Sunday, October 19, 2014

18-10-2014 தமிழ் இந்துவில் வந்த மதிப்புரையின் விரிவாக்கம்...

சொல்லப்படவேண்டிய நன்றிகள்...
-ந.பெரியசாமி


மகனுக்கு மடல் எனும் இப்புத்தகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா.ஜெயராமன் ஹாக்காங்கில்  படிக்கும் தன் மகன் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்களும், ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதமென ஐந்து கடிதங்களைக் கொண்டது.

கடிதங்கள் புனைவற்று உண்மைகள் நிரம்பிக் கிடப்பவை. வாழ்வின் அடுக்குகளை உரித்துப் பார்க்க ஏதுவான களம். தந்தைக்கும் மகனுக்குமான குடும்ப கடிதமாக பார்க்க முடியாது ஒரு சமூகத்தின் பரிணாமத்திற்கான சாட்சியாகவும் இப்புத்தகம் இருக்கிறது.

உயர்கல்வி எனும் தலைப்பிட்ட நீண்ட கடிதத்தில் பெற்றோரும், பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கம் நன்றி குறித்த உரையாடல்கள், வாசிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்து சொல்லப்படவேண்டிய நன்றிகள் நமக்கும் இருக்கு என்பதை நினைவூட்டுகிறது. பொற்றோர்கள் பிள்ளைகளின் மீது வைக்கப்படவேண்டிய நம்பிக்கைகளையும் நமக்கு இக்கடிதம் உணர்த்துகிறது.

‘இந்த தேசத்தின் மீது எனக்கு எப்படி மரியாதை வரும்? இந்த தேசம் என்மீதும் என் மக்கள் மீதும் எண்ணற்ற அவமானங்களையும் இழிவுகளையும் சுமத்தியிருக்கின்றபோது இந்தியாவை என் தாய்நாடு என்று எப்படி கூறுவேன்?’ என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பகிரங்கமான குற்றச் சாட்டை நினைவூட்டி ஒருவரின் தகுதியும், திறமையும் பிறப்பு தீர்மானிப்பதில்லை என உணர்த்தி மகனின் பல் மருத்துவ படிப்பு குறித்து தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறியிருப்பது நம்பிக்கையூட்டும் செயலாக இருக்கிறது. இக் கடிதத் தொகுப்பில் நிறைய்ய இடங்களில் அம்பேத்கரின் கூற்றுகளை பயன்படுத்தி இருக்கிறார். தேவையான இடங்களில் தேவையான கூற்றாக இருப்பதால் கடிதத்தின் ஒரு அங்கமாகவே மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.

சாக்கடையான பெரும் கருத்தியல்களை வைத்துக்கொண்டிருக்கும் இந்தியா எப்படி புனிததேசமாகும் எனும் அவரின் கோபம் நமக்கமான கோபமாகவும் இருக்கிறது. ‘தீண்டத்தகாதவர்கள்’ எனும் கூற்றுக்குள் அடங்கியிருக்கும் அவமானங்கள் இழிவுகளை சமூகத்தில் நிகழ்ந்தேறிய சம்பவங்களை நினைவூட்டி கூறியிருக்கிறார். கூடவே அச்சமூகத்தில் வசதி வாய்ப்பு பெற்று முன்னேறியவர்கள் உயர் சாதியினரின் சடங்கு சம்பிரதாயங்களில் தன்னை ஒப்புக்கொடுத்து தன் சமூகத்தை இடத்தாலும் மனத்தாலும் விலகி நடக்கும் துரோகங்களையும் விமர்சிக்கிறார். நீந்த கற்றுக்கொள்வதற்கு பயன்பட்ட சுரக்குடுக்கையை கற்றபின் உடைத்தெறியும் செயலுக்கு ஒப்பானது என்பதை வாசிப்பவர்கள் உணரக்கூடும்.

உன் பெயரைவிடவும் நீளமாக இருக்கும் பட்டங்களெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்குள் சீரழிந்துகொண்டிருக்கும் ஒரு தலித் சமூகத்து சராசரி மனிதன் பெற்ற வெற்றியால்  உலக அரங்கில் நீ புகழ் பெறுகின்ற இடங்களில், மேடைகளில் இந்தியாவில் மிகமிக மோசமாக ஒடுக்கிவைக்கப்பட்ட சாதியில் பிறந்தவன் என்பதையும், தீண்டத்தகாதவன் என்ற உண்மையையும் பட்டவர்த்தமாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி உரத்துச் சொல். சாதிவெறி பிடித்த இந்தியர்கள் உலக அரங்கில் வெட்கித் தலைகுனியட்டும் எனும் ஜெயராமனின் கோபம் நமக்கான கோபமாகவும் மாறுகிறது.

