மொழியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இது பயன்படாதென மறைந்தார்...

படுத்திருந்தேன். குழந்தைகள் கும்பலாக வந்தனர். அவரவர் கையில் ஜாமெண்டரி பாக்ஸ் கருவிகள். ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த கோடுகளை வரைந்தனர். குறும்புக்கார சிறுவன் குறியில் அம்பு பாய்ச்சி விளையாடினான். வெளியேறிய இரத்தம் ஓவியமாகிக்கொண்டிருந்தது...

பழைய கட்டிடம் ஒன்றினுள் நுழைகிறேன். அங்கிருக்கும் காவலாளியை ஏமாற்றி அரிதான நாணயங்களோடு வெளியேறுகிறேன். எதிரில் சைரன் ஒலியற்று ஜீப் ஒன்று வந்தது. உள்ளிருந்து நீண்ட குழாயிலிருந்து வெளியேறிய சிறு குண்டு என் உடலில். நாணயங்கள் இரத்தத்தில் மிதக்கத் துவங்கின...

தெருவில் சித்திரம் தீட்டியபடி இருந்தவனை அழைத்து வந்தேன். எனது ஆடைகளை அணியக் கொடுத்து பசி மறக்க சோற்றை கவளம் கவளமாக ஊட்டினேன். வீடு சித்திரங்களின் வசிப்பிடமாக மாறிக்கொண்டிருந்தது...

இப்படியாக எனக்கு வேறுவேறான கனவுகள் வந்துகொண்டே இருந்தன. தமிழவனின் 'நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்' தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில். எனக்கு சாத்தியப்படாத சூழலைக்கொண்ட சம்பவங்கள் என்னுள் குறுக்கீடு செய்தமையால் இக் கனவுகள் வாய்த்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். ஒரு பிரதியால் வாசகனின் கனவுத் தன்மையை மாற்றம் செய்ய முடிவது மகிழ்வுக்குரியது. நம் மொழி பற்பல பரிமாணங்களோடு பயணித்திருக்கிறது இத் தொகுப்பில்.

இத் தொகுப்பின் கதைகளில் கனவும் ஒரு கேரக்டராக வந்தபடி இருக்கிறது. உரையாடல்களாலும் சம்பவங்களாலும் மட்டுமே கதை நகராது கதை மாந்தர்களின் மனநிலை, சூழலின் மாற்றத்தோடு கொள்ளும் குறுக்கீடுகளே கதைகளின் மையமாகவும் இருக்கிறது. மொழி, கலாச்சார மாற்றம், பண்பாட்டின் மாற்றம், புதிய தலைமுறைகளின் மனவோட்டம், மொழி குறித்த பெருமிதம் அற்றுப்போன வாழ்வு என தோய்வற்ற சொல்லாடலில் புதுபுதுப்புதுக் காட்சிகளை தந்தபடியே இருக்கின்றன. மேம்போக்கான மனநிலையோடு இக்கதைகளை அனுகினால் நம்மை ஏமாற்றம் கொள்ளச் செய்யும். சில கதைகளின் கரு பழையதாக இருந்தபோதும் தமிழவன் தனக்கான உத்தியால் அதற்கு வேறு தன்மையை ஏற்படுத்திவிடுவதால் எவரும் நிராகரிக்க முடியாத தளத்திற்கு சென்றுவிடுகின்றன.

வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து தேடலற்று இருப்பதை வேற்றுப் பிரதேச வாசியின் குரலில் கேலி செய்கிறார் 'உங்களுக்கு பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?' கதையில். 'புரிந்து கொள்வாய் இறுதியாக' கதையில் தன் திருமண வாழ்வின் சாட்சியங்களை காட்ட மறுத்து, காதல் வாழ்வின் நினைவுகளில் வேறு வாழ்வை கலந்திட விரும்பாது வர்ஸாவில் வாழும் அன்னா நம் நினைவிலும் இருப்பாள். இவ்விரு கதைகளிலுமே கதை மாந்தர்களின் உரையாடல்கள் மட்டுமல்லாது கதை நிகழும் இடத்தின் பின்னணியும் கதையில் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதால் நல்ல சினிமாவைக் கண்ட நிறைவைத் தந்தன.

அடுத்தடுத்த வாசிப்புகளை செலுத்திய பின்னரே தன்னுள் இருக்கும் புதிரின் கண்ணியை காட்டத் துவங்கும் 'நால்வரின் அறையில் இன்னும் சிலர்' கதை. குற்றம், குற்றத்திற்கான காரணிகள் ஒற்றைத் தன்மையோ, பொதுத் தன்மையோ கொண்டதல்ல. மாறாக குற்றவாளிகள், குற்றவாளிகளாக ஆக்கப்படுபவர்களின் மனவோட்டத்தின் கூறுகளோடு தொடர்புடையது என்பதாக என் வாசிப்பில் கண்டேன். வேறு வாசகனுக்கு வேறான அர்த்தத்தையும் இக் கதை தரக்கூடும். அதற்கான மாயங்களோடுதான் அக் கதை இருக்கிறது.

விலாவழி குழந்தை பிறப்பு போன்ற கற்பனைகளை நிஜமென பாவிப்பவர்களின் மீதான எள்ளலோடு, அவரவர்களும் தன் சார்ந்த வேலைகளோடு இயல்பான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்க அறிவைத் தேடும் அரசனின் நிலையைக் கூறும் 'ஹர்ஷவர்த்தனின் அறிவு' கதைகள் சுவாரஸ்யமான நகர்வு.

