Friday, August 4, 2017

-கணியன் பூங்குன்றன்



ஒரு பொருட் பன்மொழி
-கணியன் பூங்குன்றன்
குழந்தைகளின் உலகம் என்கிற ஒற்றைக் குவிமையத்தை தேர்ந்து கொண்டு, சிறிதும் பெரிதுமான கோடுகளால் வெவ்வேறு சாயல்களில் வரையப்பட்டிருக்கும் விதவிதமான சித்திரங்களின் தொகை இது. வளர்ந்து பெரியவர்களாகி இந்த உலகத்திற்கு தகுந்தாற்போல, தங்களைப் பொருத்திக் கொள்ள கற்பதற்கு முன்பாக, குழந்தைகள் தங்களின் களங்கமற்ற வசீகரத்தோடு தம்போக்கில் உலவித் திரிகின்றனர். அப்பருவத்தில் அவர்கள் கொள்ளும் பரபரப்பு, ஆனந்தம், வினோதம், கற்பனை, கனவு முதலியன அவற்றின் இயல்பு எளிமை காரணமாக எல்லோரையும் ஈர்த்து நிறுத்தும் தன்மையுடையது. அத்தகைய தருணங்கள் பலவற்றை தனது வார்த்தைகளால் ஒற்றியெடுத்து, ஒவ்வொன்றையும் ஒரு கவிதையாக ஆக்கிப் பார்த்திருக்கிறார் பெரியசாமி. உலகப் புகழ்பெற்ற ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை அதன் ஆசிரியர் ‘முன்பு ஒரு காலத்தின் குழந்தைகளாக இருந்த பெரியவர்களுக்கு’ சமர்பணம் செய்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு பெரியவரின் நோக்கிலிருந்து எழுதப்பட்டவை எனலாம் இக்கவிதைகளை. மொழியின் இலக்கணத்திற்கு தன் கற்பனைகளை ஒப்புக்கொடுக்கத் தொடங்கும் கணத்திலிருந்து தான் ஒரு குழந்தை, தனது குழந்தமையிலிருந்து வெளியேறத் தொடங்குகிறது எனலாம். குழந்தைகளினுடைய அன்றாடத்தனத்திலிருந்து உருவாகும் கவித்துவம் என்பது பெரும்பாலும் அதனுடைய மொழி வழுவலிலிருந்து பிறப்பதுவே. சொற்களின் கண்ணாடித் தடுப்பை ஊடுருவிப் போனால் மாத்திரமே அதன் முழுவனப்பையும் கொண்டுவர முடியும். பெரியசாமி அதற்காக ஒரு தூண்டில்காரனின் பொறுமையோடுக் காத்திருக்கப் பழகுவாரெனில், நெளிந்தோடும் நீலவானத்தில் குட்டிமீன்களோடு சில நட்சத்திர மீன்களையும் பிடிக்கக்கூடும்.
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் – ந. பெரியசாமி – தக்கை, 15, திரு.வி.க.சாலை, அம்மாபேட்டை, சேலம்-3. பக்.40 ; விலை.ரூ.30.

No comments:

Post a Comment