Wednesday, August 27, 2014

தோட்டாக்கள் பாயும் வெளி

மாடிக்கு ஏறுகிறீர்கள்
அமைதியான சூழல் இருக்க
கொண்டு சென்ற தாளை விரித்து
பிடித்த முயலை வரைகிறீர்கள்
உணவும் வசிப்பிடமும் வேண்டி
புற்கள் சூழ்ந்த புதரை ஏற்படுத்துகிறீர்கள்
ஏனோ நிறைவுகொள்ளாதிருக்க
ஒன்றிரண்டு மரங்களை உருவாக்குகிறீர்கள்
அழகு சூழ மகிழ்ந்தீர்
கணத்தில் கவலையடைந்தீர்கள்
முயல் தனித்திருக்குமென
இணை ஒன்றை தருவிக்கிறீர்கள்
இரண்டும் முத்தமிட்டபடி
சந்தோசமாக உலவிக்கொண்டிருக்கிறது
உங்களுக்கான இடம் அற்றிருப்பதை உணர்ந்து
நிழலான மரத்தடியில்
ஒரு கல்லைப் போடுகிறீர்கள்
அமர்ந்து வேடிக்கையில் களித்திருக்க

மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.

நன்றி: கல்குதிரை

Monday, August 11, 2014

இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் கட்டாயமாகிறது
-சூரிய நிலா

2004ஆம் ஆண்டு ‘நதிச்சிறை’ கவிதை நூலின் வழியாக அறிமுகமானவர் ந.பெரியசாமி. பத்தாண்டுகளெனும் நீண்ட இடைவெளிக்குப் பின்  ’மதுவாகினி’  எனும் இந்த நூலின் வழியாக தமது இலக்கிய வேட்கையைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

கவிதைக்கான பாகுபொருட்கள் சமூகக் கட்டமைப்பில் ஏராளமாகயிருப்பினும், தனது கவிதைக்கான பாகுபொருளினை, தான் சார்ந்த வாழ்வியலிலிருந்தே எடுத்துக் கொண்டிருப்பது கவிஞரின் மிகப் பெரும் பலமாகவேயுள்ளது. ‘தோத்தான் கோழி’ போன்ற கவிதையில் தன்னை உருவகப்படுத்திக் கொண்டு சமூகத்தை கட்டுடைப்பது. அல்லது தன்னை உடைத்துக் கொண்டு சமூகத்தை கேள்விக்குள்ளாக்குவது என்ற இவரின் கவித்தன்மையுடன் கூடிய உசாவல் வெகு அற்புதம்.

அற்புத திருவந்தாதியில் காரைக்காலம்மை பாடுவார்...
மகிழ்திடே நெஞ்சே மானுடரில் நீயுந்
திகழ்தி பெருஞ் சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந் துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னம் பெருக்கு

அறியாமை உடைய மனதை - மனிதர்களோடு சேர்ந்து மகிழ்வாகயிருக்கச் சொல்லும் பாட்டுதானிது.
தோத்தாத் கோழி நான்
வலியவனிடம் மட்டுமல்ல எளியவனிடமும்
என் பலத்தைக் காட்டுவேன் என்று ந.பெரியசாமி அழுத்தமாக கூறும்போது இதை அம்மையைப் போல ‘மட நெஞ்சே... மனிதர்களோடு சேர் அவர்களோடு மகிழ்வாயிரு’ என்று சொல்லத்தானே வேண்டும்.

மழையற்றும் மிகு வெப்பம் உமிழாதபோதும்
கைக் கொண்டலைகிறேன் என்கிறார்.

அதாவது குடையைக் கைக்கொண்டு அவர் அலையும் போது- பைத்தியமென தலையிலடித்து/முகத்துக்கு நேரும் / முதுகுக்குப் பின் / வசவை வீசுபவர்களுக்கு/எங்ஙனம் புரியச் செய்ய/ மழை விடாது பொழிகிறது/என் கனவு தேசத்திலென்று.

