Wednesday, July 26, 2017

விநோதினி

அண்மையில் #குட்டி_மீன்கள்_நெளிந்தோடும்_நீலவானம்எனும் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. தொகுப்பு முழுவதும் மழலைமையை இரசித்துச் செதுக்கிய கவிதைகள்.
"துணை வானம்" எனும் தலைப்பிலமைந்த கவிதையில் யானைக்கு யானை துணை, குருவிக்குக் குருவி துணை என்பது போன்ற வாழ்வியல் எதார்த்தங்களைக் கவனிக்குத் தொடங்கும் குழந்தை, வானத்துக்குத் துணையேதென்று வெற்றுத் தாளில் வானமொன்றை வரைந்து துணைக்கனுப்பி வைக்கிறது.
"பாம்புகள் பாம்புகளாயின" எனும் தலைப்பிலமைந்த கவிதையில், கார்டூன் படங்களில் பொம்மைகளை உயிர்ப்பித்து விளையாடிவிட்டு மீண்டும் பொம்மையாக்கி விடுதல் போல, தென்னங்கீற்றுகளில் செய்த பாம்புகளை உயிர்ப்பித்திருக்கிறார்.
"புதைந்த குரல்களி"ன் கீழே, குழந்தைகளின் நுண்ணுணர்தல் திறனைச் சரியாகப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
வெற்றுத் தாளை வனமாக்கியவன்
*******************************
முயற்சியால் வெற்றி கொண்டான்
மேகங்கள் உருவாகியிருந்தன
வேடர்களுக்குச் சிக்காத
பறவைகளை மிதக்கச் செய்தான்
புற்களை உருவாக்கி
மரங்களை வளர்த்து
வீடொன்றைக் கட்டினான்
வெளிச்சம் வேண்டி
நிலவைப் பிறப்பித்தான்
நிறைவுகொள்ள
வேறு தாளை எடுத்து
நதியை உருவாக்கத் துவங்கினான்
சனியன்
சதா கிறுக்கிக்கிட்டே இருக்கு
அப்பாவின் குரல் கேட்டு அதிர்ந்தான்
ஒரு நதி
துவக்கத்திலேயே வறண்டது..
*************************
இக்கவிதையில் வெளிச்சத்திற்கென நிலவைப் பிறப்பிப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, கவிஞருக்கும் நல்ல கருணையுள்ள மனம் தான் வாய்க்கப்பட்டிருக்கிறது. நானாகவிருந்தால், சந்தேகமே வேண்டாம் கண்டிப்பாகச் சூரியனைத் தான் வரைந்திருப்பேன். தவிர, குழந்தைகளின் கற்பனைத் திறனைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டுமேயன்றித் தடை போடுதல் தவறென்ற பொதுநல நோக்கும் உள்ளது.
இவை மட்டுமல்ல, இது போன்று நிறையக் கவிதைகள் இருக்கின்றன. தொகுப்பில் பெரும்பான்மையாகச் செய்தான், வரைந்தான் என்பது போன்று சுட்டியதிலிருந்து கவிதைகளுக்குப் பின்னணி இசைப்பது ஒரு அவன் தான் என்பதும் தெளிவாகிறது.
வாழ்த்துகள் அண்ணா.

No comments:

Post a Comment