Monday, June 18, 2012

அந்தி சிரித்தது
நீண்ட நாளைக்குப் பின்
என்னுடன் மதிய உணவை முடித்து
உறங்கியபடி இருந்த அந்தியை
சிறிது டீயோடு எழுப்பி
போகலையா நேரமாச்சென்றேன்
அலுப்பாகத்தான் இருக்கு
ஓய்வு கொள்ளட்டுமா
கற்றலின் பளு கூடிட
களைப்புறும் குழந்தைகள்
வேலையின் தாகமடங்காது
தவித்திடுவர் மக்கள்
சுகிக்கும் சிலரின் ரசணை
பொசுங்கிப்போகும்
சில ஜீவராசிகள் செத்துத் தொலைக்கும்
பாவம் மதியமும்
நீடித்திருக்க தவிப்புறும்
ஏற்படவிருக்கும் குழப்பங்களைத் தவிர்க்க
செல்லத்தான் வேண்டுமென
புறப்பட்ட தருணத்தில் அந்தி
கேட்டுச் சிரித்தது
எனை இன்னும் சேர்க்கவில்லைதானே
எச்சாதி சங்கத்திலுமென…
*
மது ஊறிய உதடுகள்
இரு பொழுதுகளுக்கிடையேயென
மங்கிய நேரத்தில் தனித்திருந்து
மொழியை அறிந்து கொண்டிருக்கையில்
திடுமென முகம் புதைத்து
இதழ் வலிக்கத் திணிக்கும்
அவளின் முத்தத்திற்கு இணையானதுதான்
முடிவின்மையோடு தொடரும்
நண்பர்களிடையேயான உரையாடலின்போது
மனம் குளிர விழும் சொற்களுக்காக
அவன் கொடுக்கும் முத்தமும்…
-இசைக்கு…
*
0
மல்லாந்து கிடக்கும்
பட்டாம்பூச்சியை நினைவூட்டி
அழகும் மணமும் ததும்பும்
பிளவுகளுக்கு
தன்னுள் விழும் விதைகளை
வைத்துக் கொள்ள தெரிவதில்லை
விதையாகவே…
*
0
பெரும் மரமெங்கும்
துளிர்த்திருக்கும் இலைக்கொன்றாக பறவைகள்
அதிசயித்துக் கேட்டான் வழிப்போக்கன்
அறியாயோ…
மரணமற்ற ஊர் இது
ஜீவிதம் முடிய பறவையாவார்களென்றேன்
அருகிலொருவன் அழைத்துக் கொண்டிருந்தான்
தன் மூதாதைப் பறவையை
உணவூட்டலுக்காக…

nantri:malaigal.com

2 comments:

செய்தாலி said...

ம்ம்ம்
நான்கு கவிதைகளும் அருமை சார்

நந்தினி மருதம் said...

கவிதைகள் மிக அருமை.
மகிழ்ந்து இரசித்தேன்
------------------------
நந்தினி மருதம்,
நியூயார்க 2012-07-02

Post a Comment