Tuesday, October 10, 2023

நன்றி: கல்குதிரை

 மனிதகுமாரர்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள்...

-ந.பெரியசாமி



கவிதைகளில் நாம் பயன்படுத்தும் சொற்கள் அர்த்தமிக்கவையாக இருக்கவேண்டும். நம்மால் வாழ முடியாத வாழ்வை கவிதைகள் காட்சிபடுத்திவிடுவதில்லை. அது நம்மால் வாழ ஏதுவாக உள்ளதையே முன்னெடுக்கும். அதற்கான மனதை நாம்தான் தகவமைக்க வேண்டும். அதற்கான இழப்புகள் குறித்து கவலைகொள்ளாதிருக்க சாத்தியப்படும். அப்படியான சாத்தியப்படும் மகத்தான வாழ்வை காட்சிபடுத்துகின்றன ஸ்ரீநேசன் கவிதைகள். இவரின் சொற்கள் விழிபிதுங்கச் செய்யாது நம்முடன் ஒருவித இணக்கத்தை உருவாக்கக் கூடியவை.


' தப்பு விதை' மற்றும் ' கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்'  தொகுப்பிலிருக்கும் கவிதைகளில் வெளிப்படும் சமூகப் பார்வை குறித்தே  இக் கட்டுரை. நிலத்திற்கும் மனிதனுக்குமான பிணைப்பே சமூகம் எனும் என் புரிதலின் அடிப்படையில் என் வாசிப்பை தொடங்கினேன்.


எதன் மீதும் எத்தகைய படபடப்பும், அவசரமும் இல்லாது ஆழ்கடலின் அமைதியில் வெகு நிதானமாகவே சொற்களை பிரயோகப்படுத்துகிறார். இத்தகைய நிதானத்தை தந்திருக்கும் அனுபவ முதிர்ச்சி மெச்சத்தக்கதாகவே உள்ளது.


ஏதேனுமொரு பயணத்தில் எதையாவது பார்க்க, எங்கேயேனும் நின்றிருக்க நம்முள் ஒருவித அமைதி உருக்கொள்ளும். அத்தகைய அமைதியை,  பொதுபுத்தியில் சொல்வதென்றால் பாசிட்டிவ் எனர்ஜி என்போம். 

.....

பற்கள் உறுதியுறுக

பார்வை கூர்மையடைக

புதிதாக மனம் துலங்குக

அதில் அன்பும் கருணையும் மலர்க

உணர்ச்சியில் கலந்தூறிக் கற்பனை கனலுக

சொற்களுக்கு மந்திரப்பித்தேறுக

இனிது இனிது ஒவ்வொரு பிறப்பும்

குடும்பமும் ஊரும் உறவாய்க் குழுமும்

ஒவ்வொரு தேசமும் உடலாம் உணர்க

...........

இப்படியாக இதற்கு முன்னும் பின்னுமாக நம்பிக்கையூட்டும் வரிகளைக் கொண்ட'மெய்ந்நலக் காப்பு' கவிதையை வாசிக்க உருக்கொள்ளும் எனர்ஜி ஒவ்வொருவரும் உணரத்தக்கதாக உள்ளது.


நம்மவர்களிடையே இருக்கும் சில பழக்கங்கள் குறித்து யோசித்தால் அது அறிவுக்கு புறம்பானதாகவே இருக்கும். ஆனால் சில பழக்கங்களை ஆராயாமல் கடைபிடிப்பது இயல்பாகிவிடும். அது பிடித்தமானதாக இருப்பதால், அல்லது தேவையானதாக இருப்பதால் அது குறித்த ஆராய்ச்சிக்கு போகமாட்டார்கள் 'பக்தர்' கவிதையில் இருக்கும் எள்ளல் ரசிக்கத்தக்கதாக உள்ளது.


மனித சமூகம் தனக்கான வேடிக்கை பொருளாக இயற்கை வாழ் உயிரினங்களை கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவைகளுக்கு நாம் வேடிக்கை பொருளாக இருப்போம் என்பதை நினைவூட்டுகிறது 'வெளியே வீடு' கவிதை.


