Wednesday, July 26, 2017

பாலா கருப்பசாமி

பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும் என்று யேசு சொன்னார். ஜே.கே. அறிந்ததினின்றும் விடுதலையென்றார். இரண்டும் ஒன்றுதான். இருப்பதிலேயே கடினமானது எளிமையைக் கண்டடைவதுதான். காற்றில் நடனமிடும் இலையை பற்றும்போது நடனம் மட்டும் சிக்குவதில்லை என்கிறார் தேவதச்சன். மழை இலைமீது தாளமிடுகிறது. இலை என்ன செய்கிறது எனக் கேட்கிறார் நகுலன். இரண்டும் ஒன்றேதான். இலையா காற்றா மழையா எனப் பிரித்தறியமுடியாதபடி அது நிகழ்கிறது. அந்த நிகழ்வைப் பிடிப்பதுதான் கவிஞனின் சவால்.
ந. பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் குழந்தைகளின் உலகைத் தொடும் ஒரு முயற்சி. குழந்தைகள் குறித்தான கவிதைகளில் எழுதுபவர் யார் என்பது பெரிய கேள்வியாய் வந்து நிற்கிறது. எழுதுபவன் மறைந்துபோய், அந்த உலகத்தோடு கரையும் இடங்களில் மட்டுமே அது கவிதையாக முடியும். இந்தத் தொகுப்பில் 34 கவிதைகள் உள்ளன. இதில் நான்கு கவிதைகள் மட்டுமே சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. கவிதை நெகிழ்ந்து குழந்தைகளின் உலகைத்தொடும் அனுபவம் இதில் கைகூடியிருக்கிறது. இந்த எண்ணிக்கையை நான் ஒரு குறையாகப் பார்க்கவில்லை. குழந்தைகள் குறித்தான கவிதைகள் மிகச் சிரமமானவை.
மழையின் பசியாற்றியவர்கள்
மழையின் பசியாற்றினோம்
ஆவல் பீறிடக் கூறினேன்
நட்சத்திரங்களாகக் கூரையில் மின்னும்
துளிகளிடமிருந்து மீண்டு.
பரிகாசமாகச் சிரித்தவனின்
கரம்பற்றி அழைத்துச் சென்றேன்
என் துளிர்த்த காலத்திற்கு.
உத்தி பிரித்து விளையாடிய காலையில்
சிறுசிறு தூறல்களும் உடனாட
மழைக்குப் பசிக்குமென
கொட்டாங்குச்சியில் தட்டி வைத்தோம்
சுடச்சுட இட்லிகளை.
கரைத்து விழுங்கி தெம்பாய்
ஊரைச் சுத்தம் செய்தோடியது
மழை.
அதேபோல், எளியவர் என் கடவுள் என்ற கவிதையையும் குறிப்பிடவேண்டும். முழங்காலளவே இருக்கும் மகளைக் குளிப்பாட்டும் ஒவ்வொரு நாளும் ஒரு கோவில் செப்புச்சிலையை, தாய் தெய்வத்தைத் தொடுவதாகவே ஒரு உணர்வை அடைவேன். பாதங்களின் மேல் சோப்போ மஞ்சளோ போடும்போது சமயங்களில் கண்ணீர்கூட வந்துவிடும். இத்தகு உணர்வை இந்தக்கவிதை அளித்தது 'வடை தூக்கும் காக்கைக் கதையில்/உறக்கம் கொள்ளும்/என் கடவுள் எளியவர். / நெற்றியில் பூசும் திருநீறுக்கே/ மலையேற்றம் கொள்ளும் / என் குடிசாமி போல"
வாஞ்சையின் கடும் ஈரம், புதைந்த குரல்கள் ஆகிய இரண்டு கவிதைகளும்கூட முக்கியமானவை. ந. பெரியசாமிக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

No comments:

Post a Comment