Tuesday, May 3, 2022

அம்ருதா 2019

 


நெளிந்து கொண்டிருக்கும் பாம்பு
ந.பெரியசாமி


நீர் ஓட்ட ஆற்றுக்கரை
செழித்த வயலின் ஓரம்
அடர் வனத்தில் இருப்பதை
ஒத்ததாகவோ
போலவோ
இல்லை.

மரத்தை வரைந்திருந்தான்.

பச்சைக்கிளி
சிட்டுக்குருவி
காகம்
புறா
எப்பறவையை பிறப்பிப்பான்
மனதின் அடுக்குகள்
ஆர்வத்தை கிளறிட
பாம்பொன்று நெளிந்தோடியது
தொங்கத் துவங்கின வௌவ்வாள்கள்.

கருப்பு  பிடிக்குமா
அபத்தமாக கேட்டது
வளர்ந்த வயது.
0
ஏக்கப் படலம்
ந.பெரியசாமி

மாலை போர்த்தி
பாதம் வணங்கி நிமிர்கையில்
அந்திமக் காலத்தில் அருந்தியிராத
ஏக்கத்தின் படலம்
மூடிவைத்த கண்களில்.
உதடுகளில் துரு படிந்துகொண்டிருக்க
நினைவுகளில் அவருடனான நாட்கள்
இறந்த காலமாகிக் கொண்டிருந்தது
பறை இசையுடனான ஒப்பாரியை
உடன் மனதுள் இட்டவாறு
பெருத்த டயரில் அடுக்கியிருந்த
கட்டைகளுக்குத் தின்ன
கொடுத்துத் திரும்பினோம்.

பத்திருபது பாட்டில்கள்
சாராயத்தை சுமந்தவாறு
மகிழ்ச்சியோடு வந்தார்
நெடுநாட்களுக்குப் பிறகு
நேற்றைய கனவில்
தாத்தா.


No comments:

Post a Comment