Monday, April 23, 2012

பொய்த்த ஊற்றுக்கண்கள்



ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா? என்ற பழமொழியை நினைவூட்டி எங்கும்

செழிப்புடன் பூத்துக் குலுங்கியது ஆவாரம் பூச்செடி. பொசுக்கும் வெப்பம் ஓடும் ஆறு தற்சமயம்

நீரோட்டமாய் இருக்கிறது பருவம் தப்பிய மழையால். பள்ளி செல்லும் காலங்களில் தினசரி ஆற்றில்தான்

கூட்டாளிகளோடு குளிக்கச் செல்வேன். ஆத்தை ஒட்டி பெரிய பாறையும் பாறையை ஒட்டி பெரிய

வேப்பமரமும் இருந்தது. பாறையில் இருந்தபடியே எக்கி குச்சிகளை ஒடித்து பல் வௌக்கிக்கொண்டு

சறுக்கல் விட்டபடி குளிப்பதுண்டு. ஆற்றில் தண்ணீர் குறைச்சலாக இருக்கும் நாட்களில்

அருகிலிருக்கும் கலிகிண்டி மாமா தோட்டத்திற்கு குளிக்கப் போய்விடுவோம். மோட்டர் ரூம் மேல்

ஏறி ஒருவர் பின் ஒருவராக குதித்துக்கொண்டே இருப்போம். சோப்பு போடும் பழக்கமெல்லாம்

அப்போது கிடையாது. ஆவராம் இலையை அரைச்சு தலைக்கு தேய்ச்சுக்குவோம். தேய்க்கத் தேய்க்க

நொரை பொங்கி வரும் எங்க சந்தோசத்தைப்போல. உடம்புக்கு சீயக்காய் தேய்ச்சுக்குவோம்.

கொஞ்சநாளைக்கப்புறம் சிகப்பா கட்டியா கெடக்கும் லைப்பாய் சோப்பை உடம்புக்கு மட்டம்

போட்டுக்குவோம். முடி கொட்டிவிடும்னு தலைக்குப் போட பயம்.

கலிகிண்டிமாமா கிணத்துல குளிக்கிறப்ப சோப்புபோட்டுக்க விடமாட்டார். ஒக்காளஓலிங்களா

குடிக்கரத்தண்ணியில சோப்புக்கீப்பு போட்டிங்க உதைச்சுப்புடுவேன் உதைச்சு என்பார்.

யேய் பசும்பலுரான் நீ வந்தாத்தாண்ட கிணத்துப் பக்கம் கூச்சலும் கும்மாளமும் இருக்கு என்பார்.

இது எனது தாத்தா ஊர் அம்மா பிறந்த இடம். அப்பா பிறந்த ஊரைத்தான் சொந்த ஊர் என்கிறார்கள்.

(ஆதிக்கச் சிந்தனையின் வம்சாவளிகள்) எட்டாவது படிக்கும்வரை எனது ஊர் பெரம்பலூர் பக்கம் உள்ள

பசும்பலூர்தான். மழைபெய்தால்தான் விவசாயம். மாணாவாரி பயிர்கள்தான் அதிகம் பயிரிடமுடியும்.

அப்பா விவசாயத்தைவிட்டு வியபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். நெல், பருத்தி என ஊரில் மொத்தமாக

வாங்கி திட்டக்குடி போய் விற்றுவருவார். இரண்டு பக்கமும் திறந்தபடி பைபோல இருக்கும் ஒரு

காடத்துணியின் உள் பணத்தை வைத்து இடுப்பில் கட்டியிருப்பார். வியாபாரத்திற்கு போய் வந்த மறுநாள்

பணம் நிறைய்ய கெடக்கும் பத்து இருபது என எடுத்து வைத்துக்கொள்வேன். நொறுக்குத் தீணிக்காக.

பணம் இல்லாத நாட்களில் பருத்திக் காட்டிற்குப் போய் பருத்தியை எடுத்து டவுசர் பாக்கெட்டில்

திணித்துக்கொண்டு வந்து செட்டியார் கடையில் போட்டு வேண்டுமென்பதை வாங்கித்திண்பேன்.

அவரிடம் உதை வாங்கும் வரை இப்பழக்கம் தொடரத்தான் செய்தது. முரட்டுத்தனமானவர். லாபமோ

நட்டமோ வீம்புக்காக எதையும் செய்துவிடுபவர். போட்டிக்காக யாராவது கேட்டுவிட்டால்

நிறைய விலை வைத்து நெல்மூட்டைகளை வாங்கிவிடுவார். பின் நிறைய்ய நட்டத்தில் விற்ப்பார்.

இதனாலேயே இருந்த கொஞ்சநஞ்ச சொத்துக்கள், அம்மாவின் நகை அனைத்தும் விலைபோயின.

சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போய்விட்டார். எங்கு போனார் என்பது யாருக்கும் அப்போது

தெரியவில்லை.

அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். சித்தப்பா சென்னையில் இருந்தார். அவருக்கு கடிதம்போட்டு

கேட்டோம் அங்கும் இல்லை. பெரியப்பா துவாரகாபுரியில் இருந்தார். அவர் எங்கப்பாவைப்போல

வியாபாரம் செய்து ஓடிவிடவில்லை. பொழப்புக்காகத்தான் போனார். குடி கூத்தியாளென உல்லாச

வாழ்வில் ஓட்டாண்டியானவர். ஊரில் வருடம்தோறும் சித்திரைமாதத்தில் சிறுதொண்டர் நாடகம்

நடைபெறும். அதற்கு மறக்காமல் கட்டாயம் வந்துவிடுவார். சிறுதொண்டரின் மனைவி வேஷம்

போடுவார். அவர் சொல்லும் வீடுகளுக்கு சென்று நான்தான் அவருக்கு சேலை வாங்கிவருவேன்.

சேலையோடு நிறைய்ய நொறுக்குத் தீணியும் வரும். கொரித்துக்கொண்டு ஆர்மோனியப்பெட்டியை

ஆட்டியபடி இருப்பேன். அவருக்கும் கடிதம் போட்டோம். அங்கும் இல்லை. அத்தை ஊரிலேயே

இருக்கிறார். வேறு யாரிடம் கேட்பதென தெரியாது விட்டுவிட்டோம். ஊரிலிருக்கும் பெரிய

மனிதர்களோடு வந்து வீட்டை எனக்கு கொடுக்கவேண்டிய கடனுக்கு எழுதி கொடுத்துள்ளான்.

சீக்கிரம் வீட்டை காலிபண்ணிகொடுங்க என்றாதும் ரோசத்தில் அம்மா பாதி மொழுகிக்கொண்டிருந்த

வீட்டை அப்படியே விட்டுவிட்டு அவரின் தாயகமான நமச்சிவாயபுரம் வந்தாயிற்று. விழுப்புரம்

மாவட்டத்தில் சின்னசேலம் பக்கத்தில் உள்ளது. நானோ பசும்பலூரில்தானிருப்பேனென அடம்பிடித்து

தாத்தா வீட்டிலேயே தங்கிப் படித்தேன்.

என் தாத்தா ராமாயணம், மகாபாரத பாடல்களை தினமும் ராத்திரி சாப்பிட்டுவிட்டு தூங்கப்போ-

கும்போது கட்டிலில் படுத்தபடி ராகமாக பாடிக்கொண்டேயிருப்பார். இந்தக் கிழவனுக்கு

வேறவேலையில்லையென முனுமுனத்தபடி பக்கத்துவீட்டுக்கு போயிடுவாங்க பாட்டி. எனக்கு

அந்தப் பாடல்களில் எப்பொழுதுமே ஈர்ப்பு உண்டு. கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டே

கேட்டுக்கொண்டிருப்பேன். பாடி முடித்ததும் தூங்கினேனா? அல்லது பாதியிலேயே தூங்கிவிட்டேனா

