Saturday, December 27, 2014

நன்றி: இளஞ்சேரல்

தோட்டாக்கள் பாயும் வெளி-
ந.பெரியசாமியின் கவிதைகள் குறித்து...
இளஞ்சேரல்

         கவிதைகளின் நிலைகளில் அதன் பதிவாக்கங்களில் பொருளும் காட்சிகளும் காட்சியும் படிமங்களும் வேறு நிலத்திற்குரியவனுக்கு அந்நியமாகவே தெரியும். எனினும் நாம் கவிதைகளை வாசிக்கிற பொழுது ஒரு புதிய நிலத்தை புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளப்போகி றோம் என்னும் உணர்வுடன்தான் அணுக வேண்டும். நாம் நமது ஊருடனும் உறவுகளுடனும் அந்நியமாதலைத் தொடர்ந்து நிகழ்த்திவருகிறோம். மிகவிரைவாக ஒரு பிடியைத் தளர்த்திக் கொள்கிறோம். அப்படியான விடுபடல் மூலமாக மனமகிழ்ச்சி கொள்கிறோம். அந்நிய நிலமாக அந்நியமனிதர்களாக ஒவ்வொன்றையும் அறியத் துவங்கியிருக்கிற காலமிது. தொலைவிலிருப்பவர்களிடம் உறவுகளைப் பற்றிக் கொள்ள முனைவதும் அருகிலிருப்பவர்களிடமிருந்து வெகு தொலைவு இடைவெளியை உருவாக்குவதுமாகவே மனித உணர்வுகளின் வாழ்வு பல்லாயிரம் ஆண்டுகளாகவே நடக்கிற தொடர் பெயரெச்சம் இது.
           ந.பெரியசாமியின் கவிதைகள் மாற்று சமூகத்தைப் புணரமைக்க நினைக்கிறது. கோம்பக்காட்டுப் புதூர்,புதுடெல்லி, புதூர் என்கிற நிலப்படிமங்கள் எல்லாமே புதுவகையான சமூகப் புத்தாக்கம்தான். ஒரு புகழ்பெற்ற கவிதையொன்று எழுதியவர் ந.முத்து என நினைவு
சமத்துவபுரம்
கழிவுகள் சுத்தம் செய்ய
அதே வெட்டியான்- என்பதாக.
         நிலச்சமண் என்பது இனவரைவியலுக்குட்பட்ட தாகவே இருப்பினும் அங்கு தோன்றியெழுவது புதிய சமூகத்தின் இயல்புகள்தான். தலைமுறைவேறுபாடுகளும் சிந்தனைகளின் தொடர்ச்சிதான். ஆனால் மொழியில் மட்டும் எதுவும் நிகழ்வதேயில்லை. அல்லது நிகழ விடுவதேயில்லை. ந.பெரியசாமியின் ஒரு கவிதை
எழுத மறந்த பக்கங்களில்...

தினமும் எழுதத் தீர்மானித்தேன்
வெண்மை மிளிரும் தாள்கள் நிறைந்த
நோட்டு ஒன்றை வாங்கி வந்தேன்
ஓரே ஒரு படம் வரைஞ்சிக்கிறேன்
ஆசையாக்க் கேட்டவனிடம் தந்தேன்
மரம் ஒன்றை வரைந்திருந்தான்
நாளையிலிருந்து துவங்கலாமென வைத்தேன்
நிறைய்ய கடந்தன நாட்கள்

திடுமென நினைவு சுட
எழுதத் தீர்மானித்து எடுத்தேன்
முதல் பக்கத்திலிருந்த மரம்
அடுத்த பக்கத்தில் துளிர்த்திருந்தது
அடுத்தடுத்த பக்கங்களில்
காக்கை கூடு கட்டியிருந்தது
மேலும் பல பக்கங்களில்
இலைகள் உதிந்து கிடக்க
காய்களும் இறைந்து கிடந்தன
மர நிழலில் அமர்ந்திருந்தவர்கள்
சேகரித்த பழங்களைத் தின்றனர்
துப்பிய கொட்டைகளில்
சிலது துளிர்த்தும் இருந்தன
பிரபஞ்சம் எங்கும்.---பக்-44