பால்யத்தில் ஊரில் பால்காரப்பாட்டியை மிகவும் பிடிக்கும். கறந்த பாலோடு நீரை கலக்காது விற்பது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியம் உண்டு. அது குறித்து ஒரு நாள் கேட்டபோது, வாங்கிப்போற வீடுகளில் குழந்தைகளுக்கும்  கொடுப்பாங்க, குழந்தைகளை ஏமாத்தக் கூடாதுல்ல, நல்ல பால் கிடைக்குமென நம்பிதானே வருகிறார்கள், அவர்களை எப்படி ஏமாற்ற முடியுமென்றது நினைவில் தோன்றியது 'தப்பு விதை' கவிதையில் வரும் அம்மாவை கண்டதும்.


தப்பு விதை

*

தையில் தானாய் விளைந்த பூசணியை

வீடு வீடாகக் கொடுத்து மாளவில்லை அம்மாவுக்கு

முருங்கையோ வாழையோ ரெண்டு கேட்டு வருபவர்களுக்கு

நான்காகவே கொடுப்பார்கள்

சாபம் பெற்றதுபோல் என் தோட்டம் சும்மா கிடக்கிறது

கேட்பவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி

தர வேண்டும் என்ற ஆசை மட்டும் அளவில்லை

இங்கிருந்து ஊற்றெடுக்கவில்லையே ஒரு வரியும்.


இக் கவிதையில் வரும் அம்மாவை நம் வீட்டில், தெருவில், ஊரில் பார்த்ததுண்டு, ஆனால் கவிதைக்கான கருப்பொருளாக மாற்றம் கொள்ள செய்யாமல் விட்டது குறித்து குற்ற உணர்வையும் கவிதை நம்முள் ஏற்படுத்தவே செய்கிறது. இரண்டு தொகுப்புகளிலும்  மனிதர்களுள் இருக்கும் மகத்தான பண்புகளை தன் கவிதைகளில் காட்சிபடுத்தியிருக்கும் ஸ்ரீநேசனை மனம் அருகமர்த்திக் கொள்கிறது.


கனிவும் கருணையும் நிறைந்தது மட்டுமல்ல சமூகம், நாவில் நச்சோடு இருப்பதும் உண்டு. மணமான தம்பதியருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போனால் அவர்கள் குறித்து பேசப்படும் சாடைப்பேச்சுகள் நீலம் பரிக்கச்செய்யும் தன்மை கொண்டது. இது ஊர்தோறும் நிகழும் சம்பவம்தான். இது 'விரிச்சி' கவிதையில் துணி துவைக்கும் செயல்பாட்டைக் கொண்டு " குழந்தையின் ஆடையைத் துவைக்க/ கண் திறக்காத காலத்தை சபித்துக்கொண்டு"  என பெண்ணின் உணர்ச்சிகளை நம்முள் வடுவாக்கி நுட்பமாக வெளிப்படுத்தி இருப்பார்.


"அமானுஷ்ய வேளை"  எனும் மற்றொரு கவிதையில் குழந்தையற்ற தம்பதியரின் வீட்டில் கண்ட காட்சியை  காட்சிபடுத்தியிருப்பார்.


புழுக்கமான முன் இரவுக்குப் பின்

நள்ளிரவில்

கனத்த மழையொன்று பெய்கிறது

நனைந்தசையும் எல்லாவற்றின் மீதும்

மின்னல் ஒன்று பளீரிட்டு

சில கண நேரம் உறைகிறது

அவ்வமானுஷ்ய வேளை

நீண்ட நாளாய் குழந்தையின்றித்

துக்கித்துக் கிடக்கும்

தம்பதியரின் எதிர்வீட்டுச் ஜன்னல்

அசாதரமான வேகத்தில்

படீரென்று திறக்கிறது

உள்ளே கொடியில்

குழந்தை ஒன்றின் நீர்ச் சொட்டும்

நனைந்த ஆடை.


சட்டென நம்முள்ளும் மின்னல் பாய்ச்சிடுகிறது கவிதை. மனங்களில் நிகழ்த்தப்படும் உள்வெளிப் பயணம் அவ்வளவு எளிதல்ல, அப்படியானதொரு வாழ்வின் தரிசிப்புகளை நமக்கானதாக மாற்றம் கொள்ளச் செய்யும் தன்மை ஸ்ரீநேசன் கவிதைகளுக்கு உண்டு. இடி, மின்னல், மழை எக்காலத்தில் வாசித்தாலும் அக்கணம் நிகழ்ந்துவிடும் தன்மை இக்கவிதைக்கு உண்டு. 