என்ற குழப்பத்தோடே தினமும் எழுந்திரிப்பேன். பாட்டி சமைச்சி வச்சிட்டு வேலைக்குப்

போய்விடுவாங்க. நானேதான் போட்டு சாப்பிட்டுவிட்டு எல்லாத்தையும் கழுவி வச்சிட்டு

பள்ளிக்கூடத்துக்கு போய்விடுவேன். சனி, ஞாயிறுகளில் நானும் கலைவெட்ட கொத்தமல்லி புடுங்க,

கல்லைபுடுங்கவென ஏதாவது வேலைக்கு பாட்டிக்கூடவே போய்விடுவேன். ஊர்கதைப்பேசியும்,

ஒருத்தருக்கொருத்தர் கிண்டலடித்துக்கொண்டும், போட்டி போட்டுக்கொண்டும் நேரம்

போவதே தெரியாது. எப்ப லீவ் கிடைக்குமென ஏங்கவைத்துவிடுவார்கள். மாசம் ஐம்பதோ,

நூறோ சம்பாதிப்பதுண்டு. காலாண்டு, அரையாண்டு முழுஆண்டு லீவில்தான் தாத்தா

ஊருக்குப்போவதுண்டு அப்போதுதான் இந்த கூத்தெல்லாம் நடக்கும்.

கலிகிண்டி மாமாவின் உண்மையான பெயர் எங்களுக்குத் தெரியாது. கிராமங்களில் சிலரின்

பட்டப்பெயர்தான் எப்பொழுதும் நீடித்திருக்கும். ஒருமுறை ஊரில் திருவிழாவிற்கான ஏற்பாட்டு

கூட்டம் நடந்தது. இவரைக் கூப்பிடச் சென்ற ஆள் வந்து கலிகிண்டி முடிச்சதும் வரேன்னார் எனச்

சொல்ல... இவர் வந்தபோது வாய்யா கலிகிண்டி என ஊர் பெரியவர்கள் அழைக்க எல்லோரும்

கோவென சிரித்துவிட அன்றுமுதல் அவரின் பெயர் மாற்றம் நிகழ்ந்தது. கொஞ்சநாள் கூப்பிட்டவர்களை

திட்டிப்பார்த்தார் யாரும் மாறுவதாகத் தெரியவில்லை. வேறுவழி அவரும் அப்பெயரை ஏற்றுக்கொள்ள

ஆரம்பித்துவிட்டார்.

பள்ளிக்கூடம் போற நாள்களில் அவர் கிணத்துக்கு போகமாட்டோம். சோப்பு போட்டு குளிக்க

முடியாதென்பதற்காக. ஆத்துலத்தான் குளியல். ஆத்தை ஒட்டி இருக்கும் பெரிய வேப்பமரத்தின் பின்புறம்

நின்று கொண்டால் யார் கண்ணுக்கும் தெரியமாட்டோம். அங்குதான் உடைமாற்றிக்கொள்வோம்.

அந்த இடம் ஊரில் இருக்கும் காதலர்களுக்கெல்லாம் அடைக்கலம் தரும். கள்ளக்காதலுக்கும் கூட.

யார் யார் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பாறையின் அடிப்பாகத்திலிருந்து ஒட்டு

கேட்போம். எங்களுக்கு அதுதான் பொழுதுபோக்கு. காதல் என்பது கல்யாணமாகாதவர்களுக்கு

மட்டும் அல்ல. கல்யாணம் ஆனவர்களுக்கும் வரும் என்பதை அங்குதான் தெரிந்துகொண்டேன். பின்

கூட்டாளிகளுடன் அவர்கள் பேசியபடி நடித்து கூம்மாளமடிப்போம். தனராசு மாமா பொண்டாட்டியும்

மேலத்தெரு முத்துமாமாவும் அடிக்கடி சந்திப்பாங்க. இது எப்படியோ தனராசு மாமாவிற்கு தெரிந்துவிட

வேப்பமரத்து வேர்ல ஆசிட்ட ஊத்தி அந்த மரத்தையே பட்டுப்போக செய்துவிட்டார். எப்பொழுதும்

