Thursday, October 25, 2012

பாம்புகள் பாம்புகளாயின...


நிலத்தை
உயிர்ப்பித்துக் கொண்டிருந்த தென்னையிடம்
வாங்கிய கீற்றுகளை கிழித்து
பாம்பு செய்தனர்
பலரிடம் பயம்காட்டிச் சிரித்து
நெளியச் செய்து
ஒன்றோடு ஒன்றை பிணைத்து

சுருட்டி எறிந்து
கொடிக்கம்பாக தூக்கி ஓடி
தொலைத்தும் கண்டெடுத்தும்
வேகமாய் சுற்றிச்சுற்றி
பெரும்பாடாய் படுத்தினர்
களைப்படைந்த கணத்தில்
தூக்கி வீசி வீடு திரும்பினார்கள்
பாம்புகள் பாம்புகளாகவே மாறின
ஒன்றை ஒன்று கவ்விப் பிணைந்து
பெரும்மூச்சில் சீறி
தரை கொத்தி நச்சு கக்கி
சோர்வுகொள்ள திரும்பின
தென்னையின் உச்சிக்கு...

நன்றி: யாவரும்.காம்

Monday, October 22, 2012

இருளும் ஒளியும்

மரம்
தன் நிழலைக் கிடத்தி
இல்லத்தை இரண்டாக கிழித்தது
ஒருபுறம் வெள்ளையும்
மறுபுறம் கருமையாகவும் மாறியது
தாவினேன் கருமையின் பகுதிக்கு
அம்மனச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்கு பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன் வெள்ளைப் பகுதிக்கு
வெய்யல் சுட உடல் பருத்தது
கூலிச் சீருடை அணிந்து
பிழைப்புக்கு தயாரானேன்
மரம் தன் நிழல் சுருக்கி
இல்லம் இணைத்தது...

நன்றி: மலைகள் இணைய இதழ்

Sunday, October 21, 2012

காகம் ஏதும் வரவில்லை
வருகையை சொல்லிச்செல்ல
வேண்டுதலில் விரும்பிய
வண்ணப்பூவும் விழவில்லை
நினைவில் துளிர்த்த விரலை
எக்குழந்தையும் தொட்டுணர்த்தவில்லை
பூவா தலையா பார்க்கவும் இல்லை
காசுகளை சுண்டி
காட்சிப் படுத்தவில்லை கனவும்
நினைவலைகளும் சீராகவே
குறி சொல்லிச் செல்லவில்லை கோடாங்கியும்
விக்கலும் தடுக்கலும் கூடயில்லை
திடுமென்ற உன் வருகையால்
நிலம் கரைந்து
துளிர்க்கத் துவங்கினேன்
பச்சயத்தையும் பூக்களையும்
எழுந்த நறுமணத்தால்
மயக்கம் கொண்டது பிரதேசமே
மதுவாகினி தேவதையாகிக் கொண்டிருந்தாள்... 

nantri:malaigel.com

Tuesday, October 16, 2012

விடை விரும்பா கேள்வி
-ந.பெரியசாமி

ஒளியை இருள் விழுங்கியது
உடலை கொசுக்கள் தின்னத் துவங்கிய கணத்தில்
வௌவ்வாள்களாக தொங்கத் துவங்கின
உள்ளிருந்து குதித்தேறிய கேள்விகள்
அருகிலிருக்கும் தோழிகளின் கேலிக்கும்
இது கூட தெரியாதாவெனும்
ஆசிரியர்களின் ஏளனப் பேச்சுக்கும
அச்சம் கொண்டதால் அல்ல
பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க
நாம் ஏன் முட்டையிடுவதில்ல
இக்கேள்வியால் நிகழ்ந்த
கசப்பான நிகழ்வுகளுக்குப் பின்தான்
தேங்கிடத் துவங்கின
காலம்
பதில்களை சொல்லி வளர்த்தெடுக்க
அடைகாத்திருக்கேன்
அறிந்து கொள்ள முயற்சிக்காது
ஒன்றிரண்டு கேள்விகளை
துள்ளலும் மகிழ்வும் கனிவதால்

உங்களுக்காக
விடை விரும்பா கேள்வியொன்று
மின்மினிகள் மிளிர்வது எதனால்?

நன்றி: வல்லினம் இணைய இதழ்

Tuesday, October 9, 2012

கனவில் கடவுளிடம்
குழந்தை கேட்டாள்
மழை வேண்டுமென
நேரில் குழந்தையிடம்
கடவுள் வேண்டினார்
நிறைய்ய செடிவளர்க்க வேண்டுமென…
0

அடப்பாவி
கொலைபாதகாவென
திட்டக்கூடும் நண்பர்களே
எறும்பிடமிருந்து பிடுங்கிய அரிசியால்
நாவை எச்சால் நனைத்த
நாட்களை நினைவுகூற

வேறு பருக்கைகள் அவைகளுக்கு
எளிதில் கிட்டிவிடும்…
0

நிரம்பாத போதையால்
தவிப்படைந்தவன்
அழைத்துக்கொண்டிருந்தான்
வாருங்களேன் தற்கொலை செய்துகொள்வோமென
நீங்கள் எல்லோரும் கொலைகாரர்கள்தானே
மறந்துவிட்டீர்களா
ஆத்மநாமை…

0000
nantri:eathuvarai

Wednesday, October 3, 2012

நேற்று காலை சிற்றுண்டி முடித்து
வாசலில் அமர்ந்திருந்தேன்
கொஞ்சம் ஆட்டுப் பால் வேண்டுமென
காந்தி வந்தார்
பட்டியே இல்லை
ஆட்டிற்கு எங்க போகவென்றேன்
பரிதாபமாக எனை பார்த்தார்
இருவரும் பயணித்தோம்
பட்டிகளைத் தேடி
பெரும் யாத்திரையாகிட
களைத்து திரும்பினோம்
கசாப்புக் கடையொன்றில்
தொங்கும் ஆடு பார்க்க
அழுது புரண்டார்
பெரும்பாடாகிவிட்டது தேற்றி
இடம் கடந்து வர
சிறு தொலைவுக்குப் பின்
தோட்டம் ஒன்றில்
வட்டமாக இளைஞர்கள்
என்ன செய்கிறார்கள்
வேண்டாம் போகலாம் என்றேன்
அவரின் பார்வைக்கு
பொய்யுரைக்க மறந்து
மது அருந்துகிறார்கள் என்றேன்
ஹேராம் என தலையிலடித்து
அரசு என்ன செய்கிறது
பார்வையை கேள்வியாக்கினார்
சிரிப்பை கட்டுப்படுத்த இயலாது
கடை நடத்துவதே அரசுதான்
ஐயோ...வென மயங்கி சரிந்தார்
இதுதான் சமயமென
பாக்கெட்பாலில் நீர்கலந்து
முகம் தெளித்தேன்
அரைமயக்கத்தில் ஆட்டுப்பாலாவென்றார்
ஆமென பொய்யுரைக்க
அருந்திய வேகம் தனிய
சுவை இல்லை என்றார்
எல்லாவற்றிலும் கலப்படம் என்றேன்
எங்கு எப்படி கிடைத்ததென
கேட்கத் துவங்கும் முன்
இனி உங்க ஜனன நாளில் மட்டும்
வாருங்கள் என்றேன்
போதுமடா சாமி
என்றும் வரமாட்டேனென
கரைந்து போனார்...