உணர்வுகளை கவனத்தில் கொள்ளாது எடுத்தோம் கவிழ்த்தோமென வார்த்தைகளால் சுடும் கீழானவர்கள் குறித்து "ஒரு" கவிதையில் காணலாம். ரயிலில் பூ விற்கும் பெண்ணை அதிகாரியொருவன் திட்ட அவளை வெளியே வீச முடியாத கோபத்தை பூக்கூடையில் கட்ட மல்லிகைச் சரம் தாறுமாறாக தரையில் விழுவதை காட்சிபடுத்தி, பயணிகளுக்கு கிடைத்த ரசமான சம்பவம் எனக் கூறி

...................

எனக்கு ஒரே ஒரு கேள்வி

மதிப்பிற்குரிய அதிகாரியே உம்மிடமில்லை

வேடிக்கை ரசித்த பயணிகளே உங்களிடமுமில்லை

இங்கு ரயிலில் உன் அம்மா அவமானப்படுவதை

அறிகிறாயா நீ மகனே? 

என முடித்திருப்பதை வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கீழ்மை அவர்களோடு இருந்துபோகட்டும். வளரும் தலைமுறைகளான நீங்களாவது கீழ்மையற்று அவமானப்படுத்தாத சமுகத்தை உருவாக்குங்கள், அல்லது அவர்களின் வலிகளை புரிந்துகொள்ளுங்கள் என்பதாகப்படுகிறது.



............

என்னோடு சுற்றியலைந்து கொண்டிருந்த சகச் சிறுமியிடம்

நான் அன்பென்றறியாத அன்பை வெளிப்படுத்தியிருந்தேன்

அன்பு வேறு ஆசை வேறு போலிருக்கிறது

பொருளறிந்த அச்சமோ அவள் அதை மறுதலித்திருந்தாள்

இத்தனைக்கும் ரகசியத்தில்

என்னுடையதை அவளுக்குக் காட்டவோ

அவளுடையதை நான் பார்க்க

விருப்பமோகூட முனைந்ததில்லை

அதற்குப் பிறகும் பலகாலம் நிலைத்திருந்தது 

எப்போதோ அந்த மரம் அங்கிருந்து காணாமல் போய்

இப்போது தீவிரமாய் இங்கு வந்து நிலைத்திருக்கிறது

அட... நினைவடுக்கில் அவள் மறுதலித்ததுதான்

எத்தனை பச்சை

ஆனாலும் அதன் உள்ளடுக்கில் அதுதான் எத்தனை சிவப்பு.


என முடிவுறும் 'கொய்த மரத்து கொய்யாக் கனி' எனும் கவிதை நம்முள் உருவாக்கும் கால மீட்பு மலர்ந்த ரோஜா தோட்டம். நம்முள் பெரும் மீட்பராக இருப்பது பால்யகாலமே. செத்துக்கிடக்கும் அலைபேசியின் நாவில் சிறு சொட்டு மின்சாரத்தை வைக்க ஒளிரும் தன்மை கொண்டது. விரைவில் மூப்பெய்து பழுத்து சருகுகளாகி விடாது பச்சையம் துளிர்க்குச் செய்யும் பால்யத்தின் நினைவு. இக் கவிதை உடன் ஆடுமேய்த்தவளிடம் அடிக்கனியை பார்க்க கெஞ்சிய ஆசை அடுத்த வாரம் எனும் சொல்லுக்குள் நாண்டுகொண்டதை நினைவுபடுத்தியது.


நம் சமூகத்தின் அடையாளமாக இருக்கும் விவசாயத்தின் நிலை பெருமிதம் கொள்ளத்தக்கதாக இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது நவீன தொழில் நுட்பம். வீட்டுமனை நல்வரவு பதாகைகள் எங்கும் நம்மை வரவேற்கின்றன. உலகிற்கு உணவை விளைவிக்கும் வல்லமை கொண்ட விவசாயிகள் நூறு நாள் வேலைக்கும், ரேசன் அரிசிக்கும் பழக்கப்பட்டு போனார்கள். விவசாயத்தின் எதர்காலம் குறித்த கவலைகள் கொண்ட கவிதையாக இருக்கிறது 'உழை' . 


