Thursday, April 21, 2016

கனிவின் உருவானவளே...



நேரங்களை துல்லியமாக்கும்
உனதழைப்பு
நாள் கழிய நாள்
வாரம் கழிய வாரமென்றிருந்தது
எப்போதவதுதான் என்றான போதிலும்
முன்பிருந்த குளிர்மையும் இல்லை.

நிகழ்ந்துகொண்டிருக்கும்
காதல் பலிகள் குறித்த
உன் வார்த்தைகளின் வலியை மறக்கடிக்க
சந்திப்பு காலங்களில் நிகழ்ந்த
சம்பவங்களை நினைவூட்டுகிறேன்
மாற்றிடுகிறாய் பேச்சை.
உன் சாயலைக் காட்டி
ஏமாற்றும் நிழலைக் காணுமென் விழிகளில்
நமக்கேயான பொழுதுகளின் சித்திரங்கள்.
காலங்களில் படிந்த உன் சொற்களை
தேன் எடுக்கும் ஈக்களாக
சேகரிக்கத் தொடங்கினேன்
உருவானது பெருங்கூடு
துயர் நிரம்பிய நாட்களில்
கூட்டை கசிய வைத்திட
ஓடும் இனிப்பின் நதியில்
மிதந்து கிடக்கிறோம்.
nantri:theeranathi