Sunday, April 26, 2015

மாயத்தில் கவிதையாகும் யதார்த்த வெளி

தோட்டாக்கள் பாயும் வெளி- மாயத்தில் கவிதையாகும் யதார்த்த வெளி
-R.அருள்

 இன்று  எந்த கவிதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டாலும் இவைகள் தாம் இக்கவிதைகள்  என அஞ்சனம் கூறி கவிதைக்குள் இலகுவாக பயணிக்கலாம். காரணம் கவிதைகள் தங்களுக்கென பாடுபொருள்களை வைத்துக்கொண்டு அவைகளைச் சுற்றியே பயணிக்கின்றன. கவிதைகள் அழகியலுக்காக மட்டும் செய்யப்படுகின்றனவோ என்ற உணர்வை இவைகள்  ஏற்படுத்துகின்றன. மண் சார்ந்த கவிஞனின் அனுபவம் அரிதாகவே காணப்படுகிறது. கவிதைகள்  அறிவுத் தேடலுக்காகவும் தன சுயம் சார்ந்த  தேடலுக்ககவும் செய்யப்பட்டு தோல்வியடைகின்றன.
சிறந்த நவீன கவிதையோ அவ்வாறில்லாமல் கவிஞனின் ஆன்மாவை முன் நிறுத்தி இப்பிரபஞ்சத்தை குறிப்பாக மண்ணின் மனத்தை வாசகனுக்கு காண்பிக்கிறது. கவிஞனின் ஆன்மத்தினூடாய் பார்க்கப்படும்  இப்பிரபஞ்சத்தின் அழகியலே நவீனக் கவிதையின் இலக்கணம். கவிஞனின் ஆன்மமே  கவிதையின் வடிவம். அதனூடாய் காட்டப்படும் பிரபஞ்சமே அதன் அழகியல். கவிஞனுக்கும், கவிதைக்கும், இப்பிரபஞ்ச வெளிக்கும் மத்தியில் நடக்கும் ஊடாட்டமே ஒரு கவிதையை நவீனக் கவிதை என நம்மை அழைக்க தூண்டுகிறது. இந்த இலக்கணத்தை மீறின கவிதைகள் அனைத்தும் ஒரு எழுத்தாளனின் செய்பொருளாக இருக்குமே தவிர கவிஞனின் படைப்பாகாது.
இந்த வகையில் நா. பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி கவிஞனின் ஆன்மத்தை முன் நிறுத்தி அதினூடாய் நாம் பார்த்து அனுபவிக்கிற அனுதின வாழ்வியலை அதன் சாரமற்ற நிலையிலிருந்து அழகூட்டப்பட்ட மாய உலகமாக பிரதிபலிக்கிறது. இங்கு புரட்சியாளன் என்று யாரும் இல்லை. கவிதையும் புரட்சிக்காக எழுதப்படவில்லை. தலைப்பைப் படித்துவிட்டு தொகுப்பினுள் நுழையும் பொது கவிதைகள் இலட்சியவாதியின் தோட்டாக்கள் அல்ல,  அவைகள் வெறுமனே ஒரு சாமான்ய மனிதனின் அனுபவங்களே என்ற வியப்பை தருகின்றன.
இந்த சராசரி மனிதன் பல்வேறு பரிமாணங்களில் மகளிடம் அன்பு கனிந்த தந்தையாகவும், மகனிடம் பொறுப்பு மிகுந்தவராகவும், சிறந்த வாசகராகவும், மனம் குழம்பிய குடிமகனாகவும் கவிதைகளில் சிதரிக்கக்கப்படுகிறார். "அணிலாடுமறை" கவிதையில் கவிஞன் சராசரி மனிதனாக அற்ப விசயங்களை நேசிக்கிறவனாக,