ஒரு காலத்தில் கல்வியும், அதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்ட வழித்தோன்றலான டாக்டர்.ஜெயக்குமார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் பல்மருத்துவம் மற்றும் குற்றம்சார்ந்த பல்மருத்துவத்தில் தொடர் ஆய்வுகள், அகதிகளின் வயதுகுறித்த சர்வதேச சட்டவிதிகள் தொடர்பான விழிப்புணர்வு, மும்பையிலிருந்து வெளிவரும் இந்திய பல்மருத்துவக்கழகத்தின்(யிமிஞிகி) பத்திரிகையின் இணை ஆசிரியர். மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை உலகின் கவனிக்கத்தக்க சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னையில் உள்ள ‘’இச்சா’’ மையத்தால் ‘’சாதனைத்தமிழர்’’ எனும் விருதினை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டவர். (ஞிணீtமீ ளியீ ஙிவீக்ஷீtலீ) எனும் அமைப்பைத் துவங்கி அதன் மூலம் பிறப்புச்சான்றிதழ் இல்லா உலக மக்கள் யாவருக்கும் தன் சொந்த ஆராய்ச்சியின் மூலமாக சான்றிதழ் வழங்கும் பணி என இவரின் சேவைகள் நீண்டபடி இருக்கிறது.

நம்மால் மறக்க இயலாத கொடூரமான சம்பவமாக இருக்கும் டெல்லியில் நடந்த கூட்டு வன்புணர்ச்சிக் கொடூரத்தில் ஒருவர் வளர்இளம் பிராயத்தினர். அவரை சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கவேண்டுமென விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது ‘இந்தக் கற்பழிப்புக் குற்றச்சாட்டில், சிறார் பிரிவில் உள்ளவனின் சரியான வயது என்ன என்பதை எனது ஆராய்ச்சியின் மூலம் மிகத்துல்லியமாகக் கணக்கிட்டுத் தரமுடியும்’ என அரசுக்கு ஜெயக்குமார் பலமுறை தகவல் கொடுத்தும் அதை அரசு கண்டுகொள்ளவேயில்லை.

இந்தியாவில் ‘கற்றவனின்’ குரலுக்கு ஏது மரியாதை. சிறந்த ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடு ஓடுவது சம்பளத்திற்காக மட்டுமல்ல, சுயமரியாதைக்காகவும், மேலும் தங்கள் ஆராய்ச்சிக்கான தளமும் அமைத்துக்கொடுக்கும் இடங்களைத் தேடித்தான் எனும் ஜெயராமனின் ஆதங்கத்தில் இருக்கும் உண்மையை நாமும் உணரமுடிகிறது.

மேலும் அவர் கடிதத்தில் சமூக சிந்தனைதான் ஒரு மனிதனை முழுமையாக்கும் அதற்காக நீ டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூல்களான 37ஐயும் படித்திட கேட்டுக்கொள்கிறார். தாய்மொழி சிறப்பு, போராட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் நீளும் கடிதம் நம்மை தோய்வுறச்செய்யாது உடன் பயனிக்கச்செய்கிறது.

கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொண்ட சராசரி மனிதனாகவே என்னைப் பார்க்கிறேன். சாதிப்பதற்கு 100/100 மதிப்பெண்கள் தேவையில்லை. விடாமுயற்சியும், செய்யும் வேலையில் ஈடுபாடும், கவனமும் இருந்தால் போதும் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ஒரு மனிதனின் அனைத்து திறமைகளும் சாதியாகப் பார்க்கப்படுகிறது. நம் சமூக விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எண்ணற்றவர்களுடன் நானும் ஒருவனாக இருப்பேன். இப்போராட்டத்தில் தோற்கலாம். ஆனால் முயற்சி எடுப்பதில் எந்த தோல்வியும் இருக்காது என்று நம்புகிறேன் என முடிவுறும் ஜெயக்குமாரின் கடிதம் நமக்கும் ஆறுதலாக இருக்கிறது. வளர்ந்து வளம் இளைஞர்களிடையே சமூக விடுதலைக்கான வேட்கை இருப்பதை கண்டுணர்ந்து அதை வளர்த்தெடுக்க நம்மின் பங்களிப்பும் வேண்டியிருப்பதன் அவசியத்தை இக் கடிதங்கள் உணர்த்துகின்றன.

மகனுக்கு மடல்
மருத்துவர்.நா.ஜெயராமன்
அபெகா வெளியீடு
832, கீழராஜ வீதி 2ம் தளம்,
புதுக்கோட்டை-622001
விலை-ரூ.80