Tuesday, April 26, 2022

நன்றி: காலச்சுவடு



1.நிலவு காயும் வெளி

இன்று
கைகளுக்கு நீளும்
தன்மை கிடைத்தது.
நேற்றின் உடையில்
போதை ஏற்றியவளின்
ஜன்னலைத் திறந்தேன்
இன்றும் நேற்றின் உடையோடிருக்க
மகிழ்ந்தேன்.
ஒரு கணம் புத்தி
ஆசை கொண்டது.
நிர்வாணம் 
ததும்பும் நீரோடையின் குளிர்ச்சியைத் தரும்.
அறிந்திருந்தும்
செய்யாதிருக்கச் செய்தது இன்னொரு.
*

2. நிழலை புதைத்த நிலவு

குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு
பறித்த ஊற்றிலிருந்து
நீரை சேந்திக் கொண்டிருந்தவர்களைக் கடந்து
தொலைவாக இழுத்துச் சென்றாள்.
ஈச்ச மரத்தின் நிழலில்
எதிரெதிராக அமரச் செய்து
வானத்தை குவித்து கரைகட்டினாள்.
கொண்டுவந்த நிலவை
கிச்சுக்கிச்சா தாம்பூலம் கியாக்கியா தாம்பூலமென
ராகமிட்டவாறு ஒளித்தாள்.
கண்டுபிடிக்க கைகளை
மேகமாக்கி குவித்தேன்
வேறு இடத்திலிருந்து வெளியேற
தோல்விக்கு புன்னகையை பரிசளித்தாள்.
தொடர்ந்த விளையாட்டில்
பெற்றுக் கொண்டிருந்தேன்
புன்னகையை மட்டுமே.
தொடர் வெற்றியின்
சோர்வை விலக்க
நிலவை என் வசமாக்கினாள்
ராகமிட்டவாறு
ஆழ ஊன்றி அவளைக் கண்டேன்
நமட்டுச் சிரிப்பில்
ரகசியம் அறிந்தாற்போல்
குவித்த கைகளுக்குள் மரமிருக்க அதில்
தன் நிழலை புதைத்துக் கொண்டது நிலவு.
*

3. பகடையாட்டம்
தாயம்
ஆறு ஐந்து இரண்டிற்கு
வெட்டுண்டு
கட்டைகள் உருண்டோட
விழும் எண்ணிக்கைகள்
எதிர்வரும் காயை ஏமாற்றி
மலை மலையாக தாவி
நின்றிருந்த விருட்சம்
காலத்தை கனியாக்கியது
தாயம் இடாமலே.
குரல்கள் கலைந்து போக
ஆட்டக் களத்தில்
காய்கள் கனிகளாகவும்
கனிகள் காய்களாகவும்
மாற்றமடையும் கோடையின் கானல்.
*
4. குடை

வானம் சிந்தத் துவங்கியது.
சட்டைப் பையின் கவிதையிலிருந்து
வெளியேறிய குடையால்
எரிச்சலடைந்தவன் 
மடக்கி எறிந்தான்.
துளிகள் மீண்டும்
உடலுள் பூத்துக் கொண்டிருக்க
கவிதையின் இறுதி
வரியிலிருந்த பெண்
துப்பட்டாவை விரித்தாள்.
பிணைந்த வெப்பம்
ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment