Sunday, April 29, 2012

மனிதர்கள் புத்தகங்கள் ஞாபகங்கள்

கடலின் கரையிலிருந்து பார்க்க தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கென வானத்தை எளிதில் நெருங்கிவிட முடியுமா என்ன? அப்படித்தான் சில மனிதர்களையும் சந்திக்க நேரிடுவது தவிர்க்க இயலாது. நெருங்க நெருங்க விலகியபடியே இருப்பார்கள். அப்படியானவர்கள் குறித்து அக்கறைகொள்ள தேவையில்லைதான். ஆனால் உடனிருந்த நாட்களை உயிர்ப்பாக்கி சொல்லிமாளாத அளவிற்கு அர்த்தங்களோடு வாழ்ந்து முடித்தவர்களோடும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களையும் நினைத்து நினைத்து அணைத்துக்கொள்வது இன்பம் செறிந்தது. உதயசங்கரின் உலராத ஈர முத்தமாய் பக்கங்கள்தோறும் நனைந்து கிடக்கிறது ‘முன்னொரு காலத்திலே...’

கவிதைதான். ஒரு மனிதரைப்பற்றி நினைக்க அவரின் உடலெங்கும் இறக்கைகளாக அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்கள் முளைத்து இசைத்துக்கொண்டிருப்பது. ஒரு மனிதரிடம் எதைப் பார்க்க வேண்டும் எதை கற்றுக்கொள்ள வேண்டும் எதை ஒதுக்க வேண்டுமென எவ்வித அறிவுறுத்தலுமின்றி தனக்கான அசலான மொழியில் காட்சியாக்கியுள்ளார். வாசிப்பற்ற பெரும் சனத்திரள் நிறைந்த சமூகத்தில் ஒரே ஊரில் இத்தனை இலக்கியவாதிகளாவென வியப்பில் கிடத்தி இலக்கிய மணத்தோடு கோவில்பட்டியின் புரோட்டா சால்னா மணமும் புத்தகமெங்கும் வீசிக்கொண்டே இருக்கிறது.


அவரின் பெருத்த நட்புவட்டத்தில் ஒரு சிலரோடு நானும் உட்கார்ந்துபேசிய ஒரு சில நாட்கள் குறித்த அனுபவங்களை அசைபோடச்செய்தது. ஒருமுறை நம்மாழ்வார் ஏற்பாடுசெய்த சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு ஒன்றிற்காக கற்பகசோலை செல்கையில் புதுவிசையை கந்தர்வனிடம் கொடுக்க புதுக்கோட்டையில் இறங்கினேன். அதிகாலை நான்கு மணி. அவரை எதற்கு அந்த நேரத்தில் தொந்தரவு செய்யவேண்டுமென நினைத்து இரண்டுமணி நேரம் பஸ் நிலையத்திலேயே சுற்றி கொண்டிருந்துவிட்டு சென்றேன். வாப்பா உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேனென ஒரு குழந்தையை கையில் வாங்கும் லாவகத்தோடு புதுவிசையை கையில் அள்ளி திருப்பி திருப்பி கையால் தடவி தடவி பார்த்தவாறே தொலைபேசியில் யாரையோ தொடர்புகொண்டு பிரமாதமா வந்துருக்குடா ரொம்ப சந்தோசமா இருக்குடாவென பேசிக்கொண்டிருக்கையில் அவரது துணைவியார் தேநீர் கொடுத்து 4மணியிலிருந்து குட்டிப்போட்ட பூனையாட்டாம் கேட்டிற்கும் வீட்டிற்குமாய் அலைந்துகொண்டே இருந்தாரு எனச்சொல்ல நெகிழ்வில் நீர்கோத்த கண்களோடு அவரோடு உரையாடி வந்தது நேற்று நிகழ்ந்ததுபோல இருக்கிறது...


சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதேவென ஆட்டோ வாசகங்களின் பிரதியாய் ஆண் எனும் தடித்தனங்களோடு அலைந்துகொண்டிருந்த நாட்களை சுட்டெரிக்கச்செய்து பெண் மீதான புரிதலை என்னுள் உயிர்ப்பாக்கியவர் அண்ணன் தமிழ்செல்வன். இன்றும் எப்பொழுதாவது வீட்டின் ஒரு ஓரத்தில் கையில் பிரம்போடு அமர்ந்துகொண்டே புத்தகத்தை விரித்துவைத்துக்கொண்டு பாவ்லா பண்ணாத போய் வெங்காயம் பூண்டு உரித்துக்கொடு, டீ போட்டுக்கொடு சமைக்க கத்துக்கோ, பாத்திரம் துலக்குவென விரட்டுவதுபோலவே இருக்கும். அப்படியான நாட்களில் பாத்திரத்தையாவது துலக்கிவிடுவதுண்டு. சக மனுசியாய் சக உயிராய் மேலும் மேலும் பெண்கள் மீதான காதலை வளர்க்க செய்துகொண்டிருக்கிறார்.


