Wednesday, September 5, 2012

வெளியே மழை பெய்தது


கொசகொசவென கட்டங்கள் வரைந்து
சிறு சிறு புள்ளிகளை அடைத்து
அப்பா இது பூச்சிகளின் வீடென்றாள்

சமையலறையில்
காற்றோடு
வாசிப்பை பகிர்ந்தாள் மதுவாகினி

கோடுகளை அடுக்கி
குட்டியாய் பொந்து வைத்து
அப்பா இது எலி வீடென்றாள்

கிழித்த நாட்காட்டித் தாளில்
தான் எழுதியதை காற்றிற்கு
வாசிக்கத் தந்தாள்

பெரிது பெரிதாய் சதுரமிட்டு
தடுப்புகள் நிறைய்ய வைத்து
அடுக்கத் துவங்கியபடி
அப்பா இது பொம்மைகள் வீடென்றாள்

கதையின் மாந்தர்களோடு
நிகழ்ந்த உரையாடலால்
புறம் நீண்ட குரலை
கேட்கத் தவறின செவிகள்

உயர்ந்த மரம் வைத்து
கூடு ஒன்றை நெய்து
அப்பா இது காக்கா வீடென்றாள்

தடித்த குரலின் அதிர்வில்
கதைமாந்தர்கள் கரைந்து போக
மௌனித்துக் கிடந்தாள் மதுவாகினி

தாளிலிருந்த தத்தமது வீடுகளிலிருந்து
பூச்சிகளும் பொம்மைகளும்
நகரத் துவங்கின சமயலறைக்கு

வெளியில் மழை பெய்தது...

நன்றி: கல்கி

1 comment:

செய்தாலி said...

ம்ம்ம் ..அருமை சார்

Post a Comment