Wednesday, October 2, 2013

nantri:Slate

மழை

மீந்த மின்னலை
ஒரு சிப்பியுள் அடைத்தேன்
தன் நிழலை
தாண்ட முயற்ச்சித்தபடி ஆட்டுக்குட்டி
மேய்ச்சலில் இருந்த மாட்டிற்கு
உனி பிடுங்கியவாறு பூனை
குழாயிலிருந்து குதித்த நீர் துளிகளில்
தாகமடங்கியவாறு காக்கை
தன் வெறுமையை காட்சியாக்கி
நீண்டு கொண்டிருந்த நிலத்தில்
சாம்பல் படிந்த உடலோடு
எதிரில் வந்த மதுவாகினி
கொஞ்சமாவது மழை தந்திடு
வான் நோக்கி கை கூப்பினாள்
காத்திருந்தார்போல் சிப்பியை உடைத்தேன்
மிதந்தலைந்தோம் வண்ண மீன்களாக...
*

நிலையானது

இருள் விளைந்த வேளையில்
விளையாடிக்கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய்ய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள் தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில் சூரியகாந்திப்பூ
அடுத்தடுத்து வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காவென
கட்டங்களை நிரப்பினர்
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவைகளை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவரவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர்
எனக்கானதை நிரப்ப
கட்டங்களற்று வெறிச்சோடிப் போனேன்...
*
சங்கடை அமுது

நீர் கசிவிக்கும்
பார்வை குமிழியின்
பிணி தணிக்க முலை பிசைந்து
சங்கடையில் தேங்கிய அமுது நனைக்க
வழிந்த ஒரு சொட்டு
உதட்டில் பரவி
உடலை தித்திப்பின் துளிகளாக்கி
காலத்தை சுருட்டியவாறு
வயலடைந்தன

புழுக்கைகளை சதுரமாக காட்சிபடுத்தி
வளப்படுத்தும் கெடையில்
இருளை முத்தமிட்டவாறு இருந்த
ஆடொன்றின் நீண்ட காம்பிலிருந்து
பீச்சிய பால் மணத்தால்
மீண்டு உடலானேன்...

விருப்பம் · · விளம்பர

No comments:

Post a Comment