கோழி கூவல், சாணம் தெளிக்கும் சப்தம் என விடியலுக்கான அடையாளங்கள் இன்னும் இருந்தபடி இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் ஏசியை அணைத்துவிட்டு சன்னலை திறக்க எழுந்திருக்கமனமின்றி கிடப்போரின் எண்ணிக்கை பெருக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக மாற்றத்தை காட்சிபடுத்துகிறது 'உறை காலம்' கவிதை.


பெரும்பாலான மனிதர்களின் அன்றாடத் தேவையின் பட்டியலில் மதுவும் இணைந்துபோனது. 'கவித்தல விருட்சம்'  கவிதையில் வரும் 

டாஸ்மாக்கைக் கடந்து செல்லும் கவிஞன்

போதைப் பெருக்கி பேச்சாய் பொங்க

நகுலனின் சுருதி மீட்டிய பிராந்தியுள் பாய்ந்து

உமர்கய்யாம் வரை விரிந்து

ப்யூகோவ்ஸ்கிக்குத் திரும்பி

யூமாவில் நிலை நின்று

தீர்த்தமாய் திரண்டிருந்த கடைசியை பருகி முடிக்கவும்

மதுக்கடை சிறுவனின் கோலிக் குண்டொன்று

இவர்கள் வரை உருண்டு வரவும் எழுந்து கொண்டார்கள்

சில கணம் தடுமாறி பொறுக்கிய கோலிக்குண்டை

சிறுவனிடம் ஒப்படைத்து கிளம்பினார்கள்.

 

எனும் வரிகளை வாசிக்கையில் கலந்து கொண்ட, கலந்து கொள்ளப்போகும் இலக்கிய கூட்டங்கள் நினைவில். யூமாவின் அடையாளங்களுள் ஒன்றகிப்போன " மதுக்கடையில் உருளும் கோலிக் குண்டுகள்" கவிதை வரிகளையும் இக் கவிதைக்குள் காட்சிபடுத்தியிருப்பது அழகின் வெளிப்பாடு.


சதா மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதில் மிகப் பெருமிதமாய் எல்லோராலும் கொண்டாடப்பட்ட நிறைய்ய விசயங்களை மறந்தே போன நாட்களில் ஸ்ரீநேசன் கவிதைகளில் அவர்களை வாழச் செய்திருக்கிறார். ஆடைகளில், முடி திருத்தங்களில், கழுத்தில் நரிப் பல்லை கட்டி வெற்று மார்போடு திரிந்ததென பழைய வாழ்வை என்றைக்குமான உயிர்ப்போடு இருக்கும்படியாக உள்ளன.



பெண் குறித்து இச்  சமூகம் வைத்திருக்கும் பார்வைகள் புரை படிந்தவை. சக உயிரி, சக பயணி என்பதெல்லாம் இல்லாது தனக்கும் கீழான என்றே வைத்துள்ளது. சூப்பர் பவர் தனக்கே எனும் தடித்தனம் கொண்டவர்களே பெரும்பான்மை மிக்கவர்களாக உள்ளார்கள். ஆனால் உண்மை ஸ்ரீநேசனின் இக்கவிதையாகவே உள்ளது. 


உயிராதாரி

*

நீ ஒரு பெண்

சாதாரணமானவள் எனினும்

இந்தப் பிரபஞ்சம்

உன் கண்களிலிருந்தே தோற்றமளிக்கிறது

உன் இருப்பு ஒரு சிறு துகள்

ஆயினும் இந்த வெளி

உன் விரல் நுனிகளிலிருந்தே விரிகின்றது

நீ இசையின் ஒரு துடிப்பு மட்டுமே

இருந்தும் எல்லாவித ஓசைகளும்

உன் இருதயத்திலிருந்தே பெருகுகின்றன

மிகத் தாமதமாய் எதிர்ப்பெற்ற

ஓர் உயிர் நீ

என் எல்லா சலனத்திற்கும்

உன் உயிர்ப்பே ஆதாரமாயிருக்கிறது. 