பெற்றோர்கள் வேலை பார்க்கச் செல்ல தனித்து விடப்பட்ட குழந்தைகளின் மன உலகை சித்தரிக்கும் 'மூவரும் மௌனமானார்கள்' வாசிப்பின் இறுதியில் நம்மையும் மௌனமாக்கி விடுகிறார். இது போன்ற கதை ஏற்கனவே சினிமாவிலும், கதையிலும் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் தமிழவன் சொல்லியிருக்கும் உத்தி நம்மை பதட்டமடையச் செய்கிறது.

தங்களின் பொறுப்பற்றத் தன்மையால் வளம் சேர்க்க வேண்டிய மொழியை கண்டுகொள்ளாது தங்களுக்குள்ளான ஈகோக்களை சாந்தப்படுத்த மொழிக்கு துரோகம் செய்தபடி இருக்கும் நிறுவனங்களின் கேடுகளை விவரிக்கிறது 'மொழிபெயர்ப்பு நிறுவனம்'.

'அவனுக்கு என்னைப் பார்க்கிறபோது பார்வை இல்லாது போய்விடுகிறது பார்' எனும் 'அற்புதம்' கதையில் வரும் சொல்லாடல் தலைமுறைகளினிடையே ஏற்படும் மனச்சிக்கலை காட்சிப்படுத்துகிறது.

நம்மால் வெற்றிகொள்ள இயலாது போன செயலை, வேறு யாராகினும் வெற்றிகொண்டு தேர்ந்தவராக வலம் வருவதை சகிக்காது அவர்களின் மீது தொடர்ந்து சந்தேகப்பட்டவாறு இருப்பதை சித்தரிக்கிறது 'ஹெமிஸ்ட்ரி பாடம் புரியுமா?' .

என்றைக்காவது தட்டுப்படும் வித்தியாசமான நபர்கள், அவர்களின் செயல்பாட்டால் நம் வாழ்வில் தினசரி குறுக்கீடு செய்தபடியே இருக்க, என்றும் நம் நினைவில் தங்கிப்போய்விடுவதைக் கூறுகிறது 'யாருக்கும் தெரியாது' கதை.

ஒன்றைப்பற்றிய தொடர் நினைவால் இயல்பின் சமன் கலைய தானே அந்த நினைவாக மாற்றம் கொண்டு விடுவதை விவரிக்கிறது 'கொலை செய்யாதிருப்பாயாக'.

மொழியின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் நடத்தி உணர்வுப் பிச்சையில் உல்லாச வாழ்வை அடைவோர் நம் சிந்தனையை மட்டுப்படுத்தி விட்டதைச் சுட்டி ஒரு மொழி தொலையும் போது அவற்றுடன் நம் வாழ்வும் தொலைந்து போவது குறித்து கவனிப்பை உண்டாக்கும் கதையாக வந்துள்ளது 'மொழி'.

பதிலற்ற, பதில் கூற விரும்பாத கேள்விகளை தேர்வு செய்தபடியே இருக்கும் 'நடனக்காரியான 35வயது எழுத்தாளர்' என நம் நினைவில் காட்சிகளாக படிந்து நம்முடன் அடிக்கடி உரையாடலை நடத்தும் இத்தொகுப்பின் கதைகள்.

சில சொற்கள் கவிதையிலோ கதையிலோ வாசிக்க ஏனோ ஒரு வித அசூசை ஏற்படுவதுண்டு. 'மொழி' கதையில் கண்களுக்கு பட்டாம்பூச்சியை உவமையாக்கி இருப்பதைப் பார்த்து சலிப்பேற்பட்டது. தமிழவனிடம் நான் பட்டாம்பூச்சிகளை எதிர்பார்க்கவில்லை.

இத் தொகுப்பின் கதைகளில் உரையாடலின் போது இது அவன், அவள் இது, அவன் கூறினான், இவள் கூறியது என கதை சொல்லியும் கதையின் மாந்தர்களோடு கலந்திருப்பது ஆரம்பத்தில் இடையூராக தோன்றினாலும் அடுத்தடுத்த வாசிப்புகளில் கதைப்போக்கில் கதைமாந்தர்களோடு கதைசொல்லியும் இணைந்துகொண்டிருப்பது ரசிக்கத்தக்கதாக உள்ளது.

வெளியீடு
புது எழுத்து
2/205. அண்ணா நகர், கவேரிப்பட்டிணம்-635112.