குளிர்ச்சியாக இருக்கும் அந்தப் பாறை பொசுங்க ஆரம்பித்துவிட்டது. தங்கராசு மாமாவின்

மனசைப்போல. காலப்போக்கில் நீர்வரத்து குறைந்து ஆறு குறுகிப்போனது. ஆற்றில் தண்ணீரைப்

பார்ப்பதே அபூர்வமாயிற்று. எத்தனையோ வருடங்களுக்கு பிறகு பாசிபடர்ந்த நீரோட்டத்தை

காணமுடிந்தது. ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் உடனடியாகபோய் ஆற்றைத்தான் பார்ப்பேன்

தண்ணீர் வருகிறதா என. ஊரில் எனக்கு ஏற்படும் பெரிய பிரச்சினை கால் அலம்பிக்கொள்வதுதான்.

போன மாதத்தில் நிறைய நாட்கள் ஊரிலேயே தங்கவேண்டியதாகிவிட்டது. அப்பாவின் உடல்

நலக்கோளாறு. பின் அவரது திடீர் மரணம், காரியம், முப்பது கும்பிடுதல், இறப்புச் சான்றிதழ்

வாங்குவதென. (பிறப்பு, இறப்பு பதிவு அவசியம் என சொல்லும் அரசாங்கம். சான்றிதழ் வாங்க

பணமும் அவசியம் என சொல்ல மறந்துவிடுகிறது.) அடிக்கடி ஊருக்கு செல்லவேண்டியதாகிவிட்டது.

ஆற்றின் நீர் வரவால் நிம்மதியாய் போய் வந்துவிட்டேன். அப்பாவின் சாவில் எனக்கேயான சுபாவத்திற்கு

நேர்மாறான நிகழ்வு நடந்தது ஆச்சரியமாக இருந்தது. மரணத்தை உள்வாங்கி அமைதியாய் கிடக்கும்

அப்பாவை பார்த்திருக்க அம்மா தங்கை, சித்தி, அத்தையென உறவினர்களெல்லாம் எனை கட்டிப்பிடித்து

அழ... எனக்கு அழுகையே வரவில்லை. சொல்லப்போனால் கண்கூட கலங்கவில்லை. ரொம்ப

பக்குவப்பட்டுப்போய்விட்டோமா என யோசித்தப்படி அமைதியாகவே இருந்தேன்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முன்மாதிரி என்பார்கள். எனக்கு அப்படி ஏதும் அனுபவம்

ஏற்பட்டதில்லை. அப்படியான எந்த விஷேச குணமும் அப்பாவிடம் இருந்ததில்லை. முரட்டுத்தனமானவர்.

அவர் நினைத்ததை மட்டுமே செய்வார். யார் சொன்னாலும் கேட்க மாட்டார். இவன் பெரிய மயிராண்டி

எனக்கு புத்தி சொல்ல வந்துட்டான் என்பார். ஒருமுறை என் சித்தப்பா வீட்டின் சுவற்றில் ‘நேருவின்

மகளே வருக, நிலையான ஆட்சித்தருக’ என கொட்டையாக எழுதி கருணாநிதி, இந்திராகாந்தி படம்

போட்டு கை சின்னத்திற்கும், சூரியன் சின்னத்திற்கும் வாக்கு கேட்டு எழுதிவைத்தார். அன்று

இரவு ஊரில் இருந்த வந்த அப்பா எவன்டா எழுதியதென பெரிய சண்டையிட்டு சொந்தக்காரங்க

எல்லாம் சொல்லியும் கேட்காமல் தண்ணியை ஊற்றிக் கழுவி சுண்ணாம்பு அடித்து விடிய விடிய

எம்ஜிஆர் படமும் இரட்டைஇலை சின்னத்தையும் வரைய வைக்க வீதியே திரண்டு வேடிக்கை

பார்த்தது. எல்லா படத்தையும் எப்படி இவர் அழகா போடுறார் என படம்போட்டவரையே வேடிக்கை

பார்த்துக்கொண்டிருந்தேன். வீம்புக்காரர். அம்மா எதுவும் எதுத்து பேச முடியாது. ஒரே அடி

உதைதான். ஒருமுறை அப்படித்தான் எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துகொடுக்கும்போது சரியாக

ஓட்டவில்லையென எங்கள் ஊருக்கு ரோடுபோட வந்த ரோடு ரோலரில் சைக்கிளோடு தள்ளிவிட்டார்

இரண்டு கைகளிலும் நல்ல காயம். அவருக்கு பயந்தே சீக்கிரம் சைக்கிள் ஓட்ட கத்துக்கொண்டேன்.

