Sunday, July 7, 2013

மொட்டை



மொட்டையடித்துக்கொண்டிருந்தேன். என் தலையை நானே. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர். பெரிதாய் அது குறித்து எனக்கு ஏதும் அக்கறையில்லை. எப்பவுமே அவர்களை மதிப்பதில்லை. தெருவில் நுழைந்ததுமே படைநோய் கண்டவனின் கைகளாய் மூளை சொறியத்துவங்கும். அநியாயத்திற்கு சுயநலமிகள். ஒரு குடம் தண்ணியைக் கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காதவன் (ஆனால் இவன் காவேரி பங்கீடு குறித்து நியாயவாதியாக பேசிக்கொண்டே இருப்பான்.) ஒருவன் சோற்றுக்கையால் காக்காவைக்கூட துரத்தாதவன். காக்கா எங்கு இருக்கென கேட்காதீங்க. ரொம்ப காலமாக சொல்லப்பட்டிருப்பதால் அவன்  குறித்து இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. இன்னொருவன் இருக்கான். ஏதாவது நன்கொடை பொதுவிஷயம் என போனால் வீட்டினுள்ளே இருந்துகொண்டு ஆளில்லை என சொல்லச் சொல்லிவிடுவான். இப்படியாக ஒவ்வொருவர் குறித்தும் நிறைய்ய தெரிந்து வைத்திருப்பதால் அவர்களை உதிர்ந்து கொண்டிருக்கும் உரோமமாகக் கூட மதிப்பதில்லை. புரோட்டின் சத்து மிகுந்தது உரோமம் எனும் விஷயம் தெரியத் துவங்கிய நாளிலிருந்து.

என் மனைவிக்கு நானே மொட்டையடித்துக் கொண்டிருப்பது கவுரவக் குறைச்சலாக இருந்ததால் அவங்க தோழி வீட்டிற்கு போய்விட்டாங்க. அவங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க நான்தான் கேட்பதாகயில்லை. சண்டையிட்டு எதுக்கு ஆயுளை குறைத்துக் கொள்வானே என தலையிலடித்துக் கொண்டு போய்விட்டாங்க.

அடித்து முடிக்கும் தருவாயில் பாவாயி அக்கா வந்தாங்க. ஏண்டா தம்பி இப்படி என கேட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு முன் அவங்களைப் பற்றி உங்களுக்கு சொல்லி விடுகிறேன். பெரிதாக ஏதும் கற்பனை செய்து கொள்ளாதிங்க. அவங்க குறித்து சில சுவாராஸ்சியமான விஷயங்கள் உண்டு. மரத்துக்கிட்ட கூட பேசுவாங்க. எங்க வீட்டு முன்னால ஒரு கசகசாமரம் இருக்கும். அதோட பழம் ரொம்ப சுவையாக இருக்கும். எப்பவாவது வந்து மரத்துக்கிட்ட அந்த பழத்தை யார் கண்ணிலும் படாம ஒளிச்சு வச்சிக்க. நாளைக்கு நான் உனக்கு தண்ணி ஊத்துறேன் என்பாங்க. அந்த பழத்தை பார்த்து இலைக்கு அடியில் ஒளிச்சுக்கு... நானே உனை சாப்பிட்டுக்கிறேன் என பேசிப் போவாங்க. யார் இருந்தாலும் அவர்கள் குறித்தெல்லாம் கவலைப்படமாட்டாங்க. அவங்க எதையாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப புழுக்கமா இருக்கு கொஞ்சம் காத்துக்கொடு என்பாங்க. நடந்து கொண்டே இருக்கிறப்ப என் உடம்பிலேயே இருந்து கொண்டு என்னைவிட நீளமாக இருக்கிய என திட்டுவாங்க. நானே குள்ளம் நீயாவது நீளமாக இருக்கக்கூடாதா நிழலேவென பேசுவாங்க. சமைக்கும்போது "ஏய் கொழம்பே டேஸ்டா வந்துடு. எங்க வீட்டுக்காரரு இன்னைக்கு என் பாராட்டனும்" என கேட்டுக்கொள்வாங்க. அரிசியை ஊற வைக்கும்போதே இன்னைக்கு குழைஞ்சிப் போகாது நல்லா பூத்திடு என பேசிக்கொண்டே வைப்பார்கள். இப்படியாக அவங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். என்ன கேட்டோம் எதற்கு வந்தோம் என்பதை மறந்து உதிர்ந்துகிடந்த உரோமங்களிடம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. நீ வளரலைன்னா எல்லோரும் எப்படி கஷ்டப்டறாங்க. ஏன் நீ எல்லோரையும் இப்படி சோதிக்கிற நீளமாக வளராட்டியும்  பரவாயில்லை. வழுக்கைத்தலையாக இல்லாமலாவது காப்பாத்து. எவ்வளவு காசை செலவு செய்யறாங்க தெரியுமா. உன்னை எப்படியாவது வளரவைக்க. கொஞ்சம் கருணை காட்டேன் பாவம் சனங்க எது எதுக்குத்தான் செலவு செய்வாங்கவென பேசிக்கிட்டே இருந்தாங்க.

ஏப்பா கடைக்குப்போனா நல்லா திருத்தமா பண்ணிவிடுவாங்கதானே... எதுக்கு இப்படி படாதபாடு பட்டுக்கிட்டிருக்க? எதாவது வேண்டுதலா உனக்கு  நீயே அடித்துக்கொள்வதென.