நன்றி-தீராநதி

Thursday, June 9, 2016

வாசல் தெளிப்பின் மணம்...
அதிகாலையில் அம்மா தெளிக்கும் சாணத்தின் மணம் நிலத்தின் மணத்தோடு சேர்ந்து வெளியேற விழிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான குடும்பங்களில் வாசல் தெளிப்புக்குப் பின்னரே வீட்டிலிருக்கும் ஆண்களை வெளியேற்ற அனுமதிப்பார்கள். வீட்டையும் நிலத்தையும் என்றும் நினைவில் வைத்திரு என்பதாகப்படுகிற பழக்கம் இது. கதிர்பாரதியின் ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் தொகுப்பை வாசித்த பின் அம்மாவின் வாசல் தெளிப்பு மணம் நினைவிற்கு வந்தது.
கை விரல்களால் வீடு கட்டும் வித்தை கற்ற குழந்தைகளின் துள்ளல்களையும், கண்டிஷன்களின் சொற்கள் மிதக்கும் வாடகைவீட்டில் வெளியைச் சுருக்கி இறகு பந்தாடும் குழந்தைகளின் துயரையும் நமக்கானதாக்கிவிடுகின்றன கவிதைகள்.
வீடு
இரு கைவிரல் நுனிகளை
கோபுரமெனக் குவித்து
விடுன்னா இப்படித்தான் இருக்கும் என்று
புன்னகைக்கிற திலீபன்
மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும் என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்
நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
போதுமானதாக இருக்கிறது
இந்த வீடு.
தொகுப்பிலிருக்கும் திலீபன் குறித்த கவிதைகள் நம்மோடிருக்கும் குழந்தைகளின் உலகத்தையும் நினைவூட்டியபடி இருந்தன.
வெள்ளந்தியான மனம் நிறைந்திருப்போரும், உள் ஊறும் வன்மத்தை புன்னகையுள் ஒளித்து வைத்திருப்போரும் தம்தம் நிலைக்கேற்ப இப்புவியை விளையாட்டுக் களமாக்கி புள்ளிகளை சேகரிக்கும் சூட்சுமத்தையும். ஊர்ப்புறத்திற்கும் நகரமயமாக்கலுக்குமான மாற்றத்தில் சிக்குண்டவர்களின் மனப்பிறழ்வுகளை காட்சிபடுத்தியும் செல்கின்றன கவிதைகள்.
தேவனின் படைப்பில் உன்னதமானது பெண்ணெனக் கொண்டாடி, அவள் வராத கோடையில் பொசுங்கி, அருகில் வந்தவளின்பால் ஏற்பட்ட இன்பத்தைவிடவும் வந்து விடுவதாக நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் ஏற்படும் இன்பத்தை சுகித்தும், மழையை மார்பகமாக்கி தாகம் தணிப்பவனின் பெரும் காதலை முத்தத்தின் வழியாக வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன பெரும்பாலான கவிதைகள்.
உழவு மாடுகள், இறாபுட்டி, குலசாமிகளின் கதைகள், நீர்முள்ளிப் பூக்கள் நிறைந்த கனவு, பயிர்களின் பருவங்களுக்கேற்ற பாடல் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்த தாத்தாவின் உப்பு படிந்த உடலில் கிடந்து வளர்ந்தவன் தன்னிடம் ஏதும் இல்லாது போவதும், தாத்தா உயிராக நினைத்த நிலமும் மெட்டோபாலிடல் அரசியலுக்கு பலியாக்கப்படுவதும், விடுதலை உணர்வையும் நிம்மதியையும் தரும் நிலம் பெரும் கனவானதாகிவிட, சொந்தமாக ஒதுங்க ஒரு செண்ட் நிலமும் அதில் சிறு வீடும் கட்டவதற்காகவே வேலை ஓய்வுபெறும் வரை உழைக்க வேண்டியிருக்கிற அவலத்தையும் கிளறிவிடுகின்றன கவிதைகள்.
.............................
என் தாத்தாவிடம்
கண்ணீரும் தாகமும்கூட இருந்தன
மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்தவருக்கு
டமக்கரான் போத்தலில் தண்ணீர் வந்தது.
அதை முகத்தில் தெளித்து அவரைப் புதைத்தபோது
அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்.
பெறவேண்டிய உரிமையை பெரும் கனவாக்கி அதைநோக்கி நமை ஓடவைக்கிறது எஜமானர்களின் உலகம். கொஞ்சமான எஜமானர்கள் குரங்காட்டிகளாக இருந்து நமை குட்டிக்கரணம் போட வைத்து வேடிக்கைக் காட்டி அவர்களின் தட்டை நிரப்பி உல்லாச வாழ்வு வாழும் பல மல்லையாக்களை நினைவூட்டுகின்றன கவிதைகள்.
என்னவாகப்போகிறதோ எனும் பதட்டத்தில் வாசித்துக்கொண்டிருக்கையில் சிறுவன் சேனலை மாற்றிவிட ஆசுவாசம் அடைந்து ரசித்திடச்செய்தது 'மெய் நிகர் தீபம்'.
மொட்டைமாடியின் முத்தத்தை கடன் வாங்கி ஒளிர்ந்த கற்கள் நட்சத்திரமாகினவெனும் வரிகள் என்றும் நினைவிலிருக்கும்.
தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் ஆனந்தி மிளிர்கிறாள். ஆனந்தியின் பொருட்டு காதல் மிகுவதும், காதல் மிகுந்து சரணாகதி அடைவதும், சரணாகதி மிகுந்திட காமம் பிறப்பதும், காமம் பிறக்கையில் பெண் நிலமாக மாறுவதும், நிலம் என்பது சொத்து எனும் வஸ்துவாகிவிடுவதால் சொந்தமாக்கி உரிமை கொண்டாடுவதும், உரிமை அதிகாரமாக மாற்றம் கொள்வதும் கவிதைகளின் போக்கில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
நெடும் காலத்தின் நீட்சிதான் ஆண் எனும் அதிகாரம். அது நீண்ட ஆணி வேராக புதைந்து கிடக்கிறது. நம் வாசிப்பும் சக ஜீவிகளின் மீதான கரிசனமும் சிறிது சிறிதாக அதை பட்டுப்போக செய்துகொண்டிருக்கிறது. அது முற்றாக பட்டுப்போக வைக்கவும் முடியும். 'ஒரு குளத்துக் குரவையாக' கவிதையில் வரும் 'அதிகாரம் என் சொற்களில் மட்கி எருவாகும்' எனும் வரி அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
வெளியீடு- உயிர்மை பதிப்பகம்.
nantri:malaigal.com

Thursday, April 21, 2016

கனிவின் உருவானவளே...