நான் சிறுவனாக இருந்தபோது ஊரில் இருக்கும் அம்மன் கோயில் வழியாக செல்லாது சுற்றுப்பாதையில் பெண்கள் செல்வது குறித்து என் சந்தேகத்தைக் கேட்க, வீட்டுக்குத் தூரமாக இருக்கையில் கோயில் முன் நடப்பது தெய்வ குற்றம் அதனால்தான் சுற்றுப்பாதையில் செல்வார்கள் என்றனர். கலப்போக்கில் சுற்றுப்பாதை தேவையற்றதாகிப்போனது காலமாற்றத்தின் விளைவால். அது இன்னும் நவீனமாகி அம்மனை காதலியாக, தாயாக, குழந்தையாக மாற்றம் கொள்ளச் செய்திருக்கிறார் ' ஏரிக்கரை அம்மன்' கவிதையில்.


இயேசு  எனும் சொல் நம்மை வந்தடையும் பொழுது " நள்ளரவில் இயேசு இளம் பெண்ணை அழைத்துச் செல்கிறார்'" கவிதை நினைவில் தோன்றுமளவிற்கு ஸ்ரீ நேசனுக்கான அடையாளமாகிப் போனது இக்கவிதை. எளிய செயல்தான், ஆனால் இச் சமூக நோக்கில் சூழலில் அபூர்வமாகிவிடுகிறது. மனிதனின் மகத்தான பண்பை மனிதகுமாரனோடு ஒப்பிட்டிருப்பதில் இக்கவிதையின் வெற்றியாகப் பார்க்கலாம். திருகலற்ற எளிய சொல் முறையும்  இக்கவிதையின் பலம். இப்படியான மகத்தான பண்புகளை உடைய மணிதர்களை தன் கவிதைகளில் காட்சிபடுத்த தவறுவதில்லை. 


பச்சை வேர்க்கடலை

கிடைக்காத பருவத்தில் ஒரு மரக்கால் பைநிறைய

மாமியார் பெருமையோடு கொடுத்தனுப்பியதை

அம்மாவுக்கு கொண்டு செல்வேன்

விடிகாலை உறக்கத்தைப் பயன்படுத்தி

ஒரு கிழவி தன்னுடையதைப் போல்

என்னடைய

 பையை இறக்கிச் செல்கிறாள்

தூக்க கலக்கத்தில் கவனித்துவிட்ட நான்

பதற்றமடைந்து விட்டேன்

யாரும் பாட்டியைப் பிடித்துவிடக்கூடாது

யாரும் அவமானப்

படுத்திவிடக் கூடாது.

*


நினைவின்மையோ, கவனப்பிசகோ இல்லாமல், அறிந்தே நிகழ்த்தப்பட்ட செயல் எங்கே திருட்டு என அம்பலப்பட்டுவிடுமோவென பதறுபவனின் மேன்மையை காட்சிபடுத்துகிறது  ஜடசியம்மாள் கவிதை. இத்தகைய மேம்பட்ட பண்புகளை கவிதைக்குள் கொண்டு வருவதால் ஸ்ரீநேசன் கவிதைகள் அபூர்வ தமிழ்குணம் கொண்ட கவிதைகள் என ஷங்கர்ராமசுப்ரமணியன் சொல்வதற்கான காரணமாக இருக்கக் கூடும். மேன்மைமிகு பேரன்கள் நம்முடன் இருந்துகொண்டிருப்பதை நினைவுபடுத்துகிறது.


இக்கவிதையை தொடர்ந்து வேறு மூன்று போட்டிகள் குறித்த கவிதைகளையும் காண்போம்.

பெருமாத்தம்மாள்

*

படிக்கட்டோர இருக்கையில் ஒரு பாட்டி

எதையோ தவறவிட்டதான முகபாவம்

சுமக்க முடியாத புத்தக மூட்டையை

யாரோ ஒரு சிறுமி

அவள் மடியில் இறக்குகிறாள்

என்னவொரு மிடுக்கு கிழவிக்கு இப்போது

தானே பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பதைப்போல.