      தொல்காப்பியமும் சங்கப் பாடல்களும் வகைப்படுத்திய நிலங்களின் தன்மை மாறியிருக்கிறது. மலைகள் தரைமட்டமாக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளும் மேம்பாலங்களும் உருவாக்கப்படுகிறது. குளங்கள் பேருந்து நிலையங்களாகிறது. ஆறுகள் சாலைகளாகவும் கனிம வளங்களைத் தோண்டியெடுக்கிற நிலமாகவும் மாறியிருக்கிறது. காதலர்களின் வாய்க்கால்களும் குரங்குக் குதிர்களும் இல்லை. கடல்வளங்களுக்காகவும் மீன்களுக்காகவும் சாகிறவர்கள் அதிகமாகிறார்கள். கடற்கரைகளுக்குக் காற்று வாங்க வருபவர்கள் குறைந்து வீட்டிலேயே உடற்பயிற்சிக்கூடங்களிலும் நடைபயிற்சி இயந்திரங்களுடன் வாழப்பழகிக் கொள்கிறார்கள். இளையோர் சமூகம் கிழட்டுத்தன்மையையும் கிழடுதட்டிய சாகப்பிரியப்படாமல் இந்தச் சமூகத்தை மேன் மேலும் என் தலைமுறையோடு இந்த மண்ணும் அழியட்டும் என நினைக்கிற கிழடு தட்டிய தத்துவங்க ளை வைத்துக் கொண்டு திரிகிற நிறுவனத் தலைமைகள். இதற்கிடையில் உண்மையையும் அறத்தையும் ஏதோ தன் சொத்து என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டு திரிகிற தீவிர இலக்கியப் பிரதியாளர்கள். பதிப்பாளர்கள். நூலாசிரியர்கள். மயிரளவு சுருங்கிப் போன உடையைப் போலவே கருத்துப் போன இன உணர்வாளர்கள். இன உணர்வாளர்களின் கருப்புக்கவிதைகள். எல்லாவற்றையும் விற்று டாலராக்க முனைகிற நிறுவனங்களும் அரசுகளும். ஒரு களையைப் பிடுங்கினால் ஓராயிரம் களைகள் முளைக்கிற சமூகம். தொண்ணூறு சதமான மரமண்டைகளும் பாதி வெந்த அரைவேக்காட்டு மக்கள்.
       இந்த மக்களுக்காக எழுதுகிற படைப்பாளர்கள். இந்த மக்களின் உய்வுக்குப் பாடுபடுகிற சிந்தனையாளர்கள். ரத்த அணுக்களில் கலந்து விட்ட சமூகப் பொறுப்புணர்வை புற்றுக்கட்டியாக அகற்றுகிற வடிவில் ஒவ்வொரு கவிதையையும் எழுதுகிற கவிஞன். எப்படியும் விடியும் விடிந்து விடும் என்று நம்பிக்கையோடு இயற்கையுடன் உரையாடி உரையாடி தனக்கு இணக்கமான சிந்தனையுள்ள நண்பர்களுடன் உரையாடி இலக்கியம் எழுதுகிற படைப்பாளர்கள் சோர்வடையாமல் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கலப்பட வியாபாரியும் கஞ்சா விற்பவனும் ரேசன் அரிசியையும் டீசலையும் அடிமாடுகளையும் கடத்துகிறவர்கள் இந்த உலகில் தைரியமாகவே வாழ்கிறபோது படைப்பாளர்கள் வாழ முடியாதா என்ன. கவிஞனும் கவிதையும் வாழாதா என்று மொழியின் துணிவுடன் எழுதுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
         ந.பெரியசாமியும் தன் கவிதைகளின் வழியாக அப்படித்தான் துணிவுமிக்க சொற்களுக்குச் சொந்தக்கார மனுசராகத் தெரிகிறார். கடந்த இரண்டு தொகுப்பிலிருந்து சற்று வேறுபடுகிறார். காட்சிகளை விவரிக்கிற பொழுதும் அனுபவங்களைப் பேசும் பொழுதும் அவருடைய உணர்விற்கு நம்மையும் ஆட்படச் செய்கிறார். இந்தத் தொகுப்பில் அல்லாத அவர் எழுதுகிற முகநூல் மற்றும் சிற்றிதழ் கவிதைகளிலும் தனித்த இயல்பை அவர் தொடர்ந்து கவனப்படுத்தப்படுபவராகவே உள்ளார். அறம், அரசியல்,நிலம், வளம், மனித உணர்வின் அதீத வெளிப்பாடுகளும் காலமும் தொடர்ந்து பின்பற்றுகிற கவிஞராக உள்ளார். கவிதையின் அமைப்பியலை நேசிப்பவராகவும் அறியப்படுகிறார்.
         உணர்வின் வெளிப்பாடுகளாக மட்டும் கவிதைகள் அறியப்படுவதில்லை. கவிதைக்கே உரிய இயல்புகளும் கவித்துவமும் நல்லியல்புகளும் மிகவும் முக்கியம் என்பதை சங்கப்பாடல்களின் தன்மை நமக்கு உணர்த்துகிறது. ஒரு செய்யுளில் கம்பன் கவிதைக்குரிய அமைப்பை தெளிவு படுத்திவிடுகிறார்
புவியினுக் கணியாய் ஆன்ற
  பொருள் தந்து புலத்திற்றாகி
அவியகத் துறைகள் தாங்கி
  ஐந்திணை நெறிய ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென்
  றெழுக்கமும் தழுவிச்  சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா
  வரியினை வீரர் கண்டார்
