Wednesday, June 22, 2022

ரோமுலஸ் விட்டேகரெனும் முறி மருந்து.

 

"காடு தொல்குடிகளோடு பேசும். தொல்குடிகள் காட்டோடு பேசுவார்கள். ஓடை நீரும், ஊற்று நீரும், ஆற்று நீரும் இவர்களோடு பேசும். அது மட்டுமா, பூச்சிகள், பறவைகள், விலங்குகளும் பேசும். இன்றுவரை நம்மிடையே புழங்கிக்கொண்டிருக்கும் ஈசாப் கதைகளில் எப்படி எல்லா உயிரினங்களும் பேசுகின்றன? அதை எப்படி குழந்தைகள் நம்புகின்றன? நாம் குழந்தைகளாக இருந்தபோது அதை நம்பினோமே? இப்போது ஏன் நம்புவதில்லை? வளர்ந்து விட்டோம். அறிவில் வளர்ந்து விட்டோம்."
- நக்கீரனின் காடோடி நாவலில்.


நம் அறியாமையின் பட்டியலை நீண்டுகொண்டிருக்கச் செய்கிறது வாசிப்பு. அறியாமையே ஆர்வத்தை மேலிடச் செய்து புது உலகத்தின் வாழ்வியலை வியப்பின் வழியலோடு கரைந்துபோகச் செய்கிறது. பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கை பயணம் நூலை வாசிக்க அதை மேலும் உணர்ந்துகொள்ள முடிந்தது. Zai whitaker ஆங்கில மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்த தோழர் கமலாலயன் மொழி சிக்கலில்லாது சுவாரஸ்யமான வாசிப்பை அனுபவிக்க செய்திடுகிறது. இம் மொழிபெயர்ப்பு அவருக்கு நிறைவை தந்திருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறது.

ரோமுலஸ் விட்டேகரை மனம் நாயகனாக ஏற்றுக் கொண்டாடியது. சாகசங்களும் சவால்களும் மிக்க வாழ்வை வாழ்ந்ததோடு மட்டுமல்லாது நமக்கு பெரும் கொடையை தந்துள்ளது அவரது பயணம். நமக்கது புது கற்றலை தந்தபடியே இருக்கிறது.

குழந்தைகளை ஆச்சரியப்படுத்த, அதிசயத்து மகிழ்வோடு இருக்கச் செய்யும் பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணைகளை நிறுவியவர் ரோமுலஸ் விட்டேகர். நம்மோடு இப்படியான உயிரிகளும் வாழ்ந்து கொண்டிருந்தன. நம் பேராசையால் இவற்றையெல்லாம் அழித்துவிட்டோம் என குழந்தைகளிடம் பாவ மன்னிப்பு கேட்க இப்பண்ணைகளில் இருக்கும் உயிரிகள் மட்டுமே மிச்சமிருக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனும் உண்மை கசக்கத்தான் செய்யும்.

நம்முள் பயம்கொள்ள செய்ய உருவம் தேவையில்லை பாம்பு எனும் ஒற்றைச் சொல் போதும். அப் பாம்புகளின் வகைமைகள், வாழ்வு குறித்து காட்சிபடுத்தும் இந்நூலில் எதையும் அறிந்து கொள்ளாது அறிவியல் பார்வையற்று ஊடகங்கள் நமக்குள் ஊற்றிவைத்திருக்கும் மகாமட்டமான விஷங்களை நம்மிலிருந்து முறிவு கொள்ளச் செய்திடுகிறார் ரோமுலஸ் விட்டேகர்.

இவ்வுலகம் நமக்கு மட்டும்தான் எனும் திமிர்த்தனம் எல்லாவற்றையும் அழிக்கச்செய்கிறது. காடுகள், மலைகள், குளம், குட்டைகளோடு, பாம்புகள், முதலைகள், ஆமைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. ரசனையற்று, இயற்கை குறித்த கற்றலற்ற சமூகமாக உள்ளது. இயற்கையை சக உயிரிகளை நேசிக்க கற்றுத்தராத பாடதிட்டமும் அரசியலும் அவலம். நடந்த தேர்தலில்கூட இதுகுறித்த அறிக்கை எந்த கட்சியிடமும் இல்லாதது துயரமே. மிச்சமிருக்கும் உயிரிகளையும் இயற்கையையும் வளரும் சந்ததியினரிடம் நேசிக்க கற்றுக்கொடுக்கும் முயற்சியை முன்னெடுக்கத் தூண்டுகிறது இந்நூல். அல்லது அவர்களிடம் இயல்பாகவே உள்ள ஆர்வத்தை பொசுக்கிடாமல் பாதுகாக்க செய்யும்.

