Monday, April 9, 2012

nantri: 361

அமுத சுரபி

தனித்திருந்த நாளொன்றில்

தரிசித்து திரும்பினேன் செவிடப்பாடியாரை
தலைசாய்த்து மௌனம்பேசிய காதலரை கடந்துவர
கரும் வண்டொன்று வட்டமிட்டது
துரத்தியும் விலகியும் பார்க்க
விடாது தொடர்ந்தது
பயம் கவ்வ படியமர்ந்தேன்
அதுவும் அருகிருந்த செடியமர்ந்தது
அவதாரத்தின் வண்டாக இருக்குமோ
சந்தேகம் காட்சிகளை மனதில் ஓட்டியது
முன்னொரு காலத்தில்
சத்ரியனென காட்டிக்கொடுக்க
கர்ணனின் தொடை துளைத்து
இரத்தம் ருசித்த நாவின் பசி அடங்காது
எனை ருசிக்க வட்டமிடுகிறதோ
அப்படியாக இருப்பின்
மகிழ்வோடு தொடை காட்டியிருப்பேன்
குருதியடங்க குடித்துச் செல்லட்டுமென
கர்ணன் என் அமுதசுரபியன்றோ...

* *


சந்திப்பு

 

அவசரமாக தொலைக்காட்சிப்பெட்டியை அப்புறப்படுத்தினேன்
டேபிளை முன் அறைக்கு இழுத்து வந்தேன்
சன்னல் திரைத்துணியை உருவி விரித்தேன்
என்றோ ஒருவனின் பசியாற்றி
பரணில் கிடந்த பிளாஸ்டிக் பூந்தொட்டியை
சுத்தமாக்கி மையத்தில் வைத்தேன்
எதிரெதிராக இரு சேர்களை இழுத்துப் போட்டேன்
ஒன்றின்மீது பூனை வந்தமர்ந்தது
சிறிது நேரம் கழிய காக்கையும்
பூனை துள்ளிக் குதித்து சிரித்தபடி
நேற்றென் காதலி மிகவும் கொஞ்சினாள்
மரியாதைக்குரியவர் தழுவி பாராட்டினார்
நண்பர்களும் வியந்து வியந்து மகிழ்வித்தார்கள்
இடைவிடாது பேசிக்கொண்டிருக்க
காக்கை இடைமறித்து
எனக்கும் இப்படியெல்லாம் வாய்க்குமா
பிணங்கிய காதலி  எனையடைவாளோ
முகமறிந்த முகமறியா நண்பர்களும் போற்றக் கூடுமோ
கேள்விகளை தொடர்ந்த காக்கை
எனை பார்த்து கண் சிமிட்டியது
பின் டேபிளில் இருந்த நீரை அருந்தி
ஆளுக்கொரு முத்தமிட்டு பிரிந்து சென்றன
எழுதி முடித்த கவிதையிலிருந்த பூனையும்
எழுதப்போகும் கவிதையிலிருக்கும் காகமும்.

No comments:

Post a Comment