எந்தவொரு செயலுக்கும் மதிப்பீடு மாறுபட்டதாகவே இருக்கும். யாரேனும் ஒருவருக்கு அது வாழ்நாள் கனவாகவோ, ஏமாற்றமாகவோ, சாதனையாகவோ இருக்கக்கூடும். புத்தப்பையை பாட்டியின் மடியில் வைத்தல் சாதாரண செயல்தான். 'மிடுக்கு' என்ற சொல்லில் பாட்டியின் எதிர்பார்ப்பு, கனவு, ஏமாற்றம் எல்லாம் ஒரு கணம் அடைந்துவிட்ட நிறைவு,  பால்யம் தொட்டு கிடைக்காத பேறு அன்று கிடைத்திட்ட மகிழ்வின் ததும்பல் 'மிடுக்கு' எனும் சொல்லுக்குள் வைத்துள்ளார் நேசன்.

பெண்களுக்கு கல்வி என்பது மிகச் சமீபத்தில் வாய்ந்த ஒன்றுதானே. நம் சமூகம் அவர்களை விட்டுக்குள் வைத்தே அழகு பார்த்துக்கொண்டது. சமூக மாற்றத்தின் நல்வெளிப்பாடு இக்கவிதை. குற்ற உணர்வையும், குதூகலிப்பையும் ஏற்படுத்துகிறது இக்கவிதை.


சூதும் வாதும் அறியாதவர்க்களின் செயலில் இருக்கும் அன்பைக் கூட சந்தேகிக்கச் செய்யும்  வாழ்வில் நாமும் இருப்பதன் அசிங்கத்தை சுட்டுவதாக உள்ளது ' கன்னியம்மாள்' கவிதை.


கோயில் பிரசாதமெனினும்

நீ கொடுக்கும் சுண்டலை

மயக்க மருந்திட்டதோ என இப்பேருந்து பயணிகள்

ஒருவரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்

உன் அன்பை

அழுகையைப்போல் அடக்கிக் கொள் பாட்டி.


நாமும் இப்படியான பேருந்துகளில் பயணித்திருக்கக் கூடும். எதேனும் ஒரு பாட்டி அழுகையை அடக்க இயலாது விம்மியபடி இருந்திருக்கக் கூடும். நாம் கவனிக்கத் தவறியிருப்போம், இருப்பில் இல்லாமல், இல்லாத இருப்பில் இருந்துகொண்டிருக்கிறோமே.


தொகுப்பிலிருக்கும் மற்றொரு பாட்டி தள்ளாத வயதில் தயிர் விற்று பிழைப்பதை காட்சிபடுத்துகிறது. அன்றைய தொழில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதென சூரியனிடம் வேண்டுதலை வைக்கும் குரல்  நம் குரலாகவும் இருக்கிறது.


வால்மீகி தன் சிஷ்யர் பரத்வாஜருடன் ஆற்றின் கரையில் நடக்கையில் இரண்டு பட்சிகள் கூடி குலாவுவதை தற்செயலாக கண்டார். திடிரென்று வேடவன் ஆண் பட்சியை வீழ்த்தினால். கோபம்கொண்ட முனிவர் இரக்கமற்ற வேடனே, " எல்லையற்ற காலம் வரை நிம்மதியற்று வாழ்வாய்" என சபித்தார். பின் நிதானமாகி தன் கோபத்திற்கு வெட்கமடைந்தவர் அச்சமயத்தில் தன் சாபம் பொருத்தமான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட கவிதையாக வந்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார். " இரக்க உணர்ச்சி இல்லை என்றால் நல்ல கவிதைகள் அமைவதில்லை. சோகத்தில்தான் நல்ல ஸ்லோகங்கள் அமைகின்றன"  எனும் வால்மீகியின் கூற்று எத்தகையான உண்மையை கொண்டுள்ளது என்பதை ஸ்ரீநேசனின் கவிதைகளிலும் உணர முடியும். 


சொர்க்கம், நரகம், நல்லது, கெட்டது, கடவுள், பிசாசு இச் சொற்கள் மனித குலத்தோடு பிணைந்து கிடக்கின்றன. இதை நாம் நம்புகிறோமா, நம்பவில்லையா என்பது குறித்த ஆராய்ச்சியற்றே கவிதைகள் அது எவ்விதம் செயல்படுகிறது என்பதையே நாம் பார்க்கவேண்டி இருக்கிறது. கடவுளின் படைப்பு நாம் என சொல்லப்பட்டாலும், குழந்தை ஒன்றிடம் கடவுள் படும்பாடு குறித்த "கடவுளின் தூளி" கவிதையும் ஸ்ரீநேசனின் உச்சம் என்றே பார்க்கிறேன்.


