Wednesday, June 1, 2022

 மெல்லுடல்


கைப்பிடி நிழலை

குடையாக்கினேன்.

காலத்தை

நகர்த்திக் கொண்டிருந்த

நத்தையின் நிழலை

நகர்த்திக் கொண்டிருந்தான்

கதிரவன்.

*

எதேச்சை

*

பேசி வைத்துக்கொண்டு வருவதல்ல

ஒத்த காலம்.

இன்றும் கடக்கையில்

தூக்கி சொருகிய நைட்டியோடு

வந்தவள் கொட்டினாள்

குப்பையை.

என்றைக்கும் இல்லாது

இன்றவள் கண்களில்

ரோஜாக்கள் பூத்திருந்தன.







வேளாங்கண்ணி...

*


உழுது கிடக்கும் நிலமென

நீண்டு கிடந்த மணல் பரப்பில்

பாதங்களாகின

மண்டியிட்ட மூட்டிகள்.

சித்திரங்களாக தீட்டப்பட்ட

வாழ்வை கண்டு

இளைப்பாறி

நகர்ந்து கொண்டிருந்தனர் கர்த்தர்கள்

அறிந்திராத வலியல்ல

ஆயினும்

தம்பாடலை

தாமே ஜபித்தனர்

கேவிக்கேவி அழுதனர்

கரைந்து உருகியது வலி.


நிறைவு கொண்ட வேண்டுதலுக்காகவும்

நிறைவேற்ற வேண்டிய வேண்டுதலோடும்

நிறைவாக

மரியாளின் கக்கத்தில்

மடி சாய்ந்தனர்.


அங்கே எல்லோருக்குமான  

வால் நட்சத்திரம் ஒன்று  

எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.



1 comment:

Anonymous said...

அருமை தோழர்..

Post a Comment