Monday, June 20, 2022

தவுட்டாயி பாட்டியின் பேரன்

 



நீரோட்டம் பார்க்க  வேப்பக் குச்சியோடு புறப்பட்ட தாத்தாவோடு பேரனும் சென்றான். நிலத்தில் அங்குமிங்குமாக அலைந்தபடி இருந்தவர் ஒரு இடத்தில் வட்டமிட்டு இங்கு போடுப்பா நல்ல தண்ணியோட்டம் கிடைக்கும் என்றார். பேரன் ஆச்சரியத்தோடு பூமிக்கடியிலிருக்கும் நீரை இந்த குச்சி எப்படி தாத்தா காட்டியது எனக் கேட்டான். சிரித்தவாறு எந்த குச்சியும் காட்டாது, இது ஒரு சாக்குதான். நிலத்தை உயிராக நேசிப்பவனுக்கு நிலம் தன் ரகசியங்களை காட்டிக்கொடுக்கும். அதை அறிய பரிச்சயமும் பயிற்சியுமே தேவை என்றார். மொழியும் நிலத்தை போன்றுதான். நேசிப்பவர்களுக்கு தன்னைத் தரும். அவரவர்களின் பயிற்சிக்குத் தக்க வடிவத்தை அறுவடை செய்கிறார்கள். நந்தன் கனகராஜ் 'அகாலத்தில் கரையும் காக்கை' எனும் கவிதை தொகுப்பை அறுவடை செய்துள்ளார்.

கவிதையாக்க தான் தேர்வு கொள்ளும் விசயத்தை விலாவாரியாக காட்சிப்படுத்துவதன் மூலம் அதன் முழு பரிமானத்தையும் நமக்குள் சட்டகம் சட்டகமாக அடுக்கி வைத்திடுகிறார். புறத்தோற்றத்தின் வெளிப்படைத்தன்மையை காட்சியாக்குவதன் மூலம் அகத்தின் ஆழத்தை எளிதில் நாம் உட்கொள்ள முடிவதால் கவிதைகள் நம்முடன் இணக்கமாகிவிடுகின்றன. சமகால அரசியல், சமூக இடர்கள், அழிவின் சித்திரங்களாகிக் கொண்டிருக்கும் சூழல், குழந்தமைகள் மீதான பரிவு, காணாமல் போய்கொண்டிருக்கும் குருவிகளை தன் மொழியில் பறக்கவைத்தலென நந்தன் கனகராஜின் ' அகாலத்தில் கரையும் காக்கை' தொகுப்பு  ஓர் ஒளிக் கலவை.

ஆகாயம்

நனைந்துலரும்
சிறகுகளில்
நீருறிஞ்சி
அண்ணாந்து பார்க்கும்
தவிட்டுக்குருவிகளுக்காகவே
ஆகாயத்தில் கிளைக்கின்றன
அநேகம் நம்பிக்கைகள்.

இக்கவிதையில் வரும் தவிட்டுக் குருவிக்கும் நமக்கும் ஓர் ஓர்மை உண்டு. குயிலின் குஞ்சு நிறமும் இதன் குஞ்சு நிறமும் ஒத்திருப்பதால் குயில் அதன் குஞ்சை இதன் கூட்டில் விட்டுச் சென்றிடும். இதுவும் தனதாக பாவித்து அலைந்து திரிந்து உணவை சேமித்து ஊட்டி வளர்த்து ஏமாந்து போகும். உறவுகள் துவங்கி அனைத்திலும் நம்பி ஏமாறும் கதைகள் நமக்கு ஆயிரம் உண்டிங்கு. ஆகாயத்தில் நமக்கும் சில நம்பிக்கைகள் கிளைக்கத்தான் செய்கின்றன. அதுவே நம் உயிர்வேராகவும் இருக்கிறது.