காட்டுவாசிகள் என ஏளனமாக பார்க்கப்படுபவர்களே இயற்கையை காப்பாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கும். " நான்கு மிகப் பெரிய நச்சுப்பாம்புகளை ஓர் இருளர் கூட்டுறவுச் சங்கம் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் பிடித்து வருவார்கள்; பின், அவற்றிலிருந்து பலமுறை நஞ்சு சேகரிக்கப்பட்ட பிறகு, மீண்டும் காடுகளிலேயே அவற்றை விடுவித்திட வேண்டும்". எதைக் கண்டாலும் எதிரியாக பாவித்து அடித்துக்கொள்ளும் மனப்போக்கு கொண்ட நாம் யார் என்பது குறித்த கேள்வி எழத்தான் செய்கிறது. இயற்கை எப்பொழுதும் தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொள்ளும். ராஜ நாகம் குறித்த இவரின் கூற்று உண்மையை உணர்த்துகிறது. 
ராஜநாகம் மிகவும் அறிவான பாம்பு. கேரளா மற்றும் கர்நாடகாவில் அவற்றின் எண்ணிக்கை அதிகம். ராஜநாகங்கள், பாம்புகளை மட்டும்தான் சாப்பிடும். வேறு எதையும் சாப்பிடாது. ஆபத்தான பாம்புகளின் எண்ணிக்கையை அவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ராஜநாகம் நமக்கு நண்பன்.

முதலையை முதன்முதலாக பள்ளி சுற்றுலாவின்போது கண்டது. வசீகரிக்கும் உருவம் கொண்ட விலங்காக இல்லாததால், பெரிதாக அதன்மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. அதன் வாழ்வு குறித்த விட்டேகரின் விவரிப்பை வாசிக்க  முதலைகள் மீது பிரியம் சுரக்கிறது. சிந்தனை முழுக்க பெரும் சிக்கோடுதான் வாழ்கிறோம் என்பதை அறியச் செய்தது இந்நூல்.

"ஓர் ஆற்றிலிருந்த முதலையால் முட்டைகளை வெளியேற்ற முடியாமல் சிரமப்பட்டது. தன் இணை முதலையிடம் உதவிக்கு யாரையாவது அழைத்துவர கோரியது. அங்கு வேறு முதலைகள் இல்லாததால் கரைக்கு வந்த ஆண் முதலை அங்கிருந்த முருட் பெண்மணியிடம் உதவி கேட்க, தயங்கிய பின் ஒத்துக்கொண்டு முதலையின் வாலை பிடித்து சென்று முட்டைகளை வெளியேற்ற உதவினாள். இதனால் முதலைகள் முருட் இன மக்களை கடிப்பதில்லை என்ற கதை நக்கீரனின் காடோடியில் வாசித்தது நினைவிற்கு வந்தது. இது எனக்கு எக்கொடிய விலங்குகளிடமும் நேசிப்பை செலுத்த முடியுமென தோற்றுவித்தது. மேலிருப்பது கதை என்றால் கீழிருக்கும் உண்மை நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

"தாய் முதலை செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் அந்த பெரிய, பொதுவாக பொறுப்பேற்க விரும்பாத ஆண் முதலை தானே முன்வந்து செய்தது. புதிதாக பொரித்த குஞ்சுகளுள் ஒன்று முட்டை வளையினருகே ஒரு வெற்றிடத்தில் விழுந்துவிட்டது. அந்த ஆண் முதலை, தன் வாயில் அதை ஏந்திச் சென்று தண்ணீருக்குள் மேல்லக் கீழே நழுவி விழுமாறு செய்தது. முட்டை வளையைத் தோண்டுவதில் ஓர் ஆண் முதலை பங்கேற்பதை அன்றுதான் பார்க்க முடிந்தது". என்றிருந்ததை வாசித்ததும் முதலைகள் நெருக்கம் கொள்ளத் தொடங்கின. எல்லா உயிரினங்களிலும் ஆண் தடித்தனத்தோடுதான் வாழும் போலும்.

நாம் செய்வது தவறு என்பதை ஒப்புக்கொண்டு காட்டுயிர்களை நேசிக்க குழந்தைகளின் மனநிலை நமக்கு தேவையாக இருக்கிறது. ஏழுகடல் ஏழுமலையை கடந்து ஒரு சிப்பியுள் அடைக்கப்பட்டிருக்கும் உயிர் அல்ல குழந்தைகளின் மனப்போக்கு. அது நம்முள் எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் அதை கண்டுகொள்ள மறுக்கிறோம் என்பதை உணரச் செய்து, தோழமை உணர்வோடு எல்லா உயிரிகளையும் அனுகச் செய்கிறது ரோமுலஸ் விட்டேகர் வாழ்க்கைப் பயணம்.

வெளியீடு: வானதி பதிப்பகம்
விலை : ரூ. 500.


No comments:

Post a Comment