ஒருமுறை வியாபாரத்திற்கு சென்றபோது லட்சக்கணக்கில் பணம் கலவாடப்பட்டுவிட்டது. நெல்

வாங்கியவர்களுக்கு கடன்கொடுக்க இருந்த நிலத்தையெல்லாம் விற்றுவிட்டார். வீடையும் அடகு

வைத்துவிட்டு எங்கோ ஓடிவிட்டார். பின் அம்மா அவர் பிறந்தகமே வந்துவிட்டார். நான் பாட்டிவிட்டில்

கொஞ்சநாள் தங்கி படித்தேன். பின் ஊருக்கு புதிதாக விடுதி வந்தது. உள்ளூர் பசங்களே விடுதியில்

தங்கி படிக்க நேர்ந்தது.

விடுப்பில் ஊருக்கு போகும்போதெல்லாம் அம்மா என் தாலி அர்த்தத்தோடுதான் கிடக்கிறதா? மனுசன்

இருக்கானா செத்தானா தெரியலையேவென அடிக்கடி அழுவார்கள். ஆறு ஆண்டுக்கு பிறகு வந்தார்.

கேரளத்தில் இருந்ததாக. பின் கொஞ்ச நாள் வேலைக்கு போக வர இருப்பார். பின் அம்மாவோடு

சண்டைபோட்டு ஓடிவிடுவார். அப்பா மகன் என்ற உறவோடு பெரிதாய் ஏதும் வாழ்ந்திடவில்லை.

இப்படி உதிரியாய் சில நினைவுகள் வந்து வந்து போயின.

புத்தகம் வாசிக்கையில், திரைப்படம் பார்க்கையில் நெகிழ்வூட்டும் இடங்களில் பொசுக் பொசுக்கென

கண்ணீர் வழிந்தோடும். அப்படித்தான் ஒருநாள் விஜய் தொலைக்காட்சியில் இப்படிக்கு ரோஸ் என்ற

நிகழ்வில் அரவாணிகள் (திருநங்கைகள்) நேர்காணல் நிகழ்ந்தது. பச்சையற்று வறண்ட மனதோடு

வக்கிரம்மிக்க சமூகம் குறித்த அவர்களின் அனுபவங்களை கேட்க கேட்க எவ்வளவோ முயன்றும்

கட்டுப்படுத்த முடியாமல் வழியும் நீரால் உடல் சில்லிட அவசரமாக பாத்ரூம் சென்று நீர் அடங்க பின்

உறங்கச் சென்றேன்.ஒருமுறை சேலத்திலிருந்து ஓசூர் வருகையில் எனதருகில் ஒரு திருநங்கை அமர்ந்து

வர பேருந்தில் ஏறி இறங்கியவர்கள், பயணித்தவர்கள் கண்டக்டர் உட்பட பார்த்த பார்வை இருக்கிறதோ...

உடல் கூசுகிறது. எப்படித்தான் இவர்களால் வெளிப்படையாக ஏளனப்படுத்த முடிகிறதோ

தெரியவில்லை. தனக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் உலகமே தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டும்

என எதிர்பார்ப்பார்கள். தான் நன்றாக வாழ்ந்தால் யார் குறித்தும் எந்த அவதூறுகளையும் பரப்ப தயங்க

மாட்டார்கள். அவர்களும் சக மனிதர்கள்தானே என்ற குறைந்தபட்ச நேயம் கூட இல்லாதிருக்கிறார்கள்.

