Thursday, June 23, 2016

சொற்களற்ற அனுபவங்கள்...


பாம்புகள் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். தன் தோலை உரித்து வெளியேறுவதன்
மூலம். அவ்வப்போது வாசகனும் தன்னை புதுப்பித்துக்கொள்ளச் செய்ய வேண்டி
இருக்கிறது. மொழி அதற்கான தேவையை உருவாக்கிவிடுகிறது.

வாசிப்பின் ஆரம்ப காலங்களில் கவிதைகளை உரத்து வாசித்து ஒலியை உள்வாங்கி
ஒளிப்படமாக்கி பார்ப்பதுண்டு. எவ்வளவு அவசர கதியில் இருந்தாலும் ஏதோவொரு
ஒளிப்படம் நம்மை நிதானிக்கச் செய்வதுபோல சில கவிதைகள் நிதானிக்கச்
செய்தன. பின் கவிதைகளை ஓவியமாக்கிப் பார்த்து ரசிக்கத் துவங்கினேன். இதை
என் வாசிப்பின் அடுத்த படிநிலையாக பார்த்தேன். சில ஓவியங்கள்
தூக்கமிழக்கச் செய்தன. வேறு ஓவியங்களை வரையவும் தூண்டின. எதையும்
உற்றுநோக்கி உள்பிரியும் வேர்களோடு பயணிக்கச் செய்து திரளும் சிறு சிறு
முடிச்சுகளை நீவிப்பார்த்து மனம் லயித்துப்போய் கிடப்பதுண்டு. இப்படியான
சூழலில் நரனின் ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ தொகுப்பின் கவிதைகள்
புரிதல் சார்ந்த விளையாட்டுகளை நிகழ்த்திப் பார்க்கச் செய்தன. சில
கவிதைகள் கைகளை மூடிக்கொண்டு உள் இருப்பதை அறிய செய்யும் விளையாட்டில்
தோற்பதும் ஜெயிப்பதுமான நிலை இருக்க ஆர்வம் குறையாது தொடர்ந்து பயணிக்கச்
செய்தன. சிறு சிறு கீச்சுமூட்டலில் கைகளை எளிதில் விரித்திடும்
குழந்தைகளாக இல்லாமல் அதற்கான சிரத்தையையும் உழைப்பையும் கோரின கவிதைகள்.
சில கவிதைகள் பிரிக்க இயலாது பசைகள் இறுகிப்போயி இருந்ததால் போதும் என்று
கடக்க வேண்டியும் இருந்தது. வேறு சந்தர்ப்பங்களில் மீண்டும்
முயற்சிக்கலாம் என விட்டுவிட வேண்டியதாகிவிட்டது.

‘சிறிய தோட்ட’ தொகுப்பின் முதல் கவிதை உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி
அனிச்சையாக கைகள் அருகிலிருக்கும் குழந்தைகளை வருடத் துவங்கின. போரில்
எதையெல்லாம் செய்யக்கூடாதென்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கும் நம்
காலத்தில் நடந்த சிங்கள அரசின் இன அழித்தொழிப்பு போர். தொலைக்காட்சியில்
பார்த்த குழந்தைகளின் முகம் என்றும் நீங்கா காட்சியாக மனதில் இருக்கும்.

அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா குழந்தையின் உடலுக்கென...

என முடியும் இக்கவிதையின் நீட்சியாக பார்க்கலாம் ‘எப்படியும் இறக்கப்
போகிறோம்’ கவிதையை. உழவு கழப்பையை கழு முனையாக நிமிர்த்தி வைத்து ஒழுங்கு
குலையாது வரிசையாக நின்று தற்கொலை செய்துகொள்ளம் விவசாயிகளின் உதிரங்களை
குதிரைச் சக்தியாக்கி விரைந்து அழிவை உண்டாக்கி வெற்றிகொண்டபடி இருக்கும்
வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரபோக்கை சுட்டுகிறது
கவிதை. ஆனால் நாமோ எதையும் கண்டுகொள்ளாது நம் மலைகளை டெண்டர் விட்டு
மெருகேற்றி சமதள பலகையாக்கி பூங்காக்களில் வேடிக்கை பார்ப்பதை கவலையோடு
‘காதை மூடிக்கொள்’ கவிதையில் காட்சிபடுத்தியுள்ளார். காலங்களையும்,
வரலாறுகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், மூதாதையரின் வாழ்வையும்
தாங்கி ஆதி உயிராய் இருக்கும் மலைகளை சிறு சிறு ஜெலட்டின் குச்சிகளால்
தகர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதன் துயரம் எப்பொழுது போராட்டமாக
உருக்கொள்ளுமோ தெரியவில்லை.

ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் அவன் மட்டுமே அந்நிறுவனம் சார்ந்து
இருப்பதில்லை. அவனது குடும்பமும் அந்நிறுவனம் சார்ந்தே இருக்க வேண்டியதாக
இருக்கிறது. குடும்பத்தின் நிகழ்வுகளைக்கூட தீர்மானிப்பது
நிர்வாகமாகத்தான் இருக்கிறது. நேரடியாக வேலை பார்க்காவிட்டாலும் குடும்ப
உறுப்பினர்களும் நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக
இருக்க வேண்டி இருக்கிறது. ஒருவனுக்கு மட்டும் குறைந்த கூலியை
கொடுத்துவிட்டு ஒரு குடும்பத்தையே தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும்
உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் போக்கை வெளிப்படுத்துகிறார் ‘’ஷூ’’
கவிதையில்.

காலையில் விடைபெறும் போது மனைவியின்
உதட்டைக் கவ்வி அவள் நாவை என் எச்சிலால்
ஈரப்படுத்துவேன்
-பதிலீடாய் அவளும்-
தினமும் அலுவலம் வந்ததும்
என் எஜமானனின் ‘’லீ கூப்பர்’’ கால் பதாகைகளை (ஷூ)
நாவால் நக்கி சுத்தப்படுத்துவேன்.

மனைவியின் நாவால் வலதுகால் ‘’ஷூ’’ சுத்தமாச்சு.
இத்துயர் அறியா உழைப்பாளிகள் இன்னமும் விசுவாசமாக வாழ்ந்துகொண்டிருப்பது
பெரும் சோகம்.

சாதாரணங்களை அசாதாரணங்களாக மாற்றுகையில் படைப்பாளிகளின் நுட்பம்
கொண்டாடப்படுகிறது. கல் குதிரை முதுவேனிற்கால இதழில் வந்த இசையின்
‘’நளினக்கிளி’’ கவிதை எல்லோரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.
இத்தொகுப்பில் இருக்கும் ‘பறவை’ கவிதையும் அப்படியானதொரு நுட்பமான
பார்வையை அழகியலோடு வெளிப்படுத்தும் கவிதைதான். பச்சை குத்தப்பட்ட பறவையை
பறவையாகவே பார்க்கும் இக்கவிதையில் இயங்கும் குழந்தை மனம் எல்லோருக்கும்
பிடித்தமானதாகவே இருக்கம். தன் நுட்பத்தால் வாசகனை வியப்பிற்கு
உள்ளாக்கும் நிறைய்ய கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு. ‘பேரம் படியாத போது
கவிதையில் இருக்கும் லாடக்காரன், வரைந்த மலைப்பாம்பில் அயர்ச்சியோடு
தூங்கியவன், யோனியை குளிர்ந்த சூரியனாக்குபவள்... என நீளும் கவிதைகள்
உண்டு.

எதையாவது செய். பிறரின் கவனத்தை நூல் அளவிலேனும் ஊடறுத்து விடு
என்பதாகத்தான் பட்டது வரையப்பட்ட குகைக்கும், வரையப்படாத குகைக்குமான
வேறுபாடுகளை கூறும் ‘தைலவர்ண கரம்’ கவிதை.

