Wednesday, June 22, 2016

கதை மாந்தரான கனவுகள்

கதை மாந்தரான கனவுகள்


சிகரெட்டின் வெளிச்சம் மட்டுமே உள்ள அறையில் மது அருந்தினோம். கடைசி புகையை இழுத்து இருட்டாக்கினாள். லைட்டரின் ஒளியில் அவளின் முகம் பிரகாசித்தது. எதையோ பேசியபடி இருந்தோம் அம் மீச்சிறு வெளிச்சத்தில்...

தன்னுடைய மொழிபெயர்ப்புப்  புத்தகமென நீட்டினார். ஆர்வம் பொங்க கைகளை நீட்டினேன். தராமல் மீண்டும் பையில் வைத்துக்கொண்டார். வேறு நிலத்தின் கலாச்சாரம் பண்பாடு மொழிப்பற்று என பேசிக்கொண்டே இருந்தார். நான் புத்தகத்தை பெற மீண்டும் கைகளை நீட்டினேன். மொழியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இது பயன்படாதென மறைந்தார்...

படுத்திருந்தேன். குழந்தைகள் கும்பலாக வந்தனர். அவரவர் கையில் ஜாமெண்டரி பாக்ஸ் கருவிகள். ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த கோடுகளை வரைந்தனர். குறும்புக்கார சிறுவன் குறியில் அம்பு பாய்ச்சி விளையாடினான். வெளியேறிய இரத்தம் ஓவியமாகிக்கொண்டிருந்தது...

பழைய கட்டிடம் ஒன்றினுள் நுழைகிறேன். அங்கிருக்கும் காவலாளியை ஏமாற்றி அரிதான நாணயங்களோடு வெளியேறுகிறேன். எதிரில் சைரன் ஒலியற்று ஜீப் ஒன்று வந்தது. உள்ளிருந்து நீண்ட குழாயிலிருந்து வெளியேறிய சிறு குண்டு என் உடலில். நாணயங்கள் இரத்தத்தில் மிதக்கத் துவங்கின...

தெருவில் சித்திரம் தீட்டியபடி இருந்தவனை அழைத்து வந்தேன். எனது ஆடைகளை அணியக் கொடுத்து பசி மறக்க சோற்றை கவளம் கவளமாக ஊட்டினேன். வீடு சித்திரங்களின் வசிப்பிடமாக மாறிக்கொண்டிருந்தது...

இப்படியாக எனக்கு வேறுவேறான கனவுகள் வந்துகொண்டே இருந்தன. தமிழவனின் 'நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்' தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில். எனக்கு சாத்தியப்படாத சூழலைக்கொண்ட சம்பவங்கள் என்னுள் குறுக்கீடு செய்தமையால் இக் கனவுகள் வாய்த்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். ஒரு பிரதியால் வாசகனின் கனவுத் தன்மையை மாற்றம் செய்ய முடிவது மகிழ்வுக்குரியது. நம் மொழி பற்பல பரிமாணங்களோடு பயணித்திருக்கிறது இத் தொகுப்பில்.

இத் தொகுப்பின் கதைகளில் கனவும் ஒரு கேரக்டராக வந்தபடி இருக்கிறது. உரையாடல்களாலும் சம்பவங்களாலும் மட்டுமே கதை நகராது கதை மாந்தர்களின் மனநிலை, சூழலின் மாற்றத்தோடு கொள்ளும் குறுக்கீடுகளே கதைகளின் மையமாகவும் இருக்கிறது. மொழி, கலாச்சார மாற்றம், பண்பாட்டின் மாற்றம், புதிய தலைமுறைகளின் மனவோட்டம், மொழி குறித்த பெருமிதம் அற்றுப்போன வாழ்வு என தோய்வற்ற சொல்லாடலில் புதுபுதுப்புதுக் காட்சிகளை தந்தபடியே இருக்கின்றன. மேம்போக்கான மனநிலையோடு இக்கதைகளை அனுகினால் நம்மை ஏமாற்றம் கொள்ளச் செய்யும். சில கதைகளின் கரு பழையதாக இருந்தபோதும் தமிழவன் தனக்கான உத்தியால் அதற்கு வேறு தன்மையை ஏற்படுத்திவிடுவதால் எவரும் நிராகரிக்க முடியாத தளத்திற்கு சென்றுவிடுகின்றன.

வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து தேடலற்று இருப்பதை வேற்றுப் பிரதேச வாசியின் குரலில் கேலி செய்கிறார் 'உங்களுக்கு பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?' கதையில். 'புரிந்து கொள்வாய் இறுதியாக' கதையில் தன் திருமண வாழ்வின் சாட்சியங்களை காட்ட மறுத்து, காதல் வாழ்வின் நினைவுகளில் வேறு வாழ்வை கலந்திட விரும்பாது வர்ஸாவில் வாழும் அன்னா நம் நினைவிலும் இருப்பாள். இவ்விரு கதைகளிலுமே கதை மாந்தர்களின் உரையாடல்கள் மட்டுமல்லாது கதை நிகழும் இடத்தின் பின்னணியும் கதையில் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதால் நல்ல சினிமாவைக் கண்ட நிறைவைத் தந்தன.

