Thursday, June 4, 2015

நிலத்தின் நிழல் மொழி

நிலத்தின் நிழல் மொழி
-ந.பெரியசாமி

கவிதையை வாசிக்கையில் நினைவில் எனக்கானதொரு காட்சியை ஓடச் செய்தால் அக்கவிதை நல்ல கவிதை என்பது என் அனுமானம். அப்படியானதொரு கவிதையோடு நெருக்கம் கொள்ள முடியும். அதற்கான திறப்புகளை அக் கவிதை கொண்டிருப்பது இயல்பு. சிலரின் தொகுப்புகளில் சில கவிதைகள் அப்படியானதொரு நெருக்கத்தை ஏற்படுத்தும். பா.வெங்கடேசனின் நீளா அப்படியானதொரு அண்மையைத் தந்தது.

எல்லா ஆண்களுக்குள்ளும் பெண் மனம் இருப்பது இயல்பு. ஆனால் அப் பெண் மனம் ஒரு படைப்பாளியாக மாற்றம் கொள்வது மகா உன்னதம். நீளா தொகுப்பில் அப்படியானதொரு படைப்பாளியை நீங்கள் சந்திக்க இயலும். பாடுபொருட்களின் மீதான அவரது பார்வை தாய்மையின் கனிவும் காதலும் சரியான புரிந்துகொள்ளலும் ததும்பித் வழிகிறது..

ஒரு படைப்பில் படைப்பாளியின் வாழ்நிலத்தின் வாசனை இருப்பது அப்படைப்பை ஒளிரச்செய்யும். கவிதை மட்டுமின்றி பா.வெங்கடேசனின் பிற படைப்புகளிலும் வாழ்விடத்தின் வாசனையை உணரலாம். நீளா தொகுப்பிலும் வாழும் நிலத்தின் தன்மை அது ஏற்படுத்தும் மாற்றம், அப்பகுதியின் இயற்கை, காவல் தெய்வங்கள் என நிறைய்ய குறுக்கீடு செய்யும் விசயங்களும் உண்டு.

பா.வெங்கடேசனுக்கும் எனக்கும் வாழ்நிலம் ஒன்றுதான். இத்தொகுப்பில் நிலம் சார்ந்த கவிதைகள் என்னை ஆகர்சிக்கின்றன. சில கவிதைக்கான தருணங்கள் அவருள் முகிழ்க்கும்போது அவருடன் நானிருந்த நிலக்காட்சிகள் இப்போதும் படர்ந்து நினைவை கிளர்த்துகிறது. சமதளமற்ற மேடு பள்ளங்களோடு இருக்கும் ஓசூர் நிலம் வெப்பங்களை தனக்குள் வைத்துக்கொண்டு எங்களுக்கு குளிர்விப்பை தரவல்லது. (அதை நாங்கள் இப்போ மாற்றம்கொள்ளச் செய்துவிட்டோம் என்பது தனிக்கதை) பலதரப்பட்ட கலாச்சார சூழல் குவியப்பெற்றது. ஒற்றைத் தன்மை இவ்வூருக்கு கிடையாது. சிறு பயணத்திலேயே மனதை மடைமாற்றிக்கொள்ள முடியும். திப்புவின் காலடித்தடங்களையும் இம் மண் தன்னுள் கொண்டுள்ளது. பாறை ஓவியங்கள், நடுகல் சிற்பங்கள், கல்திட்டை சமாதி என வரலாற்றுத் தொல்லியலின்  எச்சங்கள் இன்னும் இப்பகுதியில் உண்டு.  இந்நிலத்தின் பன்முகத்தன்மையை இவரின் தாண்டவராயன் கதையில் விரிவாக தரிசிக்க முடியும்.

