Thursday, March 14, 2013

ந.பெரியசாமி கவிதைகள்

நிழல் சுவை

உப்பு நீரில் ஊறவைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்தை ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடுமாடு கோழி பூனையென
படையெடுப்புகள்
எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் நிழலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்...
*

அடையாளக் கோடுகள்

டிசம்பர் ஆறின் அதிகாலையில்
பனி புகைத்த வெண்மையின் ஈரம்
ரோமத் துளைகளின் உள் கசிந்து
மூதாதையரின் கரு அணு தொடங்கி
படிந்த கழிவுகளை ஊறச் செய்து
வான் வழிந்த வெப்பத்தால் வெளியேற்றிய
உப்பின் படிமங்களாக
உடலில் நிறைந்திருக்கும் கோடுகளை
மறைத்துக் காக்கும் ஆடைகளற்றி
குடம் நீரில் கழுவி
கழுவி வெளியேறுகிறேன்.

நன்றி: வல்லினம்.காம்

2 comments:

செய்தாலி said...

இரண்டு கவிதையும் அருமை சார்

ந.பெரியசாமி said...

நன்றி நண்பரே

Post a Comment