நேரங்களை துல்லியமாக்கும்
உனதழைப்பு
நாள் கழிய நாள்
வாரம் கழிய வாரமென்றிருந்தது
எப்போதவதுதான் என்றான போதிலும்
முன்பிருந்த குளிர்மையும் இல்லை.

நிகழ்ந்துகொண்டிருக்கும்
காதல் பலிகள் குறித்த
உன் வார்த்தைகளின் வலியை மறக்கடிக்க
சந்திப்பு காலங்களில் நிகழ்ந்த
சம்பவங்களை நினைவூட்டுகிறேன்
மாற்றிடுகிறாய் பேச்சை.
உன் சாயலைக் காட்டி
ஏமாற்றும் நிழலைக் காணுமென் விழிகளில்
நமக்கேயான பொழுதுகளின் சித்திரங்கள்.
காலங்களில் படிந்த உன் சொற்களை
தேன் எடுக்கும் ஈக்களாக
சேகரிக்கத் தொடங்கினேன்
உருவானது பெருங்கூடு
துயர் நிரம்பிய நாட்களில்
கூட்டை கசிய வைத்திட
ஓடும் இனிப்பின் நதியில்
மிதந்து கிடக்கிறோம்.
nantri:theeranathi

Tuesday, March 1, 2016

மகிழ்வின் ஊஞ்சலாட்டம்


நம் உடலில் இருந்து பிரியும் நிழல் எத்திசையில் எவ்வளவு உயரத்தில் விழவேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க இயலாது. அது நம் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. நம் உடலில் இருந்துதானே வந்தது என்பதற்காக அதை நாம் எதையும் செய்ய இயலாது. அதன் போக்கு வேறானது. அதுபோல்தான் நாம் கானும் உலகிற்கும், காணத் துடிக்கும் உலகிற்குமான போக்குகள் வெவ்வேறானவை. இரண்டிற்குமான நீண்ட சுவர் கண்ணுக்குத் தெரியாமல் எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் மீது ஏறி நின்று காணாததை கண்டதுபோலவும், கண்டதை காணாதது போலவும் வாழ்ந்துப் பார்க்கிறோம். நம் வாழ்வு அகம்-புறம் எனும் இரட்டைத் தன்மையிலான உருண்டை. ஷாஅ வின் 'கண் புகாவெளி' தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் இந்த இரட்டைத் தன்மையிலான உருண்டையை உருளவிட்டிருக்கிறார். அண்மை-விலக்கம், இருத்தல்-இல்லாதுபோதல், மேல்-கீழ், நிஜம்-நிழல், வறட்சி-ஈரம், அடி-அந்தரம், ரகசியம்-அ ரகசியம் இப்படியாக அவ்வுருண்டையை பிரித்துப் பார்க்க தெரியும் அர்த்தங்களின் சுவையை அனுபவிப்பின் மகிழ்வில் ஊஞ்சலாடச் செய்கின்றன கவிதைகள்.
இயல்பான வாழ்வு என நாமாக நினைத்துக்கொண்டிருக்கும் இயல்பு வாழ்வில் ஏதாகினும் ஒரு சொல் அல்லது செயல் என ஏதோவொன்று அலைவு கொள்ளச் செய்யும். அவ்வாறு அலைவு கொள்ளும் தருணங்களை ஷாஅ கவிதையாக்கியுள்ளார். 'உள்ளே பந்து', கவிதையில் உருண்டபடி இருக்கும் பந்து, 'மணப் பொந்து' கவிதையில் மனம் குடையும் மரங்கொத்தி, 'உள் திரும்பிய அறை' கவிதையில் ஒளிவெளி, 'புன்னகை' கவிதையில் படபடக்கும் தாள், 'அறிமுகம்' கவிதையில் முகம், 'மனதில் நீச்சல்' கவிதையில் பழகா நீச்சல் என தொகுப்பில் தொடர்ந்தபடி நிறைய்ய கவிதையில் காண இயலும்.
முதல் பார்வைக்கு எரிச்சலூட்டும் சிலதுகள் அதனை நாம் உள்வாங்க மிகவும் பிடித்தமானதாக மாறிப்போவதுண்டு. கண் புகாவெளி தொகுப்பிலிருக்கும் 'யுவள்' கவிதை முதல் பார்வைக்கு எரிச்சலூட்டும் வடிவமைப்பாக இருக்க, அக் கவிதையை வாசித்தபின் அவ் வடிவமைப்பாளரிடம் மனதார மன்னிப்பு கோரினேன். அக்கவிதையை வாசித்த பின் அவ் வடிவமைப்பிலிருந்து நல்ல வடிவான பெண்ணொருத்தி எழுந்து வந்தாள். நினைவில் நிரந்தரமாக ஒரு உருவத்தை ஏற்றிவைத்துவிட்டது அப்பக்கம். ஷாஅ விற்கு அப்பக்கம் மேகலை என்றாள் எனக்கு அது மதுவாகினி.
நாம் நம் மொழியுடன் விளையாடிப் பார்க்க முயல்வதுண்டு. அவ்விளையாட்டு சில நேரங்களில் சுவாராசியமாகவும், பல நேரங்களில் சலிப்பையும் ஏற்படுத்தும். அதற்காக நாம் விளையாண்டு பார்க்காமல் இருப்பதில்லை. வெறும் சொற்களோடு விளையாட்டு நின்றுபோகாது சம்பவங்களோடும் இருக்க அவ்விளையாட்டு அதற்கான விளைவிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். இத் தொகுப்பில் ஷாஅ 'பூனையும் மதிலும்', 'ஞாயிறு', 'முக்கிய பாடன்' 'மீன் கலை', 'போ' போன்ற கவிதையில் தனக்கான விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார்.
போ
கும்
போது
ஆற்றை கடக்கிறது பாலம்
நதியுடன்
போ.
நேசிப்பு பொதுவானது. அதற்கு உயர்தினை, அஃறினை என்ற பாகுபாடு கிடையாது என்றே நினைக்கின்றேன். ஆண் பெண்ணை நேசிப்பதும், பெண் ஆணை நேசிப்பதும் போன்றே வேறு உயிரினங்களின் மீதான காதலும். ஷாஅ மலைகள் மீதான நேசிப்பு மிக்கவர் போலும் 'மலைகளின் குரல்' கவிதையில் அவரின் காதலை தரிசிக்க முடிகிறது.
-------------------------
-------------------------
வந்து
மேல் நுரையென
படிந்து
வாஞ்சையோடு அழைக்கின்றன
மலைகள் அழைத்துச் செல்லும் இடமும்
மலைகளுடன் நான் போய்ச் சேரும் இடமும்
இந்த முகம் பார்க்கும்
கண்ணாடி தீர்மானிக்கும்போது
அறிந்துகொள்வேன்.
திடுக்கிடல்களும் ஆச்சரியங்களும் சொல்லி வைத்து வருவதில்லை. அதன் நேரம் மர்மமானது. எக்கணமும் நிகழக்கூடியது. ஏற்படுத்தக்கூடிய திடுக்கிடல் உண்டாக்கும் ஆச்சரியங்களை விட எதிர்பாராது சம்பவிக்கும் திடுக்கிடலின் அனுபவம் அலாதியானது. ஷாஅவிற்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியத்தை கவிதையாக்கியுள்ளார். அதை நாமும் அனுபவித்து உணரத்தக்கவகையில் கவிதையாகி இருப்பது தனிசிறப்பு. மாடியில் காயும் துணி எடுக்கச் செல்கிறார். துனியின் நிழல் வீட்டின் பின்புறம் உள்ள மலையில் படிந்திருக்கிறது. அது இவருக்கு மலை சட்டை அணிந்திருப்பதுபோல் இருக்க திரும்பிவிடுகிறார். 'தலை பொருத்தம்' கவிதை ஷாஅ வை நினைவில் வைத்திருக்கச் செய்யும்.
காயப்போட்ட துணி எடுக்க
மொட்டை மாடி போனேன்
தூரத்து மலைகள்
என் சட்டையை அணிந்திருந்தன
ஒன்றையும் கழற்றத் தோன்றவில்லை
பேசாமல் தலையை கொய்து
மலைமேல் வைத்து
அவசரமாக படி இறங்கினேன்...
------------------------------------------
அலர்ஜி - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஏற்படுவதுண்டு. எல்லோருக்கும் ஒத்தமாதிரி பெரும்பாலும் இருக்காது. ஆனால் பள்ளிக்கூடத்தின் மீதான அலர்ஜி மட்டும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. எல்லா படைப்பாளிகளும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் அதை பிரதிபலிக்கச் செய்கிறார்கள். வீச்சான மாற்று ஏதும் இல்லாததால் நாமும் அந்த செக்கில் நம் பிள்ளைகளைப் போட்டு சுழல வைத்துக்கொண்டு இருக்கிறோம். இத் தொகுப்பில் ஷாஅ வும் தன் பங்களிப்பாக 'படிக்காத பாடம்' கவிதையில் வகுப்பறையில் இருக்கும் முயல்களுக்கான தன் கரிசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முழுமையடையாது தெளிவின்மையோடிருக்கும் கனவை ஒரு நிறை குடமாக்கி, வெளியெங்கும் சிதறும் துளியின் மையத்தை காட்சிபடுத்தி, களவு போன மலை குறித்து மழையோ மழையென்று கவலைகளை பொழிந்து, எதிரெதிர் நிலைகளின் இருப்பை இல்லை எனக் கூறுவதன் மூலம் இருப்பின் கவனத்தை அதிகப்படுத்தி, தான் தொலைத்ததைத் தேடும் பயணத்தில் முன்னர் தொலைக்கப்பட்டவைகளின் காலப்பொதியில் சுழன்று, ஆறுகள் நனையாது நதியாகும் காட்சியில் ஓடி, ஈரம் பட்ட தாளில் எழுதி, ஆச்சரியத்தில் நட்சத்திரம் அறிந்த கதைகேட்டு, வீட்டின் உயிராக கிடந்து, இலையிடம் கற்ற பாடங்களை அசைபோட்டபடி நம்மையும் இருந்திடச் செய்திடுகிறார் ஷாஅ தன் கண் புகாவெளியில்.
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
நன்றி- மலைகள்.காம்

Friday, February 26, 2016

ஞானப் பூங்கோதைக்காக ஒரு முத்தம்...