வெட்கப்படுதல், வெறித்துப் பார்த்தல் எனும் இரு நிலைகள் நிர்வாணத்தில் உண்டு. பெரும்பாலானோர் இந்நிலைகளிலேயே சுருங்கிப்போவதும், இத்தனை நிர்வாணத்தை பார்த்தேன் என்ற கணக்கீடுகளில் பெருமை கொள்வதுமே நிகழ்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்நிர்வாணத்தில் இருக்கும் ஒளிர்வை கண்டடைந்து தன் மொழியை கண்ணாடியாக்கி பிரகாசமாய் பிரதிபலிக்கச் செய்யும் ஆற்றல் இருக்கும். நீளா தொகுப்பில் பெட்டதம்மனின் நிர்வாணத்தின் ஒளிர்வை என்றென்றைக்குமாக மங்காதிருக்கும் ஒளிர்வாக மாற்றம் கொள்ளச் செய்திருக்கிறார். (பெட்டதம்மன் ஓசூர் பகுதியில் இருக்கம் ஒரு காவல் தெய்வம்) 'இடறும் காதல்' கவிதையில் வரும் பெட்டதம்மனை பார்த்துவந்த நாளின் கனவில் பெட்டதம்மன் உயர்ந்தபடியும் அகன்றபடியும் விரிந்துகொண்டே இருந்த காட்சி இன்னமும் மனம் அகலாதது.

சாமார்த்தியசாலியான கரிக்கும் பெண் எவராலும் கணிக்க இயலாத தளர்வு கொள்ளும் தருணத்தை உணரச் செய்து அவளின் முட்டாள்தனத்தை காட்சியாக்கி நிழலாய் தொடரும் மற்றொரு காதலையும் தரிசிக்கச் செய்யும் 'கரிக்கும் பெண்' கவிதையில் துவங்கிய காதல் தொகுப்பெங்கும் உணர்வின் முடிச்சுகளாக நீண்டு நமக்கான காதலில் தியானித்திருக்கவும் செய்திடுகிறது நீளா.

சில துணுக்குறல்கள் என்றாவது ஏற்படும். நம்மை துணுக்குறச் செய்த விசயத்தை மீண்டும் தரிசிக்க இயலாது போய்விடுவதும் உண்டு. அப்படியே அதைக் காண நேர்ந்தாலும் முந்தைய அனுபவத்தை மீண்டும் அதனால் ஏற்படுத்த இயலாது. முதல் காதல், முதல் முத்தம் இவைகளோடு முதல் துணுக்குறலையும் சேர்த்துக்கொள்ளலாம். 'அப்பா மயில்' கவிதை அப்படியானதொரு நிகழ்வின் அனுபவப் பகிர்வு.

ஆர்வமும் வாய்ப்பும் ஒருங்கிணைய பயணங்கள் வாய்ப்பதுண்டு. செல்லும் இடங்களின் பொதுவான அம்சங்களை மட்டுமே கண்டு வந்து சிலாகிப்பதில் மட்டுமே ஒரு பயணம் நிறைவுகொண்டுவிடாது. அப்பிரதேசத்தின் ஆன்மாவை கண்டுணர்ந்து தனக்குத் தெரிந்த கலைகளில் வெளிப்படுத்தி அதற்கானதொரு பிரத்யோக வண்ணத்தை உருவாக்கி விடுவதே நிறைவுகொள்ளும் பிரயாணமாக அமையும். தொகுப்பில் அப்படியானதொரு நிறைவுகொள்ளும் பயணங்களை நாமும் தரிசிக்க இயலும்.

 'முத்தியால் மடுவின் மோகினி' கவிதையில் பா.வெங்கடேசனுக்கு கோணங்கியோடு நிகழ்ந்த அனுபவம் பொறாமைக்கொள்ளத் தக்கது. உடன் போகாது போன வருத்தத்தை படியச் செய்தது கவிதை. முத்தயால் மடு முத்தங்கள் சூழப்பட்ட பகுதி சிறு அறுவியும் குறுகலான ஆறும் பழமையோடு ஓடிக்கொண்டிருக்கும். அப்படியான சூழலில் கோணங்கியின் உடல்மொழியோடு உரையாடலைக் கேட்பது மகா உன்னதம். என்றாவது எனக்கும் வாய்க்குமா எனும் எதிர்பார்ப்பை எதிர்படுத்திய கவிதை.

