Wednesday, July 26, 2017

அ. ராமசாமி

அ. ராமசாமி
குழந்தைகள் குளியல்போடும் மழையின் தோட்டம்.
========================================
சொல்வோருக்கும் கேட்போருக்குமிடையே உருவான - உருவாகக்கூடிய வாழ்வின் சம்பவங்கள், கவிதையின் சம்பவங்களாதலே பெரும்பான்மையான கவிதைகளின் வெளிப்பாடு. நிகழ்காலக் கவிதைகள் உருவானதை முன் வைப்பதைவிட, உருவாகக் கூடியதைப் பற்றிய நினைப்புகளையே அதிகம் எழுதிக்காட்டுகின்றன. அந்தவகையில் அவை எதிர்காலக் கவிதைகள்.
எல்லாவகையான கவிதைகளிலும் அழைப்பின் வழியாகவே கவிதைச் செயல் நிகழ்கிறது. அந்த அழைப்பு உருவாக்கும் ரகசியத்திறப்பு கவிதையின் வாசிப்புத் தளத்தை உருவாக்கக்கூடியது. இந்தத் தன்னிலை இப்படியான தன்னிலைகளையே அழைக்கும் என்ற தேய்வழக்கில் வெளிப்படும் காதல் கவிதைகளும் புரட்சிக் கவிதைகளும் பல நேரங்களில் பாதிக் கிணறைத் தாண்டுவதில்லை.
அழைக்கும் தன்னிலை தனது இருப்பையும் அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு உச்சரிக்கும் சொல்திரட்டின்வழியாக வரையும் சித்திரங்கள் ஒருதடவைக்கும் கூடுதலாகவே வாசிக்கச் செய்யும். அழைக்கப்பட்ட தன்னிலையின் மீதான இருண்மை கவிதையின் நிகழ்வை இருண்மையாக்கிக் குழைத்துத் தீட்டப்படும் அடுக்கடுக்கான வண்ணச்சேர்க்கையாக நகரும்.
ந. பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் அழைக்கும் தன்னிலைக்கும் அழைக்கப்படும் முன்னிலைக்குமிடையேயான சம்பவங்களாக இல்லாமல் மூன்றாவதொன்றை முன்வைக்கும் - வரைந்துகாட்டும் சொற்கூட்டங்களாக இருக்கின்றன. வெளிப்படையான கருப்பொருளோடு- பின்னணிக்காட்சிகளோடு பலவித உணர்ச்சிகளைத் தேக்கிவைத்திருக்கும் குழந்தைகளை - குழந்தைமைத்தனங்களை எழுதிக்காட்டும் கவிதைகளைத் தந்துள்ளார் .மழை, வானம், தோட்டம், காற்று என வெளிப்படையாகத் தெரியும் பரப்பைக் கவிதை விரிப்பதால் இருண்மை குறைந்து எளிமையின் அருகில் அழைத்துச் செல்கின்றன. குழந்தைகளைப் பற்றிய கவிதைத் தொகுப்பாக வந்திருக்கும் ந.பெரியசாமியின் தொகுப்பிலிருந்து ஒரு கவிதைமட்டும் இங்கே.
=============================================
அதன் தலைப்பு: வெளியே மழை பெய்கிறது
----------------------------------------------
கொசகொசவெனக் கட்டடங்கள் வரைந்து
சிறுசிறு புள்ளிகளை அடைத்து
பூச்சிகளின் வீடென்றாள்
கோடுகளை அடுக்கி
குட்டிகுட்டியாய் பொந்து வைத்து
எலி வீடென்றாள்
பெரிதாய் சதுரமிட்டு
தடுப்புகளில் அடுக்கி
பொம்மை வீடென்றாள்.
உயரமாக மரம் வளர்த்து
கூடொன்றை நெய்து
குருவி வீடொன்றாள்.
வேகமாக ஓடியவளை
தொடர்ந்து நகர்ந்தன.
வெளியே
மழை பெய்தது.

No comments:

Post a Comment