திரும்புதல். பயணத்திலிருந்து வீடு திரும்புதல் அல்ல. நினைவுகளில் மீண்டும் மீண்டும் விளைவிப்பின் நிகழ்விற்கு திரும்பிக்கொண்டே இருத்தல். வேலைக்காக, பொழுதுபோக்கிற்காக, செல்வதை மேய்ச்சல் நிலமாக்கி புறமனமாக கொள்ள, திரும்பிய இருப்பை அகமனமாக கொண்டால் திரும்புதலின் அனுபவத்தை முழுமையாக சுவிகரிக்க முடியும். நினைவில் நம்மை திரும்பச் செய்யும் வல்லமை படைப்புகளுக்கு உண்டு. பால்யம், காமம், துயரம், காலம் என திரும்பச் செய்யும் பட்டியல் நீண்டு கிடக்கிறது. திரும்புதல் என்பது மீண்டெழச் செய்யும் சாத்தியத்தை உருவாக்கும். தொடர்ந்து பயணித்தபடி இருக்க மீண்டெழுதல் அவசியமாகிறது. கண்டராதித்தனின் 'திருச்சாழல்' தொகுப்பும் திரும்புதல்களை நிகழ்த்தி மீண்டெழவும் செய்திடுகிறது.
----------------------
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
நெடுங்சாலையில் நடக்கிறார்
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி
எறிக்கொள்கிறீர்களா எனக்கேட்டார்
அப்போது ஸ்ரீமான்
ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.
எனக்காகவும் கடவுள் வந்திருந்த சம்பவங்களை திரும்பச் செய்திட்டார் வித்வான் ஷண்முக சுந்தரம். நேர்ந்திட்ட அவமானங்களுக்கு திரும்புதல் நேரவிருக்கும் அவமானங்களிலிருந்து தப்பிவிக்கவே செய்யும்.
நினைவில் பால் மாற்றம் கொள்ளும் தருணங்கள் எப்பொழுதாவது வாய்ப்பதுண்டு. அவ்வாறாக மாற்றம் கொள்கையில் மாறும் பாலினத்திற்கேற்ற சுபாவங்களும் நம்மை தொற்றிக்கொள்வது ஆச்சரியமானதாக இருக்கிறது. அவ்வாறான தருணங்களில் சிருஷ்டிக்கப்படுபவை உன்னதமானதாகவே இருக்கிறது. கண்டராதித்தன் ஞானப் பூங்கோதையாக மாறுவதும், பின் ஞானப் பூங்கோதையாகவே வாழ்ந்திருப்பதும் கவிதைகளில் கண்டடைய முடிகிறது. அதுவும் திருச்சாழல் கவிதை எண்ணிக்கையற்று வாசித்த கவிதை. சாழேலோ பெண்களுக்கான விளையாட்டு. கேள்வியும் பதிலுமாக சிவபெருமானின் பெருமைகளை உரையாடுவது. சிவபெருமானை சமகாலத்தவனாக்கி அலுவலகத்தில் வேலைபார்க்கச்செய்து அவன் மீதான காதலில் தோழியோடு உரையாடுவதில் கிடைக்கும் ஞாயிறு நமக்கு இதுவரை கிடைக்காத ஞாயிறு. ஞாயிறுகள் சாழேலோ இசையோடும் கடந்துபோகும். இக்கவிதை உங்களை முத்தமிடச்செய்யும் கண்டர்.
தவிர நீ யாரிடமும் சொல்லாதே
பணியிடத்திள் உள்ளவன்தான்
என் வெளிர்நீல முன்றானையால் நெற்றியைத்
துடைப்பதுபோல் அவனைக் காண்பேன்
அதுவல்ல என்துயரம் நாளை ஞாயிறென்றால்
இன்றேயென் முன்றானை நூறுமுறை
நெற்றிக்குப் போவதுதான் என்னேடி
--------------------
திட்டமிட்டு எதுவும் உருவாவதில்லை. ஏதோவொரு மகத்தான தருணத்தில் நண்பனாவதும், எதிர்பாராது முளைவிடும் முரண்பாட்டால் மிகு வெக்கை கொண்டு எதிரியாவதும் நாம் அறியாமலேயே நிகழ்ந்துவிடுகிறது. கணித்துச் சொல்ல முடியாத மற்றொரு தருணத்தில் மீண்டும் நட்பாவதும் உண்டு. பருவமாற்றத்தில் உண்டாகும் சிறு சிறு அவஸ்தைபோல் எதிரி என்பதும் வந்து போவது. இப்படி வந்து போகும் செயலுக்காக பெரும் பிரயத்தனம் தேவையில்லை என்பதை என்றென்றைக்கும் சொல்வதாக படுகிறது 'நீண்டகால எதிரிகள்' கவிதை.