இயல்பில் எதையும்
செல்லப்பிராணியாக
வளர்க்கத் தெறியாத எனதறையுள்
எனத் தொடர்ந்து
மகளின் பிடிவாதத்தால்
கதைசொல்லும் கனிவானத் தகப்பனாக மாறுகிறார். ஆனால் கதையில் தந்தைக்குள் இருக்கும், சராசரி மனிதனுக்குள் இருக்கும் கவிஞன் வெளிப்பட்டு
சகியின் காதலை
அக்கினியில் பிரவேசிக்க செய்தவனின்
துரோகக் கோடுகளை
சுமந்து திரியும் அதன்
கதையை கூறினேன்
என பழமையின் மீது தோட்டாக்களை நவீனக் கவிஞன் வெளியேற்றுகிறான்.
         கவிதைகளில் மகனைப் பற்றி பேசும்போது மட்டும் அன்பு கனிந்தவராக இல்லாமல் பொறுப்பு மிக்க தந்தையாக வெளிப்படுகிறார். மகளை பொறுத்தவரை  தாராளமாகவும் உணர்வு பெருக்குடன் இருக்கும் தந்தை மகன் என்றதும் உணர்வுகள் அடைபட்டு "தலையணை" கவிதையில்,

மற்றொரு நாளில்
உரித்து வைக்கப்பட்ட ஆரஞ்சுகள் அருகே
சொடாபீம் அமர்ந்திருக்க
அதுவும் எனக்கென்றான்
கிழியும் வரை  வேறேதும் இல்லையென
நிபந்தனைக்குப்பின்

என கவிதையில் தந்தையின் பொறுப்புணர்வு மேலிடுகிறது. அதோடு தலையணை மேகத் துண்டாக கனவுலகில் மாயமாகிறது. இந்த சராசரி தந்தையை பார்க்கும் பொது டால்ஸ்டாயின் அன்னா கரினினாவில் வரும் சம்பவம் நினைவிற்கு வருகிறது. நாவலின் ஆரம்பத்தில் குழப்பம் மிகுந்த சூழ்நிலையில் ஒப்லான்ஸ்கி தன் மகன் மற்றும் மகளை அணைக்கும் பொது தந்தையின் மகள் மீதான அன்பு ஈர்ப்பு மிகுந்ததாகவும் அதுவே மகன்
மீது இடைவெளி கொண்டதாகவும் உணருவார் . இது அனுதின சாதாரண வாழ்வியல்  விசயமாக இருந்தாலும் இலக்கியத்தில் பிரபஞ்சமளவில் இயங்கும் மனித உணர்வாக மிளிருகிறது.
கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் சிறு விசயங்களை பெரியசாமி தன் கவிதைகளில் அழகியல் ததும்ப மெருகூட்டுகிறார். விலைவாசிப் பிரச்சனை சாமான்ய மனிதனின் மிகப்பெரிய எதிரி அதே நேரத்தில் அதிகம் கணக்கில் கொண்டு பேசப்படாத ஒன்று. எதைப்பற்றி பேசினாலும் அதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. தன் மாய வார்த்தைகளில் பிரச்சனையை இவர் கவிதைப்படுத்துகிறார்.  "வேர்கள் வான் நோக்கி வளர்ந்தன" கவிதையில்

ஆடுமாடுகள் அந்தரத்தில் பறந்தன
அந்தரத்திலேயே தங்கின
...................
லிட்டர் ஐம்பதுக்கு விற்றது காக்கைப்பால்
மும்மடங்கு விலை அதிகம் குருவிப்பால்
...............,,..........
இப்படிதான்
காக்கை மருத்துவரை அணுகினேன்
ஒரு  மண்டலம் காக்கைக் குஞ்சின் மூத்திரம் தேக்க
குணமாகிவிடும் தீராத மூட்டு வலியுமென்றார்.

என கேலியுடன் முடிந்தாலும்  அத்தியாவசியத் தேவைகளே  பூர்த்தியாக்கப்படாமலிருக்கும் அவலத்தைதான் கவிதை தாங்கி நிற்கிறது. இதே போன்ற வலியைத்தான் "யாருடைய கைகள் அவை" நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த சராசரி மனிதனுக்கு தன் குடும்ப தேவைகள் பூர்த்தியாக்கப்படாதது முற்றும் பெரிய பிரச்னை அல்ல, இவனை நோக்கி அரசியல் சதியும் வாழ்க்கையை இல்பொருளாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை "நெட்டிலிங்கப் பூ" நமக்கு தெரிவிக்கிறது. ஓருபுறம் கறைபடிந்த அரசியல் தன் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்க அதைத் தவிர்க்க "மூதாயில்”