முன்பின் அறிமுகமற்ற எந்த ரத்தபந்தமும் அல்லாத அவர்களின் உரையாடலைக்கூட தாங்கமுடியாத

என்னால் என் அப்பாவின் சாவை அமைதியாக ஏற்றுக்கொண்டது ஆச்சரியம்தான். வாழ்வில்

ஏற்படும் தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளுக்காக வருத்தப்படுதலோ, சந்தோசப்படுதலோ எந்த

மாற்றத்தையும் உண்டுபண்ணப்போவதில்லை. சாவதற்கு முதல்நாள் ஊர் சென்று அவரை சந்தித்து அவர்

ஆசைப்பட்டதையெல்லாம் செய்து அவர் கேட்ட பணத்தை எந்த மறுப்பின்றி குறைக்காது கொடுத்து

அவரை சந்தோசப்பட வைத்துவிட்டு ஊர் திரும்பியதும்கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

இந்த முறை அப்பாவின் முப்பது படைக்கச் சென்றபோது கலிகிண்டி மாமாவின் தோட்டத்திற்கு

குளிக்கச் சென்றேன். எப்பொழுதும் சிரித்துப்பேசி உற்சாகமாக இருப்பவர் அன்று மிகுந்த அயர்வோடு

காணப்பட்டார். வா மாப்ள என சுரத்தே இல்லாது கூப்பிட்டு ஒங்கப்பனுக்கு நல்ல சாவுடா,

மவராசன் போய் சேர்ந்துட்டான். கெடந்துகிட்டு ஆசுபத்திரி ஆசுபத்திரியா அல்லாடிக்கிட்டு

அவுத்துக்கொடுத்துகிட்டு இல்லாமா நிம்மதியா போய் சேர்ந்துட்டான். நாமதான் கெடந்துகிட்டு

அல்லாட வேண்டியிருக்கு. என்ன குளிக்கிறியா, மோட்டர் போட்டுக்க என்றார். இல்ல கிணத்துலேயே

குளித்துக்கொள்கிறேனே என கிணற்றை எட்டிப்பார்க்க பக்கென்றிருந்தது, கொட்டும் அருவி,

தொங்கும் கண்ணீராக வழிவது போன்று மூலையில் கொஞ்சமாக கிடந்தது. ஆற்றில் தண்ணீர்

குறைந்து போய்விட கிணற்றின் ஊற்றுக்கண்கள் பொய்த்துப்போய் கிடந்தது. கண்களில் நீர்

திரண்டிருக்க தொட்டியிலிருந்து டப்பாதண்ணியை மொண்டுஊற்றிக்கொண்டு வந்தேன்.

காலமாற்றத்தின் பயம் கவ்வ கண்ணீரோடு நகர்ந்தேன்.

என் அப்பாவின் சாவிற்கு நான் கொல்லி வைக்க அனுமதிக்கப்படவில்லை. என் மனைவி கர்ப்பிணியாக

இருந்ததால். இதில் எனக்கு சின்ன சந்தோசம். அதனால்தான் என் தங்கை சுடுகாடுவரை சென்று

கொல்லி வைத்து வந்தது. உடன் பணிபுரிபவர்களிடம் இவ்விசயம் சொன்னால் எல்லோரும் ஆச்சரியமாக

பொட்டப்புள்ளய எப்படி கொல்லி வைக்க விட்டார்கள். என விழி உயர்த்தினார்கள். பெண்கள்

அதிகமாக படிக்க வந்தபோது... வேலைக்கு போனபோது... இரு சக்கர நான்கு சக்கர வானூர்திக்கு

ஓட்டுனரானபோது, எழுத வந்தபோது... ஆணுக்கு நிகரான எல்லா வேலைகளிலும் அவர்கள்

வந்தபோதெல்லாம் கேலியாய் விழிஉயர்த்திக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் குறித்து என்ன

கவலைப்படவேண்டியிருக்கிறது. நாமும் அவர்களோடு வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறதே

என்பதைத் தவிர. காலம் வெகுமாற்றங்களோடு கடக்க சிந்தனையின் பிடி மாற்றிக்கொள்ளாதிருப்பதை

நினைத்து சிரித்து நகர்ந்தேன்.

-----------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment