Thursday, April 5, 2012

வேர்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவரின் நினைவாக


கோணம்

நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்

மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்
ஒரு கோணத்தில் பார்த்தால் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.

மேலும்

அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.

இக்கவிதையோடு சி.மணியின் இன்னும் சில கவிதைகளை வாசித்து நெடிதாய்
பேசியபடி இருந்தோம் பாபு சாகிப்கிரான் சீனிவாசன் அகச்சேரன் ராஜாவோடு
நானும். சேலத்தில் மதுக்கூடாரம் ஒன்றில் கொத்து கொத்தாக அமர்ந்து அழுகை
சிரிப்பு சண்டையென கலவையாக ஒரே ஆலமரத்தில் கூடடையும் பல பறவையின்
கீறிச்சிடலாக ஒலித்துக் கொண்டிருந்த  வார்த்தைகளின் ஓரத்தில்
அமர்ந்தபடி...

2009 ஏப்ரல் 6 காலை 8மணி வாக்கில் சாகிப்பிடமிருந்து தொலைபேசி அழைப்பு
தவறிவிட்டார் மணியென்று. தன் இல்லத்தாரின் இழப்பை தாங்கியிருந்த அவரது
குரலின் துயர் எனை உடனே புறப்படச் செய்தது. பெரியதாய் சி.மணியுடன்
எப்பழக்கமும் இல்லை. எனது திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்திருந்த
ஒன்றிரண்டு புத்தகங்களுள் அவரின் இதுவரை கவிதை தொகுப்பும் இருக்க
சாகிப்பிடம் அவரை அறிந்துகொண்டேன். சேலத்தில் இருக்க என்றாவது பார்க்க
வேண்டுமென நினைத்திருந்தேன். மரணத்தன்றுதான் வாய்த்தது சந்தர்ப்பம்.

அவரது அம்மாபேட்டை இல்லத்தில் பெரும் அமைதி கவ்வியிருக்க கட்டிலில்
கிடத்தப்பட்டிருந்தார். மேலும் மெலிவதற்கு இயலாத அவரது உடலை சிறிது நேரம்
பார்த்திருந்து சாகிப்கிரானின் கை தழுவினேன். அருகில் சாகிப்கிரானின்
துணைவியார் கலங்கிய கண்களோடு... பெரிய இலக்கிய ஆளுமையாச்சே நிறைய்ய
இலக்கியவாதிகள் இருப்பார்களென கண்கள் சுழன்றபடியிருக்க கைவிரல்களின்
எண்ணிக்கையே மிஞ்சியது. (மெலிந்த அவரது உடலே நெடுநாள் நினைவிலிருக்க
அடுத்த வந்த உயிர் எழுத்தில் சிபிச்செல்வனின் கட்டுரைக்காக
போடப்பட்டிருந்த சி.மணியின் போட்டோக்களை பார்த்து பிரமித்தேன்.
அக்காலத்திலேயே அவ்வளவு ஸ்டைலாகவும் மாடர்னாகவும் இருந்தார்.
அக்கட்டுரையும் புது எழுத்தில் வந்த சாகிப்கிரானின் கட்டுரையும் சி.மணியை
இன்னும் நெருங்கிப்பார்க்க செய்தது.)

டீக்கடைக்கும் மணியின் இல்லத்திற்குமாக நடந்து நடந்து பேசிப்பேசி அந்தியை
கொண்டுவர வேர்களின் மீது படுக்கவைத்து திரும்பி வந்து உடன் ஊர் திரும்ப
மனமின்றி மதுக்கூடாரத்தில் கவிதை வாசித்தும் நெடிதாய் பேசியும் கை பற்றிய
ஆரஞ்சு பழத்தை சாக்கடையில் தவறவிட்ட குழந்தையாக பெரும் தவிப்போடு இருந்த
சாகிப்கிரானிடம் விடைபெற்றோம்.

சி.மணியின் நினைவு நாள் இன்று...

No comments:

Post a Comment