நாளிதழ்களில் வரும் குழந்தைகளுக்கான பகுதியில் செய்துபார்க்கும்
பயிற்சிக்காக வரையப்படும் உருவங்கள் அதில் காட்சிபடுத்தியுள்ளதை விடவும்
வேறுவிதமான அழகியலோடு குழந்தைகள் வெளிப்படுத்துவதுண்டு. இத்தொகுப்பிலும்
சில கவிதைகள் வேறுவிதமான அனுபவங்களை ஏற்படுத்துகின்றன. மொழியில்
எனக்கிருக்கும் பற்றாக்குறையால் அதன் நுட்பங்களை காட்சிபடுத்த
தெரியவில்லை. என் வாசிப்பின் போதாமையை உணரச்செய்தன கவிதைகள்.
படைப்பாளியின் அனுபவங்களை கண்டடைவதும் அதன் காட்சியமைப்பில்
லயித்துப்போவதும். அக்காட்சியமைப்பு நெடுநேரம் மனத்திரையில்
ஒட்டிக்கிடப்பதும் நிகழ்ந்தபடியே இருக்கிறது. ‘பசியோடிருக்கும்
கரையான்கள்’, ‘மரமேறத் தெரியாதெனச் சொன்னவன்’, ‘2 பாயிண்ட் தீவிரம்’
போன்ற கவிதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

நாம் எவ்வளவு அப்பாவிகளாக இருந்து ஏமாற்றம் கொண்டு அடிமை வாழ்விற்குப்
பழகிப்போகிறோம் என்பதை ‘கனவு தானே நண்பா...’ கவிதை சுட்டுகிறது.
தொடர்ந்தாற்போல் இருக்கும் ‘இங்கே’, ‘உணவு வு...ண...உம் குறிப்பிடத்தக்க
கவிதைகள். நம்மை ஆளும் நாற்காலி சாயம்போன பழுப்பேறிய சிந்தனை படிந்து
அதில் அமரும் முகம் மட்டுமே மாறிக்கொண்டிருக்க நாம் வாழ்வில் எவ்வித
மாற்றமும் அற்று உடலில் இருக்கும் சவுக்கடி விளாறுகளை
‘ரே-பான்’,’ரீபோக்’-களால் பளபளத்திருப்பதை வல்லரசு வாழ்வில் மக்கள்
மகிழ்கிறார்கள் என வாய் கூசாது அரசுகளின் புழுகு நீடிப்பதை
உணர்த்துகிறது.

பெரும் துயர்களையும், அழிவுகளையும் அவ்வப்போது மட்டும் நினைவில்
வைத்திருந்து காலப்போக்கில் எவ்வித சலனமும் இன்றி மறந்து விடுகிறோம்.
நம்மை மறதி மிக்கவர்களாக வைத்திருப்பதில் ஊடகங்கள் பெரும்
பங்காற்றுகின்றன. ஆனால் படைப்பாளிகளோ அதை நமக்கு நினைவூட்டிக்கொண்டே
இருப்பார்கள். இதை முரகாமியின் ‘யானை காணாமலாகிறது’ கதை வெகு அற்புதமாக
சித்தரித்திருக்கும். நரனும் ‘நிறை மஞ்சள் கோதுமை’ கவிதையில் போபாலில்
அடுக்கி வைக்கப்பட்ட ஓராயிரம் மண்டை ஓடுகளை நினைவூட்டி மீண்டும் அதற்கான
சூழலில் வாழ்கிறோம் அணுஉலைக் கழிவால் உண்டாகப்போகும் அழிவை நினைவு
படுத்துகிறார்.

தேசத்தில் நாம் தொலைத்தவைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில்
தேசத்தையே தொலைத்துக்கொண்டிருக்கிறோம் எனும் உண்மை உரத்துக் கூறுகிறது
இத்தொகுப்பு.

கவிதைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. வேறுவிதமான பார்வைகளோ, முயற்சியோ
இல்லை என சலிப்பும் வருத்தமும் அடைந்து பேசிக்கொண்டிருப்பவர்களின்
கைகளில் நம்பிக்கையோடு திணிக்கலாம் நரனின் ‘ஏழாம் நூற்றாண்டின்
குதிரைகள்’ தொகுப்பை.


வெளியீடு
கொம்பு
எண்-11, பப்ளிக் ஆபிஸ் ரோடு,
தேவி தியேட்டர் எதிரில்,
நாகப்பட்டினம்-611 001
விலை-ரூ.60.

nantri:malveedu

1 comment:

Post a Comment