இன்றும் கோணங்கியை பார்க்க என்னுள் ஒரு குழந்தை பிறந்துவிடும். எல்லாவற்றையும் புதிது புதிதாய் பார்த்து மலங்க மலங்க விழித்து அதிசயித்து அதிசயித்து மேலும் கீழுமாய் ஓடிக்கொண்டே இருக்கும் அக்குழந்தை.


உத்திப்பிரித்து நொண்டி விளையாடிய பால்யத்தை கடந்த வயதிலும் நினைவுகொள்ள பொக்கிசங்கள் கொட்டிக்கிடக்கென காட்சியாக்கியுள்ளார்.


உடன் புகைத்து தேநீர் அருந்தி தினசரி எதையாவது விவாதித்துக்கொண்டிருந்த தோழன் நோயின் பிடியில் சிக்கி மீளாது போன துயர்கூறும் இடங்களை கடக்கையில் கலங்கிய இமைகளை கட்டுப்படுத்த முடியாதுபோகிறது.


தனக்குப் பிடித்த கதை, தனக்குப்பிடித்த புத்தகம் தனக்குப்பிடித்த வைத்தியம் என உதயசங்கர் நம்பிய பிடித்த விசயங்களை திரும்பத் திரும்ப தன் அனுபவங்களோடு பயணப்படுத்திக்கொண்டே இருக்கிறார். கையெழுத்து பிரதியில் மின்னிடும் மாரீஸ், தட்டி ஓவியம், புரோட்டா சால்னா, தேநீர், ஹோமியோபதி வைத்திய முறை, திருப்பிக் கொடுக்காது வாங்கப்பட்டுக்கொண்டிருக்கும் கடன் என அவரின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது...


ஆனால் இவ்வளவு பெரிய வட்டத்தில் ஒருவரோடும் மது அருந்திய அனுபவ பகிர்வு இல்லாதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒழுக்கம் சார்ந்த விசயம் என்பதால் பதிவிட தயங்கி விட்டுவிட்டாரா எனத் தெரியவில்லை. அப்படியான அனுபவங்களும் இருந்திருப்பின் மகுடம் சேர்த்திருக்கும்.


பகைமையான கசந்த அனுபவங்கள் இல்லாதிருப்பது மகிழ்வைத் தருகிறது. அப்படியே இருந்தாலும் எதற்குச் சொல்ல வேண்டும். யாரோடுதான் முழுமையாக ஒத்துப்போகிறோம். பிடித்த விசயங்களோடு மட்டும்தான் வாழ நினைத்தால் சாத்தியமா? வேலை பார்க்கும் நிறுவனத்தின் கொள்கையோடு பிடித்துப்போயா வேலைக்குப்போகிறோம். நமக்கு பிடிக்காதவர்கள் ஆட்சிசெய்கிறார்கள் என்பதற்காக வேறு மாநிலமோ நாடோ போய்விடுகிறோமா.. வருமானத்திற்கும் வசதிக்கும் பார்க்காத கொள்கைகளை சகமனிதர்களிடம் மட்டும் என் துழாவி துழாவி கண்டடைந்து கசந்துபோக வேண்டும். அவரவருக்கான பலமும் பலகீனங்களோடும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்க ஏன் தவறிடுகிறோம். நம்மிலும் நம்மோடு இருப்பவர்களிடமும் ரசிக்கத்தக்க எத்தனையோ விசயங்களை கவனிக்கத்தவறி வெறுமனே கடந்துபோய்கொண்டிருப்பதை சுட்டிக்கொண்டே இருக்கிறார் உதயசங்கர்.


தமிழக வரைபடத்தில் கோவில்பட்டி எனும் ஊரை வேறொன்றாய் பார்க்க செய்துள்ள புத்தகம். எஸ்.டி கூரியர் விளம்பரத்தில் வந்த தபால் போக முடியாத ஊரல்ல... உலக இலக்கியமும் உள்ளூர் கதைகளும் பேசித்திரிந்த கதையாளர்கள் போராளிகள் வாசங்களை ஊரோடு பொத்திக் காத்திருக்கும் மண்ணை தொட்டு திரும்பிய நாட்களை என்று நினைத்துப்பார்த்தாலும் கொஞ்சகாலம் வாழ்ந்துகொள்ளலாம். நமக்கானவர்களை நினைத்துப் பார்க்கவும். நம்மிடமும் சொல்லிக்கொள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கையூட்டவும் செய்கிறது. உதயசங்கரின் முன்னொரு காலத்தி


nantri:puththagam pesuthu

No comments:

Post a Comment