        செய்யுட் வடிவமும் யாப்பும் அணியிலக்கணங்க ளுடன் சமூக வரைவிலக்கணங்களை எழுதினார்கள் புலவர்கள். பெரும் நிலவியல் சமூகங்களை ஒழுங்கு செய்தார்கள். நீதி இலக்கிய வகைமைகள் என்றே ஒரு மாபெரும் இலக்கியவடிவம் சமூகத்தை மேம்படுத்தியது போர்கள் மலிந்த காலத்தில் நீதியிலக்கியங்கள் நிலங்களின் தன்மையைப் பேசியது.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்
             என்று வள்ளுவரும் நீதியைப் போற்றினார். ந.பெரியசாமி உள்ளிட்ட நவீன காலத்தின் கவிஞர்களும் கவிதைகளும் நீதியையும் அறத்தையும் எழுதி வருகிறார்கள். அறம் நீதி தர்மநிலை குறித்தெல்லாம் இப்பொழுது யார்யார் எழுதுகிறார்கள். யார் கோட்பாடுகளை எழுதுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இலக்கியவாதிகள் சில காரியங்களைச் செய்யாமல் விடுகிறபொழுது அந்தக் காரியங்களை சுயநலக்காரியக்காரர்கள் செய்யத்துவங்கிடுவார்கள்.
          பதினேழாம் நூற்றாண்டுகள் வரையில் இந்த மனிதசமூகத்தின் அரசுகள் பேரரசுகள் எல்லாம் இலக்கிய வாதிகளின் படைப்பாளர்களின் கைகளில்தான் இருந்தது. மொழியைத் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த படைப்பாளர்கள் தன் சொல்லுக்குக் கட்டுப்படுகிறளவு மன்னர்களையும் கீழ்ப்படியவைத்தார்கள். நாலடியாரின் ஒரு பாடல்
“அறுசுவை யுண்டி அமர்ந்தில்லான் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாகும்-வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று.“
செல்வத்தையும் போகத்தையும் பொருட்படுத்தவேண் டாமென்று போதிக்கிற நீதி இலக்கியம் இது. பெருஞ்செல்வத்தைக் குறிவைத்து மொழியைப் பயண்படுத்திக் கொள்கிற காலத்தில் ந.பெரியசாமி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. நீதியும் அறமும் பேசுவதால்தான் கவிதை நூல்களை அங்காடிகள் புறக்கணிக்கிறது. வாசகர்கள் புறக்கணிப்பதில்லை.
இருளும் ஒளியும்
மரம்
தன் நிழலைக் கிடத்தி
இரண்டாகக் கிழித்தது என்னை
அம்மனச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன்
வெய்யில் சுட்டது
கூலிச்சீருடை அணிந்து
பிழைப்புக்குத் தயாரானேன்
சுருங்கியது மரநிழல்- பக் 39
             ந.பெரியசாமியின் கவிதை பற்பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. வாழ்க்கை என்பதும் இயற்கையென்பதும் வேறுவேறு அல்ல. மில்லினார் கோடினார் உயிர்களில் மனிதனின் இருப்பு மயிரளவு கூட கிடையாது. மயிர் அணியும் செங்கோல்களின் அலப்பரை தாங்கமுடிவ தில்லை. அறம் பேசுகிறவன் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. தர்மநீதிகள் போதிக்கிறவன் நீதி கூறுபவன் நீதியைப் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லையென்பதை இந்த நூற்றாண்டில்தான் மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். ஒரு மனிதனின் நல்ல ஆடையும் நல்ல முகச்சவரமும் உடல் ஒழுங்கும் ஒருவனுக்கு அருவருப்பைத் தந்துவிடுகிறது. ஒருவனின் நீதிமான் கடவுள் ஒருவனுக்கு அருவருப்பான கடவுள்.
         அவனுடைய குழந்தைகள் சாத்தான்கள். அவற்றை ஈவு இறக்கமற்றுக் கொலைகள் கூட செய்யலாம். யாரும் கேட்கமாட்டார்கள். புதைகுழியில் பொக்லைன்களால் வழித்துக் கொண்டுபோய்க் கொண்டு மண்கொண்டு மூடலாம் அல்லது ஒரு சேர தீவைத்துக் கொளுத்தலாம் யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு கவிஞன் தன் கவிதையில் எழுதினால் அதில் கலையம்சம் இல்லையென்பான் ஒரு நாதாரி. அந்த நாய்க்கு குளுருட்டப்பட்ட அறையும் சிக்கனும் வறுவலும் ஆம்லெட்டும் சீமைச்சாராயமும் வழங்கவேண்டும். அவன் போதிக்கிற கவிதை முறையை அழகியலை,அறத்தை, விற்பனையைக் கொண்டு போய்ச் சொல்வது என்பதை அவன் சொல்வான். இவனைப் போன்ற விலைவிமர்சகர்களுக்கும்  விலைகவிஞர்களுக்கு மத்தியில் நல்ல கவிதையை எப்படி நிரூபிப்பது. இவர்களைப் போன்ற சொம்புதேர் வாழ்க்கை வாழ்கிற சொருபிகளுக்கு மத்தியில் ஒரு நேர்மையான கவிஞனை எப்படி நிறுவுவது..