எதையும் காலாகாலத்தில் செய்து முடிக்கவேண்டுமென பெரியவர்கள் சொல்லும் காலாகாலம் என்பது பருவத்தே பயிர் செய் என்பதன் நீட்சிதான். ஆனால் நாம் சூழலுக்கு செய்துகொண்டிருக்கும் மிக்க கொடிய அநீதியால் பருவங்கள் மாறுதலுக்குத் தள்ளப்பட்டன. ஐப்பசியில் பெய்த மழையால்  டெல்டா விவசாயிகளின் நிலங்களில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் நீரில் மூழ்கி விதைக்காமலே மீண்டும் துளிர்ப்பைக் கண்டது நம் இயல்பு வாழ்வை கலங்கச் செய்தது. 
"ஆகாயத்தைக் கும்பிட்டு
ஆடிப்பட்டத்தில்
நாங்கள் ஊன்றும் விதைகளை
முளைக்கச் செய்யும்
வார்த்தைகளைத் தந்து
விபூதி பூசித் தணிவாள்." என முடிவுறும் ' அவ்வொலியை விட்டு விடுவது அத்தனை சுலபமில்லை' கவிதையில் வரும் தவுட்டாயிப்பாட்டியின் வாக்கு இனியாகினும் பலிக்கவேண்டும் என மனம் ஆசை கொள்கிறது. இக்கவிதையில் ஒவ்வொரு பத்தியுமே தனித்தனி கவிதையாக இருப்பது நம்மை இக்கவிதையில் இறுத்திவைக்கிறது.

மனிதர்களை தொந்தரவிற்கு உள்ளாக்கும் வார்த்தைகளை மிஞ்சும் ஆயுதம் உலகில் வேறொன்றுமில்லை. ' அதுவொன்றன்று' எனும் கவிதையில் நாற்காலியில்/ அப்பிக் கிடக்கிறான்/ முதி கிழவன் எனும் வரிகள் அப்படியானவைகளே. ஒன் பாத்ரூம்/ டூ பாத்ரூம் எவ்வளவு என சிலர்தான் கேட்கிறார்கள். பெரும்பாலானவர்கள் விரல்களைக் காட்டி சைகையாலே கடந்திடுகிறார்கள். சாதிய மனம், தகுதி என்பனவற்றையும் மீறி எல்லாவற்றையுமே எமோஜிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் காலமாகிப் போனது. உரையாடல்கள் குறைந்துகொண்டே இருக்கிறது. வாட்ஸ்அப் வார்த்தையாடல்களே போதும் என்ற மனப்போக்கு மிகுந்துபோனது. சொற்கள் நம்பிக்கை, சொற்கள் பலம், சொற்கள் இன்பம், சொற்கள் தோழமை, சொற்கள் அற்று வாழ்வேது?. சில இடங்களில் பேசத்தான் வேண்டும். காலமற்று தொழில்புரிவோரிடம் சிறு புன்னகையோடு எப்படி இருக்கீங்க, டீ சாப்பிடுறீங்களாவென சும்மா கேட்டுப்பாருங்க, வாழ்வில் நீங்க என்றுமே பார்த்திராத புன்னகையை பார்க்க முடியும். சமூகம் அவர்களை வேண்டாவெறுப்பாக பார்க்கள் பழக்கு வைத்துள்ளது. இப்படியான சமூகத்தில்தான் வாழவேண்டி இருக்கெனும் உண்மை சுடத்தான் செய்கிறது. இக்கவிதை காட்சிப்படுத்தலில் நம்மை ஒரு பேருந்து நிலையத்துள் நிற்கவைத்துவிடுகிறார்.

சிவானிக்குட்டி
இலை வரைந்த சுவரில்
வந்து ஒட்டிக் கொண்டன
மரங்கள்
' என்ன... இது? ம்...'
என்ற அதட்டலில்
கண்ணீரோடு பெயர்த்துவைத்தாள்
தனது காட்டை
பெருவழிச் சாலைக்கு
அளவுக்கல் நடப்பட்ட
நிலமென
துலங்கிக்கொண்டிருக்கிறது வீடு.
எனும் சிவானிக்குட்டி கவிதை போன்று ஏற்கனவே சுவற்றில் வரைவது குறித்து நிறைய்ய கவிதைகள் எழுதப்பட்டிருக்கு. இன்னும் நிறைய்ய எழுதப்படவும் கூடும். ஏற்கனவே என நாம் இதை கடந்திட முடியாது. தினம் வரும் சூரியன்தானே என நாம் அசட்டையாக இருந்திடுகிறோமா? புதிதாக தினம் பிறந்தபடியேதானே இருக்கு சூரியன். குழந்தமை கவிதைகளும் என்றும் புதிதுதான். இக்கவிதையில் வரும் அளவுக்கல் நடப்பட்ட நிலமெனும் வார்த்தை நம்மை கலங்கச்செய்திடுகிறது. அது வெறும் கல்தானே என இயல்பாக அவர்களால் இருந்திட முடியாதுதானே. அதிகாரத்திற்கு எதிராக எளியவர்களிடம் இருக்கும் கண்ணீர் நதியாகி அவர்களை அடித்துச் சென்றிடுமென ஆறுதல் கொள்ளத்தான் முடியுமா?. அதிகாரம் உதிரும் மயிருக்குச் சமானமென  கண்ணுக்கு புலப்படாத கிருமி உலகரங்கை முடக்கிவைத்த காலத்தில் வாழ்ந்தும் மாதக்கணக்கில் டில்லியில் போராடியபடி இருக்கும் விவசாயிகளின் உணர்வை மதியாத அரசை என்ன செய்ய போகிறோம் என அலையலையாக தவிப்பை உருவாக்கியபடி இருந்தது இக்கவிதை.

கட்டுப்பாடற்ற மனப்போக்கோடு இருப்பவனின் கனவில், உலகம் காணாத பூக்களெல்லாம் மலரக் கூடும். அக்கனவை மொழிப்படுத்த பூக்களின் வாசனை காற்றுக்கானதாக மாற்றம்கொள்ளும். கனவு எதையும் சாத்தியப்படுத்தக்கூடியதே. இவரின் ' கேட்ட மழை' கவிதையை அப்படியனதொரு கவிதையாக பார்க்கலாம்.

ஆறு நீரோடும் தடம் அல்ல. அது வாழ்வு. வாழ்வைக் காட்டும் கண்ணாடி. ஆற்றுக்கும் மனிதனுக்குமான பிணைப்பை கூற ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. துயரோடு வருபவனின் கண்ணீரை தன்னில் கரைத்து இயல்பாக்கி அனுப்பிவைக்கும் அற்புதம். பாவங்களை கழுவி சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கும் பொக்கிசம். நமக்கும் ஆற்றுக்குமான வாழ்வை மீட்டுத் தருகிறது ' ஆறு என்பது ஒன்றல்ல' கவிதை.

ஊர் என்பது வாழும் இடம் மட்டும் அல்ல. ரசிக்கும் காட்சிகளின் தொகுப்பு. இருந்து இல்லாது போனாலும், இருந்திருந்த நாட்களின் காட்சி நம்மை என்றும் வசீகரித்துக் கொண்டே இருக்கும். இக்காட்சிகளை நந்தன் கனகராஜ் கோழியாக அடைகாத்து நமக்கு தந்தபடியே இருக்கிறார். ' தொலைவட்டம்' கவிதை ஊரின் சித்திரங்களை நம் நினைவில் ஒட்டியபடி இருக்கிறது.

கார்த்திகை தீப நாளில் மாடிப்படிகளில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் யுவதி. முடித்த கணத்தின் மகிழ்வை முகம் பூத்திருந்தது. சட்டென ஒரு விளக்கு அணைய அச்சோவென ஓடிப்போய் ஏற்றினாள். வேறொன்று வேறொன்றென அணையத் துவங்க அங்குமிங்குமாக ஓடி ஓடி ஏற்றியபடியே இருந்தாள். அக்காட்சி எனக்கு அவள் அழகை ரசிக்கும் தீபங்கள் அவளோடு விளையாடிக் கொண்டிருப்பதாகப் பட்டது. கடந்து செல்ல இயலாது நானும் ஒரு விளக்கில் தீபமாகி வேடிக்கை பார்த்தேன். இக்காட்சியில் மீண்டும் எனை வாழச் செய்தது இக்கவிதை.

சுடர்தல்

தீபம் ஏற்றிய வாசலை
காவல் செய்யும்
குழந்தை
சுடர் அணைந்த கணத்தில்
அம்மாவை அழைக்கிறது.

ச் சோ... என்கிற
அதன் பரிதாபத்துக்கு
சுடர்ந்து மறைகிறதொரு
பிரகாசம்.