கவிஞன் தனது கனவில் கூட மழையைப் பிடித்துக் கொண்டு திரிகிறான். பிறகு ஊர் என்ன செய்யும்? சிரிக்கத்தானே செய்யும்?

‘மாமாயை’ என்னும் வனத்தில் அலைகிறன்டா
தாமாயுலகனைத்தும் தாது கலங்கிறண்டா
என்று பட்டினத்தார் பாடுவார்.

‘காது அவிஞ்சான்பட்டி’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் அழகான எள்ளல் தன்மை துள்ளி விளையாடுகிறது. நோய் மிகுந்த நம் தேசத்திற்கு நூலகங்கள் எதற்கு? இப்படி முடிக்கப்படும் இக்கவிதை மிக இலாகவமாக எழுதப்பட்டதொரு காட்டமான கவிதை. ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’ என்ற கவிதையும் மேற்படி தொனியில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைதான்.

இத்தலைப்பிட்ட கவிதைகளில் எழுதப்பட்ட வரிகள்-மக்கள் சீற்றத்தை உள்வாங்கி வெளிப்படுத்தும் நல்லதொரு கவிஞனை அடையாளம் காட்டுகின்றது.


ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில்
இரு அகப்பையோடு
ஆண்ட கிழவனாரும் ஆளும் குமரியும்.

ஈழப் பிரச்சினையில் எவருக்கும் அக்கறையில்லை. என்ற குற்றச்சாட்டினை இக் கவிதையில் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது.

‘வன தேவதை’ என்ற தலைப்பிட்ட கவிதை இராமாயண தொன்மத்தை மறுபரிசீலனைக்கு கொண்டு செல்கிறது. சூர்ப்பனகை இதில் வன தேவதையாகிறாள். இக் கவிதையில் மூக்கறுப்பட்டது இராமன். அதுவும் சூர்ப்பனகையின் மேல் காதல் வயப்பட்ட இராமன். இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் பட்டாயமாகின்றது. கவிதை அதை முன்னெடுத்துச் செல்கின்றது.

‘மதுவாகினி’ இவரது பல கவிதைகளில் வந்து போகும் இடுகுறிப் பெயராகவுள்ளது. காதலியாக, அன்னையாக, அஃறிணைப் பொருளாக மதுவாகினியை இவர் வடிவமைத்துள்ளார். ஒரு பெயர் பிடித்துப் போய்விட்டால் கனவிலும், நனவிலும் அது தொக்கி நிற்கும் எங்கும் உடனலையும் மனதுக்குள் உட்கார்ந்து கொண்டு மகுடி வாசிக்கும். அப்பெயர் கவிஞனுக்கு பிடித்துப் போய்விட்டது என்றால் இப்படித்தான் பல கவிதைகளில் அப் பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால்தான் குளித்து வந்த மதுவாகினியின்/கூந்தலில் வடிந்த நீர்த்துளிக(ள்)ளை-

நீராடி கேசம் நீவிய துரோபதையை-ஒப்புமையாக்கியது. அந்த பெயரின் பிரேமையின்றி வேறென்ன?

கனவு வேட்டை, பொக்கை வானம் போன்ற கவிதைகளில் சிறுவர்களின் மன கிலேசங்கள் அழகாக பதிவாகியுள்ளன.

வாழ்வெனும் நீண்ட பாதையில் பயணித்து வந்த ஒரு கவிஞன். அதன் திரட்சிகளை நனவின் உக்கிரத்தோடும், மிகு கவனமாக தனது நினைவலைகளை பரப்பிச் செல்லும் உத்வேகத்தோடும் தனது - கவிதைப் படைப்பை உலகிற்கு தருகிறான். இவ்வுலகம் அதை ஏற்றுக் கொண்டால் மிகுந்த போதைக்குள்ளாகிறான். இல்லாவிட்டால் தொடர்ந்து போராடுகிறான். கவிதைகளை நாமள்ளிக் கொள்ளும் வரை கவிஞனின் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அத்தகையானதுதான் ந.பெரியசாமியின் இவ்விரண்டாம் முயற்சி.

நன்றி: தீராநதி.