Sunday, June 21, 2015

நிழல் கதை

நிழல் கதை

எழுந்திரி நேரமாச்செனும் குரலுக்கு
போர்வைக்குள் பதுங்கும் குழந்தையாக
புலர்பொழுதில்
தன்னை காணாமலாக்கிக்கொண்ட பனி
வெளிவரத் துவங்கிய அந்தியில்
பெரும்வனமடங்கிய கனியின் நிழல்
தங்க இடமற்று தவித்தது
பிடித்தென் மூத்த கிழவியிடம் கொடுத்தேன்
பாதுகாப்பாக நிலாவில்
பதுங்கியிருக்கிறாள்
என்றாவது இவ்வுலகம்
விதையற்று தவிக்கையில்
விழச் செய்வதாகக் கூறி.
*

தித்திப்பு

நிலங்கள் ஐந்தின் பூக்களை
மனத்திரையில் காட்சிபடுத்தி
நினைவில் வடியும் வாசனைகளை
சுவைத்தபடி இருந்தேன்
பதற்றமாக வந்தவன்
தன் புத்தகத்தில் இருந்த ராணித் தேனியை
காணவில்லை என்றான்
புன்னகையோடு தலைவருட
மீண்டும் பக்கங்களை புரட்டினான்
தேனீக்களின் இசை குறிப்புகள்
அதிசயித்தவன் விழி விரிய
பெரும் வனமாகியது வீடு
பூக்கள் நிறைந்த வேப்பமர குச்சொன்றில்
தேன் கூடாகிக்கொண்டிருந்தேன்
தித்திப்பில் கனிந்துகொண்டிருந்தது உலகு.

நன்றி : கணையாழி
*

No comments:

Post a Comment