அட போங்க.... வேண்டுதலாவது கீண்டுதலாவது அதெல்லாம் ஒண்ணுமில்ல. முடி வெட்டிக்க மாசாமாசம் அறுபத எழுபது ரூபா கொடுக்க வேண்டியிருக்கு. மொட்டையப் போட்டுட்டா நாலைந்து மாதத்துக்கு கவல இல்லாம இருக்கலாமே, ஷாம்பு செலவு, எண்ணைய் செலவு என ஏகப்பட்டது மீதியாவுது. நான் இப்படி எல்லாம் கணக்குப் பாக்குற ஆள் இல்லைதான் என்ன செய்யறது. இந்த வருசம் அநியாயத்துக்கு ஸ்கூல் பீஸ் ஏத்திட்டாங்க. போதாக் குறைக்கு இரண்டாவது பையனை வேறு பள்ளிக்கூடத்துல போடப்போறேன். ரொம்ப சாதாரணமா ஒரு லட்சம், ஐம்பதாயிரம், இருபத்திஐந்தாயிரம் என கேட்குறாங்க. லட்ச ரூவா ஸ்கூல் பக்கம் திரும்பிக்கூட பாக்க முடியாது. ஏதோ நம்ம சக்திக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூவா டொனேஷன் ஸ்கூல்தான் சேர்க்க முடிந்தது. அப்புறம் டை, பேஜ் மயிறு மட்டைன்னு புடுங்கறானுவ. சம்பாதிப்பது படிப்பு செலவுக்கு மட்டும்தான் என ஆகிவிட்டது.

என்னை பள்ளிக்கூடம் சேக்கறப்ப மேளதாளம் வைத்து மிட்டாயை பித்தளை தாம்பூலம் நிறைய கொட்டிக்கிட்டு ஊரை சுத்திக் கொண்டு போய் பள்ளிக் கூடத்தில காதை தொட்டுக்காட்டிவிட்டு ஆளுக்கு ரெண்டு மிட்டாயைக் கொடுத்துவிட்டு சேர்த்துவிட்டு வந்தார்கள். சிலேட்டு புத்தகம் எல்லாம் பள்ளிக்கூடத்துலேயே கொடுத்தாங்க. இப்ப அப்படியா இருக்கு... கவர்மெண்ட்டு ஸ்கூல்பக்கம் பசங்கள அழைச்சிக்கிட்டு போனாக்கூட ஏற இறங்கப் பாக்குறாங்க. அப்படியொரு மவுசு மண்டையிலே ஏறி மக்கள படாதபாடு படுத்துது. அறிந்து கொள்வதற்காக இருந்த படிப்பு சம்பாத்தியத்திற்கான மூலதனமாக்கப்பட்டுவிட இப்படி சிக்கிச் சீரழியுறோம்.

எங்க ஊர்ல பாரதபூசாரி தாத்தான்னு ஒருத்தர் இருந்தார். பாரத கதையை தொண்டக்குழியிலேயே வைத்திருப்பார். எப்ப கேட்டாலும் உடனே பாட்டுப்பாடி கதை சொல்வார். எங்க ஊர்ல அவருதான் அதிக படிப்பு படிச்சவர்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். திருக்குறள் ஒன்றை மனப்பாடம் செய்து சொல்லத் தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தப்ப கோணப்புளியாங்க வாத்தியாரு பள்ளிக்கூடம் போவாத ஆனா ஆவன்னாக்கூட தெரியாத பாரதபூசாரி தாத்தாவைப் பாருங்கடா எவ்வளவு நினைவா எத்தனைப் பாட்டை மறக்காம இன்னும் பாடிக்கிட்டே இருக்காரு. ஒத்த திருக்குறளை மனப்பாடம் சொல்லத் தெரியாம இந்த முழி முழிக்கிறீங்கன்னு ரெண்டு எத்துவிட்டனிக்குத்தான் தெரியும் அவர் எழுத படிக்கத் தெரியாதவர் என. எதுக்கெடுத்தாலும் என்ன படிச்சிருக்கன்னு கேட்குற இந்த காலத்துல அத பத்தி பேசி என்ன செய்ய. அதனாலதான் இப்படியொரு முடிவு செய்திருக்கே, இனி வண்டி எடுப்பதில்லை. முடிந்தளவு நடந்தே போகப்போறேன். துணியை நானே சலவை செய்துகொள்ளப்போறேன். வீட்டில் வேறு யாரோட செலவையும் நான் கட்டுப்படுத்த முடியாது. அவங்கவங்க சந்தோசத்தை நாம எப்படி தடுக்க முடியும். அவங்க எப்படியோ இருந்துட்டுப் போகட்டும் என்னால முடிந்தளவு செலவை குறைக்கப் போறேன். அதன் முதற்கட்டமாகத்தான் இந்த நடவடிக்கை என்றேன்.

ஆமாண்டா தம்பி நீ சொல்றதும் உண்மைதான். படிப்பு செலவு போகத்தான் மீதி செலவை திட்டமிட முடிகிறதென கிளம்பிய அக்கா மறக்காம இதையும் சொல்லிப்போனாங்க. இனி நானும் எங்க வீட்டுக்காரருக்கு மொட்டைப் போடப் போறேன்.

நன்றி- பாவையர் மலர்.

1 comment:

துளசி கோபால் said...

அருமை!

நடையை ரசித்தேன்.

நல்லா இருங்க.

Post a Comment