தேவதைகளின் தீராத் துயரம், காமம், வாதைகளறிந்து இரவுகளற்று இருக்கும் 'சொல்லப்படும் நிலவு' கவிதை ஹம்ப்பி பயணத்திற்குப்பின் எழுதப்பட்ட கவிதை. அப்பயணத்தில் பத்மபாரதி பாலசுந்தரம் நானும் வெங்கடேசனோடு சென்றிருந்தோம். மறக்கமுடியாத பயணமாக என்றென்றும் இருக்கக்கூடியது. கிருஷ்ணதேவராயர் கால மக்களின் காதலும் காமமும் வாதைகளும் அப்பாறைகளில் படிந்து கிடந்தது.  எங்கெங்கு காணினும் பாறைகள். துங்கபுத்திரா நதி அருகில் ஓடிய போதும் அக்காலத்தின் பாலை நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் நீடித்திருக்கு. நாங்கள் சென்றது திருவிழா நடந்த சமயம். கர்நாடகப்பகுதியின் எல்லா ஆட்டவகை ஆட்டக்கலைஞர்களும் வந்திருந்தனர். ஒரு ஆட்டக்காரரின் ஆளுமை எங்களைக் கட்டிப்போட்டது. எதிர்பாரா தருணத்தில் வெங்கடேசன் நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து வணங்கினார். பதறிய அக்கலைஞர் தூக்கி அணைத்தார். அக்கலைஞனின் கண்களில் அப்படியானதொரு மிளிர்தல். பரவசப்படுத்தியது அவரது ஆட்டம். அன்றைய இரவு எங்களை தக்கையாக்கியது. எங்களின் துயர்களை கண்ணீரிலும் சொற்களிலும் கரைத்தோம்.   ஹம்பி எங்களை பிதுக்கி வெளியேற்றியது. 'சொல்லப்படும் நிலவு' கவிதை வாசிப்பில் மீண்டும் அந்த இரவிற்குள் சென்றுவரச்செய்தது.

தன் மொழியின் அனுபவத்தை அகல் விளக்காக்கி அணையா நெருப்பை சுடரச் செய்வதன் மூலம் திருவாளர் ப்ரெட்டின் காதலை வாசிப்பின் மனங்களில் கடத்தும் 'திருவாளர் ப்ரெட்டின் தனிமொழி'

சமகாலத்தில் இருக்கும் சிறுவனின் கேள்விகளை ஆதிச் சிறுவனின் கேள்விகளாக்கி காலத்தை நகர்த்தும் 'நகரும் காலம்'

குரலை குறுந் துகள்களாக்கி பரணியில் சேர்க்கும் அணில் வசிக்கும் 'அணிலாடுமறை'

பார்த்திராத ஒன்றை சட்டகத்துள் படமாக்கி சுவற்றில் அறைந்துவிட தொங்கும் காட்சியில் கடவுளை ஒளிய வைக்கும் 'கடலை வரைதல்'

சக படைப்பாளியின் மனம் நோகக் கூடாதெனும் பதற்றம் தொற்றிய 'தவிர்த்த கவிதை'

தன் நிழலால் மட்டுமே தன்னை வெல்ல முடியுமெனும் நிலையை ஸ்திரப்படுத்தியிருக்கும்  'நீளா'

பீத்துணி போர்த்தி குழந்தைகளின் உலகில் நுழையும் தேவதைகளின் 'உருமாற்றம்'

நாணம் கொள்ளச் செய்யும் வார்த்தைக்கு உயிர் கொடுத்து பரிசளிக்கும் 'புத்தகம் அல்ல அவள் கேட்பது'

பருவங்களின் தன்மையை தன் இல்லக் கதவின் தாள் திறப்பில் மாற்றங்கொள்ளச் செய்யும் கருணை தேவதையை சிறுமியின் முகமாய் காட்டும் 'அடை'

இரவை அழிக்கும் மழை கூறிய கதைகளை தன் கதைகளாக கொண்டு நிற்கும் கல்யாளிகளின் 'இது எனது ஆயிரத்தோறாவது இரவாக இருக்கலாம்'

தன்னை மட்டுமே உலகமாக்கப் பார்க்கும் சகியின் நம்பிக்கை மிளிரும் 'வேற்றுலகக் கவிதை'

தன்னை நிரப்பிக் கொள்ளத் துடிக்கும் முத்தத்தின் வரலாற்றைக் கூறும் 'தனியே ஒரு முத்தம்' என நீளும் கவிதைகளோடு இருக்கும்  பா.வெங்கடேசனின் நீளா ரசனையான வாசிப்பனுபவத்தையும், பழைய நினைவுகளையும் மீண்டெடுக்கச்செய்தது. 

நீளா
காலச்சுவடு வெளியீடு

நன்றி- சிலேட்

No comments:

Post a Comment