Tuesday, March 18, 2014

பூக்குட்டியின் சொந்த ரயில்

பூக்குட்டியின் சொந்த ரயில்


காத்திருக்கிறேன் பயணத்திற்காக. ரயில் வருகிறது. பஸ் டிரைவர், லாரி டிரைவர் என்பதபோல் ரயில் டிரைவர் என்ற யாரும் அழைப்பதாக தெரியவில்லை. முகப்பில் அவர் தெரியாது இருப்பதால் ரயில் என்பதே எல்லாவற்றிற்குமான பொதுப்பெயரானது போலும். ரயில் டிரைவரை மறந்து ரயிலை உற்று நோக்கினேன். அதன் முகப்பில் இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியின் படம் இருப்பதை பார்த்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. ரயில் அருகில் வர ஏறி அமர்ந்தேன். தனது புறப்பாடை ஊராருக்குத் தெரிவித்து நகரத் தொடங்கியது.
யாரோ உற்று நோக்குவதுபோல் இருக்க சட்டென திரும்பிப் பார்க்கிறேன். எதிரில் ஜன்னலோரத்திலிருந்த குழந்தை எனைப் பார்த்துக்கொண்டிருந்தது. கண் சிமிட்ட காத்திருந்தாற்போல் அவளது கண்களும் சிரித்தன. உடல்மொழியால் விளையாடத் துவங்கினோம். சிநேகிதம் நெருங்க அருகில் அழைத்தேன். தயங்கித் தயங்கி அம்மாவின் அனுமதியோடு வந்தவளிடம் பெயர் கேட்டேன். ரோஜா என்றாள். அம்மா அப்பா பெயர் கேட்க ரோஜாப்பா, ரோஜாம்மா, ரோஜாஅண்ணன், ரோஜா தம்பி ரோஜா வீடென விடாது கூறியவாறு பெரும் ரோஜாவனத்தையே தன் கைகளால் காட்சியாக்கினாள். எனக்கும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைவு வந்தது. பத்தாண்டு ஆகியும் இன்னமும் முகில் அப்பா முகில் அம்மா என்று அழைப்பது. தனாக சிரிப்பதை பார்த்து லூசா அங்கில் எதுவுமே சொல்லாம சிரிக்கிறிங்க என்றாள். அதற்கும் சிரித்து ஒரு முத்தமிட வேண்டினேன். ஆங்.... அஸ்க்கு.... நான் தரமாட்டேன் என்றாள்.
எப்படியாவது முத்தம் பெற்றுவிட வேண்டுமென அவளோடு உரையாடலை துவங்கினேன். ரோஜாவிற்கு பூக்குட்டியென பெயரிட்டேன். அவளுக்கும் பிடித்துப்போக சந்தோசமானாள். பூக்குட்டிக்கு என்ன வேண்டுமென கேட்க, எதையும் யோசிக்காமல் டக்கென கரடி பொம்மை என்றாள். நெடுநாளாக பெரிய கரடி பொம்மை கேட்டு அடம்கொள்ளும் என் மகனின் நினைவு வர வாங்கும் சக்தியற்று வாழ்வது குறித்த கவலையில் சுருங்கினேன். பூக்குட்டியின் கவனத்தைத் திருப்ப சோட்டா பீம் குறித்து உரையாடினேன்.
இம்முறையும் பூக்குட்டி முத்தம் கொடுக்க மறுத்துவிட்டாள். பாரதியின் மீசை, சூ அணிந்து வந்த வள்ளுவர், பெரியாரின் தடியென நிறைய்ய கதைகளை சொல்லத் துவங்கினேன். நிறைய்ய கேள்விகளோடு ஊம் கொட்டிக்கொண்டிருந்தவள்.டக்கென பிரகாசமானாள். அறுந்த புலி வாலைத் தைக்க குண்டூசி தேடிக்கொண்டிருந்த முயலின் கதையைக் கூறுகையில்.
பூக்குட்டி ரயிலில் கிடந்த விளம்பர நோட்டீஸ்களை எடுத்துவந்தாள். ஒரு பக்கம் எழுத்தில்லாமல் இருந்தவைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை தூக்கி எறிந்தாள். பையிலிருந்த என் பேனாவை பிடிங்கினாள். மேலிருந்து கீழாக ஒ,ஃ,த,ந,ஊ என நிறைய்ய எழுதிக்கொண்டே வந்தவள் ஒவ்வொரு எழுத்திற்கும் நேராக கையை வைத்து இது எப்படி இருக்கென கேட்கத் துவங்கினாள். யானை, காகம், புறா, அன்னம், தண்ணீ லாரி என எங்கள் பெட்டி நிறைய்யத் துவங்கியது.