பெரும் மூச்சிரைப்போடு
பாட்சா மலையுச்சி
அடையும் சராசரி மனிதனுக்கு காத்திருப்பது

விந்து உறைந்த லூப்புகளும்
விட்டு சென்ற பரா ஜட்டிகளும்
..................
டாஸ்மாக் பாட்டில் நீர் உறைகளென
மாசுபட்ட சீரழிந்த சமுகமே.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்தியில் இவனுக்கு இருக்கும் ஒரே ஆதரவு புத்தகங்களில் உயிர் கொண்டிருக்கும் எங்கல்சும், மார்க்சும், மார்க்வேசும், போர்ஹெவும் தான். தன் "மேல்தளத்தில் அமைந்த குறு அறைக்குள்" நுழைந்த உடனே இந்த மேதைகள் இவனது அந்தரங்க உலகத்தில் புத்தகங்களில் இருந்து உயிர் பெற்று உரையாடல் நடத்த வந்து விடுகின்றனர். நிஜ உலகிலிருந்து பாலாவும்  கலந்து கொள்கிறார். இந்த உரையாலில் சராசரி மனிதன் யாரும் பொருட்படுத்தாத தன் பிரச்சனைகளை முக்கியப்படுத்தி பேச ஒரு உத்தியை கண்டுபிடித்துவிடுகிறார். இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இயல்பாகிவிட்ட நிலையில் யதார்த்தத்தை மாயாஜாலமாக்குகிறார். "அக்டோபர் முதல் நாளில்" மரித்த தேசப்பிதாவை தட்டியெழுப்பி  கடைதெருவில் தன்னோடு நடக்க வைக்கிறார். சமூகச் சீரழிவை கண்ட தேசப்பிதா " ஐயோவென மயங்கி சரிகிறார் "பாகெட்  பாலை, அதுவும் கலப்படம், ஆட்டுப்பாலென கொடுத்து "இனி உங்கள் ஜனன நாளில் மட்டும் வாருங்கள்" என்று வழியனுப்பபடுகிறார்.
ஆக கவிதைத் தன் பாடுபொருளாக அன்றாட பிரச்சனைகளைத் தவிர்த்து தன் அழகியலுக்காக மாத்திரம் பொருண்மைகளைத் தேடுமானால்  அது   சமூகப்  பொறுப்பற்ற ஒரு  அழகு பொருள் மட்டுமே. அதே  நேரத்தில்  சமூகப் பிரச்னைகள் மட்டுமே கவிதையின் பொருண்மையானால் யதார்த்தம் இலக்கியத்தின் மீதான தன் பொறுப்பை உதாசீனம் செய்கிறது. இரண்டிற்குமான பொறுப்பு பரஸ்பரமானது. இவைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடமாகத்தான் நா. பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளியை  நான் பார்க்கிறேன். இங்கு காண்பிக்கப்படும் புற உலகம் யதார்த்த உலகமாக இருப்பினும் கவிஞனின் ஆன்மத்தின் வழியே யதார்த்தம் மாயத்தில்  கவிதைப்படுத்தப்படுகிறது.

நன்றி-இன்மை.காம்

Thursday, April 23, 2015

நன்றி - அடவி ஏப்ரல் 2015 இதழ்

நேசங்களுடனான பெருவாழ்வின் மீதமிருக்கும் நினைவுகளும் தீர்ந்துபோகாத அபத்தங்களுக்கு எதிரான சொற்களும் நிறைந்த
அடர் வெளி :
  - ஜீவன் பென்னி



 நவீன கவிஞனினுலகு நீண்ட முகம்பார்க்கும் கண்ணாடியைப் போலவேதானிருக்கும் என்று தோன்றுகிறது – இட வல மாற்றமாக -

நிகழ்கால உலகின் எல்லா இயக்கங்களும் ஒரு வெற்றிடத்தில் நடந்துகொண்டிருப்பதாய் தோன்றுமவனுக்கு இப்பிரபஞ்சத்தில்

எப்போதுமலைந்து கொண்டிருக்கும் முடிவற்ற ஒரு புள்ளியெனவே அவன் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறான். எல்லா

நியாயங்களும், சட்டங்களும், போதனைகளும், சரி/தவறுகளும், நம்பிக்கையற்றே அவனுடன் எப்போதும் பழகிவருகின்றன.

