Thursday, April 23, 2015

நன்றி - அடவி ஏப்ரல் 2015 இதழ்

நேசங்களுடனான பெருவாழ்வின் மீதமிருக்கும் நினைவுகளும் தீர்ந்துபோகாத அபத்தங்களுக்கு எதிரான சொற்களும் நிறைந்த
அடர் வெளி :
  - ஜீவன் பென்னி



 நவீன கவிஞனினுலகு நீண்ட முகம்பார்க்கும் கண்ணாடியைப் போலவேதானிருக்கும் என்று தோன்றுகிறது – இட வல மாற்றமாக -

நிகழ்கால உலகின் எல்லா இயக்கங்களும் ஒரு வெற்றிடத்தில் நடந்துகொண்டிருப்பதாய் தோன்றுமவனுக்கு இப்பிரபஞ்சத்தில்

எப்போதுமலைந்து கொண்டிருக்கும் முடிவற்ற ஒரு புள்ளியெனவே அவன் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறான். எல்லா

நியாயங்களும், சட்டங்களும், போதனைகளும், சரி/தவறுகளும், நம்பிக்கையற்றே அவனுடன் எப்போதும் பழகிவருகின்றன.

நகரமயமாக்கலின் கொடூரங்கள் எல்லா சமநிலைகளையும் எல்லா விதங்களிலும் பாதிக்கின்றன. ஒரு பச்சைமரமும், பட்டாம்பூச்சியும் ஒரு

சூழலை மனிதனை ஒத்தே பாதிக்கின்றன. அதன் காரணிகளும் வழிமுறைகளும் ஒன்றாகவே பயணப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரே உயிர்,

ஒரே வாழ்க்கை. தன்னிருப்பிடங்களை இழப்பதற்காக நிர்பந்திக்கப்படும் இவைகளின் உடைந்த வாழியல் முறை பெருமளவில் அச்சூழலின்

காரணிகளை  பாதிக்கத்தொடங்குகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு காலமும், வாழ்வும், நெகிழ்வும், மரணமுமிருக்கின்றன, மிகத்

துரதிர்க்ஷ்டமாக இவைகளின் வரிசைகளையும் காரணிகளையும் விழுமியங்களையும் ஒன்றுக்கொன்று பாதிப்பதாக முரண்படுவதாக

மாற்றிக்கொண்டிருப்பதுதான் நகரமயமாக்கல். வளர்ச்சியென்பதன் பொருட்டு தினந்தோறும் மாறிக்கொண்டே வரும் இருப்பிடசூழலின்

தொடரிணைப்புகளான இயற்கைச்சூழலும், வாழ்வாதாரங்களும் நெருக்கடிகளையே எற்படுத்துகின்றன. இவைகளை அனுபவிப்பதன்

வலிகளையும், நுண்ணுணர்வுகளுடனான வேதனைகளையும், தோரனைகளாகவும், வெறும் எழுத்து கூட்டங்களாகவும் இல்லாமல் ஒரு

பிரக்ஞையின் வழியாக தொடர்ந்து தூலாவிக்கொண்டிருக்கும் ஒரு சக மனிதனின் அகவயமான திரட்சியான தேடல்களை பெரியசாமி

கவிதைகளாக்கியிருக்கார். என்றுமே தீர்ந்திடாத காமத்தின், காதலின், நட்பின், துரோகத்தின் இடைவிடாத சொற்களையும், ஒரு

தலைக்குனிவை, காத்திருத்தலை, உறவுகளின் நிச்சயமிண்மைகளை, மதுவின் வாசனைகளை, பூவின் அகோர மரணத்தை, அரசியலின்

வெக்கங்களில்லாத சொற்களையும் விழுந்துகொண்டிருக்கும் இலைகளெனச் சொல்லிச்செல்கின்றன பெரியசாமியின் சொற்கள்.

   தொடர் வளர்ச்சிக்காகவும், பெரு வியாபார லாபங்களுக்காகவும்  அறுபடும் உறவுகளுக்கானதும், உயிர்துறத்தலுக்கும்,  தொடர்

வாழ்விற்கானதும், நினைவுகளுக்கானதுமான தொடர்ச்சியான பிரதிகள் யிவை. மயில் தோகையின் எளிய அன்புகளாகவும்

நேசங்களாகவுமிருக்கின்ற சேகரங்களேதுமில்லாத இவ்வாழ்வின் தொடர் தேடல்கள் இந்த வரிகள். ‘தன் மயக்கம்’-கவிதையின் வெளி

அளப்பரியது, சொல்லி முடிக்கப்பட்ட அவ்வரியின் மீதான நினைவுகள் திரும்பத்திரும்ப வெவ்வேறு யிடங்களுக்கு கூட்டிச்செல்கின்றன.

மேலும் எதிர்த்தனங்களின் வழியே ஒரு தேடுதலையும் உருவாக்குபவை. பூனையாகி ஒரு நினைவில் நின்றிடும் ‘அம்மா’ சார்ந்த சொற்களும்,

கடவுளுக்கான எதிர் அதிகார அரசியலின் மையமிட்டு சொல்லப்பட்டிருக்கும் ‘நரபலிகள்’ கவிதையும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.