அம்மா ஓடிப்போனதை
அறியும் வயதுள்ள பிள்ளைகள்
திண்ணையிலமர்ந்தபடி
ஆள்நடமாட்டமில்லாத
தெருவை வெறித்து
வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஓடிப்போன அம்மாவை வேடிக்கையில் நகர்த்தி, புரனிபேசும் அப்பாவை சகித்து, தூய தமிழில் சினம் கொள்ளும் சங்கரலிங்கனாரின் குடி ரசித்து, வம்ச கீர்த்தியில் தன் வலிமிகு புகழ்பாடி, சுகந்த மலருக்காக போனவளை மீதமிருக்கும் திசையில் தொலைத்து, வானம் சென்று வளர்மதி ஆனவளின் அம்சம் ரசித்து, கழுக்குன்றின் திருக்கோலம் விவரித்து, ஆத்திரத்தில் அறிவிலியாக சினம்கொள்வதை காறி உமிழாது கண்ணீரின் வெப்பத்தில் உணரச்செய்யும் மகளின் கண்ணீரில் திரும்பினேன்.
நினைவில் வைக்கும் பட்டியல்களை அடுக்கி, காலமாற்றத்தின் காதலால் சலசலக்கும் சில்லிட்ட காற்றை சுகித்து, நினைவின் பிசகோடு ஏகாம்பரமாக எதிரொலித்து, பொரி உருண்டைக்கு மேலெழும் பாதாள பைரவியை தரிசித்து, பேரன்பின் பந்தை பரிசளிக்க உண்டான சிலிர்ப்பில் ஊர் கடந்தேன்.
யோக்கியதை குறித்த நையாண்டி குறிப்பை ரசித்து, மகுடம் சூட்டி கொண்டாடும் பிழையான வாழ்க்கைக்காக வெட்கித்து, எல்லா குடுவையிலும் நிரம்பிக்கொள்ள ஏதுவான பதத்தோடு இருப்பதைக் கூறி, துக்கம் கொள்ளும் சூழலுக்குத் திரும்பி, நாட்களைத் தள்ளி விளையாடும் சிறுமியிடம் ஞானமடைந்தேன்.
விதியைத்தொலைப்பது போல
வாழ்ந்துகொண்டிருக்கிறாள் நித்யா
அவளைச் சாந்தப்படுத்துவதற்காக
நாளையெனப்பிறக்கும் நாட்களையெல்லாம்
உச்சி முகர்ந்து முத்தமிட்டு அவள் வசிக்கும்
வீதி வழியாக அனுப்பி வைக்கிறேன்.
அந்த துக்கத்திலும் முல்லை மணம் கமழும்
அந்திகளோடு கண்துஞ்சும் இரவுகளை
எனக்காக அனுப்பி வைக்கிறாள்
எனக்கோ அந்த இரவுகளின் மீது லேசான கிறக்கம்.
தசையால் மட்டும் உருவாகும் காதலும் காமமும் இன்பம் எய்திட்டது போன்ற பாவனையை மட்டுமே கொடுத்திடும். இப் பாவனை இன்பம் எதையும் முழுமைகொள்ளச் செய்யாது. உள்ளொளி உணர்வில் கலந்து மேலெழும் காதலும் காமமுமே முழுமை கொள்ளச் செய்யும். சீதமண்டலம், கண்டராதித்தன் கவிதைகள் என முந்தைய இரண்டு தொகுப்புகளின் நீட்சியாகவே இத்தொகுப்பிலும் நித்யா கவிதை உணர்வின் தாளாத தகிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது.
மேலேறும் பாதைகளில் எல்லோருக்கும் தெரிந்தபடி இருப்பதை உரக்கப் பேசியபடி இருக்காமல் இடர்பாடுகளோடு சரிந்த பாதைகளில் இருக்கும் மானுடத்தின் மீதான பிரியத்தை என்றென்றைக்கும் வலியோடு வைத்திருக்கும் வரிகளை எங்கு வாசிக்க நேர்ந்தாலும் அது கண்டாதித்தனின் தனித்த மொழியை நினைவூட்டவேச் செய்யும்.
வெளியீடு
புது எழுத்து
2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.
விலை-ரூ.70.
நன்றி - கணையாழி பிப்ரவரி 16

