Friday, September 29, 2023

நன்றி: உதிரிகள்

 பொழுது

*

காலங்கள் குறித்து 
கவலை கொள்ளான்
பழக 
பாலும் புளிப்பதான
நம்பிக்கை கொண்டவன்
நல்ல நாள் தனித்தில்லை
எல்லா நாளும் நமக்கானதென
கடுகளவு 
மிளகளவு
நீண்டிருக்க
சற்றே கூடுதலாக்கி
ஒரு பிடி பகலவனை
உண்ணத் தொடங்கினான்.


மழை

*
வல்லமையை வளர்த்துக் கொண்டவன்
பரிசோதிக்கக் காலம் வந்தது
நள்ளிரவு என்பதால்
சாட்சிகள் இல்லை
தன்னை நனைத்திடாது
பெய்யச் செய்தான் 
ஒதுங்கி.


பனி
*

கதவு சன்னல்களை 
அறைந்து சாத்தி
சிறு சந்தில் 
துணி வைத்து அடைத்து
போர்வைக்குள் ஒடுங்கிக் கிடக்கும்
எல்லோரையும் ஏளனமாகப் பார்த்து
ஏதுமாற்று உறங்கப் போனவன்
ஆதி சினேகனாக
அடர்வனத்து கனவில்
நித்திரை கொண்டான்.

ஆறு
*

முயற்சிகள் பலன்
அற்றுப் போவதை ரசித்து
இப்படித்தான் என
சொல்லில் காட்சிபடுத்தி
தன் உடலை தக்கையாக்கி
மிதந்தவளை 
ஆறு தாய்மையோடு
தாலாட்டிக்கொண்டிருக்க
வானத்தின் ஒற்றைக் கண்
உக்கிரம் அடைகிறது.

No comments:

Post a Comment