அம்மாவும் அப்பாவும் குழந்தையுமான

ஒரு குடும்பத்தை

விபத்து நடத்தி கொன்றாள் கடவுள்

அம்மா நல்லவளாகையால் வலப்புறமிருந்த

சொற்கத்துக்கு அனுப்பி வைத்தாள்

அப்பா கெட்டவன் எனச் சொல்லி

இடப்புற நரகத்தில் தள்ளிவிட்டாள்

நல்லதா கெட்டதா எனத் தெரியாமல்

குழந்தையைத் தன்னுடனே வைத்துக்கொண்டாள்

தாய் தந்தையில்லாத ஏக்கத்தில்

அழத் தொடங்கிய குழந்தை நிறுத்தவே இல்லை 

முகிலைத் துகிலாக்கி மின்னலை கயிறாக்கிப் பிணைத்து

வெட்ட வெளியில் தூளி ஒன்றைக் கட்டிய கடவுள்

குழந்தையை அதிலிட்டு தாலாட்டத் தொடங்கினாள்

சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அசைந்தது தூளி

வலப்புறம் அம்மாவையும்

இடப்புறம் அப்பாவையும்

காணத் தொடங்கிய குழந்தை

அழுகையை நிறுத்திக் கொண்டது

அப்பாடா என ஓய்ந்தாள் கடவுள்

குழந்தையோ மீண்டும் வீறிடத் தொடங்கியது

பாவம் கடவுள் குழந்தையை

நல்லதாக்குவதா 

கெட்டதாக்குவதா

என்பதையே மறந்து விட்டுத்

தூளியை ஆட்டத் தொடங்கி

ஆட்டிக் கொண்டே இருக்கிறாள்.


நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே தடுமாற்றத்தோடு இருக்கும் கடவுளிடமிருந்து தூளியை வாங்கிக்கொண்ட ஸ்ரீநேசன் தூளிகளில் குழந்தைகளை படுக்கச்செய்து இவ்வுலகில் இருக்கும் நல்லது கெட்டதுகளைக் கதையாகச் சொல்லியபடி நல்லதுகளில் கவனப்படுத்தி தூளியை ஆட்டிக்கொண்டே இருக்கிறார்.


வெறும் கையில் முழம் போட்டும், வெற்றுச் சவடால்களில் பெருமிதம் பேசித்திரிவோரின் வாழ்வில் கதியற்று நிற்கும் கணங்களைச் சுட்டும் ' கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்' கவிதையும் முக்கியமானதொரு கவிதையாக பார்க்கலாம்.


சம காலத்தின் முக்கிய சொல்லாடலாக இருப்பது மக்கும், மக்காத குப்பைகள் குறித்தான பேச்சு. 'வள்ளலார் தெரு'கவிதை நம்மின் நவீன வரலாற்றை சொல்லிவிடுகிறது. மக்காத குப்பையை அதிகாரத்தின் குறியீடாகவும், மக்கும் குப்பையை மனசாட்சியின் குறியீடாகவும் பார்க்கலாம், அதை பிரித்து பார்க்கும் குப்பை வண்டிக்கார முதியவரின் மனப்போக்கு நமக்கானதாக இருக்கிறது.


மலை, ஆறு, ஏரி, நாய் மனிதர்களின் வாழ்வில் பிணைந்த ஒன்று. இவைகள் குறித்த அனுபவங்களை ஸ்ரீநேசனின் கவிதைகளில் பெற்றுக்கொண்டே இருக்கலாம். 'நானும் நாயும்', 'ஒரு மலையின் மாலை', 'சந்திரகிரி', ' திரவமலை', 'கனவு மலை' 'நகரத்துக்கடியில் புதையுண்ட ஏரி' என நிறைய்ய கவிதைகளை பட்டியலிடலாம்.


இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே இயற்கை கொண்டிருக்கும் நெகிழ்வுத் தன்மைக்கும், மனிதனிடம் பெருக்கெடுக்கும் பேராசைக்கும் இடையே உருக்கொண்டுள்ள விடுபடல்களை மெல்ல தவிர்க்கச்செய்து பிணைப்பை உருவாக்கும் முயற்சியாக ஸ்ரீநேசனின் கவிதைகளகப் பார்க்கலாம்.


இந்தச் செருப்பைப் போல்

எத்தனை பேர் தேய்கிறார்களோ

இந்தக் கைக்குட்டையைப் போல்

எத்தனை பேர்

பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்த சட்டையைப் போல்

எத்தனை பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு.


எனும் அத்மநாமின் கவிதையில் வெளிப்படும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் மீதான நேயம் நமக்கும் தேவைப்படக்கூடிய ஒன்று. எங்கோ எவரோ எக்கேடு கெட்டால் என்ன, என் வாழ்வு, என் சுக துக்கம் என வாழ்ந்துகொண்டிருப்பது வாழ்வா? எனும் கேள்வி படைப்புகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீநேசன் கவிதைகளிலும் அப்படியானதொரு கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அரசு சமூகத்தை ஒற்றைத்தன்மைக்கு கொண்டுவர முயற்சி கொள்ளும்போது, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டங்கள் வரும்போது, கடுமையான சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் வரும்போது போராடத்தானே வேண்டும். எனக்கென்ன வந்தது என்றிருப்பதை எள்ளல் செய்யும் தன்மையும் 'கவிதைகளை வாசித்துக் கொண்டிருப்பவன்' கவிதையில் இருக்கிறது.


மக்கள் கடவுள்களை தரிசிப்பது தெருக்கூத்தில்தான். அவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த நகைச்சுவைக்காரன் கட்டியக்காரனே. உழைப்பின் அலுப்பிலிருந்து விடுதலை அடையச் செய்வதும், கூத்தின் கதைகளோடு தங்கள் கதைகளை பொருத்தி ஆறுதல் கொள்வதும் என தெருக்கூத்திற்கும் மக்களுக்குமான பிணைப்பு வேர்களுக்கும் மண்ணுக்குமானது. தொகுப்பிலிருக்கும் 'கூத்தாட்சித் தத்துவம்' கவிதை தெருக்கூத்தை நினைவுபடுத்தியதோடு மட்டுமின்றி பபூனாக வேடமேற்ற பபூனாகவே வாழ்ந்துகொண்டு அட்சிபுரியும் பபூனின்  கேலிக்கூத்துகளை இவ்வாறாக காட்சிபடுத்துகிறது.

......

தூய்மைக் கூத்து  இவரது தாரக மந்திரம்

அதைக் காட்டும் நடுத்தெரு மேடையை தாமே கூட்டுவார்

கூத்து ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்பவர் பின்

மேடை பக்கமே தலை காட்ட மாட்டார்

ஊர்ச்சுற்றி வருவதில் அலாதி மோகம் கொண்ட

இவரது பிரதான கூத்தாட்சித் தத்துவம்

ஒரே கருத்து ஒரே கதை ஒரே கூத்து

எதிர்கால நோக்கி கனவு திட்டம் எல்லாம்

என்றென்றைக்கும் தான் ஒருத்தனே நடிகன்

உறங்குவோர் விளக்கம் வரை இரவுகள் விடியும் வரை

இக் கூத்தின் கூத்தே தொடரும்

மங்களம் சுபமங்களம்

ஜெயம் சுபோஜெயம்.


இரவுகள் விடியத்தானே செய்யும், உறங்குவோர் விழிக்கத்தான் செய்வார்கள் இங்கு எதுவும் சாசுவாதம் அல்ல. விரைவில் ஆட்சிமாற்றம் நிகழும் என நம்புவோம்.


ஸ்ரீநேசனின் 'அறி உரை' எனும் இச்சிறு கவிதையோடு கட்டுரையை நிறைவு செய்தல் பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்.


எனவே

எங்கேயும்

எப்போதும்

எல்லாவற்றுக்காகவும்

எளியோரின் பக்கம் போய் நில்லுங்கள்

பலவானாகப் பெறுவீர்.

*


( 30-04-23 ஒசூர் புரவி இலக்கிய கூடுகையில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

No comments:

Post a Comment