Wednesday, February 24, 2016

ஸ்ரீநிதியான கணங்கள்...


எல்லோரும் வெறித்து பார்த்தபடி இருக்க, ஆளாளுக்கு பாலை மாற்றி மாற்றி ஊற்றினர். எந்த பலனும் இல்லாது போயின. அந்நேரத்தில் தன் சைக்கிளின் பெல்லை அடித்தவாறு இறங்கிய தபால்காரர் வாசலிலிருந்து கத்தியபடி வந்தார். ஆத்தா உங்க பேரன் புறப்பட்டானாம் பொங்கலுக்கு வந்துவிடுவான் என்றபடி கடிதத்தை நீட்ட ஜிங்கென கிழவி எழுந்து ஒட்கார்ந்தது. அடேய் கிழவி உசுரு மிலிட்டிரிப்பேரன் கடிதாசியில் இருக்குவென உரக்கக் கூற எல்லோரும் சிரித்து அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள். கடிதம் உயிர் எனும் வார்த்தைகள் என்னுள் ஆழமாக பதிந்தது. கடிதம் உயிர்தான் என்பதை எனக்கு வந்த சில கடிதங்கள் உணர்த்தியபோது அதன் மேன்மை உணர்ந்தேன். கடிதம் எழுதும் சிறுவயது பழக்கம் தொடர்ந்து நிறைய்ய நண்பர்களுக்கு கடிதம் எழுதச்செய்தது. கவிதைகள் எழுதத் துவங்கி அது இதழ்களில் பிரசுரமாகத் துவங்கிய பின் நிறைய்ய கடிதங்கள் வர அவ்வளவு உற்சாகமும் பூரிப்புமாக இருக்கும். சிலரின் கையெழுத்துக்களை பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். சில கடிதங்களைத் திரும்பத் திரும்ப எடுத்து வாசிப்பதும் இன்னும் தொடர்ந்தபடி இருப்பதை உணர்த்தியது யாசகனின் ''கடவுளின் நூறு முத்தம்'' எனும் கடிதங்களின் தொகுப்பு.
யாசகன் தன் மகளுக்காக எழுதுவதாக நினைத்து அவருக்கு அவரேவாகவும், அவருக்கும் நமக்குமாகவும், அவருக்கும் காலத்திற்குமாகவும், அவருக்கும் சூழலுக்குமாகவும் எழுதப்பட்ட கடிதங்களாகவே இருக்கிறது ''கடவுளின் நூறு முத்தம் '' தொகுப்பு. யாசகனின் மகளான ஸ்ரீநிதிக்கு இப்புத்தகம் பெரிய பொக்கிசமாக இருக்கக்கூடும். தன் அப்பாவின் காலம் குறித்து ஸ்ரீநிதி அறிய முற்பட்டால் அவரின் இயல்பு, அவர் எதிர்கொண்ட இன்னல்கள், சூழல் மாற்றம், நண்பர்கள் என விரிந்துகொண்டே போகும்.
அவரை கவிதை எழுதத் தூண்டிய சம்பவங்கள், அவருக்கு பிடித்த கவிதைகள், அவரை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய கவிதைகள் என இத்தொகுப்பு கடிதங்களின் தொகுப்பாகவும் அவரின் கவிதைத் தொகுப்பாகவும் உள்ளது.
யாசகனின் சொந்த நிலமான வேலூரின் வெப்பத்தை தொகுப்பில் பத்திரமாக அடைகாத்து வைத்துள்ளார். அவர் செல்லும் வேறு நிலங்களில் இருக்கும் குளிர்ச்சியை அனுபவிக்கும் போதெல்லாம் அவர் ஊரின் வெப்பம் பெருமூச்சாக வெளிப்பட்டவாறே இருக்கிறது. அவரின் ஆசையாக மட்டும் இல்லாது இச்சூழல் என் மக்களுக்கும் இல்லையே என அவரின் அக்கறை நமக்கு அவர்மீதான மதிப்பை ஏற்றுகிறது.
தான் வாசித்த , நேசித்த மனிதர்கள் குறித்த கடிதங்களில் வழியும் உணர்வெழுச்சி நமக்கான மனிதர்களின் நெகிழ்சியாகவும் உள்ளது. இவர் வாசித்த புத்தகங்கள் குறித்த கடிதங்கள் ஏனோ நமக்காக எழுதப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. நாம் அப்புத்தகத்தை வாசித்த சூழல், எதிர்கொண்ட விதம், காண்போரிடம் அது குறித்து பேசித்திரிந்த நாட்கள் என நமக்கான வாழ்வையும் இக்கடிதங்கள் பத்திரமாக வைத்திருக்கின்றன. சில புத்தகங்களை திரும்பவும் மறுவாசிப்பு செய்யத் தூண்டுகின்றன. 'ஜன்னலில் ஒரு சிறுமி', மற்றம் கமலாலயன் மெழிபெயர்த்த மேரி மெக்லியோட் பெத்யூனின் ''படித்ததும், வாழ்ந்ததும்'' என இவ்விரு புத்தகத்தை மறுவாசிப்பு செய்தேன்.
ஆசை கொள்ளுதல் என்றும் இறுதியற்றதல்ல, மாற்றங்களை உடையது. ஓர் ஆசை நிறைவுகொள்ள மற்றொன்று துளிர்க்கும். ஜன்னலில் ஒரு சிறுமி வாசித்தபோது அப்படியானதொரு பள்ளியின் தொடர்பிலிருக்க ஆசை எழுந்தது. டோட்டோசன் என்றென்றைக்கும் நினைவில் இருக்கும் பெயராக இருக்கிறது. பள்ளி செல்லும் எல்லா குழந்தைகளையும் டோட்டோசன்னாக இருக்க வேண்டும் என்ற ஆசையுண்டு. அரசியலும் ஆசைமிகுந்தோறும் அதன் தடை கயிறுகளை சுழற்றியவாறு இருக்க அரிதினும் அரிதாகத்தான் டோட்டோசன்கள் இருப்பார்கள். எல்லாவற்றையும் மீறி ஒருவித சந்தோசம் ஏற்படத்தான் செய்கிறது. இந்த வாசிப்பு பழக்கம் இருப்பதால்தானே டோட்டோசன்னை அறியக் கண்டோம். இல்லையெனில் வேறு எங்கே அறிந்திருக்க போகிறோம். யாசகனின் இக்கடிதங்களால் டோட்டோசன்னின் விரல் பற்றிக் கிடக்க முடிந்தது.
'தன்'னில் உழன்று வாழும் வாழ்வில் எது எச்சியிருக்கப்போகிறது. தன் குடும்பத்திற்காக படித்து, வேலைபார்த்து, சொத்துசேர்த்து, தன் குடும்பத்தாரின் மகிழ்விற்காக மட்டும் அரும்பாடுபடும் பொழப்பை கேலியாக்குகிறார் மேரி. தன் பள்ளியில் படித்து வெளியேறுபவர்களை சமூக சேவை செய்யும் மனநிலையோடு வெளியேற்றுவது அசாத்தியம்தான். பள்ளிக்காக அவர் படும் பாடுகள் சித்திரங்களாக ஓடின.
எட்டுவயதிலிருக்கும் ஸ்ரீநிதிக்கு இக்கடிதங்கள் இப்பொழுது வாசிப்பதற்கான கடிதங்கள் அல்ல. அவருக்கான காலத்தில் இதை வாசிக்கவோ அல்லது கடந்துபோகவோ வாய்ப்புண்டு.ஆர்வத்தில் அவர் வாசிக்கத் துவங்கினால் பெரும் துணையாக இக்கடிதங்கள் இருக்கும். ஸ்ரீநிதி இக்கடிதங்களை தவிர்த்துவிடாது வாசிக்க வேண்டும் என்றே மனம் விரும்புகிறது.
நன்றி - புத்தகம் பேசுது