Wednesday, March 11, 2015

nantri: manal veedu

ந.பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி
மதிப்புரை : வெளி ரங்கராஜன்

ந.பெரியசாமி தன்னுடைய கவிதைகளில் கையாளும் உரையாடல் மொழி அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களிலிருந்து பெறப்பட்ட தாகவும் அதே சமயம் ஒருவித எல்லையற்ற புனைவுத்தன்மையை உள்ளடக்கியதாகவும் உள்ளது. அது அவருடைய சொல்லாடல்களில் ஒரு இயல்பான ஓட்டத்தையும், ஒரு வினோத மான உறவுநிலையையும் சாத்தியப்படுத்துவதாக உள்ளது. 

கொசகொசவென கட்டங்கள் வரைந்து
சிறுசிறு புள்ளிகளை அடைத்து
அப்பா இது பூச்சிகளின் வீடென்றாள்
கோடுகளை அடுக்கி 
குட்டியாய் பொந்து வைத்து
அப்பா இது எலிவீடென்றாள்
பெரிது பெரிதாய் சதுரமிட்டு
தடுப்புகள் நிறைய வைத்து
அடுக்கத் தொடங்கியபடி
அப்பா இது பொம்மைகள் வீடென்றாள்
உயர்ந்த மரம் வைத்து 
கூடு ஒன்றை நெய்து
அப்பா இது காக்கா வீடென்றாள்
தடித்த குரலின் அதிர்வில் 
தாளிலிருந்து தத்தமது வீடுகளிலிருந்து
பூச்சிகளும் பொம்மைகளும்
நகரத் தொடங்கின சமையலறைக்கு 
- என்றபடி குழந்தைகள் அநாயசமாக வரையும் சித்திரங்கள் உருவாக்கும் உலகம் இவரது கவிதைகளில் இன்னொரு தளத்தை முன்வைக்கின் றன. இன்னும் சித்திரங்கள் வாகனமாவது, நிலவை தொட்டுப் பார்ப்பது, மீந்த மின்னலை சிப்பியுள் அடைப்பது என எல்லாம் சாத்தியப்படுகின்றன இங்கு. வண்ணக்கிளிகள் தானே சம்பவங்களை சித்திரங்களாக்கி உலகை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

இவை வாழ்வின் சாத்தியங்களை அதிகப் படுத்தும் தன்மை கொண்டிருக்கின்றன. பசுநிழல் சூலுற்று குட்டி நிழலாகிறது. கட்டங்கள் உயிர் பெறுதல், பொம்மைகளோடு உரையாடல், பாம்பு பூக்களை உதிர்த்தல், நட்சத்திரம் ஒன்றைப் பிடித்து அறையில் ஒளித்து வைத்தல், மேகத் துண்டு தலையணையாதல் என பட்டியல்கள் நீளுகின்றன. குழந்தைகள் ஒரு வினோத உலகில் சஞ்சரிக்க எண்ணற்ற வழிகள் கொண்டுள்ளனர். நிறைய வானங்களை உருவாக்கி நமக்கான வானத்தை தேர்ந்து கொள்ளும் சாத்தியமும் உண்டு.

ஆனால் வினோதங்கள் இப்படியே எல்லையற்று நீள முடிவதில்லை. குழந்தைகளை அடுத்தநாள் பள்ளிக்கு அனுப்பவேண்டியிருக் கிறது. நவீன கூலியாய் சீருடை அணியவேண்டி யிருக்கிறது. கால் பதியும் நிலம் ஓணானை தின்பதாக இருக்கிறது. தத்துவவாதிகளாலும், கலைஞர்களாலும், தேவதைகளாலும், வார்த்தை களாலும் நிரம்பிய அறைகள் வெறும் அறைகளாக இல்லாதிருந்தும் வெளியே இரைச்சல்கள் தனிமை யைக் குலைக்கின்றன. பொய்களால் பாத்திரங் களை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டியுள் ளது. கண்ணாடியுள்ளிருந்து உருவங்கள் வெளிப்பட்டு தோற்றப்பிழைகள் நடந்தவாறு உள்ளன. புறாவின் சிறகைப்பற்றி மேலே செல்லும் போது வீடு நிலவாகத் தெரிகிறது. மரம், முயல், இணைமுயல், வேடிக்கை பார்க்க கல் என மனம் நிலைகொள்ளும் வெளியில் திடீரென தோட்டாக் கள் பாய்கின்றன. 

ஒரு இறுக்கமற்ற சொல்லாடல் தன்மை மாறிக் கொண்டிருக்கும் வாழ்க்கைத்தோற்றங்களை நெருக்கமாக உரையாடிச் செல்கிறது. யதார்த் தத்தை விழுங்கிக்கொண்டே புனைவுவெளியில் உறவாட இவை சாத்தியங்களை முன்வைக் கின்றன. யதார்த்தங்களும், வினோதங்களுமாக மாறிக்கொண்டிருக்கும் இத்தோற்றங்கள் ஏதோ ஒரு சலனத்தை புலப்படுத்தியபடி உள்ளன.

(வெளியீடு : புது எழுத்து)
nantri: manal veedu

No comments:

Post a Comment