நகரமயமாக்கலின் கொடூரங்கள் எல்லா சமநிலைகளையும் எல்லா விதங்களிலும் பாதிக்கின்றன. ஒரு பச்சைமரமும், பட்டாம்பூச்சியும் ஒரு

சூழலை மனிதனை ஒத்தே பாதிக்கின்றன. அதன் காரணிகளும் வழிமுறைகளும் ஒன்றாகவே பயணப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரே உயிர்,

ஒரே வாழ்க்கை. தன்னிருப்பிடங்களை இழப்பதற்காக நிர்பந்திக்கப்படும் இவைகளின் உடைந்த வாழியல் முறை பெருமளவில் அச்சூழலின்

காரணிகளை  பாதிக்கத்தொடங்குகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு காலமும், வாழ்வும், நெகிழ்வும், மரணமுமிருக்கின்றன, மிகத்

துரதிர்க்ஷ்டமாக இவைகளின் வரிசைகளையும் காரணிகளையும் விழுமியங்களையும் ஒன்றுக்கொன்று பாதிப்பதாக முரண்படுவதாக

மாற்றிக்கொண்டிருப்பதுதான் நகரமயமாக்கல். வளர்ச்சியென்பதன் பொருட்டு தினந்தோறும் மாறிக்கொண்டே வரும் இருப்பிடசூழலின்

தொடரிணைப்புகளான இயற்கைச்சூழலும், வாழ்வாதாரங்களும் நெருக்கடிகளையே எற்படுத்துகின்றன. இவைகளை அனுபவிப்பதன்

வலிகளையும், நுண்ணுணர்வுகளுடனான வேதனைகளையும், தோரனைகளாகவும், வெறும் எழுத்து கூட்டங்களாகவும் இல்லாமல் ஒரு

பிரக்ஞையின் வழியாக தொடர்ந்து தூலாவிக்கொண்டிருக்கும் ஒரு சக மனிதனின் அகவயமான திரட்சியான தேடல்களை பெரியசாமி

கவிதைகளாக்கியிருக்கார். என்றுமே தீர்ந்திடாத காமத்தின், காதலின், நட்பின், துரோகத்தின் இடைவிடாத சொற்களையும், ஒரு

தலைக்குனிவை, காத்திருத்தலை, உறவுகளின் நிச்சயமிண்மைகளை, மதுவின் வாசனைகளை, பூவின் அகோர மரணத்தை, அரசியலின்

வெக்கங்களில்லாத சொற்களையும் விழுந்துகொண்டிருக்கும் இலைகளெனச் சொல்லிச்செல்கின்றன பெரியசாமியின் சொற்கள்.

   தொடர் வளர்ச்சிக்காகவும், பெரு வியாபார லாபங்களுக்காகவும்  அறுபடும் உறவுகளுக்கானதும், உயிர்துறத்தலுக்கும்,  தொடர்

வாழ்விற்கானதும், நினைவுகளுக்கானதுமான தொடர்ச்சியான பிரதிகள் யிவை. மயில் தோகையின் எளிய அன்புகளாகவும்

நேசங்களாகவுமிருக்கின்ற சேகரங்களேதுமில்லாத இவ்வாழ்வின் தொடர் தேடல்கள் இந்த வரிகள். ‘தன் மயக்கம்’-கவிதையின் வெளி

அளப்பரியது, சொல்லி முடிக்கப்பட்ட அவ்வரியின் மீதான நினைவுகள் திரும்பத்திரும்ப வெவ்வேறு யிடங்களுக்கு கூட்டிச்செல்கின்றன.

மேலும் எதிர்த்தனங்களின் வழியே ஒரு தேடுதலையும் உருவாக்குபவை. பூனையாகி ஒரு நினைவில் நின்றிடும் ‘அம்மா’ சார்ந்த சொற்களும்,

கடவுளுக்கான எதிர் அதிகார அரசியலின் மையமிட்டு சொல்லப்பட்டிருக்கும் ‘நரபலிகள்’ கவிதையும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.

