Thursday, February 28, 2013

உயிர்ப்பு

நேற்றைய மழை முழுதையும்
சுவடற்று குடித்தேன்
உடல் ஊறிய வெப்பத்தை
வாசனையாக்கி வெளியேற்றினேன்
என்னுள் தவிப்பாய் படரும்
வேர்களுக்கு முலை காட்டினேன்
ஆற்றின் மணல் பரப்பை
சிறிது ஈரமாக்கினேன்
குளம் குட்டைகளில்
கொஞ்சமாய் தேக்கி காட்சிப்படுத்தினேன்
உயிர் நீரை உறிஞ்ச
உடலெங்கும் இட்ட துளைகளுக்கும்
நீர் வார்த்தேன்
பாறைகளில் ஈரப்பசை ஒட்டினேன்
பழுப்பான என் குழந்தைகளை
பச்சையாக்கினேன்
இயல்பாகிப் போனது
மழை வரும் நாளில் நான்
மண்ணின் உடலாகிக் கொண்டிருப்பது.

நன்றி: வெயில்நதி

No comments:

Post a Comment