அடிக்கடி எழுந்த வாம்மா... அங்கிளை டிஸ்டர்ப் செய்யாதே எனும் குரலை காதுகொள்ளாதிருந்தவள் என்னிடம் அவளின் அம்மாவை பழிப்புக்காட்டிக்கொண்டிருந்தாள். மறுபடியும் கதை கேட்டாள். குடுவையின் அடியில் இருந்த நீரை அருந்த சிறுசிறு கற்களை பொறுக்கப்போன காகத்தின் கதையைக் கூற தலையில் அடித்துக்கொண்டு காக்கா டீச்சர் சரியாகவே சொல்லித்தரல அங்கில், பேசாம ஒரே ஒரு ஸ்ட்ராவை எடுத்து வர சொல்லிக்கொடுத்திருக்கலாம் என்று சிரித்தவள் மேலே பார்த்தபடி இருந்தாள். நானும் பார்க்க இயேசுவின் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. என்ன பூக்குட்டி இயேசப்பாவா என்றேன். இல்ல, இயேசு தாத்தா என்றாள். புன்னகைத்த இயேசு தன் மடியிலிருந்த ஆட்டுக்குட்டியை பூக்குட்டியோடு வி¬ளாயட அனுப்பிவைக்க இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என் பால்யத்தில் பக்கத்துவீட்டு பையன்களோடு ராசு தாத்தா கதை சொல்லிய இரவில் பெய்த மழை நினைவில் வர நனைந்துகொண்டிருந்தேன். என் ஈரம் உலர்த்த ஆட்டை அனுப்பிவிட்டு சூரியனை அழைத்து வந்தாள் பூக்குட்டி.
கை தட்டும் ஓசை கேட்க இருவரும் திரும்பினோம். தேவதைகளாக திருநங்கைகள். கொடுத்த பத்து ரூபாயிற்கு இருவரையும் தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க பூக்குட்டி அவர்களுக்கு முத்தத்தை பரிசாக்கினாள். நானும் ஆசையாக கன்னம் காட்ட அன்பால் அடி ஒன்று கிடைத்தது.
விரல்களிடம் தன் அப்பா குறித்து கோள்மூட்டிக்கொண்டிருந்தவளை இடைமறித்து போதும் விடுப்பா அப்பா பாவம் என்றேன். ஆமாம் அப்பா பாவம்தான் என அவளும் கூறினாள் அவள் அம்மாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி.
எங்கள் பெட்டிக்கு இப்போ கிளி ஜோசியர் வர கிளியை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் பூக்குட்டி. கூண்டிலிருக்கும் கிளி பள்ளியிலிருக்கும் குழந்தையாக எனக்குத் தோன்றியது. அக்குழந்தை திரும்பி எனைப் பார்த்து சிரிக்க பூக்குட்டியாக இருக்க அதிர்ந்தேன். கிளிக்கூண்டின் முகப்பில் எல்.கே .ஜி என எழுதியிருந்தது. ஒரு டீச்சர் உள்ளே நுழைந்தார். ராபிட்-முயல், பேரட்-கிளி, டக்-வாத்து என சொல்லிக்கொடுத்தபடி இருந்த டீச்சரை இடை மறித்து மிஸ் பெங்குவினுக்கு தமிழ் பெயர் என்ன? எனக் கேட்க, எத்தனை முறை உங்களுக்கு சொல்வது பாடம் நடத்தும்போது டிஸ்டர்ப் செய்யக் கூடாதென. பிறகு கேளுங்க என அதட்டியபடி வெளியேறினார். எழுந்த மணியோசைக்கு எல்லோரும் சர்ச் பக்கம் விளையாடப்போக சத்தம் போடாதிங்க என பாதிரியார் விரட்ட தூரமாக விளையாடச் செல்கிறார்கள் உடன் இயேசுவும் சென்றுகொண்டிருந்தார். அவர்களை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தேன்.
ஐய்யோ அங்கிள் அங்க யாரு இருக்கா டாட்டா காட்டிக்கிட்டிருக்கீங்கவென என் தலையிலடித்தாள். உனக்குத்தான் காட்டினேன் பூக்குட்டியென மழுப்பினேன். சரி உங்களுக்குத் தெரியுமா எனக்கு எங்க ஹெல்மெட் கிடைக்குமென எங்க அப்பாவுக்கு தெரியல என்றாள். குழந்தைகளுக்கெல்லாம் ஹெல்மெட் தயாரிப்பதில்லை என்றேன். நாங்களும்தானே வண்டியில் போகிறோமென்றாள். குற்ற உணர்வில் முகம் பார்க்க தவறினேன். உங்க அப்பா எங்கேவென கேட்ட பக்கத்துவீட்டு சிறுமியிடம் அவர் சாமியிடம் போயிருக்கார் என நான் கூற, சாமிதான் முதலில் செத்தாரா எனக் கேட்டதும் நினைவில் வர இதுகாறும் குழந்தைகள் மீதான என் புரிதல் குறித்து ஏற்பட்ட குழப்பத்தோடு இருந்தேன்.
திடுமென பூக்குட்டி முத்தமிட்டாள். இறங்கப்போறோம் டாட்டா அங்கிள் என்றாள். அவளின் ஈரம் என்னுள் மகிழ்வை விதைத்தபடி இருக்க வாசித்துக்கொண்டிருந்த சொந்த ரயில்காரி தொகுப்பை பையிலிட்டு எனது நிறுத்தத்தை எதிர்பார்த்திருக்கையில் மறவாது கைகுலுக்கினேன். வாழ்த்துக்கள் ஜான் சுந்தர்.
சொந்த ரயில்காரி
ஜான்சுந்தர் கவிதைகள்
அகநாழிகை பதிப்பகம்.
nantri:malaigal.com

No comments:

Post a Comment