நீதியும் அறமும் பேசாத சொற்களில் சொகுசு கொண்ட சொற்கள் மிகவிரைவில் பல்லக்கு ஏறிவிடும். அந்தப் பல்லக்கை மூத்த படைப்பாளர்கள் சிலரும் வாக்கு வங்கியைக் கணக்கில் கொண்டு ஆதரிப்பவர்களும் சொகுசு, பவிசு சொற்களைத் தூக்கிப் போற்றித் திரிவார்கள். அதறக்கு அரங்கேற்றங்களும் கும்பாபி சேகங்களும் பாலாபிசேகங்களும் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே போலவே புழுதிவாரித்தூற்றுதல்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு படைப்பு எதிர்கொள்ளப்படுகிற நிலையைக் கூட இன்னும் நம்மால் ஒழுங்கு செய்யமுடியாமல்தான் இருக்கிறோம். இங்கு நாம் புகழ்பெற்ற அரவிந்தரின் கவிதையொன்று வாசிக்கலாம்.
Rose, I have loved
Rose, I have loved thy beauty, as l love
The dress that thou worn, the transient grass,
O’er which thy happy careless footsteps move,
The yet-thrilled waysides that have watched thee pass.
Soul, I have loved thy sweetness as men love
The necessary air they crave to breathe.
The sunlight lavished from the skies above,
And firmness of the earth their steps beneath.
But were that beauty all, my love might cease
Like love of weaker spirits; weren’t thy charm
And grace of soul, mine might with age decrease
Or find in death a silence and a term,
But rooted to the unnameable in thee
Shall triumph and transcend eternity.
 நம் அறிந்த கவிதையின் நாயகனாகவும் அறத்தின் போதனையாளராகவும் விளங்கிய அரவிந்தரின் ஆசிரமத்தின் மீது தற்காலத்தில் கூறப்படுகிற விமர்சனங்கள். அங்கு நடந்து வருகிற சம்பவங்கள் காட்சிகள் பத்திரிக்கை விமர்சனங்கள், தற்கொலைகள் பாலியல் சம்பவங்கள் நமக்கு அதிர்ச்சி தருகிறது. உலகின் மகத்தான மனிதர்களுக்கு தொடர்ந்து அவர்களின் சாவுக்குப்பின்னால் நடக்கிற கொடுரங்கள் அச்சமூட்டுகிறது. புனிதத்தைச் சிதைப்பதும் ஒரு தலைமுறையின் மகத்தான சிந்தனையை புகழை வாய்ப்புக் கிடைக்கிற சமயத்தில் சிதைப்பது கூட தற்காலத்தில் நடந்துவருகிறது. இங்கு மடங்களின் மீதும் நிறுவனங்களின் மீதும் காட்டப்படுகிற கருணைகள் கேள்விகளாகிறது. இங்கு அரவிந்தரின் புகழும் மகத்தான கவிதைகளும் நம் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் கேள்விக்குள்ளாகிறது. மொழியிலும் கவிதையிலும் தனிமனித பிம்பங்களின் மீது உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் புகழ் பணம் பொருள் சம்பாத்தியம் எல்லாம் அச்சத்தைத் தரவல்லதாக மாறியிருக்கிறது. புகழ்பெற்ற பிம்பத்தின் பெயரால் ஏற்படுத்தப்படுகிற ஒழுங்குகள் நம் காலத்தில் தகர்க்கப்படுகிறது.
       இப்படித்தான் காந்திய நெறியும் சர்வோதய நெறியும் கிராமப்புற மேம்பாடுகளும் கைவினை பொருட்களும் கதர் உடைகளும் அழிக்கப்பட்ட வரலாறுகள். ஐம்பதாண்டுகளுக்குள்ளாக ஒரு கவிதையும் கவிதையியக்கம் காலாவதியாகிப் போவதை திராவிடம் சார்ந்த மதிப்பீடுகளையும் உள்ளடக்கலாம்.
காந்தி குறித்த கவிதை பெரியசாமி எழுதியிருப்பது அற்புதமான குறிப்பான். காந்திய நெறிகளை கொள்கைகளை அழிப்பது உள்ளிட்ட வேலைகளைக் காங்கிரஸ் கட்சிக்காரர்களே அழித்தார்கள் அல்லவா அப்படித்தான். ஒரு வகையில் எம்ஜியார் புகழை அழிக்க அந்தக் கட்சிக்காரர்களே முனைகிறார்கள் அல்லவா அப்படித்தான். சில ஆளுமைகளின் புகழை அழித்து ஒழிக்கும் பட்சத்தில் தன் புகழை நிலைநாட்ட முடியும் என்பதை இந்த நவீன நூற்றாண்டு நமக்குக் கற்றுத் தருகிறது. அப்படியாக மூத்த நவீன கவிஞர்களின் புகழையும் சொற்களையும் அவர்களின் கவிதைப் படிமங்களையும் அழித்து வருகிறார்கள். குறிப்பாக அவருடைய சீடர்கள் என்று தங்களை அறிவித்துக் கொள்கிறவர்களே அந்தப்பணியைத் தைரியமாகச் செய்கிறார்கள்.
காந்தி..,
சிறு தொலைவிற்குப் பின்
தோட்டம் ஒன்றில்
வட்டமாக
“இளைஞர்கள்
என்ன செய்கிறார்கள்“