அடுத்தடுத்த வாசிப்புகளை செலுத்திய பின்னரே தன்னுள் இருக்கும் புதிரின் கண்ணியை காட்டத் துவங்கும் 'நால்வரின் அறையில் இன்னும் சிலர்' கதை. குற்றம், குற்றத்திற்கான காரணிகள் ஒற்றைத் தன்மையோ, பொதுத் தன்மையோ கொண்டதல்ல. மாறாக குற்றவாளிகள், குற்றவாளிகளாக ஆக்கப்படுபவர்களின் மனவோட்டத்தின் கூறுகளோடு தொடர்புடையது என்பதாக என் வாசிப்பில் கண்டேன். வேறு வாசகனுக்கு வேறான அர்த்தத்தையும் இக் கதை தரக்கூடும். அதற்கான மாயங்களோடுதான் அக் கதை இருக்கிறது.

விலாவழி குழந்தை பிறப்பு போன்ற கற்பனைகளை நிஜமென பாவிப்பவர்களின் மீதான எள்ளலோடு, அவரவர்களும் தன் சார்ந்த வேலைகளோடு இயல்பான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்க அறிவைத் தேடும் அரசனின் நிலையைக் கூறும் 'ஹர்ஷவர்த்தனின் அறிவு' கதைகள் சுவாரஸ்யமான நகர்வு.

பெற்றோர்கள் வேலை பார்க்கச் செல்ல தனித்து விடப்பட்ட குழந்தைகளின் மன உலகை சித்தரிக்கும் 'மூவரும் மௌனமானார்கள்' வாசிப்பின் இறுதியில் நம்மையும் மௌனமாக்கி விடுகிறார். இது போன்ற கதை ஏற்கனவே சினிமாவிலும், கதையிலும் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் தமிழவன் சொல்லியிருக்கும் உத்தி நம்மை பதட்டமடையச் செய்கிறது.

தங்களின் பொறுப்பற்றத் தன்மையால் வளம் சேர்க்க வேண்டிய மொழியை கண்டுகொள்ளாது தங்களுக்குள்ளான ஈகோக்களை சாந்தப்படுத்த மொழிக்கு துரோகம் செய்தபடி இருக்கும் நிறுவனங்களின் கேடுகளை விவரிக்கிறது 'மொழிபெயர்ப்பு நிறுவனம்'.

'அவனுக்கு என்னைப் பார்க்கிறபோது பார்வை இல்லாது போய்விடுகிறது பார்' எனும் 'அற்புதம்' கதையில் வரும் சொல்லாடல் தலைமுறைகளினிடையே ஏற்படும் மனச்சிக்கலை காட்சிப்படுத்துகிறது.

நம்மால் வெற்றிகொள்ள இயலாது போன செயலை, வேறு யாராகினும் வெற்றிகொண்டு தேர்ந்தவராக வலம் வருவதை சகிக்காது அவர்களின் மீது தொடர்ந்து சந்தேகப்பட்டவாறு இருப்பதை சித்தரிக்கிறது 'ஹெமிஸ்ட்ரி பாடம் புரியுமா?' .

என்றைக்காவது தட்டுப்படும் வித்தியாசமான நபர்கள், அவர்களின் செயல்பாட்டால் நம் வாழ்வில் தினசரி குறுக்கீடு செய்தபடியே இருக்க, என்றும் நம் நினைவில் தங்கிப்போய்விடுவதைக் கூறுகிறது 'யாருக்கும் தெரியாது' கதை.

ஒன்றைப்பற்றிய தொடர் நினைவால் இயல்பின் சமன் கலைய தானே அந்த நினைவாக மாற்றம் கொண்டு விடுவதை விவரிக்கிறது 'கொலை செய்யாதிருப்பாயாக'.

மொழியின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் நடத்தி உணர்வுப் பிச்சையில் உல்லாச வாழ்வை அடைவோர் நம் சிந்தனையை மட்டுப்படுத்தி விட்டதைச் சுட்டி ஒரு மொழி தொலையும் போது அவற்றுடன் நம் வாழ்வும் தொலைந்து போவது குறித்து கவனிப்பை உண்டாக்கும் கதையாக வந்துள்ளது 'மொழி'.

பதிலற்ற, பதில் கூற விரும்பாத கேள்விகளை தேர்வு செய்தபடியே இருக்கும் 'நடனக்காரியான 35வயது எழுத்தாளர்' என நம் நினைவில் காட்சிகளாக படிந்து நம்முடன் அடிக்கடி உரையாடலை நடத்தும் இத்தொகுப்பின் கதைகள்.

சில சொற்கள் கவிதையிலோ கதையிலோ வாசிக்க ஏனோ ஒரு வித அசூசை ஏற்படுவதுண்டு. 'மொழி' கதையில் கண்களுக்கு பட்டாம்பூச்சியை உவமையாக்கி இருப்பதைப் பார்த்து சலிப்பேற்பட்டது. தமிழவனிடம் நான் பட்டாம்பூச்சிகளை எதிர்பார்க்கவில்லை.

இத் தொகுப்பின் கதைகளில் உரையாடலின் போது இது அவன், அவள் இது, அவன் கூறினான், இவள் கூறியது என கதை சொல்லியும் கதையின் மாந்தர்களோடு கலந்திருப்பது ஆரம்பத்தில் இடையூராக தோன்றினாலும் அடுத்தடுத்த வாசிப்புகளில் கதைப்போக்கில் கதைமாந்தர்களோடு கதைசொல்லியும் இணைந்துகொண்டிருப்பது ரசிக்கத்தக்கதாக உள்ளது.

வெளியீடு
புது எழுத்து
2/205. அண்ணா நகர், கவேரிப்பட்டிணம்-635112.

நன்றி-தீராநதி

No comments:

Post a Comment