’மெய் வருத்தம்’ – உடல் மனமாகி இன்பங்கொண்டு முடிந்த பின் நிகழ்வதான அதிகாலை அயர்ச்சியில் அவ்வளவு அன்பிருக்கிறது, மேலும்

மனதின் புரிதலுமிருக்கிறது. தான் ஏமாந்து போகும் சூழலுக்கு மாற்றாகவே அவரின் கனவுகளில் மழையும் வெய்யிலும்

பொழிந்துகொண்டேயிருக்கின்றன. அவை தானிந்த சொற்கள், அவ்வளவு குளிர்ச்சியாகயும், அலைகளாகவும், வெப்பம் தகிக்கும்

சொற்களாகவுமிருக்கின்றன யிந்த சொற்கள். ‘நகரின் பரிசு’ கவிதையில் நிகழும்/நிகழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனின் செயல்பாடுகள்

ஒரு காட்சிநிலையின் அழகியலோடு யினைந்து மனதிற்கு மிகுந்த நெருக்கம் கொள்கின்றன. ‘நமக்கல்ல’, ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’

தலைப்பிட்ட இரு கவிதைகளும் நிகழ்கால அரசியல் மொழியையும் அதன் அதிகாரலாப நோக்கங்களையும் தீயிட்டுக்கொழுத்துகின்றன.

புரிதலுக்கான அன்பின் மொழிகளையும் அதன் நித்தியத்துவத்தையும் தவிப்பையும் இக்கவிதைத்தொகுப்பிலுள்ள சில கவிதைகளில்

உணரவும் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் முடிகிறது. சிறுவயதின் பால்யகாதலியின் நினைவுகளாலான ‘மதுவாகினி’ கவிதை

மேலும் மேலும் எல்லோர் மனங்களிலும் உயிர்பித்துக்கொண்டேயிருக்கின்றன. முடிவுறாத அந்நிகழ்வுகளிலான அக்கவிதைகளின்

முடிவுச்சொற்கள் ஒரு ஓவியத்தின் அமைதியென கனமான புன்னகையுடனும், புதிர்களுடனும், மௌனமாகவுமிருக்கின்றன. குழந்தைகள்

வரைந்து கொண்டிருக்கும் சித்திரங்களின் மொழிகளையும் அழகுகளையும் ரசிக்காமல் அவர்களின் திசைகளை திருப்புவதிலும் அவற்றை

கலைப்பதிலும் நாம் கொண்டிருக்கும் வேகமும் ஆர்வமும் தான் தற்கால வாழ்வின் பெரும் வேதனைகளாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

ந.பெரியசாமியின் கடவுள்கள் அவரைப்போலவே மிக எளிமையாகவுமிருக்கிறார், ஒவ்வொரு பிரார்த்தனைகளை மிக எளிதாக

நிறைவேற்றுபவராகவும் இருக்கிறார். ‘மயில்’, ‘கசப்பு’, ‘காட்சிகள்’, ’புலி வால் பிடித்த கதை’, ‘காத்திருந்த துளி’ ஆகிய கவிதைகளின் வெளியும்

அவை யுண்டாக்கும் காட்சிகளும், சிறு கவிதைப்பிரதிகளின் முக்கிய செயல்பாடான அடர் செறிவுகளான நீட்சிகளின்

சொற்களெனயிருக்கின்றன, அவை ஒரு இசையின் வடிவத்துடன் மிக நெருக்கம் கொள்ளவும் வைக்கின்றன. மதுவின் வாசனைகளின்

மீதமிருக்கும் சொற்களை உள்ளடக்கிய பிரதிகளும், சில நெருக்கமான வரிகளும் இவைகளிலுள்ளன, ஆனால் இவை வெறும்

போதையாகயில்லாமல் நிறைவான நேசத்துடனே இருக்கின்றன. முத்தங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனின் கவிதைகளுக்கான

உரையாடல்கள் எப்பொழுதும் போலவே நெருக்கமாகவும் அணைத்துக்கொள்ளும் படியாகவே யிருக்கின்றன.

   தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்வும் நிலையும் அவமானமும் வெற்றிடமும் நினைவுகளும் வெளியும் ஒரு

சகிப்புத்தன்மையும் பல கேள்வியும் தொடர்ந்து உணர்த்துதலின் வழியிலான பிரதிகளாக பெரியசாமியிடமிருந்து வெளிவந்து

கொண்டிருக்கின்றன. அவர் இவ்வாறு கலைத்துக்கொண்டிருக்கும் வாழ்நிலைக் காட்சிகளின் பிம்பங்கள் முன்னெப்போதுமில்லாத

அளவுகளினூடே எந்த யிடைவெளியுமற்று அவரின் சுயம் சார்ந்த கேள்விகளாகயில்லாமல் பொதுப்பரப்பில் கரைந்து கொண்டிருக்கும்

பிரக்ஞையின் கேள்விகளாகவும் பதில்களாகவும் எதிர் சொற்களாகவும் மையங்கொண்டுள்ளன. சற்று நீண்ட கவிதைகளின்

இயங்குநிலைகளிலாலான கவிஞரின் வார்த்தைகள் மிகப்பலவீனங்களுடனே அனுகப்பட்டும் தெரிவு செய்யப்பட்டுமிருக்கின்றன,

கொஞ்சமேனும் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பிரதிகள் உருவாக்கும் சவால்களின் தேடல்களும் சுதந்திரங்களும் அகமன

விசாரனைகளும் உணர்வலைகளும் ரசிக்கும் படியும் பிரியங்கொள்ளும் படியாகவுமே யிருக்கின்றன, மேலும் நேசங்களுடனான

பெருவாழ்வின் மீதமிருக்கும் நினைவுகளையும் தீர்ந்துபோகாத அபத்தங்களுக்கு எதிரான சொற்களும் நிறைந்த அடர் வெளியென

பரவியுமிருக்கின்றன இக்கவிதைகள்.

மதுவாகினி –
 ந.பெரியசாமி –
அகநாழிகை பதிப்பகம் – டிசம்பர் 12 – ரூ 70/-             


நன்றி - அடவி ஏப்ரல் 2015 இதழ்

Wednesday, April 15, 2015

பேசி நகரும் பிரியங்கள்...

nantri:yaavarum.com

பேசி நகரும் பிரியங்கள்...


கடவுளல்ல நான் எனும் பிரகடனம் உங்களுக்கான கடவுள் அல்ல என்பதாகவும் கொள்ளலாம். நான் எனக்கான கடவுள். என் மொழியால் சுமையற்றவனாகி காற்றாய், நதியாய் , மழையாய் மாறும் வல்லமை கொண்டவன் என்பதைக் கூறும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் தொகுப்பின் துவக்க கவிதையே நம்பிக்கையோடு தொடரச்செய்கிறது. இக்கவிதையின் நிழல் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் படிந்திருக்கிறது.

அகத்தில் அறம் அழித்து புறத்தே அறம் பேசித் திரிவோரின் வாழ்வில் பறவையாகி எச்சமிட்டு, கூழாங்கற்கள், மீன்குஞ்சுகளோடு குளிர்ந்த நீராக ஓடி சர்க்கரை கடலாகிறார்.

ச்சீ எனும் சொல்லில் மௌனத்தின் கலகம் உடைத்து, பசி ஏப்பத்தை புளிச்ச ஏப்பமென நினைக்கும் கடவுளை ஏசி, எப்பொழுதும் எந்த நிலம் சுதந்திரம் அளிக்கக்கூடியது என்பதை உணர்ந்து, பட்டாம்பூச்சியாகி மூத்திரம் பெய்து, எது கருணை என்பதை கேள்விக்குட்படுத்தி அதிகாரத்தை மண்ணுளியான் பாம்பாக புறந்தள்ளி, ராதையின் மார்பில் உறைந்திருக்கும் இரத்தத் துளிகளில் கண்ணன்களின் வஞ்சகங்களை காட்சிபடுத்தி, சாதும் மிரளக்கூடும் தருணத்தை நினைவூட்டி, அழிக்க நினைப்பவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் ஆலோசனைக்கூறி, புத்தனோடு  நீச்சலடித்து, சமணனோடு குகை அடைந்து கற்சிலைப் பெண்ணின் கதை கூறி வாழ்வையும் மரணத்தையும் இரு உதடுகளாக்குகிறார்.