’மெய் வருத்தம்’ – உடல் மனமாகி இன்பங்கொண்டு முடிந்த பின் நிகழ்வதான அதிகாலை அயர்ச்சியில் அவ்வளவு அன்பிருக்கிறது, மேலும்

மனதின் புரிதலுமிருக்கிறது. தான் ஏமாந்து போகும் சூழலுக்கு மாற்றாகவே அவரின் கனவுகளில் மழையும் வெய்யிலும்

பொழிந்துகொண்டேயிருக்கின்றன. அவை தானிந்த சொற்கள், அவ்வளவு குளிர்ச்சியாகயும், அலைகளாகவும், வெப்பம் தகிக்கும்

சொற்களாகவுமிருக்கின்றன யிந்த சொற்கள். ‘நகரின் பரிசு’ கவிதையில் நிகழும்/நிகழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனின் செயல்பாடுகள்

ஒரு காட்சிநிலையின் அழகியலோடு யினைந்து மனதிற்கு மிகுந்த நெருக்கம் கொள்கின்றன. ‘நமக்கல்ல’, ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’

தலைப்பிட்ட இரு கவிதைகளும் நிகழ்கால அரசியல் மொழியையும் அதன் அதிகாரலாப நோக்கங்களையும் தீயிட்டுக்கொழுத்துகின்றன.

புரிதலுக்கான அன்பின் மொழிகளையும் அதன் நித்தியத்துவத்தையும் தவிப்பையும் இக்கவிதைத்தொகுப்பிலுள்ள சில கவிதைகளில்

உணரவும் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் முடிகிறது. சிறுவயதின் பால்யகாதலியின் நினைவுகளாலான ‘மதுவாகினி’ கவிதை

மேலும் மேலும் எல்லோர் மனங்களிலும் உயிர்பித்துக்கொண்டேயிருக்கின்றன. முடிவுறாத அந்நிகழ்வுகளிலான அக்கவிதைகளின்

முடிவுச்சொற்கள் ஒரு ஓவியத்தின் அமைதியென கனமான புன்னகையுடனும், புதிர்களுடனும், மௌனமாகவுமிருக்கின்றன. குழந்தைகள்

வரைந்து கொண்டிருக்கும் சித்திரங்களின் மொழிகளையும் அழகுகளையும் ரசிக்காமல் அவர்களின் திசைகளை திருப்புவதிலும் அவற்றை

கலைப்பதிலும் நாம் கொண்டிருக்கும் வேகமும் ஆர்வமும் தான் தற்கால வாழ்வின் பெரும் வேதனைகளாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

ந.பெரியசாமியின் கடவுள்கள் அவரைப்போலவே மிக எளிமையாகவுமிருக்கிறார், ஒவ்வொரு பிரார்த்தனைகளை மிக எளிதாக

நிறைவேற்றுபவராகவும் இருக்கிறார். ‘மயில்’, ‘கசப்பு’, ‘காட்சிகள்’, ’புலி வால் பிடித்த கதை’, ‘காத்திருந்த துளி’ ஆகிய கவிதைகளின் வெளியும்

அவை யுண்டாக்கும் காட்சிகளும், சிறு கவிதைப்பிரதிகளின் முக்கிய செயல்பாடான அடர் செறிவுகளான நீட்சிகளின்

சொற்களெனயிருக்கின்றன, அவை ஒரு இசையின் வடிவத்துடன் மிக நெருக்கம் கொள்ளவும் வைக்கின்றன. மதுவின் வாசனைகளின்

மீதமிருக்கும் சொற்களை உள்ளடக்கிய பிரதிகளும், சில நெருக்கமான வரிகளும் இவைகளிலுள்ளன, ஆனால் இவை வெறும்

போதையாகயில்லாமல் நிறைவான நேசத்துடனே இருக்கின்றன. முத்தங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனின் கவிதைகளுக்கான

உரையாடல்கள் எப்பொழுதும் போலவே நெருக்கமாகவும் அணைத்துக்கொள்ளும் படியாகவே யிருக்கின்றன.

   தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்வும் நிலையும் அவமானமும் வெற்றிடமும் நினைவுகளும் வெளியும் ஒரு

சகிப்புத்தன்மையும் பல கேள்வியும் தொடர்ந்து உணர்த்துதலின் வழியிலான பிரதிகளாக பெரியசாமியிடமிருந்து வெளிவந்து

கொண்டிருக்கின்றன. அவர் இவ்வாறு கலைத்துக்கொண்டிருக்கும் வாழ்நிலைக் காட்சிகளின் பிம்பங்கள் முன்னெப்போதுமில்லாத

அளவுகளினூடே எந்த யிடைவெளியுமற்று அவரின் சுயம் சார்ந்த கேள்விகளாகயில்லாமல் பொதுப்பரப்பில் கரைந்து கொண்டிருக்கும்

பிரக்ஞையின் கேள்விகளாகவும் பதில்களாகவும் எதிர் சொற்களாகவும் மையங்கொண்டுள்ளன. சற்று நீண்ட கவிதைகளின்

இயங்குநிலைகளிலாலான கவிஞரின் வார்த்தைகள் மிகப்பலவீனங்களுடனே அனுகப்பட்டும் தெரிவு செய்யப்பட்டுமிருக்கின்றன,

கொஞ்சமேனும் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பிரதிகள் உருவாக்கும் சவால்களின் தேடல்களும் சுதந்திரங்களும் அகமன

விசாரனைகளும் உணர்வலைகளும் ரசிக்கும் படியும் பிரியங்கொள்ளும் படியாகவுமே யிருக்கின்றன, மேலும் நேசங்களுடனான

பெருவாழ்வின் மீதமிருக்கும் நினைவுகளையும் தீர்ந்துபோகாத அபத்தங்களுக்கு எதிரான சொற்களும் நிறைந்த அடர் வெளியென

பரவியுமிருக்கின்றன இக்கவிதைகள்.

மதுவாகினி –
 ந.பெரியசாமி –
அகநாழிகை பதிப்பகம் – டிசம்பர் 12 – ரூ 70/-             


நன்றி - அடவி ஏப்ரல் 2015 இதழ்

No comments:

Post a Comment