'மலை' எனும் கவிதை மலையின் தொடக்கத்திற்கு/ இடறிக்கொண்டேயிருக்கிறார்கள்/ மனிதர்கள். இப்படியாக முடிகிறது. மனிதர்களின் தீராபசிக்கு படுத்துறங்கும் யானைக் கூட்டம்போல் கிடக்கும் மலைகள் நம் காலத்திலேயே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது. எட்டுத் திக்கும் அழிவின் சித்திரங்களே. எதேனும் சின்னஞ்சிறு துளிர்ப்பை பிடித்தே காலத்தை நகர்த்தவேண்டி இருக்கிறது. சிறு கல்லும், பெரிய மலைகளும் இனி கவிதைகளில் மட்டும்தான் இருக்கும் போலும். மரத்தை உருவாக்கலாம், ஏன் காட்டைக்கூட உருவாக்கிவிடலாம், பாறைகளை உருவாக்கிட முடியதெனும் உண்மையை உணர்ந்தே செய்யும் திமிர்த்தனத்திற்கு என்ன தீர்வு இருந்திடப்போகிறது.

உன் காலை தள்ளாடவொட்டார்
உன்னை காக்கிறவர் உறங்கார்
கர்த்தர் உன்னை காக்கிறவர்
உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருப்பார்
உங்கள் பாவங்கள் கழுவப்பட்டு
உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவார்.
கர்த்தரிடம் வாருங்கள். என அவ்வப்போது வாசித்த வசனங்களை நினைவூட்டும்விதமாக இருந்தது நந்தன் கனகராஜின் ' என் வீடு' கவிதை. அறைகளை கலைத்துப்போட, ஹேவென கத்த, குட்டிக்கரணம் அடிக்க, அழுது வேண்டியதை கைக்கொள்ள, சண்டையிட்டு சமாதானம் கொள்ள நீங்கள் வீட்டிற்கு வாருங்கள் என அழைப்பை விடுக்கும் நந்தன் கனகராஜ் நிபந்தனையொன்றையும் போடுகிறார். குழந்தைகளாகிக் கொண்டீர்கள் எனில்/ நிச்சயம் வரலாம்/ நீங்களென் வீட்டிற்கு. சொல்வது எளிதுதான் குழந்தமை மனம் கொள்ளுதல் அவ்வளவு எளிதானதா என்ன?.

குடிமக்களின் வாழ்க்கை நன்னிலையோடு இருக்க  செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சி புரிதல் அரசின் கடமையாகும். அறம் பிறழாது அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் எனும் ' அறனிழுக்கா தல்லவை நீக்கி மகன் இழுக்கா
மானம் உடையது அரசு' எனும் வள்ளுவரின் குறளை நம் ஆட்சியாளர்களுக்கு 
'அறன் தவறி மக்களுக்கு அல்லவை செய்து மறைந்திருந்து
கார்ப்ரேட்டுகளை காப்பதே நல்லரசு'
இப்படியாக மொழிபெயர்ப்பு செய்திருப்பார்கள் போலும். மதச்சார்பற்றது என் நாடெனும் பெருமிதத்தில் காவிக்கறை வீழ்ந்தது துவங்கி ஆட்சியாளர்களின் தொடர் திமிர்த்தனங்கள் அரங்கேறியபடியே இருக்கிறது. பெரும்பாலான இந்தியக் குடும்பத்தின் நிலையை காட்சிபடுத்தும் ' ம(வு)னச் சித்திரம்' கவிதையின் இறுதி பத்தி இப்படியாக.
பொய்மையின் ஊற்றை
சிருஷ்டிக்கும்
நம் கடவுளோ
எரிபொருள் நிலையங்களின்
பதாகைகளில்
மானியங்களின் சிரிப்பைத்
தந்துகொண்டிருக்கிறார்.

நம்மின் மனக்குமுறல்களை கவிதையில் கடந்துபோய் விடுவது இயல்பாகிவிடுகிறது.

தன்னை முழுமையாக அறியத் துடிப்பவன் தனக்கான இலக்கை தீர்மானிப்பதும், அதற்காக தேடுதலும், கற்பதும், சோதிப்பதும், பின் அதனை பண்படுத்துவதுமென தொடர்ந்து இயங்கியபடி இருப்பதே நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதற்கான துளிர்ப்பை நந்தன் கனகராஜின் அகாலத்தில் கரையும் காக்கை தொகுப்பில் காண முடிகிறது.

No comments:

Post a Comment