சமகாலத்தின் வன்முறை நெருக்கடிகளினால் துயரத்தோடும் கோபத்தோடும் இருந்த நிலையில் வேறு வேறாக கூடுபாய்ந்து எதிர்வினையாற்றி அவ்வப்போது சமநிலையற்று தத்தளிப்போடு யாருமற்ற வீட்டில் இருந்தவரிடம் அதுவும் வெள்ளிக்கிழமையில் ரிது வந்திட வாசிப்பில் நமக்கும் இசை பற்றிக்கொள்கிறது. ரிதுவின் இடத்தில் நான் மதுவாகினியை வைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்களுக்கான ஆன்மாவை வைத்துக்கொள்ளலாம். இனி நாம் பிரியங்களாலும், முத்தங்களாலும் நிறைய்யப்போகிறோம். நம் பின்னணியில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன.

கருநீலப்புடவையில் அரக்கு மணத்தோடு தேவதையாக வலம் வரும் ரிதுவின் காதலை இதழ்களால் வேட்டையாடுகிறார். தப்படிகளின் பின்னோக்கிச் சென்ற காலங்களின் குறியீடாக இருக்கும் பொம்மையை தீயிலிட அதன் ஆன்மாவை மழைத்துளியாக்கி பருகும் காட்சி ரசித்து, கனவில் வந்த கருநிலப்புடவை ரிது குறித்து புகாரிட்டு பொறாமையைத் தூண்டி, ரிதுவின் ஆசிபெற்ற ரிது நீ மட்டும்தான் என தன் நதியின் கடைசி மீன் இதுவென நம்பிக்கையூட்டி, மீதமிருக்கும் வெள்ளிக்கிழமையையும், உள்ளங்கை வெப்பத்தையும் நினைவூட்டி தன்னுள் நிகழும் மாற்றங்களுக்கு ரிதமானவள் நீதானென் எதிர்பார்ப்பைச் சொல்லி, இன்பதுன்பங்களின் வடிகாலாக இருக்க சிறு மணல்வீடு போதுமெனும் எளிய மனசுக்காரனாக மாற்றம்கொண்டு, உன்னில் இருந்து வரும் நாகம் கூட ரோஜாக்களை மட்டுமே தந்து செல்லும் உண்மை கூறி, இரவாக மாற்றம்கொள்ளும் ரிதுவின் ஆடல் பாடலில் தகிக்கும் வெப்பம் உணரும் கனவைச்சொல்லி, தன்னில் படிந்து கிடக்கும் வெக்கை நினைவுகளை கொலை செய்து ரிதுவின் குளிர்ந்த கரம் பற்ற நாளாக நீடிக்கும் ஒத்திகைபார்த்து, யாருக்கும் புலப்படாமல் அகவாழ்வில் நிரம்பியபடியே இருக்கம் பழச்சாற்றின் ருசி காட்டி, பிரியங்கள் பேசி நகர உண்டாகும் சில்லிடலை சிலாகித்து. விடியலுக்குப் பின் நிற்கும் நிர்வாண உண்மையின் பொதுபுத்தியை கிண்டலடித்து, வாழத் தகுதியற்ற சமதளம் நீக்கி ரிதுவை வானில் நீந்தச்செய்கிறார்.

மூத்திரத்தை தங்கக்கிண்ணத்தில் ஏந்தச்சொல்லும் கோபம், காமத்தை கையில் பிடித்தபடி உபதேசித்துத் திரியும் மிஸ்டர் எக்ஸ்-கள் மீதான எரிச்சலை நாமும் உணரச்செய்திடுகிறார்.

தொகுப்பில் கீற்றாக ஒரு குழந்தை புகார்களோடு வந்துபோவதும், எல்லாகாலங்களுக்கும் நாயகனாக கொண்டாடக்கூடியவர் சே எனும் உண்மையையும் கூறும் கவிதைகள் புன்னகைக்க வைக்கிறது. வேறு நாயகன் வராது போன துயரமும் தொடரச்செய்திடுகிறது கவிதை.

சிறுசிறு தெறிப்புகளில் மின்னலாக மனம்வெட்டும் கவிதைகளோடு வந்திருக்கும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் எல்லோருக்குள்ளும் அலைவீசும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு
புதுஎழுத்து
2/205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.