Saturday, May 28, 2022

நகர்வு.காம்

 

ந.பெரியசாமி கவிதைகள்

1. நிகழக்கூடும் அதிசயம்
*
வானங்களை
இறகாக கொண்ட பறவையொன்று
மேல் எழுந்தது.
கண்ட சிறார்கள்
களிப்பில் நதியாகினர்.
வளர்ந்தவர்கள்
யூகங்களிடம் தோற்றுக் கொண்டிருந்தனர்.
ஆதிக்கிழவி வேண்டுதலை வைத்தாள்.

அன்பின் தேவதையே
வெறும் காற்றில் கத்தியை சுழற்றி
களைப்படைந்தோம்.
நீரற்ற ஆற்றில்
எவ்வளவு நேரம்தான் நீந்துவது.

உலகைச் சுற்று
இறக்கைகளால்
தொற்றுக் கிருமிகளை
வழித்தெடுத்து வான் பறந்து
மீண்டும்
வாழ்வைக் கொடுத்திடு.
*

2. காலத்தை ஓவியமாக்குபவள்
*
மாடியில்
என் வருகையை உணராது
மேற்கு நோக்கியிருந்தாள்.
நிலம் விழும் பழுத்த
இலையானயென் கை தொடர்பு
மகிழ்ந்து திரும்பிவள்
இந்த நட்சத்திரங்கள் ஏன் இணைந்தே இருக்கின்றன.

மேகங்கள் நகர்ந்தவாறு இருக்கும்
வான் பார்த்து
விடியலில் நட்சத்திரங்களை
கண்டதில்லையென்றேன்.

பயிற்சி கொண்டேனப்பா
காலத்தை
இருத்திவைக்கவென்றாள்.

No comments:

Post a Comment