Monday, November 16, 2015

கசாப்பு கடையிலிருந்து மீண்ட ஆட்டுக்குட்டிகள்

ஆட்டுக்குட்டிகள் ஆண் இல்லா வீட்டின் அதிசயங்களை அறிந்தவை. எதையாவது சாக்கிட்டு வெளியேறியபடியே இருப்பவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான ஆட்டின் உறவை. தன் துள்ளலில் காதலை வெளிப்படுத்தும் ஆட்டுக்குட்டிகளுக்கு முத்தப் பரிசுகள் கிடைத்தபடியே இருக்கும். குழந்தைகளைக் போல் மென்மையானவை. பெண்களை மகிழ்விக்கும் நுனுக்கங்களை கற்றவை. இயேசுவிற்கு ஆதனால்தான் ஆட்டுக்குட்டிகளின் மீது அத்தனை பிரியம் போலும். எஸ்.சுதந்திரிவல்லிக்கும் ஆட்டுக்குட்டிகள் மீது வெகுவான பிரியம் போலும்.தன் அன்பை சமர்ப்பனத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தொகுப்பில் நாய், ஆட்டுக்குட்டி, பூனை, மைக்குட்டி(கம்பளிப்பூச்சி) என வீட்டிலிருக்கும் சக ஜீவிகள் குறித்தும் கவனப்படுத்தியுள்ளார்.

ஆடு, பூனை, நாய் மூன்றும்  வீட்டில் இருக்கம் பெண்களுக்கு நெருங்கிய தோழமைகளாக இருக்கிறது. அன்பையும் துயரையும் அவைகளுடனான உரையாடிலில்தான் பகிர்வு கொள்கிறார்கள். பெண்ணின் ரகசியம் காக்கும்  ஜீவிகளாகவும் அவைகள் இருக்கின்றன.
குலதெய்வங்களுக்கு நேர்த்திக் கடனுக்காக ஆடுகளை, கோழிகளை பலிகொடுப்பதே வழக்கம். அவைகளின் சம்மதத்தோடுதான் பலியிடுகிறோமெனும் பாவனையில் நம்பிக் கிடக்கிறோம். நீர் தெளிக்க துள்ளுவது சம்மதத்தின் அறிகுறியாக மாற்றியது மனிதனின் தந்திரம். இத்தந்திரம் பெண்கள் மீதும் இச் சமூகம் தொடர்ந்து ஏற்றிவைத்துள்ளது. ஏதேனும் ஒரு தந்திரத்தை கையாண்டு அவர்களின் விருப்பங்களை நீர் தெளித்து துளுத்ததாக கணக்கிட்டு அவர்கள் விரும்பாமலே வேறு இல்லங்களுக்கு பலிகொடுத்து தன் கடமையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்குமான பந்தத்தின் கன்னி இதுவாகக்கூட இருக்கக்கூடும். பிடித்த பெயரை வைத்து பிடித்த மாதிரி அழைத்து அவைகளோடு உறவாடி இருப்பவர்களுக்கு அவர்களின் உலகம் குறித்த புரிதல் இருப்பதால் சுதந்திரவல்லியின் கவிதைகளை நெருக்கமாக உணர முடிகிறது.

நாம் அக்கறையோடு விரும்பிப் பார்க்கும் தொழிலாக இருந்தாலும் சுமத்தப்படும் அழுத்தத்தின் காரணமாக நமக்கு அதன் மீதொரு வெறுப்பு உண்டாவது இயல்பு. ஆசிரியராக இருப்பதைவிடவும் ஆடு மேய்ப்பது ஆத்ம திருப்தி அளிக்கிறதெனும் சுதந்திரவல்லியின் வரிகளில் நம் பனியின் அழுத்தத்தையும் கழற்றி வைக்க முடிகிறது.

தொகுப்பிலிருக்கும் 'குட்டி நாய்' கவிதையில் சங்கலியால் கட்டப்பட்டிருக்கும் குட்டி நயை இஷ்டம்போல் எல்லா நாய்களும் புணர்ந்து போகும், பலவீனங்களை தமக்கு சாதகமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் பலமானவர்களின் அறம் குறித்த கேலியாகவும் அக்கவிதையை உணர முடிகிறது.பப்பியோடு நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது பப்பி கவிதை.

குறைகள் குறித்த புகார்பட்டியலோடு வாழ்வு இயல்பாக நகர அருகாமை பிசாசாகவும், தொலைவின் நீளம் இஷ்ட தேவதையாகவும் தோற்றம் கொள்ள, வீசிய மாங்காய் உண்ட முதல் காதலின் நினைவுகளோடு, மின்மினி வண்ணத்துப்பூச்சி தட்டான்கள் சிலந்தி ஈசலின் வண்ணங்களோடு காத்திருக்கம் புணர்ச்சியின் வண்ணங்களை வெளிக்காட்டி ஆசைகளை நிறைவேற்றிப் பார்த்த புகை சூழ்ந்த இருளின் இன்பம் சுகித்து, தன்னை திருடுபவனுக்காக காத்திருந்த நாட்களின் நினைவுகளை கவிதைகள் காட்சியாக்கும் அக உலகில் நாமும் நம்மை கண்டடைய முடிகிறது.

சதா சந்தேகத்தோடும், அவநம்பிக்கையோடும் இருக்கும் ஆண்கள் மீது ஒற்றை செருப்பை வீசியதுபோல துவங்கிய 'ஒற்றை விழி' கவிதை துவங்கி, பக்கத்து வீட்டு சண்டை பார்க்க காத்திருக்கும் ஜன்னல் அறைந்து, அதிகாரிகளின் மோப்பக் கண்களை குருடாக்கி, ஞானி ஞானியாக இருக்க, சூன்யம் சூன்யமாகவே இருக்கட்டுமே அதனால் என்னவாகிடப்போகிறதென சலிப்படைந்து, நிஜம் இழக்க சாயல்களாக வாழும் அவலம் கூறி, கொல்லும் போதையின் வன்மத்தால் வெளிப்படும் வார்த்தைகள் வலி உணர்த்தி, விரல் நகங்கள் கத்திகளாக மாறும் காலத்திற்காக காத்திருக்கம் நிலை கூறி, குழந்தைகளையும் கிழிக்கும் போதை முட்களின் கூர்மையை காட்சியாக்கி, இசக்கியை பொறாமை கொள்ளச் செய்து பேய் பாதையில் பயணித்து பட்டனம் செல்ல அங்கும் விருப்பம்போல் வாழ இயலாது போக ரயிலின் நினைவுகளோடு கிராமம் வந்து சேர்ந்ததாக ஒரு கதையை நாம் கண்டடைய முடிகிறது தொகுப்பில்.

'முதிர் கன்னி' கவிதை கடவுளை காதலனாக்கி பாசுரம் பாடிய ஆண்டாளை போற்றும் இச் சமூகம் தன் கண்ணனுக்காக காத்திருக்கும் முதிர்கன்னியை ஏலனப்படுத்தும் அவலத்தை நினைவூட்டுகிறது.

எஸ்.சுதந்திரவல்லியின் பட்டணத்து ரயிலை மட்டும் கிராமத்தை நோக்கிக் கொண்டு வந்து சேர்த்தாள் தொகுப்பு நம் உடன் வாழும் பெண்களை மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

வெளியீடு
சிலேட் பதிப்பகம்
விலை-ரூ.50

நன்றி - படிகம்

No comments:

Post a Comment