Sunday, August 18, 2013

nantri:malaigal.com

பிறழ்ச்சி

காற்று
பெருக்கெடுத்து வீசிய போதும்
ஒலி நகராது காதருகேயே
கோடைக்குப் பின்
முதல் துளியின் ஈரம் பரவிய நிலமானேன்
குத்துண்ட விதைகளெல்லாம்
மொக்கிட்டு மலர்ந்தபடி
வெண்ணிற மேகம் சூழ இறங்கி
தேவதைகள் ஏதும் கூறிடவில்லை
உடனிருப்பவள்தான்
என்றாவதுதான் கேக்க வாய்க்கிறது
பிறழ்ச்சியில் பிறப்பிக்கும்
கொலைகாராவை...
*
நிறுத்தமற்ற பயணம்

சரியாக நினைவில் இல்லை
கச்சிதமாக சொல்ல
இது ஆய்வுக் கட்டுரையுமல்ல
பத்து பனிரெண்டு வருடமாக நீடிக்கிறது
பயணத்தில் உண்டான முகப்பழக்கம்தான்
பார்க்கையில் இதழ் அவிழ்ப்போம்
அன்றொரு நாள் என் அருகாமையை
தன் இருப்பால் நிறைத்தாள்
ரொம்ப நாளானது பார்த்தென்றேன்
கணவரது வாகனத்தில் செல்வதாக கூறினாள்
வேலையின் தன்மை குழந்தைகளின் படிப்பென
விசாரிப்புகளை நீட்டினேன்
அவளின் நிறுத்தம் நெருங்கியது
தயங்கிக் கேட்டேன்
கையிலிருந்த செல்போனை பையிலிட்டு
டிக்கட்டின் பின்புறம் எழுதினாள்
எனது எண்ணைக் கேட்டு
மீண்டும் வெற்றிடம் சூழ
அவளது எண்ணைத் தராது
நாசுக்காக மறுத்திட்டாளென நினைத்திருந்தேன்
பொய்யாக்கி பேசினாள்
பேசிக்கொண்டே இருக்கிறாள்
திருவிழா பார்த்து வந்த
குழந்தையாக...

Saturday, August 10, 2013

கிளியொன்று
பழம் தின்னக் கண்டேன்
பசியடக்க பயணித்தேன்
மரவட்டை ரயிலேறி
வெப்பம் தணிக்க உச்சியில்
வெய்யலை மறைத்தபடி
உடன் தொடர்ந்தது கழுகும்
மரவள்ளி தோட்டம் நெருங்க
இணையை பார்த்த மரவட்டை
கவிழ்த்தெனைக் கடந்தது
கழுகு பசியாறியதை உங்களுக்கு
யார் சொல்லக் கூடுமோ...

Saturday, August 3, 2013

மூன்றாம் நாளில்...


மூன்றாவது நாளாக தொடர்ந்தேன்
தனித்த அறையொன்றில்
இன்றும் வீதியில் கீரை விற்பனை
கண்களை இறுக மூடி உச்சரித்தேன்
இந்த விளங்காதவனை கட்டியதற்குப் பதிலா
வீட்டிலேயே கெடந்திருக்கலாம்
அருகாமை இல்லத்தில் ஆரம்பமாகியது
நம்ம டீம் மேட்சில்
என்னம்மா கலக்கிட்டானுவ தெரியுமா
உரையாடல் கடந்தது
அவசரமாக தலையிலடித்துக் கொண்டு
மீண்டும் இறுக மூடினேன்
அம்மாடியோவ் கொலுசு சத்தம்
ஆதாரமாய் மனசில் நிற்கும்...
வரிகளை ரசித்து திரும்பினேன்
பாரும்மா இந்த சுப்புவை
பழிச்சிக் காட்டிக்கிட்டே இருக்கா
புகார் ரசித்து மீண்டு
ஞானமடைந்தேன்
தனித்திருத்தலே தியானிப்பாகாதென...
0

அம்மாவாசை நிலவு

நுணா மரக்கன்றை நட்டு வைத்தேன்
என் பிணைப்பை
தன் தளதளப்பில் காட்டியது
மின்சாரமற்ற இரவில்
புழுக்கம் தணிக்க மரம் அடைந்தேன்
அதுவும் விழித்திருந்தது
பால்யத்தில் வேறொரு நுணாவோடிருந்த
நட்பு குறித்து பேசினேன்
மகிழ்வை இலையாக
உடலில் சரிந்தது
நகர மனமின்றி அதன் உடல் சாய்ந்தேன்
ஏதாவது கேட்கச் சொன்னது
நிலவை தொட்டுப் பார்க்க வேண்டுமென்றேன்
சம்மதத்தை கனியாக உதிர்த்தது
எறும்பாக கற்று
வரும் அம்மாவாசைக்கு வந்துவிடு
எறும்பு ஊற
உயர்ந்து கொண்டே இருப்பேன்
எளிதாய் தொட்டுத் திரும்பலாமென்றது
ஒவ்வொரு மாதமும் கடந்துபோகிறது
அம்மாவாசை...

நன்றி:குவர்னிகா 41வது இலக்கிய சந்திப்பு மலர்