“வேண்டாம் போகலாம்“ என்றேன்
அவரின் பார்வைக்கு
பொய்யுரைக்க மறந்து..
“மது அருந்துகிறார்கள்“- என்றேன்
ஹேராமெனத் தலையிலடித்து
“அரசு என்ன செய்கிறது“
பார்வையைக் கேள்வியாக்கினார்
சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாது
கடை நடத்துவதே அரசென்றேன்
ஐயோவென மயங்கிச்சரிந்தார்.... பக்-40

மேம்போக்காக வாசித்தால் சாதாரணமான கவிதையாகத் தெரிந்தாலும் உண்மையை கவிதை பேசுகிற பொழுது சாதாண நடையும் எளிமையான கவிமொழியும் அவசியம் என்று தோன்றுகிறது. கவிதைகளுக்குள்ளாக கருத்துகள் போதிப்பது கவிதையின் அமைப்பியலுக்கு ஒவ்வாமை யாகப் பட்டாலும் சமூகத்தின் பெரும் அவலத்தை கவிஞனாக குறிப்பிடவும் வேண்டியிருக்கிறது. மேற்கண்ட கவிதை மிக நீண்ட கவிதையிலிருந்து சிலவரிகள் மட்டுமே. மதுபானம் விற்ற பணத்தில்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது என்கிற உண்மையையும் கவிஞர் சேர்த்திருக்கலாம்.
           ந.பெரியசாமியின் கவிதைகள் அப்பழுக்கற்ற நிலத்தைப் பேசுகிறது. கள்ளம் கபடம் ஏதுமறியாத மனிதனின் நுட்பமான கற்பனைப் புனைவுகளையும் பேசுகிறது. கவிதை ஒருதலைப்பட்சமான இலக்கிய வடிவமல்ல. சாதமான அம்சங்களை மட்டுமே பேசுகிறவையும் அல்ல. இயற்கை முரண்களையும் வாழ்வியல் நெறிகளையும் பேசிவருகிறது. ஒரு கவிதை எழுதப்பட்ட பிறகு இது கவிதைதானா என்கிற குழப்பம் தேவையற்றது. ந.பெரியசாமியின் பல கவிதைகள் நவீன கவிதைகளின் கட்டமைப்பிலும் எழுதப்பட்டிருக்கிறது. தொகுப்பில் பல கவிதைகள் அபாரமான சொல்லாட்சியில் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்த்துகளும் அன்பும்...
வெளியீடு
தோட்டாக்கள் பாயும் வெளி
ந.பெரியசாமி-கவிதைகள்-94876 46819
Na.periyasamy@gmail.com
புது எழுத்து
2-205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்.-635 112
கிருஷ்ணகிரி மாவட்டம்
90421 58667

No comments:

Post a Comment