Monday, April 2, 2012

நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்

விற்பனனோ பழுது நீக்குபவனோ அல்ல
சதாகாலமும் சடை சடையாய்
உடலெங்கும் தொங்கிக் கிடக்கும்
சாவிகளும் பூட்டுகளும்
பஸ் நிலையம் மேம்பால அடியென
தினசரி கண்களை அறுத்துப்போவான்
எனது கருணையை
பாவம் பைத்தியமெனும்
வார்த்தையுள் வைத்து கடந்திடுவேன்
ஒரு நாளும் கொடுத்ததில்லை
சோற்றுப் பொட்டலமோ
ரொட்டித் துண்டுகளோ
பெரும் மழைநாளின் அந்தியில்
எதையோ பாடிக்கொண்டிருந்தான்
ஒலி செவியடையும் தூரத்தில்
எனதுடலை வைத்தேன்
எனதிருப்பை சவமாக்கி
வேகமாய் பேசத் துவங்கினான்
துச்சனுங்க தொலைச்சிடுவானுங்க
 பூட்டி வச்சிக்கிட்டேன்
நதி குளங்களின் பெயர்கூறி
எண்ணத் துவங்கினான் சாவிகளை
 அங்குமிங்குமாய் ராஜநடையிட்டு
நானோ... நதி காப்பவன்
குளம் காப்பவன்
கடல் காப்பவனென்றான்
அன்றைக்குப் பின் பேசிக்கொண்டார்கள்
 தொலைந்துபோனது
பூட்டு பைத்தியமென
அவனற்ற இடம் வெறுமை சூழ்ந்தபோதும்
நம்பிக்கை இருக்கிறதெனக்கு
ஆற்றையோ குளத்தையோ
பூட்டிக்கொண்டிருபானென...
nantri: vallinam.com

No comments:

Post a Comment